வெற்றிக் கதைகள் - 25




குடும்பங்களே நாட்டின் பொருளாதாரத்தின் அஸ்திவாரம்

இந்திய கலாச்சாரத்தின் உன்னதமான படைப்பு குடும்ப அமைப்பாகும். இது ஒரு சமூக அமைப்பு மட்டுமல்லாது நாட்டின் பொருளாதாரத்திற்கு அஸ்திவாரமும் ஆகும். நமது நாடு பொருளாதார, சமூக மற்றும் காலாசார ரீதியாக பல்லாயிரம் ஆண்டுகள் தொடர்ந்து வெற்றி நடைபோட்டு வருவதற்கு குடும்ப அமைப்பு முறை அடித்தளமாக இருந்து வருகிறது. குடும்பம் நடத்துபவன் தான் சமூகத்திலுள்ள அனைத்து தரப்பு மக்களுக்கும் துணையாக அமைய முடியும் என்று வள்ளுவர் கூறுகிறார். "துறந்தார்க்கும், துவ்வாதவர்க்கும் இறந்தார்க்கும் இல்வாழ்வான் என்பான் துணை' என்னும் குறள் மூலம் இதை விளக்குகிறார். எனவே குடும்பம் நடத்துவது என்பது ஒரு அத்யாவசிய கடமையாக நமது நாட்டில் காலங்காலமாக எடுத்துரைக்கப்ப்டடு வருகிறது.குடும்பத் தலைவன் தனது குடும்ப உறுப்பினர்களுக்காகத் தனது தனிப்பட்ட நலனைத் தியாகம் செய்பவனாக இருக்க வேண்டும் என்று அர்த்த சாஸ்திரம் கூறுகிறது. குடும்பத்தில் உள்ள பெரியவர்கள் எப்படி மதிக்கப்பட வேண்டும், குழந்தைகள் எப்படி நடத்தப்பட வேண்டும் என்பது பற்றியெல்லாம் விரிவான விளக்கங்களை நமது முன்னோர்கள் கொடுத்துச் சென்றுள்ளனர். அதனால் தான் நமது நாட்டின் பல பகுதிகளிலும் குடும்பங்களை வைத்தே அனைவரையும் அறியும் முறை பரவலாக உள்ளது. நமது நாட்டில் தனிநபர் என்று யாரையும் சொல்லஇயலாத நிலையே உள்ளது.2001 ம் ஆண்டு மக்கள் தொகை கணக்குப்படி இந்தியாவில் 19.2 கோடி குடும்பங்கள் உள்ளன.ஒவ்வாரு வீட்டிலும் சராசரியாக 5 க்கும் மேற்பட்டவர்கள் உள்ளனர். இந்த குடும்பங்கள் நமது நாட்டின் பொருளாதாரத்திற்கு ஆற்றிவரும் பங்கு அசாத்தியமானது.ஒரு நாட்டின் பொருளாதார வளர்ச்சியில் சேமிப்பு மிக முக்கிய பங்கு வகிக்கிறது. நமது நாட்டில் சேமிப்பு மற்ற நாடுகளைக் காட்டிலும் அதிகம் உள்ளது. அதில் குடும்ப அமைப்புகளின் பங்கு எப்போதும் முதன்மையாக இருந்து வருகிறது. 195051 ல் நம்நாட்டில் 45 சதவீதம் பேர் வறுமைக் கோட்டுக்கு கீழ் இருந்தனர். ஆனாலும் நாட்டின் சேமிப்பு 9 சதவீதம் இருந்தது. அதில் குடும்பம் சார்ந்த அமைப்புகளின் பங்கு மட்டும் மூன்றில் இரண்டு பங்கு இருந்தது. அன்று தொடங்கி இன்று வரை குடும்பம் சார்ந்த அமைப்புகள் நாட்டிற்கு தேவையான சேமிப்புகளை அதிக அளவில் அளித்துவருகின்றன. 199091 ம் ஆண்டில் நாட்டின் சேமிப்பில் 91 சதவீதம் குடும்பம் சார்ந்த அமைப்புகளால் மட்டுமே கொடுக்கப்பட்டது.சேமிப்புகளை மேற்கொள்ளும் குடும்ப உறுப்பினர்கள் தங்களின் ஒட்டுமொத்த குடும்பத்தின் நலனுக்காகவும், எதிர்காலத்திற்காகவும் சேமிக்கின்றனர். எனவே சேமிப்புகள் நம்பிக்கையான முதலீடுகளில் போடப்படுகின்றன. வங்கிகளிலும் அரசுத்துறை சார்ந்த அமைப்புகளிலும் அதிக அளவில் முதலீடுகள் குவிகின்றன. குடும்ப அமைப்புகளால் 200607 ம் ஆண்டில் 55 சதவீதத்திற்கும் மேற்பட்ட முதலீடுகள் வங்கிகளில் பல வகை டெபாசிட்டுகளாக போடப்பட்டுள்ளன. அதேபாலே ஆயுள் காப்பீட்டு நிறுவனங்கள், சிறுசேமிப்புகள், பிராவிடண்டு மற்றும் பென்சன் பண்டுகள் என்று பல வழிகளிலும் பணம் சேமிக்கப்படுகிறது.மேற்கண்ட சேமிப்புகள் தான் நாட்டின் தொழில் வளர்ச்சிக்குத் தேவையான முதலீடாக மாறுகிறது. குடும்பம் சார்ந்த அமைப்புகள் மட்டும் நம்நாட்டின் மொத்த முதலீட்டில் 40 சதவீத அளவை மேற்கொள்கின்றன. மீதி கம்பெனி மற்றும் அரசுத்துறைகளால் மேற்கொள்ளப்படுகிறது. அந்த இரண்டு துறைகளும் கூட குடும்ப அமைப்புகளின் உதவியைக் கொண்டே பெருமளவில் தொழில்களில் முதலீடுகளைச் செய்கின்றன.நாட்டின் மொத்த பொருளாதார மதிப்பில் குடும்பம் சார்ந்த அமைப்புகளின் பங்கு மிக முக்கியமாக உள்ளது. நாட்டின் முக்கியமான பல தொழில்களிலும் குடும்பங்களின் பங்கு அதிகமாக உள்ளது.கடந்த 20 ஆண்டுகளில் இந்திய பொருளாதாரம் தொழில் மற்றும் சேவைத்துறைகள் மூலம் அதிக வளர்ச்சி பெற்றுள்ளது. அதில் குடும்பங்களின் பங்களிப்பே அதிகம். கடந்த ஆண்டில் வேகமாக வளர்ந்த கட்டுமானம், வியாபாரம், போக்குவரத்து உள்ளிட்ட பல துறைகளிலும் குடும்பங்களே பிரதான இடத்தை வகிக்கின்றன.தொழில்துறையை பொருத்தவரையில் மிக சிறு தொழில்கள் முதல் பெரிய கம்பெனிகள் வரை பல லட்சக்கணக்கான எண்ணிக்கையிலான நிறுவனங்கள் நமது நாட்டில் செயல்பட்டு வருகின்றன. அவை அனைத்திலுமே முக்கிய பங்கினை குடும்பங்கள் வகிக்கின்றன. அதனால் அவற்றுக்குத் தேவையான நிதிகளைத் திரட்டி நல்ல முறையில் தொழில்களை நடத்தும் பொறுப்பை குடும்பங்களே ஏற்றுக் கொண்டுள்ளன. கம்பெனி அமைப்புகளில் 95 சதவீதத்திற்கு மேல் குடும்பங்களிடமே உள்ளன.தொழில்துறையில் குடும்ப உறுப்பினர்கள் இணைந்தும், கூட்டுக்குடும்பங்களாகவும் இன்றும் பல தொழில்களை நடத்தி வருகின்றன. இவர்கள் நடத்தும் தொழில் வேகமாக வளருகிறது. மேலும் மூத்தவர்களும், இளைஞர்களும் ஒன்று சேர்ந்து தொழிலை நடத்தும் போது அனுபவரும், இளமையும் கைகோர்த்து தொழிலை வெற்றிப்பாதையில் அழைத்து செல்கின்றது.தொழிலுக்குத் தேவையான நடைமுறை அனுபவத்தை பெரியவர்கள் கொடுக்கின்றனர். அதனால் எந்தப்பல்கலைக்கழகத்திலும் கிடைக்காத பாடங்களை அவர்கள் மூலம் கற்றுக் கொள்ள முடியும். தொழில் குடும்பங்கள் பலவற்றிலும் பரவலாக 70 வயதைக் கடந்தவர்கள் கூட தொழிலுக்குத் தேவையான அறிவுரைகளைக் கூறுவதையும், தேவையான சமயத்தில் தாமே முன்னின்று முக்கிய முடிவுகளை எடுப்பதையும் காணமுடிகிறது. சில சமயங்களில் அவர்களே முழு ஈடுபாட்டுடன் தொழிலை நடத்துவதையும் பார்க்க முடிகிறது. பெரிய நிறுவனங்களை பொறுத்தவரையில் குடும்பத்தில் மூத்தவரே கம்பெனியில் தலைவராக இருப்பதும் நடைமுறையில் உள்ளது.எனவே இந்திய பொருளதாரமும் தொழில்களும் குடும்பங்களாலேயே நடத்தப்படுகின்றன என்றால் அது மிகையானது அல்ல. பலவித அந்நிய தாக்குதல்களுக்கும், குழப்பங்களுக்கும் இடையில் இந்தியா தொடர்ந்து வெற்றி நடை போடுவதற்கு குடும்ப அமைப்புமுறையே அஸ்திவாரமாக விளங்குகிறது. மேலை நாடுகளைப்பொறுத்தவரையில் தனிநபர் காலாச்சாரமே மேலோங்கி நிற்கிறது. அதனால் ஒவ்வொருவரும் தங்களின் சுய விருப்பு வெறுப்புகளைப் பார்த்து முடிவுகளை எடுக்கின்றனர். எனவே அங்கு குடும்ப அமைப்பு வேகமாக சிதைந்து வருகிறது. ஆகையால் மிக அதிக எண்ணிக்கையிலான திருமணங்கள் தோல்வியில் முடிகின்றன. குடும்பங்கள் சிதைந்து போவதால் சிறுவயதிலேயே தகாத உறவுகள் அதிகரிக்கின்றன. அதனால் திருமணமாகாமல் விரும்பிய காலம் வரை ஒன்று சேர்ந்து வாழும் முறையும் அதிகரித்து உள்ளது. அந்த உறவுகள் அந்த நேரமும் பிரிந்து போகக்கூடிய தன்மையுடையது.திருமணமாகாமல் ஆணுக்கும் பெண்ணுக்கும் பிறக்கக்கூடிய குழந்தைகளின் எண்ணிக்கை இங்கிலாந்தில் 42 சதவீதமாக உள்ளதாக புள்ளி விபரங்கள் கூறுகின்றன. அவ்வாறு பிறக்கும் குழந்தைகளில் கணிசமான பேருக்கு கடைசிவரை தனது தந்தை யாரென்றே தெரிவதில்லை. இதனால் தங்கள் சந்ததியினருக்கு என்று பெற்றோர்கள் யாரும் சேமிப்பதில்லை. குடும்பங்கள் சிதைவதால் மேலைநாட்டினரின் சமூக அமைப்புகளும், பொருளாதாரமும் ஆடிப்போயுள்ளன. சமூகங்களில் குற்றங்கள் அதிகரித்து அரசுகளுக்கு பெரிய செலவுகள் ஏற்பட்டு, பொருளாதாரச் சுமை அதிகரித்து வருகின்றது. இங்கிலாந்தில் குடும்ப சிதைவுகளால் அரசுக்கு ஏற்படும் செலவு மட்டும் ஆண்டுக்கு ஒரு லட்சத்து 90 ஆயிரம் கோடி ரூபாய். மேறகத்திய அரசுகள் தனிநபர் மற்றும் சமூகங்களின் பாதுகாப்புக்கு என்று பொருளாதார மதிப்பில் மூன்றில் ஒன்று முதல் இரண்டு பங்கு வரை செலவிடுகின்றனர். ஆயினும் பிரச்னைகள் தீர்ந்தபாடில்லை.அங்கு குடும்பங்கள் சிதைந்துபோனதால் சேமிப்பு படிப்படியாக குறைந்து மக்கள் அரசுகளை சார்ந்து நிற்கின்றனர். நமது நாட்டில் குடும்ப அமைப்புகள் வலுவாக இருப்பதால் சேமிப்புகள் பெருகி மக்கள் தாமாக தொழில்களில் ஈடுபடுவது மட்டுமன்றி அரசு மற்றும் கம்பெனி துறைகளுக்குத் தேவையான நிதி உதவிகளையும் அளிக்கின்றனர். அதனால் நம் நாட்டின் சமூகமும், பொருளாதாரமும் பாதுகாக்கப்பட்டு வருகிறது. எனவே குடும்ப அமைப்பே நமது பலம். நமது நாட்டின் பல தொழில் மையங்களின் வெற்றிக்கும், சர்வதேச அளவிலான பொருளாதார வீழ்ச்சியின் போதும் நமது பொருளாதாரம் வலுவாக இருப்பதற்கு காரணம் நமது குடும்ப அமைப்புமுறை தான். மேற்கத்திய கலாச்சார தாக்குதலில் சிதைந்து போகாமல் குடும்ப முறையை காப்பாற்றுவது நமது எதிர்காலத்திற்கு நாம் செய்ய வேண்டிய கடமையாகும்.

நாட்டின் சேமிப்பில் குடும்பம் சார்ந்த அமைப்புகளின் பங்கு(மொத்த பொருளாதார உற்பத்தியில் சதவீதம்)
1950- 51 1970- 71 1990- 91 2006- 0௭
மொத்தஉள்நாட்டுசேமிப்பு: 8.6 14.2 22.8 34.8
இதில்குடும்பங்களின்பங்கு: 5.7 9.5 19.4 23.8
கம்பெனிஅமைப்புகள்: 0.9 1.5 2.7 7.8
பொதுத்துறைகள்: 2.0 3.3 1.8 3.2
ஆதாரம்: மத்திய அரசின் பொருளாதார சர்வே 200708

No comments: