அண்மையில் 2026-27 நிதியாண்டின்
முதல் காலாண்டுக்கான (ஏப்ரல் -ஜூன் ) பொருளாதார
முடிவுகள் வெளிவந்துள்ளன. இந்திய ரிசர்வ் வங்கி உள்ளிட்ட பல அமைப்புகளின்
கணிப்புகளையெல்லாம் மீறி, 7.8 விழுக்காடு என்ற அளவில் அதிக வளர்ச்சியை நாடு கண்டு வருவது மகிழ்ச்சியளிக்கும்
செய்தியாகும். மேலும் சென்ற 2025-26 நிதியாண்டின்
முதல் காலாண்டு வளர்ச்சி விகிதமான 6.9 விழுக்காட்டை விடவும் தற்போது அதிகமாக
உள்ளது.
கூடவே தற்போதைய முடிவுகள் இந்தியப்
பொருளாதாரம் உலக அளவில் வேகமாக வளர்ந்து வருவதை உறுதி செய்கின்றன. சென்ற
காலாண்டில் உலகின் பிற முக்கிய
பொருளாதாரங்களான சீனா – 4.3 விழுக்காடு; அமெரிக்கா – 2.1 விழுக்காடு; ஜெர்மனி -1.1
விழுக்காடு ; ஜப்பான் – 0.5 விழுக்காடு என்ற அளவுகளில் மட்டுமே வளர்ச்சியடைந்துள்ளன.
அதனால் உலகின் வேகமாக வளரும் பொருளாதாரம் என்னும் சிறப்பையும் இந்தியா தக்க
வைத்துக் கொண்டுள்ளது.
பொருளாதாரத்துக்கு
அடிப்படையான துறைகளான விவசாயம், தொழில் மற்றும் சேவை சார்ந்த துறைகள் ஆகிய
மூன்றுமே வளர்ச்சிக்கு உதவியுள்ளன. சேவைத் துறையானது பத்து விழுக்காடு
வளர்ச்சியுடன், ஒட்டு மொத்த வளர்ச்சிக்கு ஒரு வலிமையான தூணாக இருந்து
வருகிறது. அதில் ரியல் எஸ்டேட், சில்லறை
வணிகம், மொத்த விற்பனை , தகவல் தொடர்பு மற்றும் கணினித் துறை சம்பந்தப்பட்ட
சேவைகள் நல்ல வளர்ச்சியைக் கண்டு வருகின்றன.
சென்ற நிதியாண்டின் முதல்
காலாண்டில் 6.1 விழுக்காடாக இருந்த தொழில் சார்ந்த துறையின் வளர்ச்சி இந்தக்
காலாண்டில் 8.6 விழுக்காடாக அதிகரித்து உற்சாகமாக உள்ளது. அதில் உற்பத்தித் துறை
9.2 விழுக்காடு வளர்ந்துள்ளது. மின்சாரம், கட்டுமானம் உள்ளிட்ட துறைகளும் நல்ல வளர்ச்சியைக் கண்டுள்ளன. விவசாயம் மற்றும்
சம்பந்தப்பட்ட துறை 3.6 விழுக்காடு அளவு வளர்ச்சி பெற்றுள்ளது. அதில் விவசாயத்
துறையின் வளர்ச்சி மட்டும் 2.9 விழுக்காடு
என்ற அளவில் உள்ளது.
பொருளாதாரம் அதிக வளர்ச்சி
பெறுவதற்கு மக்கள் பொருட்களை வாங்க
வேண்டும். அந்த வகையில் பொருட்களுக்கான தேவை நமது நாட்டுக்குள்ளேயே அதிகமாக
உள்ளது. சென்ற காலாண்டில் தனி நபர் நுகர்வு என்பது 7.1 விழுக்காடாக
அதிகரித்துள்ளது. வீடு வாங்குதல், வாகன விற்பனை, மின்சார பயன்பாடு, டிஜிட்டல் நிதி
பரிவர்த்தனை, பெட்ரோல், டீசல் பயன்பாடு உள்ளிட்ட பலவும் அதிகரித்துள்ளன.
பொருளாதார வளர்ச்சியில்
மூலதனம் முக்கிய பங்கு வகிக்கிறது. 2025-26 வருட காலாண்டில் 5.8 விழுக்காடு
வளர்ச்சியுடன் இருந்த மொத்த முதலீட்டு உருவாக்கம், இந்தக் காலாண்டில் சுமார்
இரண்டு மடங்கு அதிகரித்து 11.9 விழுக்காடு என்ற அளவில் உள்ளது. மேலும் வெளிநாட்டு
மூலதனம் கடந்த பதினைந்து காலாண்டுகளில் வராத அளவு அதிகரித்து 30.7 பில்லியன் டாலர்
என உள்ளது.
முந்தைய வருட
காலாண்டில் 6 விழுக்காடாக இருந்த ஏற்றுமதி
வளர்ச்சி தற்போது 12 விழுக்காடாக உயர்ந்துள்ளது.
அதில் மின்னணு சாதனங்கள் மற்றும்
பொறியியல் பொருட்கள் ஏற்றுமதி ஆகியன அதிக வளர்ச்சியைக் கண்டு வருகின்றன.
அதே சமயம் இறக்குமதி 1.1 விழுக்காடு குறைந்துள்ளது. கடந்த சில வருடங்களாக மோடி
அரசு பிற நாடுகளுடன் உருவாக்கி வரும்
தடையில்லா வர்த்தக ஒப்பந்தங்கள் மூலம் நல்ல பலன்கள் கிடைத்து வருவதாகத் தெரிகிறது.
தற்போதைய பொருளாதார வளர்ச்சியின்
ஒரு முக்கிய அம்சம் வளர்ச்சி பரவலாக எல்லாத் துறைகளிலும் நிகழ்ந்து வருவதாகும். சரக்கு
மற்றும் சேவை வரிகள் மூலம் அரசுக்கான வருமானம் அதிகரித்து வருகிறது. அதே சமயம்
விலைவாசி 4.15 விழுக்காடு என்ற அளவில் கட்டுக்குள் உள்ளது. நாட்டின் நிதிப்
பற்றாக்குறை அதிகமில்லாமல் நம்பிக்கை அளிக்கும் வகையில் உள்ளது.
மேற்கண்ட அனைத்தும் உலக
அளவில் நிகழ்ந்து வரும் பல முக்கியமான பிரச்னைகளுக்கு
இடையிலும் நடந்து வருவது தான் இங்கு கவனிக்கத் தக்கது. ஈரான் நாடு தீவிர வெளிநாட்டுத் தடைகளையும், போரையும்
சந்தித்து வருகிறது. அதனால் மத்திய கிழக்கு நாடுகளில் குழப்பங்கள் நீடித்து
வருகின்றன. எனவே எரிபொருள் தடையின்றி கிடைப்பது பற்றி நிச்சயமற்ற சூழ்நிலை நிலவி
வருகிறது.
ரஷ்யா- உக்ரைன் போர்
நீடித்து வருகிறது. அமெரிக்க அதிபர் டிரம்ப் ஒரு தெளிவுடன் செயல்படாமல் அடிக்கடி
முடிவுகளை மாற்றிக் கொள்ளும் நபராக இருந்து வருகிறார். சுற்றுச் சூழல் அபாயம் உலகைப் பயம் கொள்ள வைக்கிறது.
எனவே பல நாடுகளும் கடும் பொருளாதாரச் சிரமங்களைச் சந்தித்து வருகின்றன. ஆகையால்
உலகப் பொருளாதார வளர்ச்சி குறைவாகவும் மந்தமாகவும் உள்ளது.
அதே சமயம் இந்தியப்
பொருளாதாரம் அந்தச் சிரமங்களை எல்லாம் மீறி நம்பிக்கையுடன் செயல்பட்டு வருகின்றது.
கடந்த பன்னிரெண்டு வருடங்களாக மோடி அரசு கொண்டு வந்த திட்டங்கள் பலவும் நல்ல
பலன்களைக் கொடுத்து வருகின்றன. சென்ற
வருடம் பொதுத் துறை வங்கிகள் சுமார் இரண்டு லட்சம் கோடி ரூபாய் அளவு லாபம்
ஈட்டியுள்ளன.
இந்தப் பின்னணியில் சென்ற
காலாண்டு வளர்ச்சி விகிதச் சாதனையை இமாலயச் செயல்பாடு எனப் பிரதமர் மோடி
வர்ணித்துள்ளார். அது 140 கோடி இந்தியர்களின் கடின உழைப்பு மற்றும் அரசின்
பொருளாதார சீர்திருத்த நடவடிக்கைகள் ஆகியவற்றின் மூலம் நடந்துள்ளது எனக்
குறிப்பிட்டுள்ளார்.
அவற்றுடன் அரசின் திறமையான
நிர்வாகம் என்பதையும் நாம் சேர்த்துக் கொள்ள வேண்டும். நாடு வேகமாக வளர்ந்து உலக அரங்கில் முன்னேறி வரும் இந்தச்
சூழலில் தற்போது வந்துள்ள முடிவுகள் ஒரு பெரிய உத்வேகத்தை அளிக்கின்றன.
( https://spmrf.org/indian-growing-economy )
No comments:
Post a Comment