தேசப் பணியில் பாரதிய ஜனதா பேரியக்கம்

 

பாரதிய ஜனதா கட்சி 1980 ஆம் வருடம் ஏப்ரல் மாதம் ஆறாம் தேதியன்று ஆரம்பிக்கப்பட்டது. இந்த மாதம் தனது நாற்பத்தி நான்காம் ஆண்டில் அடியெடுத்து வைக்கிறது. கடந்த நாற்பத்தி மூன்று ஆண்டுகளில் தனது பணிகளால் நாட்டு மக்களின் ஆதரவைப் பெற்று ஒரு பேரியக்கமாக மாறி, தற்போது உலகின் மிகப் பெரிய ஜனநாயக கட்சியாகச் செயல்பட்டு வருகிறது.   

இந்திய நாடு நீண்ட நெடிய வரலாற்றைக் கொண்டது. வெவ்வேறு துறைகளிலும் அளப்பரிய சாதனைகளை நிகழ்த்தி உலகின் முதன்மை நாடாக விளங்கி வந்த பெருமைக்குரியது. அந்நியப் படையெடுப்புகள் மற்றும் காலனியாட்சி சிதைவுகள் நாட்டுக்குப் பெரும் பாதிப்புகளை ஏற்படுத்தின. அதனால் நாடு ஏழ்மை நிலைக்குத் தள்ளப்பட்டது.    

சுதந்திரத்துக்குப் பின்னர் பாகிஸ்தான் பிரிவினையை ஒட்டிய  நேரு அரசின் அணுகுமுறை மற்றும் நேரு-லியாகத் அலிகான் ஒப்பந்த விசயத்தில் பிரதமரின் போக்கு ஆகியன காங்கிரஸ் கட்சி தேசிய உணர்வோடு மக்களைப் பாதுகாக்கும் வகையில் செயல்படவில்லை என்பதை உணர்த்தின.

அவற்றைச் சரி செய்ய முயன்று தோற்றுப் போன மத்திய அமைச்சர் டாக்டர் சியாம பிரசாத் முகர்ஜி தனது பதவியிலிருந்து  விலகினார். அதனால் தேச நலனை மையப்படுத்திச் செயல்படக்கூடிய ஒரு கட்சி நாட்டுக்கு அவசியம் என முக்கியமான தேசியவாதிகள் முடிவு செய்தனர். அதனடிப்படையில் பாரதிய ஜனசங்கம் 1951 ஆம் ஆண்டு  முகர்ஜி அவர்களைத் தலைவராக கொண்டு ஆரம்பிக்கப்பட்டது.

பாரதிய ஜனதா கட்சியும் அதன் முந்தைய அவதாரமான ஜன சங்கமும் அன்று முதல் அதே நோக்கத்தை அடிப்படையாகக் கொண்டு செயல்பட்டு வருகின்றன. தேச ஒருமைப்பாடு மற்றும் பாதுகாப்பைக் காப்பாற்றுவது, மண்ணின் கலாசாரத்தைப் பேணிக் காத்தல், கடைநிலை மனிதனை முன்னேற்றும் செயல்பாடுகள், வெவ்வேறு துறைகளிலும் வளர்ச்சி, சுதேசி அணுகு முறைகள், உலக அளவில் தேசத்தை உன்னத நிலைக்கு எடுத்துச் செல்வது உள்ளிட்டவை அதன் முக்கிய அம்சங்கள்.    

1952 ஆம் வருடம் பிரதமர் நேரு, ஜம்முகாஷ்மீர் தலைவர் ஷேக் அப்துல்லாவுடன் போட்ட ஒப்பந்தம் அந்த மாநிலத்துக்கென தனியான   சட்டம், கொடி மற்றும் பிரதமர் பதவி ஆகியவற்றைக் கொடுத்தது.  மேலும் நாட்டின் பிற பகுதிகளிலிருந்து அங்கு நுழைய அனுமதி வாங்கும் முறையைக் கொண்டு வந்தது.  

அதை எதிர்த்து 1953 ல் முகர்ஜி அவர்கள் அந்த மாநிலத்தில்  நுழைந்த போது கைது செய்யப்பட்டுக் காவலில் வைக்கப்பட்டார். இரண்டு  மாதங்கள் முடியும் முன்னரே மர்மமான முறையில் காலமானார். தேசத்தின் முழுமையான  ஒருங்கிணைப்புக்காக  தனது 52 வயதில் வாழ்வையே அர்ப்பணித்துக் கொண்டார்.

1947 ல் நாடு சுதந்திரம் அடைந்த பின்னரும், கோவாடையூடாமன் மற்றும் பாண்டிச்சேரி பகுதிகள் போர்ச்சுகீஸ் மற்றும் பிரெஞ்சு அரசுகளின் கீழ் நீடித்து வந்தன. அவற்றுக்கான விடுதலைகளுக்காக ஜன சங்கம் தீவிரமாகப் போராடி, உயிர்ப்பலி கொடுத்து வெற்றி கண்டது. 

ஆரம்ப முதலே பாகிஸ்தான் மற்றும் சீனாவுடனான நேருவின் தேவையற்ற சமாதானப் போக்கை ஜனசங்கம் எச்சரித்து வந்தது. சீனாவின் ஊடுருவல்களை எதிர்த்து 1959-60 ஆண்டுகளில் தீவிரமாக குரல் கொடுத்தது. 1965 ல் பாகிஸ்தான் குஜராத்தில் ஒரு இடத்தைப் பிடித்த பின்னரும் அவர்களுடன் சமாதானமாகப் போக நேரு விரும்பினார். அதை எதிர்த்து கட்சி நாடு முழுவதும் ஒரு லட்சம் இடங்களில் கூட்டங்கள் நடத்தியது. அதே சமயம் பாகிஸ்தானுடன் போர் வரும் சமயங்களில் மத்திய அரசுக்கு முழு ஆதரவை  அளித்தது.

1967 முதல் காங்கிரஸ் கட்சிக்கு மாற்றாகப் பல மாநிலங்களில்  கூட்டணி அரசுகளை அமைத்து ஆட்சியில் பங்கு கொண்டது. 1975ல் இந்திரா காந்தி அவசர நிலையைக் கொண்டு வந்த போது அதை எதிர்த்துப் போராடிச் சிறை சென்றவர்களில் அதிகம் பேர் ஜனசங்கம் மற்றும் அதன் சகோதர அமைப்புகளைச் சேர்ந்தவர்கள் தான். பின்னர்  காங்கிரஸ் கட்சிக்கு மாற்றாக ஒரு பெரிய கட்சியை உருவாக்க வேண்டி ஜன சங்கம்  ஜனதா கட்சியின் ஒரு அங்கமானது.

1977ல் ஜனதா கட்சியின் ஆட்சி மத்தியில் அமைவதற்கு   ஜனசங்க அமைப்பினர் பெரிய பங்கு வகித்தனர். அந்த ஆட்சியில் திரு வாஜ்பாய் மற்றும் திரு அத்வானி உள்ளிட்டவர்கள் முக்கிய பொறுப்புகளை வகித்தனர். பின்னர் கருத்து வேறுபாடுகள் காரணமாக ஜனதா கட்சி உடைந்த போது, பாரதிய ஜனதா உருவானது.

அடுத்த கட்டமாக 1998 ஆம் வருடம் பாரதிய ஜனதா கட்சி தலைமை வகித்த கூட்டணி ஆட்சியை  அமைத்தது.  அப்போது   பிரதமர் வாஜ்பாய் வெற்றிகரமாக அணுகுண்டு சோதனையை நடத்தி இந்தியாவின் வலிமையை உலகுக்கு உணர்த்தினார். பின்னர் 1999 தேர்தலிலும் பாரதிய ஜனதா அதிக இடங்களை வென்று கூட்டணி ஆட்சியை அமைத்தது. எனவே 2004 வரை தொடர்ந்து ஆறு ஆண்டுகள் வாஜ்பாய் தலைமையிலான ஆட்சி நடைபெற்றது.

அதன் பின் பத்து ஆண்டுகள் ஆட்சியில் இருந்த திரு மன்மோகன் சிங் தலைமையிலான கூட்டணி அரசுகள் நாட்டைச் சீரழித்தன. பின்னர் 2014 தேர்தலில் தனிப் பெரும்பான்மை பலத்துடன் பாரதிய ஜனதா கட்சியிலான கூட்டணி அரசு நரேந்திர மோடி அவர்கள் தலைமையில் அமைந்தது. அப்போது தான் சுதந்திர இந்தியாவில் முதல் முறையாக காங்கிரஸ் அல்லாத ஒரு கட்சி தனிப் பெரும்பான்மை பெற்றது. 

அப்போது முதல் நாட்டின் இறையாண்மைக்கும் பாதுகாப்புக்கும் அதிகபட்சமான கவனம் கொடுக்கப்பட்டு வருகிறது. அதற்காக கட்டமைப்புகள் வலிமைப்படுத்தப்பட்டும், நவீன மயமாக்கப்பட்டும் வருகின்றன. எல்லைகளில் அத்து மீறுவோருக்குக்  கடுமையான பதிலடி கொடுக்கப்படுகிறது. அதனால் அண்டை நாடுகளான பாகிஸ்தான் மற்றும் சீனா அடங்கிக் கிடக்கின்றன.

சிறப்பு சலுகையினால் ஜம்மு- காஷ்மீரில் தீவிரவாதம் பெருகி, ஐந்து லட்சத்துக்கும் மேற்பட்ட இந்துக்கள் துரத்தியடிக்கப்பட்டு, சொந்த நாட்டிலேயே அகதிகளாக மாறினார்கள். பெண்கள், பட்டியலின மக்கள் ஆகியோருக்கு அடிப்படை உரிமைகள் மறுக்கப்பட்டன. எனவே 2019 ஆம் வருடம் மோடி அரசு 370 பிரிவை நீக்கி தேச ஒருங்கிணைப்பை உறுதிப் படுத்தியது. அதனால் அங்கு தீவிரவாதம் குறைந்து வளர்ச்சியை நோக்கிய பயணம் தொடங்கியுள்ளது.

மேலும் வடகிழக்கு மாநிலங்களில் நிலவி வந்த பிரிவினைவாத நடவடிக்கைகள் கட்டுக்குள் வந்துள்ளன. வட கிழக்கு மாநிலங்களுக்கு அதிக கவனம் கொடுக்கப்பட்டு, அவை தேசிய நீரோட்டத்தில் இணைந்து வளர்ச்சியைக் கண்டு வருகின்றன. மேலும் இடது சாரி தீவிரவாதம் வேகமாக குறைந்து வருகிறது.

இந்தியா பாரம்பரியமான பொருளாதார வழிமுறைகளைக் கொண்டு உலகின் செல்வந்த நாடாக விளங்கி வந்த பெருமைக்குரியது.  ஆனால் சுதந்திரம் பெற்றதும் நேருவின் அரசு அந்நிய சித்தாந்தை அடிப்படைக் கொள்கையாக நடைமுறைப் படுத்தியது. அதனால் நாட்டின் வளர்ச்சி வெகுவாகப் பாதிக்கப்பட்டது.

அதே சமயம் 1954 ஆம் வருடமே ஜன சங்கம் சுதேசிக் கொள்கை அவசியமென அறைகூவல் விடுத்தது. பின்னர் 1965 ஆம் வருடம் ஒருங்கிணைந்த மனித நேய தத்துவத்தை ஜன சங்கத்தை உருவாக்கிய சிற்பியும் சிந்தனையாளருமான தீனதயாள் உபாத்யாயா அவர்கள் முன் வைத்தார். அது கட்சியின் கொள்கையாக ஏற்றுக் கொள்ளப்பட்டு, தற்போது மோடி அரசின் வழிகாட்டு நெறியாக விளங்கி வருகிறது..

ஏழை மக்கள், பெண்கள், பட்டியலின மற்றும் பழங்குடி வகுப்பினர் உள்ளிட்ட நலிவடைந்த பிரிவினருக்கு சிறப்புத் திட்டங்கள்  நடைமுறைப்படுத்தப்பட்டு வருகின்றன.  அதனால் அவர்கள் பெரும் பலன்களைப் பெற்று வாழ்க்கையில் புதிய வெளிச்சத்தைக் கண்டு  வருகின்றனர். இளைஞர்கள், விவசாயிகள், உழைப்பாளிகள், தொழில் முனைவோர் ஆகியோருக்கு அதிக கவனம் கொடுக்கப்பட்டு வருகிறது.

மோடி ஆட்சியில் மட்டும் சாதாரண மக்களுக்காக சுமார் பன்னிரெண்டு கோடி கழிவறைகள் கட்டப்பட்டுள்ளன. சுமார் பத்து கோடி ஏழைப் பெண்களுக்கு இலவச எரிவாய் இணைப்பு கொடுக்கப்பட்டுள்ளது. சுமார் மூன்று கோடி வீடுகள் கட்டிக் கொடுக்கப்பட்டுள்ளன. ஏழை மக்களுக்கு வங்கிச் சேவைகள் கிடைக்க வேண்டும் என்கின்ற நோக்கில் ஆரம்பிக்கப்பட்ட திட்டத்தில் இதுவரை 48 கோடிக்கு மேற்பட்ட கணக்குகள் துவக்கப்பட்டுள்ளன.

முன்னர் இருந்த அரசுகள் செய்யத் தயங்கிய பல விசயங்களையும் மோடி அரசு தைரியமாகச் செயல்படுத்தி  வருகிறது. சுதந்திரமடைந்து எழுபது ஆண்டுகளுக்குப் பின்னர் தாய் மொழியையும், தொழில் கல்வியையும் அடிப்படையாக கொண்ட தேசிய கல்விக் கொள்கை நடை முறைப்படுத்தப்பட்டுள்ளது. 

நாடு முழுவதும் கட்டமைப்புகள் புதியதாக உருவாக்கப்பட்டும், மேம்படுத்தப்பட்டும்  வருகின்றன. நாட்டுக்கு ஆதரமாக விளங்கும் விவசாயம் மற்றும்  குறு, சிறு, நடுத்தரத் தொழில்களுக்கு சிறப்புத் திட்டங்கள் தீட்டப்பட்டு அவை வளர்ச்சியைக் கண்டு வருகின்றன. அதனால் சென்ற நிதியாண்டில் ஏழு விழுக்காடு வளர்ச்சி விகிதத்துடன் உலகிலேயே வேகமாக வளரும் நாடாக இந்தியா உள்ளது.

 நாடு நீடித்த தன்மையுடன் சிறந்து விளங்க வேண்டுமெனில் சுயசார்பு  அவசியம். அந்த வகையில்இந்தியாவில் தயாரிப்போம்திட்டத்தில் தொடங்கி, சுய சார்பு பொருளாதார திட்டத்தை முன்னிறுத்தி மோடி அரசு கொள்கைகளை வகுத்து வருகிறது. அதனால் உள்நாட்டு தயாரிப்புகள் அதிகமாகி, சீனா போன்ற நாடுகளிடமிருந்து வரும் இறக்குமதிகள் குறைந்து வருகின்றன.

கொரோனா சமயத்தில் குறுகிய காலத்திலேயே உள் நாட்டில் மருந்துகள் தயாரிக்கப்பட்டு, உலக அளவில் அதிகமாக 221 கோடிக்கு மேற்பட்ட தடுப்பூசிகள் போடப்பட்டுள்ளன. மேலும் நூற்றுக்கு மேற்பட்ட நாடுகளுக்கு நாம் தடுப்பூசிகளை அனுப்பி உதவி புரிந்துள்ளோம். அதன் மூலம் உலகில் இந்தியாவின் மதிப்பு அதிகரித்துள்ளது.

அதனால் கடந்த எட்டு ஆண்டுகளுக்கு மேலாக நாடு மிகப் பெரும் மாற்றங்களைக் கண்டு வருகின்றது. உலகப் பொருளாதாரத்தில் 2014-ஆம் வருடம் பத்தாவது இடத்தில் இருந்த இந்தியா, இப்போது ஐந்தாவது இடத்துக்கு உயர்ந்துள்ளது. மேலும்  இந்தியர்களின் தனி நபர் வருமானம் இரண்டு மடங்கு உயர்ந்து தற்போது 1.97 லட்சம் ரூபாயாக உள்ளது. எனவே ஐக்கிய நாடுகள் சபை உள்ளிட்ட சர்வதேச அமைப்புகள் இருண்டு கிடக்கும் உலக பொருளாதார சூழலில் ஒளி வீசும் நட்சத்திரமாக இந்தியா விளங்கி வருகிறது எனக் குறிப்பிடுகின்றன.

இந்திய தேசத்தின் அடிநாதமாக விளங்குவது தனித்துவம் வாய்ந்த நமது பண்பாடு. அதனடிப்படையில் நமது மண்ணுக்கே உரித்தான கலாசார முறைகளைப் பேணிக் காப்பதற்கு அரசு நடவடிக்கைகளை எடுத்து வருகிறது. பல நூற்றாண்டுகளாக நாட்டு மக்கள் காண விரும்பிய இராமபிரான் ஆலயம் அவருடைய பிறப்பிடத்தில் பிரமாண்டமாக கட்டப்பட்டு வருகிறது. புனிதமான காசி விஸ்வநாதர் ஆலயம் புதுப்பிக்கப்படுள்ளது.

சுதந்திரம் பெற்றது முதல் காங்கிரஸ் உள்ளிட்ட பிற கட்சிகளின் ஆட்சியில் வாக்கு வங்கி அரசியல் பிரதானமாக இருந்து வந்தது. அதற்கு மாற்றாக அனைவருக்குமான வளர்ச்சி என்பது பாரதிய ஜனதா ஆட்சியின்  அடிப்படை அம்சமாக இருந்து வருகிறது. அண்மைக் காலமாக சர்வதேச அளவில் அனைத்து நாடுகளிடமும் நட்புறவு அதிகரித்துள்ளது.

2014 முதல் வெவ்வேறு துறைகளிலும் நாடு நல்ல முன்னேற்றங்களைக் கண்டு வருகிறது. ஊழல் இல்லாத நேர்மையான ஆட்சி, தேச பக்தி மிக்க அர்ப்பணிப்புள்ள தலைவர்கள், கடுமையான உழைப்பு ஆகியன நாட்டை உயர்த்திக் கொண்டு வருகின்றன. அதனால் நாட்டில் பதினேழு மாநில மற்றும் யூனியன் பிரதேச பகுதிகளில் பாரதிய ஜனதா கட்சி ஆட்சியில் உள்ளது.

எனவே தற்போது இந்தியா உலக அளவில் சக்தி வாய்ந்த நாடாக உருவாகி வருகிறது. சுதந்திரத்துக்குப் பின் குடும்ப மற்றும் வாக்கு வங்கி  அரசியலிலிருந்து நாட்டைக் காப்பாற்றி, புதிய இந்தியாவை உருவாக்குவதில் பாரதிய ஜனதா முக்கிய பங்கு வகித்து வருகிறது. அதனால் பல தரப்பட்ட பிரிவினரின் ஆதரவையும் பெற்று  மக்களுக்கு நம்பிக்கை தரும் கட்சியாக மென்மேலும் வளர்ந்து வருகிறது. .

( ஏப்ரல் 6 பாரதிய ஜனதா கட்சி நிறுவன நாள்)

( தினமலர், சென்னை, ஏப்ரல் 6, 2023)

No comments: