பாரதப் பொருளாதாரம் அன்றும் இன்றும் - புத்தக விமர்சனம்

பாரதப் பொருளாதாரம் அன்றும் இன்றும் - புத்தக விமர்சனம், 2009

http://nhmreviewblog.blogspot.in/2009/12/11-12-09.html

( நன்றி:  விஜய பாரதம் in New Horizon Media blog spot, Dec 2009)

பண்டைய இந்தியப் பொருளாதாரம்

இந்தியப் பொருளாதாரத்தின் தொன்மை நிலை குறித்து தினமணியில் கட்டுரை

http://www.dinamani.com/editorial_articles/2014/06/17/%E0%AE%AA%E0%AE%A3%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%88%E0%AE%AF-%E0%AE%87%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%AA%E0%AF%8D-%E0%AE%AA%E0%AF%8A%E0%AE%B0%E0%AF%81%E0%AE%B3%E0%AE%BE%E0%AE%A4%E0%AE%BE%E0%AE%B0%E0%AE%AE/article2284556.ece


( தினமணி, ஜூன் 17, 2014)

வணிக மயமாகும் கல்வி



பண்டைய காலந் தொட்டு உலக அளவில் இந்திய நாடு கல்விக்குப் பெயர் பெற்று விளங்கி வந்துள்ளது. உயர் கல்வித் துறையில் உலகத்திலேயே முதன் முதலாக சுமார் இரண்டாயிரத்து எழுநூறு வருடங்களுக்கு முன்னரே தட்சசீலத்தில் பல்கலைக் கழகம் செயல்பட்டு வந்ததை வரலாறு எடுத்துச் சொல்கிறது. அதில் பல நாடுகளைச் சேர்ந்தவர்களும் வந்து படித்து பட்டம் பெற்றுச் சென்றுள்ளனர். அதைத் தொடர்ந்து பின் வந்த நூற்றாண்டுகளில் நாளந்தா உள்ளிட்ட நாட்டின் பல இடங்களில் பல்கலைக் கழகங்கள் ஏற்படுத்தப்பட்டு நன்கு செயல்பட்டு வந்துள்ளன. 

அப்போதெல்லாம் ஆரம்பக் கல்வி முதல் பல்கலைக் கழகங்கள் வரையில் கல்வி அளிக்கும் பொறுப்பை சமூகங்களே தங்களின் தலையாய கடமையாக ஏற்றுக் கொண்டிருந்ததை அறிய முடிகிறது. ஆங்கிலேயர்கள் இங்கு வந்த பின்னர் பத்தொன்பதாவது நூற்றாண்டில் நமது தேசத்தில் நிலவிய கல்வி முறைகள் பற்றி, 1820 களில் அவர்கள் நடத்திய கணக்கெடுப்புகளே  தெளிவாக எடுத்துச் சொல்கின்றன.

மறைந்த சிந்தனையாளர் திரு.தரம்பால் அவர்கள் அப்போதைய கல்வி முறை குறித்து ஆங்கிலேயர்களின் ஆவணங்களை வைத்தே விபரமாக எழுதியுள்ளார். அவை ஒவ்வொரு ஊரிலும் குறைந்தது ஒரு பள்ளிக் கூடமாவது இருந்து வந்ததையும், கல்வி அனைத்து ஜாதியினருக்கும் கொடுக்கப்பட்டு வந்ததையும் விரிவாகத் தெரிவிக்கின்றன. மேலும் அன்றைய கல்வியின் நோக்கமே  மனிதனை மேம்படுத்தும் வகையிலும், ஒவ்வொருவரையும் சமூக பொருளாதார முன்னேற்றத்துக்குத் தயார் படுத்தும் வகையிலும் அமைக்கப் பட்டிருந்திருக்கிறது..

இந்தியக் கல்வித் திட்டத்தின் மூலம் கல்வி பரவலாக அனைவருக்கும் கிடைக்கும் வகையில் இருந்ததை ஆங்கிலேயர்கள் பார்த்து ஆச்சரியப்பட்டுள்ளனர். அங்கு கல்வி என்பது தாமதமாக பிந்தைய நூற்றாண்டுகளில் தொடங்கி மேட்டுக் குடியினருக்கு மட்டுமே கொடுக்கப்பட்டு வந்துள்ளது. அதுவும் முக்கியமாக மதம் சார்ந்த கல்வியாகவே இருந்துள்ளது. காலனி ஆதிக்க காலத்தில் அவர்கள் நமது கல்வியை முறையைப் பார்த்துத் தெரிந்து கொண்ட பின்னரே,  அங்கு கல்வியை விரிவு படுத்துவது பற்றிய தெளிவு அவர்களுக்குக் கிடைத்துள்ளது.

இந்தியப் பாரம்பரியத்தில் கல்வி மனித வாழ்க்கையின் அடிப்படையான அம்சமாக இருந்து வந்துள்ளது. அதனால் தான் பிரமச்சரியம் என்று ஒரு குறிப்பிட்ட காலம் ஒவ்வொருவரின் வாழ்க்கையின் ஆரம்பத்திலும் கல்வி கற்பதற்காகவே ஒதுக்கப்பட்டுள்ளது. எனவே ஆரம்ப காலந் தொட்டே நமது நாட்டில் இலக்கியம், அறிவியல், தொழில் நுட்பம், மருத்துவம், கணிதம், நுண்கலைகள் எனப் பல துறைகளும் சிறந்து விளங்கி வந்துள்ளன.  அதனால் தொடர்ந்து பல நூற்றாண்டுகளாக இன்றளவும் உலகுக்கு முன்னோடியாக விளங்கி வரும் ஞானிகளையும், அறிஞர்களையும், வல்லுநர்களையும் இந்தியா  உருவாக்கி வந்துள்ளது.

நமது தேசத்தின் ஆதாரங்களைப் புரிந்து கொண்ட ஆங்கிலேயர்கள், இந்தியக் கல்வி முறையைச் சிதைத்தால் தான் நாட்டை வலுவிழக்கச் செய்ய முடியும் என்பதைப் புரிந்து கொண்டார்கள்.   அதன் படி 1830களில் ஆங்கிலேயர்களின் ஆயுதமாக ‘மெக்காலே’ கல்வி முறை நமது நாட்டில் புகுத்தப்பட்டது.  அதன் மூலம் கல்வி என்பது அனைவருக்கும் இலவசமாக இருந்த நிலை மாற்றப்பட்டது. தொடர்ந்து வசதி படைத்த குறிப்பிட்ட பிரிவினர்களுக்கு மட்டுமே கல்வி கிடைக்கும் என்ற முறை அறிமுகப்படுத்தப்பட்டது.

மேலும் கல்வித் திட்டத்தின் நோக்கம் ஆட்சியாளர்களின் நிர்வாகத்துக்கு உதவி செய்வதற்கு சில இந்திய இளைஞர்களைத் தயார் செய்வது என மாறிப் போனது. ஆரம்ப காலந் தொட்டுப் பல நூற்றாண்டுகளாகக் கடைப்பிடிக்கப்பட்டு வந்த கல்வி போதனைகள் மாற்றப்பட்டன. அதனால் நமது நாட்டுக்குச் சிறிதும் சம்பந்தமில்லாத ஒரு அந்நிய முறை இங்கு அறிமுகப்படுத்தப்பட்டது. 

ஆங்கிலேயர்கள் அறிமுகப்படுத்திய  கல்வி முறையில் மாற்றம் கொண்டு வரவேண்டியதன் அவசியம் குறித்து மகரிஷி அரவிந்தர், ரவீந்திர நாத் தாகூர், காந்திஜி உள்ளிட்ட பல சிந்தனையாளர்கள் விபரமாக எடுத்துச் சொல்லியுள்ளனர். ஆனால் துரதிர்ஷ்டவசமாக நமது நாடு சுதந்திரம் பெற்ற பின்னரும் கல்வித் துறையில் அவசியமான மாற்றங்கள் இன்னும் ஏற்படுத்தப் படவில்லை.

அதனால் நமது தேசம் சார்ந்த கல்வி இன்னமும் போதிக்கப்படுவதில்லை. எனவே நமது வரலாறு மட்டுமன்றி, நிகழ்கால நடைமுறைகள் கூட கல்வித் திட்டத்தில் இல்லை. அதில் சொந்த சிந்தனைகள் ஊக்குவிக்கப்படுவதில்லை. மாறாக அந்நியக் கருத்துக்களும் வழி முறைகளும் ஆரம்பக் கல்வி தொடங்கி, பல்கலைக் கழகங்கள்  வரை ஆக்கிரமித்துள்ளன. ஆகையால் முழுமையில்லாத ஒரு கல்வி முறையைத் தான் நாம் இப்போதும் கடைப்பிடித்து வருகிறோம்.

இதற்கிடையில் கடந்த சில ஆண்டுகளாக கல்வித் துறையில் வணிக நோக்கு அதிகரித்து வருகின்றது. இது கல்வித் துறையை வெகுவாகப் பாதித்துள்ளது. அதனால் கல்வி வியாபாரப் பொருளாக மாறி, கல்விக் கூடங்கள் விற்பனை மையங்களாக மாறி வருகின்றன.

ஆரம்பக் கல்விக்கே இலட்சக் கணக்கில் பணம் கேட்கும் பள்ளிக்கூடங்கள் உருவாகி விட்டன. பொறியியல் மற்றும்  மருத்துவக் கல்வி போதிக்கும் கல்லூரிகளில் இடம் பெறுவதற்கு பெற்றோர்கள் பல இலட்சக் கணக்கில் நன்கொடைகளைக்  கொடுக்க வேண்டியுள்ளது. மேலும் கடந்த சில வருடங்களாக கல்விக் கட்டணங்களும் அதிகமாகி வருகின்றன.

எனவே சாதாரண நிலையில் இருக்கும் குடும்பங்கள் அரசு நடத்தும் பள்ளி மற்றும் கல்லூரிகளையே நாட வேண்டியுள்ளது. தரம் வாய்ந்த தனியார் கல்வி நிறுவனங்கள் அவர்களுக்கு எட்டாக் கனியாகவே உள்ளது. அரசின் அடிப்படை விதி முறைகளைக்  கூடக் கடைப்பிடிக்காமல் செயல்பட்டு வரும் கல்வி நிறுவனங்கள் பற்றி செய்திகள் வந்த வண்ணம் உள்ளன.

கல்வி வணிக மயமாவதால் பல சமயங்களில் ஆசிரியர்களின் தரமும் குறைந்து வருகிறது. கல்வி நிறுவனங்கள்  குறைவான சம்பளத்தைக் கொடுத்து அதிகமாக வேலை வாங்குவதைத் திறமையெனக் கருதிச் செயல்படுகின்றன. அதனால் ஆசிரியர்களின் மனநிலை ஆக்க பூர்வமாக இருப்பதில்லை. கூடவே அரசு நிறுவனங்களில் அதிகமாகச் சம்பளம் வாங்குபவர்களிடமும் கடமை உணர்வு வெகுவாகக் குறைந்து வருகிறது.  

அண்மைக் காலமாக உயர்கல்வித் துறையில் துணை வேந்தர் உள்ளிட்ட மேல் பொறுப்புகளில் அதிக அளவில் தவறுகள் நடப்பதாகச் செய்திகள் வந்த வண்ணம் உள்ளன. தவறான வழியில் வரும் தகுதியில்லாத நபர்கள் தலைமைப் பொறுப்புகளில் நியமிக்கப் படும்போது, கல்வித் துறையே நம்பிக்கை இழந்து செயல்பட வேண்டிய சூழ்நிலை ஏற்படுகிறது.

எனவே கல்வித் துறையில் தேவையான மாற்றங்களை ஏற்படுத்துவது குறித்து உடனடியாக முயற்சிகள் மேற்கொள்ளப்பட வேண்டும். கல்வி அனைத்து தரப்பு மக்களுக்கும்  சிரமங்களின்றிக் கிடைக்கும் வகையில் தேவையான மாற்றங்கள் ஏற்படுத்தப்பட வேண்டும். தேசம் சார்ந்த தரமான கல்வியை  மக்களுக்கு அளிப்பது ஒரு தேசியக் கடமையாகக் கருதப்பட்டு அதற்கான நடவடிக்கைகளைத் தொடங்க வேண்டும்.

( பி.எம்.எஸ்.செய்தி, மே 2014)