மாமனிதர் அம்பேத்கர் வழியில் மோடி

 

மரியாதை நிமித்தமாகபாபாசாஹிப்என்னும் அடைமொழியுடன்  அழைக்கப்படும் டாக்டர் அம்பேத்கர் ஒரு மாமனிதர். அந்தக் காலத்திலேயே அமெரிக்கவின் கொலம்பியா பல்கலைக் கழகம் மற்றும் லண்டன் ஸ்கூல் ஆப் எகனாமிக்ஸ்என்னும் இரண்டு பெரிய வெளிநாட்டுக் கல்வி நிறுவனங்களில் டாக்டர் பட்டம் பெற்றவர். வழக்கறிஞர், பொருளாதார நிபுணர், எழுத்தாளர், சமூக சீர்திருத்தவாதி மற்றும் அரசியல் தலைவர் எனப் பன்முகத் தன்மை கொண்டவர்.  .

இந்திய அரசியலமைப்புச் சட்டத்தை வடிவமைத்த குழுவுக்குத் தலைவராக இருந்து அவர் ஆற்றிய பணி மகத்தானது.  எளிமையான  பட்டியலினக் குடும்பத்தில் பிறந்து, சொல்ல முடியாத அவமானங்களை எதிர்கொண்டு, வாழ்க்கையில் எதிர் நீச்சல் போட்டு அளப்பரிய சாதனைகளைச் செய்தவர்.  நமது தேசத்தின் ஒற்றுமை மற்றும் கலாசார பாரம்பரியத்தின் மீது உறுதியான நம்பிக்கை கொண்டவர்.

காங்கிரஸ் மற்றும் கம்யூனிஸ்டுகளுக்கு எதிரானவர் என்பதால் அவரது உண்மையான வரலாறு மற்றும் சிந்தனைகள் பொது வெளியில் மறைக்கப்பட்டன. அவர் இருபதாம் நூற்றாண்டின் காலத்தை மீறிய சிந்தனையாளர். ஆனால் அரசியல் தலைவர்கள் அவரை ஒரு குறிப்பிட்ட கட்டமைப்புக்குள்ளே அடைத்து வைத்திருப்பது பெரிய துரதிர்ஷ்டம்.

ஆரம்ப முதலே  காங்கிரஸ் கட்சி அவரது வளர்ச்சியை விரும்பவில்லை. அவரை ஒரு பாராளுமன்ற உறுப்பினராக்கி அவரது அறிவை நாட்டுக்குப் பயன்படுத்திக் கொள்ள அவர்களுக்கு விருப்பமில்லை. 1952 பாராளுமன்ற தேர்தலில் வடக்கு பம்பாய் தொகுதியில் அவர் போட்டியிட்ட போது அவரைக் கேவலப்படுத்தும் வகையில் அவரின் கீழ் உதவியாளராக வேலை பார்த்த கஜ்ரோல்கர் என்பவரை காங்கிரஸ் வேட்பாளராக அறிவித்தது. நேரு நேரடியாக களத்தில் இறங்கி பல கூட்டங்களில் பேசினார்.

அவருக்கு எதிராக கம்யூனிஸ்டுகளும் சேர்ந்து கொண்டனர். கம்யூனிஸ்ட் கட்சித் தலைவர் டாங்கே வாக்கினை அம்பேத்கருக்கு அளிப்பதற்குப் பதிலாக வீண் செய்யுங்கள் என்று வெளிப்படையாகப் பிரசாரம் செய்தார். அதனால் அம்பேத்கர் தேர்தலில் தோல்வியுற்றார். பின்னர் 1954ல் நடந்த பந்தரா தொகுதிக்கான இடைத் தேர்தலில் அவர் போட்டியிட்ட போதும், மீண்டும் காங்கிரஸ் கட்சியால் தோற்கடிக்கப்பட்டார்.

கம்யூனிஸ்டுகளுடன் நான் இணைந்து செயல்பட மாட்டேன்; ஏனெனில் நான் கம்யூனிசத்தை நம்பவில்லை எனத் தெளிவாக அறிவித்தார் அம்பேத்கர். மேலும் கம்யூனிசமும் ஜனநாயகமும் இணைந்து பணியாற்றும் என்பது முழுக்க பொருத்தமில்லாதது எனக் கூறினார். எனவே கம்யூனிஸ்டுகள் அவரை பூர்ஷ்வா, பிரிவினை அரசியல் செய்பவர். தலித் மக்களைத் தவறாக வழி நடத்துவபர், சந்தர்ப்பவாதி மற்றும் ஏகாதிபத்தியத்தின் கைக்கூலி எனப் பலவகைகளில் மோசமாக வர்ணித்தார்கள்.

தேச நலனும் ஒருமைப்பாடுமே மூச்சாக கொண்டு வாழ்ந்த மாபெரும் தலைவர் அம்பேத்கர். பிரதமர் நேரு ஜம்மு காஷ்மீர் மாநிலத்துக்கு மட்டும்  தனி உரிமைகள் கொண்ட சட்டப்பிரிவு 370ஐ க் கொண்டு வந்த போது அதைக் கடுமையாக எதிர்த்தார். அது தேசத்துக்குத் துரோகமான செயல்; எனவே தான் சட்ட அமைச்சராக இருக்கும் வரை அதைக் கொண்டு வர அனுமதிக்க மாட்டேன் எனச் சூளுரைத்தார். பின்னர் அதைத் தந்திரமான  வகையில் நேரு சட்டமாக்கினார்.

அதன் விளைவாக அங்கு தீவிரவாதம் பெருகி, ஐந்து லட்சத்துக்கு மேற்பட்ட இந்துக்கள் துரத்தியடிக்கப்பட்டு, பல நூற்றுக்கணக்கான உயிர்கள் பலியானதை தேசம் கண்டது. நாட்டு மக்கள் அனைவரும் சகோதரர்கள். எனவே அனைவருக்கும் பொதுவான சிவில் சட்டம் கொண்டு வர வேண்டுமென அவர் முயற்சித்தார். ஆனால் காங்கிரஸ் அதை அனுமதிக்கவில்லை.

இந்தியக் கலாசார மற்றும் ஆன்மிகத்தின் மேல் ஆழமான பற்றுக் கொண்டவர் அம்பேத்கர். இந்தியாவின் பூகோள ஒற்றுமையை விடவும், கலாசார ஒற்றுமை நாடு முழுவதையும் ஆழமாகப் பிணைக்கிறது எனக் கூறினார். இந்தியப் பிரிவினையின் போது பாகிஸ்தானிலிருந்த இந்துக்களை இங்கு திரும்பி வருமாறு அறைகூவல் விடுத்தார். அவர்களைக் கொண்டு வர முயற்சியும் எடுத்தார். இன்று இந்துக்கள் அங்கு படும் கொடுமைகளைப் பார்க்கும் போது அவர் எவ்வளவு தீர்க்கதரிசி என்பது புரியும்.  

1927 ல் பட்டியலின மக்கள் கோவில் நுழைவு பற்றி எழுதும் போது, மற்ற இந்துக்களுக்கு இந்துத்வா எப்படி சொந்தமோ, அதே போல பட்டியலின மக்களுக்கும் சொந்தம் எனக் குறிப்பிட்டார். மேலும் இந்துத்வாவின் வளர்ச்சியும் பெருமையும் வசிஷ்டர் போன்ற பிராமணர்கள், கிருஷ்ணர் போன்ற ஷத்திரியர்கள், ஹர்ஷா போன்ற வைசியர்கள் மற்றும் துக்கா ராம் போன்ற சூத்திரகள் என அனைவரது ஒட்டு மொத்த பங்களிப்பாலும் தான் நிகழ்ந்துள்ளது என எடுத்துக் கூறினார்.

ஆர்.எஸ்.எஸ் இயக்கத்தின் முழு நேர ஊழியரான அமரர் தத்தோபந்த் தெங்கடி அண்ணல் அம்பேத்கருக்கு மிகவும் நெருக்கமானவர். அம்பேத்கர் ஆரம்பித்து தலைவராக இருந்து நடத்திய பட்டியலின மக்கள் கூட்டமைப்புக்கு, அவரையே பொதுச் செயலாளராக்கினார். 1954 பந்தரா தேர்தலில் தனது தேர்தல் முகவராக தெங்கடியை நியமித்தார். 1930 களில் ஆர். எஸ்.எஸ். தினசரிக் கூடுதலை புனேவில் நேரடியாகச் சென்று பார்த்து பின்னர் அதன் தலைவர் டாக்டர் ஹெட்கேவர் அவர்களைச் சந்தித்தார். 

ஆரம்ப முதலே நேருவுடன் கொண்டிருந்த வேறுபாடுகள் அதிகரிக்கவே 1951ல் மத்திய அமைச்சரவையிலிருந்து விலகினார். தனது விலகல் கடிதத்தில் நேரு எவ்வாறு தனக்கு உரிய அங்கீகாரம் கொடுக்காமலும், பிற்படுத்தப்பட்ட சமூகங்களுக்கான அரசு கமிசன் அமைக்காமலும், தவறான வெளியுறவுக் கொள்கைகளைப் பின்பற்றியும் வருகிறார் என்னும் விசயங்களைக் குறிப்பிட்டிருந்தார்.

காங்கிரஸ் அம்பேத்கர் வாழ்ந்த போது மட்டும் அவரை உதாசீனப்படுத்தவில்லை. அவர் மறைந்த பின்னரும் அவருக்குரிய மரியாதையைக் கொடுக்கத் தவறியது.நேருவுக்கு அவர் பிரதமராக இருந்த போது 1955 ஆம் வருடமே பாரத் ரத்னா கொடுக்கப்பட்டது. இந்திரா காந்தியும் தான் பிரதமராக இருந்த போது 1971ல் பாரத் ரத்னாவைப் பெற்றுக் கொண்டார்.

ஆனால் இந்தியாவின் சிற்பிகளில் ஒருவரான அம்பேத்கருக்கு காங்கிரஸ் ஆட்சியில் பாரத் ரத்னா கொடுக்கப்படவேயில்லை. அவரது மறைவுக்குப் பின் முப்பது ஆண்டுகளுக்கு மேலாகி 1990ல் பாரதிய ஜனதா ஆதரவளித்த வி.பி.சிங் ஆட்சியில் தான்  அந்த விருது கொடுக்கப்பட்டது. அதே போல பாராளுமன்றத்தின் மத்திய அவையிலும் அவரது படம் 1990ல் தான் வைக்கப்பட்டது.

அதே சமயம் பாரதிய ஜனதா கட்சி அம்பேத்கரை நமது தேசத்தின் மாபெரும் தலைவராகப் போற்றுகிறது. எனவே மோடி அரசு அமைந்த பின்னர் அவரது வாழ்க்கையோடு நெருங்கிய சம்பந்தமுடைய ஐந்து இடங்களில் அவரது நினைவைப் போற்றும் வண்ணம்பஞ்ச தீர்த்தங்கள்அமைக்கப்பட்டுள்ளது. அவை மத்திய பிரதேசத்தில் அவரது பிறந்த இடம், லண்டனில் தங்கிப் படித்த இடம், நாக்பூரில் தீட்சை பெற்ற இடம், டெல்லியில் வாழ்ந்து மறைந்த இடம்  மற்றும் மும்பையில் அடக்கம் செய்யப்பட்ட இடம் ஆகியவையாகும். இப்போது அங்கு லட்சக்கணக்கான மக்கள் சென்று வருவதால் அவை புண்ணிய தலங்களாக மாறியிருக்கின்றன.

ஆரம்ப காலந்தொட்டே மோடி அவர்களுக்கு அண்ணல் அம்பேத்கர் மேல் அளப்பரிய மரியாதை இருந்து வந்துள்ளது. 1987ல் அவர் குஜராத் மாநில பொதுச் செயலாளராக இருந்த போதே பல இடங்களில் அம்பேத்கர் சிலைகளை கட்சி சார்பாக நிறுவினார். பின்னர் 2007ல் முதலமைச்சராக இருந்த போது பல இடங்களில் அம்பேத்கர் பவன்களை கட்டினார்.

அவரது முக்கியத்துவத்தை மக்கள் உணர்ந்து கொள்ள ஒரு யானை மேல் அரசியலமைப்புச் சட்டப் புத்தகத்தையும், அம்பேத்கர் படத்தையும் வைத்துக் கொண்டு குஜராத் வீதிகளில் மற்ற தலைவர்களுடன் நடந்து சென்றார். பின்னர் பிரதமரான பின் 2015 ஆண்டு அண்ணலைக் கௌரவிக்கும் விதமாக நவ 26 ஆம் நாளை அரசியலமைப்புச் சட்ட நாளாக அறிவித்தார். அது இப்போது வருடா வருடம் அனுசரிக்கப்பட்டு வருகிறது.

பட்டியலின, மலைவாழ் மற்றும் பிற்படுத்தப்பட்ட மக்கள் வாழ்க்கையில் முன்னேற கல்வி, வேலைவாய்ப்பு மற்றும்  தொழில்களில் வாய்ப்புக்கள் அளிக்கப்பட வேண்டும். மேலும் ஆட்சி அதிகாரத்தில் அமர வைக்கும் முயற்சிகள் மேற்கொள்ளப்பட வேண்டும். அந்த வகையில் வெவ்வேறு பொறுப்புகளில் அதிகமான பட்டியலின, மலைவாழ் மற்றும் பிற்படுத்தப்பட்ட மக்களை மோடி அரசு அமர்த்தி வருகிறது.

தற்போதைய பாராளுமன்றத்தில் பட்டியலின, மலைவாழ் மக்களுக்காக ஒதுக்கீடு செய்யப்பட்ட 131 தொகுதிகளில் 97 பேர் பாரதிய ;ஜனதாவைச் சேர்ந்தவர்கள். 113 உறுப்பினர்கள் பிற்படுத்தப்பட்ட வகுப்பினர். தேசத்தின் முதல் குடிமகள் மலைவாழ் புதல்வி. மேலும் பிற்படுத்தப்பட்ட சமூகங்களின் கமிசனுக்கு 2019ல் மோடி அரசு சட்ட பூர்வ அங்கீகாரத்தை அளித்துள்ளது.

கடைநிலை மக்கள் முன்னேற்றத்துக்காக கடந்த எட்டு வருடங்களுக்கு மேலாக மோடி அரசு செயல்படுத்தி வரும் திட்டங்களால் அவர்களின் வாழ்வில் பெரும் மாற்றங்கள் நிகழ்ந்து வருகின்றன. சுமார் 12 கோடி கழிவறைகள், சுமார் பத்து கோடி இலவச எரிவாயு இணைப்புகள், 48 கோடிக்கு மேற்பட்ட புதிய வங்கி கணக்குகள், முத்ரா கடனுதவித் திட்டம் எனப் பல திட்டங்களும் பெரிய பலன்களைத் தந்து வருகின்றன.

ஜனதன திட்டத்தின் மூலம் இன்று ஏழைக் குடும்பங்கள் தங்கள் கணக்குகளில் 1,99,000 கோடி ரூபாயை வைப்புத் தொகையாக கொண்டுள்ளனர்.   ஜன திட்ட  பயனாளிகளில் அதிகபட்சமாக 27 கோடிக்கு மேற்பட்டவர்கள் பெண்கள். முத்ரா திட்டத்தைப் பொறுத்தவரையில் 2021-22 ல் முடிந்த ஏழு ஆண்டுகளில்  18.91 லட்சம் கோடி ரூபாய் அளவு கடன் சுமார் 35 கோடி சிறு, குறு மற்றும் நடுத்தர தொழில் அமைப்புகளுக்கு கடன்கள் கொடுக்கப்பட்டுள்ளன. கடன் பெற்ற அமைப்புகளில் 68 விழுக்காடு பெண்களால் நடத்தப்படுபவை. 51 விழுக்காடு பட்டியலின, மலைவாழ் மற்றும் பிற்படுத்தப்பட்ட சமூகங்களால் நடத்தப்படுபவை.

பட்டியலின சமூக குழந்தைகள் பள்ளிக் கல்வி மட்டுமன்றி, நாட்டின் மிகச் சிறந்த நிறுவனங்கள் மற்றும் சர்வதேச அளவில் பிரபலமாகவுள்ள  உயர்கல்வி நிறுவனங்களில் கல்வி பெற சிறப்புத் திட்டங்கள் செயல்படுத்தப்பட்டு வருகின்றன. பட்டியலின இளைஞர்கள் அரசுப் பணிகளில் எளிதாகப் போட்டியிட வசதிகள் உருவாக்கப்பட்டுள்ளன.

மத்திய அரசின் ஆதர்ஷ் கிராம திட்டம் பட்டியலின மக்கள் வாழும் பகுதிகளின் ஒட்டு மொத்த கட்டமைப்பை மேம்படுத்தி வருகிறது. பெண்கள்,   பட்டியலின மற்றும் மலை வாழ் மக்களைத் தொழில் முனைவோர்களாக உருவாக்கும் நோக்கில்ஸ்டேண்ட் அப் இந்தியாசிறப்புத் திட்டம் கடந்த ஏழு வருடமாக செயல்பட்டு வருகிறது. அதன் மூலம் இது வரை 40,700 கோடி ரூபாய் கடன்கள் அனுமதிக்கப்பட்டுள்ளன.

நமது நாடு முன்னேறுவதற்கு விவசாயம் மற்றும் தொழில் துறைகள் முன்னேறுவது அவசியம் என்பதை அம்பேத்கர் வலியுறுத்தினார். அதற்காக மோடி அரசு பல முன்னோடி திட்டங்களை செயல்படுத்தி வருகிறது. மேலும் பிரதமரின் சுய சார்பு திட்டம் என்பது இந்தியாவை தன்னிறைவு பெற்ற நாடாக உருவாக்கும்.

எனவே மோடி அரசு அம்பேத்கரின் கனவான சமூக ரீதியாக கீழ் நிலையில் இருப்பவர்கள் மற்றும் அடித்தட்டு மக்களின் வாழ்வாதரத்தை முன்னேற்றும் வகையில் முழு மூச்சாகப் பணியாற்றி வருகிறது. அவர்களுக்குத் தரமான கல்வி கொடுப்பது, வேலை வாய்ப்பு அளிப்பது, அவர்களைத் தொழில் முனைவோர்களாக உருவாக்குவது, மற்றும் அதிகாரத்தில் அமர்த்துவது எனப் பல தளங்களிலும் மாற்றங்கள் நடந்து வருகின்றன.

எனவே அரசியலுக்காக அல்லாமல் உண்மையான சமூக நீதிக் காவலான மோடி விளங்கி வருகிறார். அதனால் சுதந்திர இந்தியாவில் முதல் முறையாக மோடி அரசு அம்பேத்கர் என்னும் மகத்தான ஆளுமையைக் கொண்டாடியும், அவரின் கனவுகளை நிறைவேற்றும் வகையில் செயல்பட்டும் வருகிறது.

( ஒரே நாடு, சென்னை, ஏப். 2023)

No comments: