தமிழகத்தில் படைப்பாளிகள் கூட்டம் என்று சொன்னாலே அது வழக்கமாக ‘முற்போக்கு’ அல்லது ‘ திராவிட’ என்னும் அடைமொழிகளுக்குக்குள்ளே வரக்கூடிய இடதுசாரி- திராவிடவாத கருத்துக்களைக் கொண்டவார்களின் சந்திப்பு என இருந்து வரும் சூழ்நிலை இங்கு கடந்த பல வருடங்களாகவே நிலவி வருகிறது. அவர்கள் பொதுவாகவே இந்து விரோத மனப்பான்மை மற்றும் பாஜக - மோடி அரசு எதிர்ப்பு ஆகிய கருத்துக்களைக் கொண்டவர்களாக இருப்பார்கள். மேலும் மத்திய அரசு எடுக்கும் எல்லா நடவடிக்கைகளையும் எதிர்ப்பது என்பதும் அவர்களின் பொதுவான கொள்கையாக உள்ளது. அவர்களில் சிலருக்கு இடதுசாரி தீவிரவாதம் மற்றும் மத தீவிரவாதப் போக்குக்கள் குறித்த மேம்போக்கான அணுகுமுறையும் உள்ளது.
சென்ற ஏப்ரல் 22 ஆம் தேதி ஜம்மு-காஷ்மீரிலுள்ள பெஹல்காமில் 26 அப்பாவி பயணிகளை பாகிஸ்தான் ஊக்குவித்த இஸ்லாமிய தீவிரவாதிகள் கொடூரமாக கொன்றது நாட்டையே உலுக்கியது. அதற்குப் பதிலடி கொடுக்கும் விதமாக மத்திய அரசு உடனடியாகப் பல நடவடிக்கைகளை எடுத்தது. மே ஏழாம் தேதி அதிகாலை பாகிஸ்தானிலிருந்து செயல்பட்டு வரும் முக்கிய தீவிரவாத முகாம்களை நமது படைகள் துல்லியமாகத் தாக்கி அழித்தன. பின்னர் அவர்களின் விமான தளங்கள் பல தகர்க்கப்பட்டன. பொது மக்களுக்கு எந்தவித பாதிப்பும் இல்லாமல், அவர்களின் முகாம்களையும், ராணுவ தளங்களையும் மட்டுமே வெற்றிகரமாகத் தாக்கியது இந்திய வரலாற்றில் ஒரு முக்கியமான நிகழ்வு என உலகின் பலநாடுகளும் பாராட்டுகின்றன.
இந்தப் பின்னணியில் தமிழகத்தைச் சேர்ந்த சில எழுத்தாளர்கள், இயக்குநர்கள் ஆகியோர் சென்ற மே 9 ஆம் தேதி ஒரு அறிக்கை வெளியிட்டுள்ளனர். அதில் பாகிஸ்தானுடன் சமரசம் செய்ய நடவடிக்கை எடுத்திருக்க வேண்டும், ‘ஆபரேசன் சிந்தூர்’ என்னும் பெயரிலுள்ள சிந்தூர் (திருமணமான மகளிர் வைத்துக் கொள்ளும் செந்தூரப் பொட்டு) ஒரு குறிப்பிட்ட மதம் மற்றும் ஒரு பால் சார்ந்ததாக உள்ளது ஆகிய காரணங்களைச் சொல்லி இனியொரு போர் என்பது கூடாது எனக் கூறியுள்ளனர்.
மனிதர்களிடையே போர் கூடாது என்பது தான் இந்தியர்கள் அனைவரின் நோக்கமாகவும் உள்ளது. அதே சமயம் பாகிஸ்தான் தீவிரவாதம் மூலமாக சுதந்திரத்துக்கப்புறம் தொடர்ந்து பல ஆண்டுகளாகவே நமது நாட்டில் ஆயிரக்கணக்கான உயிரிழப்புகளையும், பொருளாதார இழப்புகளையும் ஏற்படுத்தி வந்து கொண்டுள்ளது. சமாதானத்துக்காகப் பல முயற்சிகளைத் தொடர்ந்து இந்திய அரசு மேற்கொண்டு வந்துள்ளது அனைவருக்கும் தெரியும். ஆனால் அவற்றுக்குப் பின்னரும், பாகிஸ்தான் தீவிரவாத நடவடிக்கைகளை எடுத்து வருகின்றது. எனவே தீவிரவாத முகாம்களையும், அவர்களின் கட்டமைப்புகளையும் தாக்குவது என்பது ஒரு பொறுப்புள்ள அரசின் கடமையாகிறது. அந்த வகையில் பல எச்சரிக்கைகளுக்குப் பின்னர் இந்த நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது. எனவே மீண்டும் பேச்சு வார்த்தை என்பது அர்த்தமில்லாத வாதமாகும்.
மேலும் ’சிந்தூர்’ என்பதற்கு இந்து மதச் சாயம் பூசுவது என்பது தேசத்துக்காக அனைவரும் ஒன்று பட்டு நிற்கும் இந்தச் சூழலில் நமது மக்களை மத ரீதியாகப் பிளவு படுத்தும் நோக்கமாகத் தெரிகிறது. இது வன்மையாக கண்டிக்கத்தக்கது. திருமணமான பெண்கள் செந்தூரம் வைத்துக் கொள்வது நமது தேசத்தின் கலாசாரம். காஷ்மீர் முதல் கன்னியாகுமரி வரை பாரம்பரியமாக கடைப்பிடிக்கப்பட்டு வரும் பாரம்பரியம். இதில் மதத்தைத் தேடிக் கண்டுபிடித்துப் பார்ப்பது தான் இந்த படைப்பாளிகளின் குதர்க்க புத்தி.
அது மட்டுமன்றி, செந்தூர் என்பது பெண்பாலை மட்டுமே குறிப்பதாகவும் அந்த அறிக்கை சொல்கிறது. இது என்ன முட்டாள்தானம் ? நாம் நமது தேசத்தைத் தொன்று தொட்டு தாயாக வணங்கி வருகிறோம். நமது பண்பாடு தேசம் மட்டுமின்றி, கடல்கள், மலைகள், நதிகள் என இயற்கையின் அரிய படைப்புகள் அனைத்தையும் தேவியின் வடிவாகவே வழிபட்டு வருகின்றது. நமது தேசத்தில் பெண்மை என்றாலே உயர்வானது; தெய்வீகமானது என்பது நமது வாழ்க்கை முறை. அதனால்தான் மேற்கத்தியவர்கள் தங்கள் நாட்டினைத் தந்தையர் நாடு என்னும் போது, நாம் நமது தேசத்தை தாய்நாடு என அழைக்கிறோம்.
பெஹல்காம் தீவிரவாதிகள் பெண்களின் செந்தூரத்தை அழிக்கும் நோக்கத்துடன் ஆண்களை மட்டுமே கொன்றார்கள். எனவே தீவிரவாத்தை அழிக்கும் அந்த நடவடிக்கைக்கு இராணுவ அதிகாரிகள் ’செந்தூர்’ எனப் பெயர் வைத்துள்ளனர். இதை விட வேறு எந்தப் பெயர் பொருத்தமானதாக இருக்க முடியும்? எனவே இவர்கள் எல்லாம் என்ன விதமான படைப்பாளிகள்? இவர்களின் உள்நோக்கம் மக்களைத் திசை திருப்புவதாகவே தெரிகிறது.
ஆகையால் அவர்களின் கருத்துக்கள் தமிழக மக்களின் மொத்த கருத்தல்ல. அவை ஒரு குறிப்பிட்ட கருத்துக்களை மையமாகக் கொண்ட ஒரு சிறு குழுவின் கருத்து மட்டுமே. ஏனெனில் ஒட்டு மொத்த தமிழகமும் படைவீரர்களின் பின்னர் நின்றது. அதற்காக தமிழக முதல்வர் தலைமையில் சென்னையில் ஒரு பேரணி நடைபெற்றது. தேசப் பாதுகாப்பு சம்பந்தமான விசயத்தில் எந்தவிதமான வேறுபாடுகளும் நம்மிடையே இல்லை; நாம் அனைவரும் இந்தியர்கள் என்ற உணர்வே அனைத்து தமிழர்களிடமும் உள்ளது.
அதனை வெளிப்படுத்தி படைவீர்களுக்கு நன்றி செலுத்தும் விதமாக கோவை, நீலகிரி, திருப்பூர் மற்றும் ஈரோடு மாவட்டங்களைச் சேர்ந்த தேசிய சிந்தனை கொண்ட படைப்பாளிகள் 49 பேர் மே 25 ஆம் தேதியன்று கோவையில் ஒன்று கூடினர். நிகழ்ச்சிக்கு ஆதரவு கொடுத்த 16 பேர் அன்று நேரில் வர இயலவில்லை. அவர்களில் எழுத்தாளர்கள், கல்வியாளர்கள், கட்டுரையாளர்கள், ஓவியர்கள் எனப் பலவிதமான படைப்பு பணிகளில் ஈடுபட்டுள்ளவர்கள் இருந்தனர்.
தேசபக்திப் பாடல்களுடன் தொடங்கிய நிகழ்ச்சிகளின் ஆரம்பத்தில் பெஹல்காமில் உயிர் நீத்த அப்பாவி மக்கள், பின்னர் நடைபெற்ற பாகிஸ்தான் தாக்குதல்களில் உயிரிழந்த எல்லைப் பகுதி மக்கள் மற்றும் வீர மரணமடைந்த போர் வீரர்கள் ஆகியோருக்கு அஞ்சலி செலுத்தப்பட்டது.
அதன் பின்னர் ’ஆபரேசன் சிந்தூர்’ பற்றியும் நமது படைவீரர்களுக்கு நன்றி தெரிவித்தும் கவியரங்கம் மற்றும் கருத்தரங்கம் ஆகியவை சிறப்பாக நடைபெற்றன. அதில் கல்வியாளர் டாக்டர் பாலகுருசாமி, கவிஞர்கள் சிதம்பரநாதன், மரபின் மைந்தன் முத்தையா, சிவதாசன், முத்து பாரதி, புலவர் ரவீந்திரன், அயகோகா சுப்பிரமணியன், பேராசிரியர் கனகசபாபதி, சேக்கிழான், அர்ஜூன் சம்பத், ஈரோடு அரங்க. சுப்பிரமணியன் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர். இறுதியில் நமது தேசத்தைக் காக்க அசாத்தியமாகச் செயல்பட்ட பாதுகாப்புத் துறை, படை வீரர்கள் மற்றும் முப்படைகளின் நடவடிக்கைகளைத் திறம்பட வழி நடத்திய பிரதமர் மோடி தலைமயிலான மத்திய அரசு உள்ளிட்ட அனைவருக்கும் நன்றி தெரிவித்து வந்திருந்த அனைவரின் கையெழுத்துகளுடன் ஒரு தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.
முதன்முறையாக தமிழகத்தில் தேசியத்துக்காகக் குரல் கொடுக்க கொங்கு மண்டலத்தைச் சேர்ந்த சுமார் ஐம்பது படைப்பாளிகள் ஒன்றிணைந்து அறிக்கை வெளி விட்டிருப்பது மிகவும் வரவேற்கத்தக்க ஒன்று.
( துக்ளக், சென்னை, ஜூன் 2025)