திவாலான நாட்டில் மனித வளம் அதிகமாம்

ஐநா சபையின் ஒரு தலைப்பட்சமான மனிதவள முன்னேற்ற அறிக்கை!


2009ம் ஆண்டுக்கான மனிதவள முன்னேற்ற அறிக்கையை ஐநா சபை அக்டோபர் 5ம் தேதி வெளியிட்டுள்ளது. 1990ம் ஆண்டு முதல் வெளிவரும் இந்த அறிக்கையை வெளியிடப்பட்டு வருகிறது. இந்த ஆண்டு வெளியிடப்பட்ட அறிக்கையில் மக்கள் இடம் பெயர்தல், அதனால் ஏற்படும் பிரச்சனைகள், வாய்ப்புகள் மற்றும் கிராமங்கள் மையக்கருத்தாக விவாதிக்கப்பட்டுள்ளன. ஆண்டுதோறும் மனிதவள அறிக்கை என்றவுடனே நம்நாட்டில் முக்கியமாக பேசப்படுவது இந்தியாவுக்கு அது கொடுத்துள்ள இடத்தைப்பற்றித்தான். முக்கிய பொறுப்பிலுள்ளவர்கள் மற்றும் அதிகம் படித்தவர்கள் கூட இந்தியாவுக்கு கொடுக்கப்படும் இடத்தைப்பற்றி குறிப்பிட்டு அதனால் நாட்டையே ஒட்டு மொத்தமாக தாழ்வாக பேசுவதை ஒரு வழக்கமாக கொண்டுள்ளனர். அதனால் நாட்டைப்பற்றி ஒரு தவறான எண்ணம் பலரது மனதிலும் ஏற்படுத்தப்படுகிறது. 


ஆனால் அப்படி பேசுபவர்கள் பலருக்கு உண்மையில் அந்த அறிக்கையின் அடிப்படைகள் மற்றும் அளவுகோல்கள் பற்றி சரியாகத் தெரியாது. சர்வதேச அறிக்கை என்றவுடனேயே அதற்கு அதிகப்படியான மரியாதை கொடுத்து அதிலுள்ள விபரங்களை மிகைப்படுத்தி கருத்துகளை சொல்லிவிடுகின்றனர். நாடுகளின் மனிதவளத்தை கணக்கிட அந்த அறிக்கை மூன்று காரணிகளை எடுத்துக்கொள்கிறது. முதலாவது, மனிதர்களின் சராசரி ஆயுள் பற்றிய விபரம். இரண்டாவது, கல்வி பற்றியது. அதற்காக இளைஞர்களின் படிப்பு விகிதம் மற்றும் படிப்பவர்களின் எண்ணிக்கை பற்றிய விபரங்கள் எடுத்துக்கொள்ளப்படுகின்றன. மூன்றாவதாக வாழ்க்கைத்தரம் பற்றிய விபரம். அதற்காக நாட்டு மக்களின் சராசரி வருமானம் எடுத்துக்கொள்ளப்படுகிறது. நாட்டின் மொத்த வருமானம் மக்கள் தொகையால் வகுக்கப்பட்டு சராசரி வருமானம் கணக்கிடப்படுகிறது.

அந்த அறிக்கையில் மனிதவள முன்னேற்ற குறியீட்டைத்தவிர ஏழ்மைக்கான குறியீடு, பாலின முன்னேற்றக்குறியீடு மற்றும் பாலின ஆளுமை குறியீடு ஆகியவையும் கணக்கிட்டு கொடுக்கப்படுகின்றன. பாலின குறியீடுகளில் பெண்கள் முன்னேற்றம், ஆட்சி மற்றும் அதிகார பொறுப்புகளில் அவர்களின் பங்கு, வருமானம் மற்றும் ஆண், பெண் இடையேயுள்ள வித்தியாசங்கள் போன்ற விபரங்கள் 1995ம் ஆண்டு முதல் கொடுக்கப்படுகின்றன. மனிதவள குறியீட்டின் அடிப்படையில் எடுத்துக்கொண்ட 182 நாடுகளை இந்த ஆண்டின் அறிக்கை நான்கு பிரிவுகளாக பட்டியலிட்டுள்ளது. அதன்படி 38 நாடுகள் மிக அதிக மனிதவளத்தை கொண்டதாகவும், 45 நாடுகள் அதிக வளத்தை கொண்டதாகவும், 75 நாடுகள் சுமாரான வளத்தை உடையதாகவும், 24 நாடுகள் குறைந்த வளத்தையே பெற்றுள்ளதாகவும் குறிப்பிடப்பட்டுள்ளது. உலகின் பணக்கார நாடுகள் மிக அதிக மனித வளத்தை பெற்றுள்ளதாகவும், ஆப்பிரிக்க பகுதியை சேர்ந்த நாடுகள் மிகக்குறைந்த வளத்தை உடையதாகவும் கணக்கிடப்பட்டுள்ளன. உலகின் மற்ற நாடுகள் இந்த இரண்டு பிரிவுகளுக்கு இடையில் வருகின்றன. சீனா, இந்தியா உள்ளிட்ட ஆசியப்பகுதி நாடுகள் சுமாரான மனிதவள முன்னேற்றமுடைய நாடுகளின் பிரிவில் சேர்க்கப்பட்டுள்ளன.

 இந்த ஆண்டு மனிதவள முன்னேற்றத்தில் உலகிலேயே அதிக வளம் பெற்ற நாடாக நார்வே இடம் பெற்றுள்ளது. இரண்டாவது இடத்தில் ஆஸ்திரேலியாவும், மூன்றாவது இடத்தில் ஐஸ்லாந்தும் உள்ளன. இந்தியா 134வது இடத்தில் உள்ளது. 2008ம் ஆண்டு அறிக்கைப்படி ஐஸ்லாந்து முதலிடத்திலும், நார்வே இரண்டாவது இடத்திலும் இருந்தன. மனிதவள அறிக்கைகள் பல்வேறு நாட்டு மக்களின் சராசரி ஆயுள், கல்வித்தகுதி மற்றும் சராசரி வருமானம் ஆகியவற்றை பட்டியலிடுவதால் நாடுகளின் நிலைமை பற்றிய சில முக்கிய விபரங்கள் நமக்கு தெரிகிறது என்பது உண்மை. ஆனால் மனிதவளம் என்பதே மேற்கத்திய மற்றும் பணக்கார நாடுகளில் மட்டுமே அதிகமாக இருப்பது போன்ற தோற்றம் உருவாக்கப்படுவது ஒரு தலைப்பட்சமானதாகும். ஐரோப்பிய, அமெரிக்கா, ஆஸ்திரேலியா நாடுகளை தவிர மற்ற பகுதிகளில் மனிதவளம் குறைவாக இருப்பதாக சித்தரிக்கப்படுகிறது.மனிதவள குறியீட்டை கணக்கிட எடுத்துக்கொள்ளப்படும் காரணிகள் முழுமையானவை அல்ல. அவற்றை மட்டுமே வைத்து ஒரு நாட்டின் வளத்தை சரியாக கணக்கிட முடியாது.

 மனித வாழ்க்கைக்கு அத்தியாவசியமான குடும்பம், உறவுகள், வாழ்க்கை முறை ஆகியவை கணக்கில் எடுத்துக்கொள்ளப்படுவதில்லை. மனிதனின் பொருளாதார முன்னேற்றத்திற்கு அடிப்படையான சேமிப்பு, மூலதனம், தொழில் முனைதல் ஆகியவற்றிற்கும் குறியீட்டில் இடமில்லை. வாழ்வுக்கு ஆதாரமான சுற்றுச்சூழல், அமைதி ஆகியவை அறிக்கைகளில் கருதப்படுவதேயில்லை. எனவேதான் பல நிபுணர்களும், அறிஞர்களும் மனிதவள அறிக்கைகள் குறைபாடுகள் நிறைந்தவை என்றே கருதுகின்றனர்.மனிதவளத்துக்கு ஆதாரமே நிறைவான குடும்பங்கள்தான். பெற்றோர்கள், உறவுகள், சமூகம், அன்பு, பாசம், அரவணைப்பு ஆகியவை மனித வாழ்க்கையின் அடிப்படையான அம்சங்களாக உள்ளன. குடும்ப அமைப்பு முறையால் சேமிப்பு, முதலீடு ஆகியவை பெருகி கல்வி மற்றும் தொழில்களில் மக்கள் முன்னேறுகின்றனர். அதனால் நாடு ஒட்டுமொத்த வளர்ச்சியை நோக்கி செல்கிறது.

 மனித வள அறிக்கைகளின் குறைபாடுகளைப் பற்றித் தெரிந்து இந்த ஆண்டு முதல் இரண்டு இடங்களில் வந்துள்ள நாடுகளின் மனிதவளம் சம்பந்தப்பட்ட சில முக்கியமான விவரங்களை மட்டும் பார்ப்போம். அந்த இரு நாடுகளின் குடும்ப அமைப்புகள் வெகுவாக சிதைந்துள்ளன. 2002ம் ஆண்டு கணக்குப்படி நார்வேயில் 40 சதவீத திருமணங்களும், ஆஸ்திரேலியாவில் 44 சதவீத திருமணங்களும் விவாகரத்தில் முடிகின்றன. உலக அளவில் இந்த விகிதாசாரங்கள் அதிகமானதாகும். அண்மைக்கால நிலவரப்படி நார்வேயில் பிறந்த குழந்தைகளில் 55 சதவீதத்துக்கு மேற்பட்டவை திருமணமாகாத உறவுகள் மூலம் பிறந்தவை ஆகும். 12 சதவீத குழந்தைகள் எவ்வித உறவுகளுமில்லாமல் தனியாக வாழ்ந்துவரும் பெண்களுக்கு பிறந்தவை. உறவுகள் அற்றுப்போய் மனிதர்கள் இருப்பதால் அந்நாட்டில் 17 சதவீத மக்கள் தனிநபர் குடும்பங்களாக வாழ்ந்து வருகின்றனர். ஆஸ்திரேலியாவில் 2001ம் ஆண்டு முதல் அங்கு பிறக்கும் குழந்தைகளில் 30 சதவீதத்துக்கும்மேல் திருமணமாகாத பெண்களுக்கு பிறந்தவை. 15 வயதுக்கு குறைவான குழந்தைகளுடன் வாழும் குடும்பங்களில் 22 சதவீதம் ஓரே ஒரு பெற்றோறை கொண்டவை. அதில் 80 சதவீதத்துக்கு மேற்பட்ட குடும்பங்கள் தனியாக தாயை மட்டுமே கொண்டவை. குழந்தை மற்றும் தகப்பனை மட்டுமே கொண்ட குடும்பங்களும் அங்கு கணிசமாக உள்ளன.

 1986ம் ஆண்டு முதல் 2001ம் ஆண்டு வரையான 15 ஆண்டு காலத்தில் தனி ஒருவரை மட்டுமே பெற்றோராக கொண்ட குடும்பங்கள் 53 சதவீதம் அதிகரித்துள்ளன. அத்தகு குடும்பங்களின் வளர்ச்சி தாய், தந்தை என இருவரையும் கொண்ட குடும்பங்களைவிட 14 மடங்கு அதிகமாக உள்ளது. அங்கெல்லாம் குடும்பங்கள் சிதைவதால் பாதிக்கப்பட்டவர்களை பாதுகாக்க உறவுகள் இல்லை. எனவே அந்தப் பொறுப்பினை அரசாங்கங்கள் ஏற்றுக்கொள்ள வேண்டியுள்ளது. அதனால் சமூகப் பாதுகாப்பு என்ற பெயரில் அவர்களது அரசுகள் பெரும் தொகைகளைசெலவு செய்கின்றன. நார்வேயில் அந்நாட்டின் ஒட்டுமொத்த உற்பத்தியில் சுமார் 16 சதவீதமும், ஆஸ்திரேலியாவில் 8.3 சதவீதமும் அவ்வாறு செலவு செய்யப்படுகிறது. குடும்பங்கள் பாதிப்புக்குள்ளாகி இருப்பதால் அங்கு சேமிப்பு என்பதே ஏறத்தாழ இல்லை. நார்வேயில் 2007ம் ஆண்டில் சேமிப்பு சுத்தமாக இல்லை. மாறாக வருமானத்தை விடவும் அதிகமாக ஒரு சதவீதத்துக்கும் மேல் அந்நாட்டு மக்கள் செலவு செய்துள்ளனர். ஆஸ்திரேலியாவில் 2000ம் ஆண்டு முதல் 2005ம் ஆண்டு வரை தொடர்ந்து சேமிப்பு என்பதே இல்லை. ஆனால் இந்த இரண்டு நாடுகள்தான் மனிதவள அறிக்கையில் முதல் இரண்டு இடத்தையும் பெற்றுள்ளன. அதற்குக்காரணம் மனிதவளம் குறித்த மேற்கத்திய நாடுகளின் குறுகிய கண்ணோட்டமேயாகும்.

 அவர்களது அளவு கோல்களை மட்டுமே வைத்து வெவ்வேறு விதமான பின்னணிகளை கொண்ட உலக நாடுகள் அனைத்தையும் பட்டியலிடுவதுதான் மனிதவள அறிக்கைகள். அதில் கலாச்சாரம் மிகுந்த உறவுகளை அடிப்படையாக கொண்ட இந்தியா போன்ற நாடுகளை சேர்ந்த தாய் தந்தையரின் தியாகம், அவர்களது எளிய வாழ்க்கை முறை, அதிக சேமிப்பு, தொழில் முனையும் தன்மை ஆகியவற்றை எடுத்துக்கொள்ள எவ்விதமான காரணிகளும் இல்லை. மேலும் அந்த அறிக்கைகள் உலக நாடுகளின் மக்கள் தொகை மற்றும் வரலாற்று பின்னணி என எதையும் எடுத்துக்கொள்ளமல் கணக்கிடப்படுகிறது. உதாரணமாக சீனா, இந்தியா போன்ற பெரிய நாடுகளுடன் மிகச்சிறிய நாடுகளும் ஒரே நிலையில் வைக்கப்படுகின்றன. நார்வேயின் மக்கள் தொகையே 48 லட்சத்துக்கு சற்று அதிகம். அதாவது சென்னையின் மக்கள் தொகையை விட குறைவு. ஆஸ்திரேலியாவின் மக்கள் தொகை தமிழக மக்கள் தொகையில் சுமார் மூன்றில் ஒரு பங்குதான். மூன்றாவது இடத்திலுள்ள ஐஸ்லாந்தின் மக்கள் தொகை வெறும் 3 லட்சத்து சொச்சம். எனவே அந்த நாடுகளின் சராசரி வருமானம் அதிகமாக இருப்பதில் ஆச்சரியம் ஒன்றுமில்லை. இதில் சுவாரஸ்யமான விஷயம் என்னவெனில் கடந்த ஆண்டு உலக பொருளாதார நெருக்கடியின் விளைவாக ஐஸ்லாந்து நாடே திவாலாகிவிட்டதாக அந்நாட்டு பிரதமர் தொலைக்காட்சிகளில் அறிவித்தார். ஆக இந்த அறிக்கைகளின்படி திவாலான நாட்டின் மனிதவளம் உலகின் முன்னணியில் இருந்து வருகிறது.

அறிக்கை தயாரிப்பதற்காக எடுத்துக்கொள்ளப்பட்ட பல நாடுகளின் பெயர்கள் அதிகம் படித்தவர்களுக்கு தெரியாத அளவு சிறியவை. அன்போர்ரா, லைச்டென்ஸ்டீன் என்பனவெல்லாம் நாடுகள் என்பது எத்தனை பேருக்கு தெரியும். உலகிலேயே அதிக மக்கள் தொகையை கொண்டு அதிவேகமாக வளர்ந்துவரும் நாடு சீனா மனிதவள அறிக்கையில் 92வது இடத்தில் உள்ளது. அதற்கு முந்தைய இடத்தில் உள்ளதாக குறிப்பிடப்பட்டுள்ள நாடு செயிண்ட் வின்சென்ட் அன் தி கிரெனடீஸ் என்பது. அது எங்குள்ளது. நீண்ட வரலாறு கொண்ட சீனாவையும், அடையாளம் தெரியாத நாட்டையும் எப்படி ஒரே தட்டில் வைத்து ஒப்பிட முடியும்.இந்தியா உலகின் முதன்மை பொருளாதாரமாக பல நுõற்றாண்டுகள் சிறப்பாக விளங்கி வந்தது. தொன்மையான கலாச்சாரத்தை கொண்டது. ஐரோப்பியர்களால் பலவழிகளிலும் சிதைக்கப்பட்டு, கடந்த 60 ஆண்டுகளில் முன்னேறி உலகில் இரண்டாவது வேகமாக வளரும் நாடாக உருவெடுத்து வருகிறது. அதேசமயம் ஆஸ்திரேலியா நாடு அங்குள்ள பழங்குடிகளின் வாழ்க்கையை அழித்து, அவர்களது வாழ்க்கை முறைகளை சிதைத்து அங்கு குடியேறிய ஐரோப்பியர்களால் ஆக்கிரமிக்கப்பட்டது. இந்தியாவையும், ஆஸ்திரேலியாவையும் எப்படி ஒன்றாக பாவிக்க முடியும்.

 ஆசிய, ஆப்பிரிக்க கண்டங்களின் முந்தைய காலனிகளும், அவற்றை சுரண்டிக் கொழுத்த ஐரோப்பிய நாடுகளும் இணையாகுமா.எனவே மனிதவளக் குறியீடுகள் அந்த அறிக்கையே குறிப்பிடுகின்ற மாதிரி மனிதவள முன்னேற்றத்தை கணக்கிடும் முழுமையான அளவுகோல்கள் அல்ல. அது மேற்கத்தியவர்களின் நோக்கில் சில காரணிகளை மட்டும் வைத்து தயாரிக்கப்பட்டவை. ஆகவே அதைவைத்து நாடுகளின் ஒட்டுமொத்த மனிதவளத்தை கணக்கிடுவது சரியாக இருக்காது. இந்த அறிக்கையை அடிப்படையாக கொண்டு நம் நாட்டு மனிதவளம் குறித்து கருத்துக்களை தெரிவிப்பதும், விமர்சிப்பதும் தேவையில்லாதது.

தினமலர் - பேட்டி , அக்டோபர் 19, 2009

இந்திய வரலாற்றுக்கு புத்துயிர் தந்தவர்



இந்திய வரலாற்றுக்கு புத்துயிர் தந்தவர்


1931ம் வருடம் அக்டோபர் மாதம் லண்டன் நகரம். மகாத்மா காந்தி பேசுகிறார்: "நூறு வருடங்களுக்கு முன்பு இருந்ததைவிட இன்றைய இந்தியாவில் எழுதப்படிக்கத் தெரிந்தவர்கள் அதிகம். இந்தியாவின் பழைய கல்வி முறை ஒரு அழகான மரம் போல் இருந்தது. அந்த மரம் இப்போது அழிந்து விட்டது.' ஆங்கிலேயர்களுக்கு இது அதிர்ச்சியான செய்தி. கல்வி அறிவை உலகுக்கு கொடுத்ததாக பறைச்சாற்றிக் கொண்டிருந்த அவர்களுக்கு இது ஒரு சம்மட்டி அடி. அவர்கள் சவால் விட்டனர். "உங்கள் பேச்சு உண்மையென நிரூபியுங்கள். அல்லது மன்னிப்பு கேளுங்கள்.' காந்திஜி தன்னால் இதை நிரூபிக்க முடியுமென சவாலை ஏற்றுக் கொள்கிறார். ஆனால் சுதந்திர இயக்கப்பணிகள் மற்றும் வேலைப்பளு காரணமாக அவரால் அதற்காக நேரம் கொடுக்க இயலவில்லை. எனவே அந்தப்பணி முடியாமலேயே காந்திஜி அமரரானார்.
அதற்கு பின் ஒரு இருபது ஆண்டுகளுக்கு அப்புறம் காந்திஜியின் ஆயுளில் நிறைவேறாத அந்தப்பணியை நிறைவு செய்யப்புறப்படுகிறார் அவரது சீடர். அந்த சீடரின் பெயர் தரம்பால். 1922 ம் வருடம் பிறந்த இவர் முதன்முதலாக தனது எட்டுவயதில் காந்திஜியை லாகூரில் பார்க்கிறார். கல்லூரிக் காலங்களிலேயே காந்தியக் கொள்கைகளால் கவரப்பட்டு தேசப்பணிக்காக தன்னுடைய வாழ்வை அர்ப்பணிக்கத் துவங்குகிறார். அதன்பின் கிராம முன்னேற்றம் மற்றும் ஆய்வுப்பணிகளில் தன்னை ஈடுபடுத்திக் கொள்கிறார். தரம்பாலின் ஆய்வுகள் காந்திஜியின் கல்வி குறித்த கருத்துக்களை நிரூபிக்கும் வகையில் அமைந்தது மட்டுமன்றி இந்திய தேசத்தின் பொருளாதார மற்றும் சமுதாய ஆதாரங்களை உலகுக்கு உணர்த்தும் வகையிலும் அமைந்தன. இவை மூலம் ஆங்கிலேயேர் இங்கு வருவதற்கு முன்னரே கல்வி, விவசாயம், தொழில், அறிவியல் எனப்பல துறைகளில் ஐரோப்பிய நாடுகளுக்கு முன்னோடியாக இந்தியா வளர்ச்சி பெற்றிருந்தது தெரிய வருகின்றது.
1960 களில் தொடங்கி தமது ஆய்வுகளை மேற்கொண்ட தரம்பால், புள்ளிவிவரங்களை பிரிட்டிஷ் ஆவணங்கள் மூலமே சேகரிக்கின்றார். அதற்காகப் பல ஆண்டுகள் லண்டன் மியூசியம் உள்ளிட்ட இடங்களில் செலவு செய்கின்றார். அதிக வருமானம் ஏதும் இல்லாமல் பிரதி எடுப்பதற்கே கஷ்டப்படும் நிலையில் ஆயிரக்கணக்கான பக்கங்களை ஆவணங்களைப் பார்த்து கையாலேயே எழுதுகின்றார். அதன் மூலம் இந்திய தேசம் சம்மந்தமான பல விசயங்களை தொகுக்கின்றார். பின்னர் இவற்றை பல்வேறு புத்தகங்களாகவும், கட்டுரைகளாகவும் வெளியிடுகின்றார். சொற்பொழிவுகள் ஆற்றுகின்றார். இவரது எழுத்துக்களும், பேச்சுக்களும் இந்திய நாட்டின் பாரம்பரியங்களையும், பழைய அமைப்பு மற்றும் வாழ்க்கை முறைகளையும் அறிவியல் தொழில் நுட்பச் சிந்தனைகளையும் நமக்குத் தெளிவாக உணர்த்துகின்றன. இதன் மூலம் வரலாற்று ஆசிரியர்களும், கல்வியாளர்களும், பொருளாதார மற்றும் அறிவியல் கண்டறிய தவறிய பல அடிப்படை உண்மைகள் நமக்கு தெரிய வருகின்றன.
அவரது ஆய்வுகள் குறித்துக் குறிப்பிடும் போது முதலில் கல்வி குறித்த அவரது பணியினை எடுத்துக் கொள்ளலாம். இவை ஆங்கிலேயேர்கள் பத்தொன்பதாம் நூற்றாண்டின் தொடக்க காலங்களில் இந்தியாவில் எடுத்த கணக்கெடுப்புகளின் அடிப்படையில் அமைந்தவை. பம்பாய் மற்றும் மெட்ராஸ் பிரசிடென்சிகளில் 1820 களிலும், வங்காள பிரசிடென்சியில் 1830 களிலும் இந்த கணக்கெடுப்புகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன. வங்காளம் மற்றும் பிகார் பகுதிகளில் ஒவ்வொரு கிராமத்துக்கும் ஒரு பள்ளிக்கூடமும், வங்காளத்தில் மாவட்டத்திற்கு பத்து என்ற கணக்கில் பிரசிடென்சி முழுவதும் 1800 உயர் கல்வி நிலையங்களும் இருந்திருக்க வேண்டுமென ஆடம்ஸ் அறிக்கையில் குறிப்பிட்டுள்ளதாக தரம்பால் எடுத்துரைக்கின்றார்.
பம்பாய் பிரசிடென்சியில் ஒவ்வொரு கிராமத்திற்கும் ஒரு பள்ளிக்கூடமும், பெரிய கிராமங்களில் ஒன்றுக்கும் மேற்பட்ட பள்ளிகளும் இருந்ததாக மூத்த ஆங்கிலேயே அதிகாரிகள் கூறியுள்ளனர். சென்னை பிரசிடென்சியில் ஒவ்வொரு கிராமத்துக்கும் ஒரு பள்ளி இருந்ததாக தாமஸ் மன்ரோ குறிப்பிட்டுள்ளார்.1850 வாக்கில் பஞ்சாபிலும் இதே சூழ்நிலை நிலவியுள்ளது.
இந்த பள்ளிகள் அனைத்தும் கிராம மக்களின் நிதி உதவிகளாலேயே நடத்தப்படுவதாக மேற்கூறிய அறிக்கைகள் கூறியுள்ளன. மேலும் சென்னை பிரசிடென்சியில் செயல்பட்டுக் கொண்டிருந்த உயர் கல்வி நிறுவனங்கள் குறித்து தரம்பால் விவரங்களை வெளியிட்டுள்ளார்.
ராஜமுந்திரி மாவட்டத்தில் 173, தஞ்சை பகுதியில் 109 என உயர்கல்வி நிறுவனங்கள் பல பகுதிகளிலும் செயல்பட்டுள்ளதாக சொல்லியுள்ளார். இந்தக் கல்வி நிறுவனங்கள் எந்தவித ஜாதி மத வேறுபாடுமின்றி செயல்பட்டு வந்ததாகவும் அவர் புள்ளி விபரங்களுடன் குறிப்பிடுகிறார். அதேசமயத்தில் இங்கிலாந்து நாட்டில் பள்ளிக் கல்விமுறை பரவலாக மக்களுக்குக் கிடைக்காமல் இருந்ததாகவும், இந்திய முறையை வைத்தே அவர்களின் பள்ளிக் கல்வி முறை பின்னர் அமைக்கப்பட்டதாகவும் தரம்பால் எடுத்துக்காட்டியுள்ளார். இதன் மூலம் பத்தொன்பதாம் நூற்றாண்டின் தொடக்கத்தில் இந்திய நாடு கல்வியில் உயர்ந்த நிலையில் இருந்ததாகச் சொல்லுகின்றார். கல்வி குறித்த தமது புத்தகத்திற்கு அவர் கொடுத்த தலைப்பு காந்திஜி லண்டனில் உபயோகப்படுத்திய வார்த்தைகளை வைத்தே அமைந்தது. "அழகிய மரம்; பதினெட்டாம் நூறறாண்டின் இந்திய கல்வி'.
கல்வி மட்டுமன்றி பதினெட்டாம் நூற்றாண்டில் இந்திய அறிவியல் மற்றும் தொழில்நுட்பம், இந்திய அரசியலும் பஞ்சாயத்து ராஜ்ஜியமும், ஒத்துழையாமை இயக்கம் உள்ளிட்ட தலைப்புகளில் ஆய்வு செய்து அவர் புத்தகங்களை எழுதியுள்ளார். இந்தியாவில் பல ஆண்டுகளாக இருந்து வந்த பாரம்பரிய முறைகள் பற்றி ஆங்கிலேயர் இங்கு கண்டு எழுதிய விசயங்களையும் தரம்பால் தொகுத்துத் தந்துள்ளார். மேலும் இரும்பு தயாரிக்கும் முறைகள் பரவலாக இருந்ததையும், ஐரோப்பியயர்களுக்கு தெரியாத மருத்துவ முறைகள் இங்கு சாதாரணமாக மக்களிடையே பிரபலமாக இருந்ததையும் சுட்டிக்காட்டியுள்ளார்.
சென்னை பிரசிடென்சி பகுதிகளில் பதினெட்டாம் நூற்றாண்டின் பிற்பகுதியிலும், பத்தொன்பதாவது நூற்றாண்டிலும் பெரும்பாலான வருடங்களில் நிலவரியானது விவசாய விளைச்சலை விட அதிகமாக இருந்ததைக் குறிப்பிட்டுள்ளார். இதனால் 1800 முதல் 1850 வரையான ஐம்பது வருடங்களில் மட்டும் மூன்றில் ஒரு பங்கு விளைச்சல் நிலங்களில் விவசாயிகள் பயிர் செய்வதையே விட்டுவிட வேண்டிய நிலைக்குத் தள்ளப்பட்டுள்ளனர். 1820 களுக்குப் பின்னர் விவசாயமும், கிராமப் பொருளாதாரமும், உற்பத்தித்துறையும் ஆங்கிலேயேர்களின் வரிச்சுமைகளாலும், தவறான கொள்கைகளாலும் சிதைக்கப்பட்டதாக தரம்பால் எடுத்தச் சொல்லியுள்ளார்.
இந்திய நாட்டின் கொள்கைள் மற்றும் திட்டங்கள் நமது பாரம்பரியத்தையும் அனுபவங்களையும் ஒட்டியே அமைய வேண்டும் எனவும், மேற்கத்திய நாடுகளின் முறைகளை அப்படியே பின்பற்றுவது தவறு எனவும் தரம்பால் அறிவுறுத்துகின்றார். மாணவர்களுக்கு அவர்களைச் சுற்றியுள்ள சமூகங்களைப் பற்றிய விவரங்களைச் சொல்வதன் மூலம், ஆர்வத்தையும், நேரடி தொடர்பையும் உண்டாக்கி, அதன்மூலம் தன்னம்பிக்கை ஏற்படுத்த முடியும் எனச் சொல்கின்றார்.
இந்தியர்கள் பெருமைப்படும் வகையில் பல உண்மைகளை வெளிகொணர்ந்து இந்தியாவுக்கு எனத் தனியான சிந்தனை முறை உண்டு என உணர்த்திய தரம்பால் சென்ற அக்டோபர் மாதம் வார்தா ஆசிரமத்தில் காலமானார்.
அன்னாரது முயற்சி நமது தேச வரலாற்றுக்கு ஒரு புத்துயிர் கொடுத்துள்ளது என்றால் அது மிகையாகாது. நூறு கோடி மக்களுக்குப் பெருமை அளிக்கும் பல விசயங்களை தரம்பால் வெளிக்கொணர்ந்து உள்ளார். பள்ளி, கல்லூரிகளில் அவரது ஆய்வுகள் புத்தகங்களாக வைக்கப்பட்டு விவாதிக்கப்பட வேண்டும். இந்திய நாடு, தனது வேர்களை முழுமையாக தெரிந்து கொள்ளும் போது தான் உறுதியான கட்டமைப்பை ஏற்படுத்த முடியும்.

தினமணி 2.12.2006