"பாரத பொருளாதாரம் அன்றும் இன்றும்'

"பாரத பொருளாதாரம் அன்றும் இன்றும்'

இந்தப் புத்தகத்தைப் பற்றிச் சொல்ல மறந்தே போய்விட்டது. இரண்டு ஆண்டுகளுக்குமுன் பேரா. கனகசபாபதி (அப்போது பி.எஸ்.ஜி நிர்வாகவியல் கல்லூரியில் பணிபுரிந்துகொண்டிருந்தார்; இப்போது கோவையில் உள்ள தமிழக நகரவியல் கல்வியகத்தின் இயக்குனராக இருக்கிறார்) ஒரு நிகழ்ச்சியில் கலந்துகொள்ள சென்னை வந்திருந்தார்.

அந்த நிகழ்ச்சியில் குருமூர்த்தி, பண்டைய பாரதப் பொருளாதாரம் என்பது கேபிடலிசமும் கிடையாது; கம்யூனிசமும் கிடையாது என்ற பொருளில் பேசினார். கனகசபாபதியுடன் பேசும்போது அவர் பண்டைய இந்தியப் பொருளாதார முறைமைகள் பற்றி எழுதிய ஒரு புத்தகம் நிர்வாகவியல் கல்லூரிகளில் பாடப்புத்தகமாக இருக்கிறது என்ற தகவலைச் சொன்னார்.

அகடெமிக் ஆக இல்லாமல் பொதுமக்கள் படிக்கக்கூடிய வகையில் இதனை எளிதாக எழுதித்தர முடியுமா என்று அவரைக் கேட்டிருந்தேன். அடுத்த பல மாதங்கள் கழித்து அவர் ஒரு மேனுஸ்கிரிப்டை தைத்த நோட்டுப்புத்தகங்களில் எழுதி அனுப்பிவைத்தார். அதில் பல மாறுதல்களைச் செய்து அவருக்கு பி.டி.எஃப் கோப்பாக அனுப்பிவைத்தேன். மீண்டும் சில மாறுதல்கள். இறுதியாக புத்தக வடிவம் பெற்ற அது மூன்று மாதங்களுக்கு முன்பு வெளியானது.

இந்தியர்கள் பொதுவாக வரலாற்று ஆவணங்களை எழுதிவைப்பதில்லை. முகலாயர்கள் காலத்துக்குப் பிறகுதான் அழுத்தமான ஆவணங்கள் நமக்குக் கிடைக்கின்றன. இப்போதுதான் ஆங்கிலேயர் காலம் தொடர்பான ஒரு வரலாற்றுப் புத்தகத்தைப் படித்துக்கொண்டிருக்கிறேன் (The Men Who Ruled India, P. Mason). நன்கு எழுதப்பட்ட புத்தகம் என்றாலும், ஆங்கிலேயர்கள் ஏதோ பராபகாரிகள் என்றும், முகலாயர்கள் மற்றும் பிற முட்டாள் ராஜாக்களின் கையில் மாட்டித் தவிக்கும் இந்தியர்களைக் காக்க வந்த புண்ணியவான்கள் என்றுமே சித்திரிக்கப்படுகிறார்கள். அந்தச் சித்திரமும் அவசியம்தான். ஆனால் மறுபக்கம், இந்தியா என்ற ஒரு ‘நிலப்பரப்பு’ (ராஜ்ஜியம், தேசம் என்ற வரம்புகளுக்குள் அடைபடாத ஒரு பகுதி இது) உலகின் முதல் இரண்டு இடங்களுக்குள் இருந்தவந்த ஒரு பகுதி, திடீரென எப்படி பிச்சைக்கார நாடாக ஆனது என்ற கேள்வி எழத்தான் செய்கிறது.

அந்தக் கேள்விக்கு ஒருவிதத்தில் பதில் சொல்கிறார் பேரா. கனகசபாபதி. அத்துடன் இந்தியாவின் பொருளாதார எதிர்காலம் என்ன என்பதைப் பற்றியும் அலசுகிறார்.

இந்துத்துவம், காலனியம், பின்காலனியம், கம்யூனிசம் போன்ற பல இசங்களின் பின்னணியில் இந்த நூலாசிரியர் சொல்வதை பலரும் ஆழ்ந்து விமர்சிக்கலாம். இதுவரையில் வலுவான விமர்சனங்கள் ஏதும் வந்ததாகத் தெரியவில்லை. கனகசபாபதி தினமலர் பத்திரிகையில் இதே தொடர்பாக சில கட்டுரைகளை எழுதியுள்ளார். அதற்கும் அதிகமான எதிர்வினைகள் வந்ததாகத் தெரியவில்லை.

ஆனால் நான் எதிர்பார்த்ததைவிட வேகமாகவே புத்தகம் விற்பனை ஆகிக்கொண்டிருக்கிறது. பொருளாதாரம் சம்பந்தப்பட்ட புத்தகம் என்பதால் இவ்வளவு ஆர்வம் இருக்கும் என்று நான் எதிர்பார்க்கவில்லை.

இது நிர்வாகவியல் மாணவர்களுக்காக மட்டுமல்ல, பொதுவான வாசகர்களுக்குமான புத்தகம். எளிமையான மொழியில் எழுதப்பட்ட புத்தகமும்கூட.

இதனைத் தொடர்ந்து, பேரா. கனகசபாபதி அடுத்து சில நூல்கள் எழுதுவதில் இறங்கியுள்ளார். ஆங்கிலத்தில் பாடப்புத்தகங்கள் எழுதுவதைவிட பொதுமக்களைச் சென்றடையும் தமிழ் நூல்களளை எழுதுவது மிகவும் மகிழ்ச்சி தருகிறது என்கிறார் இவர். இதேபோல பிற அகடெமிக் பேராசிரியர்களும் வெகுஜன நூல்களை தமிழில் எழுத ஆரம்பித்தால் மிகவும் நன்றாக இருக்கும்.

[பின்குறிப்பு: இன்று ஒரு நாள் (ஞாயிறு) மட்டுமே, சென்னை புத்தகக் காட்சியில் இந்தப் புத்தகம் 100 பிரதிகள் விற்பனை ஆகியுள்ளது. அது ஒன்றே போதும், இதன் விற்பனை வேகத்தைச் சொல்ல!] -பத்ரி சேஷாத்ரி

புத்தகத்தை வாங்க
.
Posted by Badri at 23:06
Labels: புத்தகம்
3 comments:
M Ramachandran said...
Happy to note that this book sold more nos
and feel it will take swadeshi thoughts to the readers

Thanks to both Badri and Kanagasabapathy ji

Mon Jan 04, 07:27:00 AM IST
K Sriram said...
I think, it will be much sought after book. We need to take pride in our own heritage rather than try to ape the west and such books shall go a long way to develop pride in our culture and heritage.

Mon Jan 04, 07:37:00 AM IST
Anonymous said...
Kodos to Prof.Dr.Kanagasabapathy for binging out such a wonderful book.
K.Subhash Chandiran, Coimbatore - 35.

Mon Jan 04, 08:56:00 AM IST

1 comment:

வ.மு.முரளி. said...

பேராசிரியருக்கு, உங்கள் புத்தகம் அறிய வேண்டிய அரிய தகவல்களுடன் உள்ளது. நன்றி.

௦-வ.மு.முரளி
காண்க: http://kuzhalumyazhum.blogspot.com