பாரத நாடு தொன்மையான பண்பாட்டைக் கொண்டது. நமது பண்பாடு
பல ஆயிரம் ஆண்டுகளாக நீடித்து வாழ்ந்து வருகிறது என்றால், அதற்கான பொருளாதாரப்
பின்னணி இருந்திருக்க வேண்டும். அந்த வகையில் சுமார் ஐயாயிரம் ஆண்டுகளுக்கு
முன்னரே நமக்கெனச் சிறப்பான பொருளாதார மற்றும் வணிக வரலாறு இருப்பதைக் குறிப்புகள்
காட்டுகின்றன. பொது யுகம் தொடங்கிய பின்னர் கடந்த இரண்டாயிரம் ஆண்டு
காலத்துக்கான உலக நாடுகளின் பொருளாதார
வரலாற்றை அறிஞர் ஆங்கஸ் மாடிசன் தொகுத்துக் கொடுத்துள்ளார்.
அதில் பொது யுக
தொடக்க காலத்தில், அதாவது இப்போதிருந்து 2025 ஆண்டுகளுக்கு முன்னர், உலக நாடுகளின்
ஒட்டு மொத்த பொருளாதார மதிப்பில் மூன்றில் ஒரு பங்கினை நமது நாடு வைத்துக்
கொண்டிருந்தது எனக் குறிப்பிட்டுள்ளார். அப்படியானால் நாம் அப்போதே உலகின் பெரும்
பொருளாதார சக்தியாக இருந்திருக்கிறோம். பின்னர் ஆங்கிலேயர்கள் இங்கு வந்து
திட்டமிட்டு நமது பொருளாதாரத்தைச் சிதைக்கும் வரை, பதினெட்டு நூற்றாண்டு காலம் இந்தியாவும்
சீனாவும் தான் பொருளாதார பலம் பொருந்திய இரு பெரும் நாடுகளாக விளங்கி வந்துள்ளன.
அதற்குக் காரணம்
நமது உள்நாட்டுப் பொருளாதார முறைகளும், உள்ளூர்ப் பகுதிகளிலேயே உருவாக்கப்பட்டுச் செயல்பட்டு
வந்த தொழில்களும் தான். பின்னர் வந்த அந்நியர்களின் காலனி ஆட்சிக் காலத்திய
பொருளாதாரத் தாக்குதல்கள் பல நூற்றாண்டுகளாக வலிமையாக விளங்கி வந்த நமது
பொருளாதாரத்தையும், தொழில்களையும் கடும் பாதிப்புகளுக்கு உள்ளாக்கின. அதனால்
தொழில்கள் சீரழிந்து, பொருளாதாரம் பெரும் வீழ்ச்சியடைந்தது.
1750 ஆம் வருட
காலத்தில் இந்தியா உலக உற்பத்தியில் கால் பங்கினை அளித்துக் கொண்டிருந்தது. அதுவே
1900 வருட காலத்தில் வெறும் இரண்டு விழுக்காட்டுக்குக் கீழ் சென்றது. ஒரு
நூற்றைம்பது வருட காலத்தில் நமது உற்பத்தித் துறை முற்றிலும் சிதைக்கப்பட்டது.
குறு, சிறு தொழில்கள் பலவும் நசுக்கப்பட்டன. மேலும் நம் நாட்டு ஏற்றுமதிகள்
தடுக்கப்பட்டு, அந்நியப் பொருட்கள் இங்கு தங்கு தடையின்றி அனுமதிக்கப்பட்டன.
எனவே பல
நூற்றாண்டுகளாக உலகின் பெரும் ஏற்றுமதி நாடாக விளங்கி வந்த இந்தியா, பத்தொன்பதாம்
நூற்றாண்டின் தொடக்கத்திலிருந்து
இறக்குமதி நாடாக மாறிப் போனது. அதனால் சுதந்திரப் போராட்ட காலத்தில் நமது
தலைவர்கள் வெளிநாட்டுப் பொருட்கள் புறக்கணிப்பு மற்றும் சுதேசித் தொழில்களுக்கான ஆதரவு
ஆகிய இரண்டையும் முக்கியமான பணிகளாக எடுத்து வைத்தனர். இருபதாம் நூற்றாண்டின்
ஆரம்ப காலந் தொடங்கி சுதேசிக்கான குரல் நாடு முழுவதும் வலுத்தது. காந்திஜி
சுதேசிக்கான அவசியத்தை வலியுறுத்தி மக்களிடத்தில் விழிப்புணர்வை ஏற்படுத்தினார்.
நாடு
சுதந்திரம் அடைந்த பின்னர், நேரு சோசலிச கொள்கைகளைக் கடைப்பிடித்தார். அதனால் மக்கள்
தொழில்களைத் தொடங்கப் பல சிரமங்கள் ஏற்பட்டன. அதே கொள்கையானது தொடர்ந்து அடுத்த நாற்பது
ஆண்டுகளுக்கு மேல் நீடித்தது. ஆனாலும்
அதையெல்லாம் மீறி தொழில் முனைவோர் நாடு முழுவதும் சிறு, குறு, நடுத்தரத்
தொழில்களைத் துவக்கி, முன்னேறும் முயற்சிகளில் இயங்கினர். அந்த கால கட்டங்களில் தான்
கோவை, திருப்பூர் என நாட்டின் பல பகுதிகளிலும் உள்ளூர் சமூகங்களின் சொந்த
முயற்சியால் சுதேசி தொழில்
மையங்களுக்கான அஸ்திவாரங்கள் போடப்பட்டன.
அவை பெரும்பாலும்
அதிகம் படிக்காத, நிதி வசதி குறைந்த உழைப்பை மட்டுமே நம்பிய சாதாரண மக்களால்
முன்னெடுக்கப்பட்ட முயற்சிகளாக இருந்தன. அரசு அமைப்புகள் தேவையான உதவிகளைச்
செய்யாமல் இருந்த போதும் தொழில் முனைவோர் நம்பிக்கையுடன் காலடிகளை எடுத்து
வைத்தனர். பின்னர் 1990-களில் அந்நியத் தொழில்களுக்கும், முதலீடுகளுக்கும் ஆதரவான
கொள்கைகளை அப்போதைய அரசு கொண்டு வந்தது. அதனால் உள்நாட்டுத் தொழில்களுக்குப்
பெரும் சிரமங்கள் ஏற்பட்டன.
அந்தச்
சமயத்தில் சுதேசிய சிந்தனையாளர் தத்தோபந்த் தெங்கடி அவர்கள் உள்நாட்டுத்
தொழில்களைப் பாதுகாக்கவும், ஊக்குவிக்கவும் சுதேசி விழிப்புணர்வு இயக்கத்தை
ஆரம்பித்தார். அதன் மூலம் உள்நாட்டுத் தொழில்களின் அவசியம் மற்றும் சிறு, குறு, நடுத்தரத்
தொழில்களின் முக்கியத்துவம் ஆகியவை பற்றி மக்களுக்கு எடுத்துச் சொல்லப்பட்டது. மேலும்
கட்டுப்பாடு இல்லாமல் அந்நிய நிறுவனங்கள் இங்கு வருவது மற்றும் அந்நிய முதலீடு
அதிகரிப்பது ஆகியவற்றின் ஆபத்துகள் குறித்து நாடு முழுவதும் சுதேசி இயக்கம்
நிகழ்ச்சிகளையும், போராட்டங்களையும் நடத்தியது.
எத்தனையோ
சிரமங்கள் நிலவிய அந்தக் காலகட்டங்களிலும் கூட, நமது தொழில் முனைவோர்கள்
அவற்றையெல்லாம் மீறி புதிய நிறுவனங்களைத் துவக்கியும். தொழில்களை நடத்தியும் வந்தனர்.
அதனால் தொழில்கள் விரும்பிய அளவு இல்லாவிட்டாலும் கூட, முடிந்த வரை வளர்ந்து
கொண்டே சென்றன. அதனால் தொழில் மையங்கள் அதிகரித்து வேலை வாய்ப்புகள் பெருகின. அத்தகு
மையங்கள் நன்கு செயல்பட்டு வந்த குஜராத், தமிழ்நாடு, மகாராஷ்டிரா, பஞ்சாப் போன்ற
மாநிலங்கள் அதிக பொருளாதார வளர்ச்சியைக் கண்டன.
2014 ஆம் ஆண்டு
மோடி அரசு பொறுப்புக்கு வந்தது முதல், சிறு, குறு மற்றும் நடுத்தரத் தொழில்களை
ஊக்குவிக்கவும், புதிய தொழில்களை உருவாக்கவும் தொடர்ந்து பல திட்டங்கள்
செயல்படுத்தப்பட்டு வருகின்றன. ஒவ்வொரு
துறையிலும் இறக்குமதிகளைக் குறைத்து, ஏற்றுமதிகளை அதிகரிக்க நடவடிக்கைகள்
எடுக்கப்பட்டு வருகின்றன. “உள்ளூர் பொருள்களுக்குக் குரல் கொடுப்போம்” என்பதை
பிரதமர் தேசிய முழக்கமாக வைத்துள்ளார்.
சிறு, குறு,
நடுத்தரத் தொழில்களை அதிகரிப்பதற்கு அறிவிக்கப்பட்ட முத்ரா திட்டம் மூலம் இதுவரை சுமார்
39 லட்சம் கோடி ரூபாய் அளவு நிதி உதவி 53 கோடி கடன்களுக்கு அளிக்கப்பட்டுள்ளது. அந்தப்
பயனாளிகளில் 66 விழுக்காடு பேர் பெண்கள். இவ்வைகத் தொழில்களுக்குத் தொடர்ந்து
சலுகைகளும் திட்டங்களும் கொடுக்கப்பட்டு வருகின்றன. பாரம்பரியமாக சமூகங்கள்
தேர்ச்சி பெற்ற குறிப்பிட்ட தொழில்களை முன்னேற்ற தனியான திட்டம்
செயல்படுத்தப்பட்டு வருகிறது.
மத்திய அரசின்
‘ இந்தியாவில் தயாரிப்போம்‘ திட்டம் மூலம் உள்நாட்டு தயாரிப்பு பெருமளவு
ஊக்குவிக்கப்பட்டு வருகிறது. அதனால் முன்னர் அலைபேசிகளை இறக்குமதி செய்து வந்த
நமது நாடு, இப்போது 2,60,000 கோடி ரூபாய் அளவு ஏற்றுமதி செய்து உலகின் மூன்றாவது
பெரிய ஏற்றுமதியாளராக மாறியுள்ளது. நிபுணத்துவம் தேவைப்படும் பாதுகாப்புத் துறை
தயாரிப்புகள் சென்ற வருடம் 1,78,000 கோடி ரூபாய் என அதிகரித்து, ஏற்றுமதி இதுவரை இல்லாத வகையில் 38,400 கோடி
ரூபாயை எட்டியுள்ளது. அதனால் இந்தியா தற்போது எண்பது நாடுகளுக்கு ஏற்றுமதி செய்து
வருகிறது.
மேலும் மிகச்சிறு
அளவில் கூரை கூட இல்லாமல் தொழில் செய்து வருபவர்களுக்கு நடைமுறை மூலதனம் உள்ளிட்ட உதவிகளை
அளிக்கும் வகையில் 2020 ஆம் வருடம் சாலையோர வியாபாரிகளுக்கான நிதி உதவித்
திட்டம் அறிவிக்கப்பட்டது. அதன் மூலம் இதுவரை சுமார் 76 லட்சம் பேருக்கு 18000
கோடி ரூபாய் அளவு நிதி உதவி அளிக்கப்பட்டுள்ளது. அதிகார வர்க்கத்தின் தேவையற்றை
கட்டுப்பாடுகளிலிருந்து விடுதலை அளிக்க, தொழில்களை எளிமையாகச் செய்யும் திட்டம்
நடைமுறைப்படுத்தப்பட்டு வருகிறது.
2047 ஆம்
வருடத்தில் நாடு சுய சார்பு நிலையை அடைந்து விட வேண்டும் என்னும் நோக்கில் மோடி
அரசு முனைப்பு காட்டி வருகிறது. ஏனெனில் பாரம்பரியம் மிக்க நமது நாட்டுக்கு சுய
சார்பு என்பது ரத்தத்துடன் ஒன்றியது. மேலும் உலகின் மிகப்பெரிய மக்கள் தொகையைக்
கொண்டுள்ள நாம் பிற நாடுகளைச் சார்ந்து இருப்பது என்பது எதிர்காலத்துக்கு
நல்லதல்ல. இறைவன் கொடுத்த இயற்கை வளங்களும், அதிக அளவில் இளைஞர் பட்டாளமும்
நம்மிடம் இருக்கும் போது அவற்றைப் பயன்படுத்தி நாட்டை வளப்படுத்துவது நமது கடமை.
காலனி ஆதிக்க
காலத்தில் சிதைக்கப்பட்ட நமது பொருளாதாரம், சுதந்திரம் அடைந்த எழுபத்தைந்து வருட
காலத்தில் உலகின் நான்காவது பெரிய பொருளாதாரமாக மாறியதே நமது சுதேசித் தன்மைகளால்
தான். அதிக அளவில் வெளிநாட்டு மூலதனங்கள் இல்லாமல் வேகமாக வளர்ந்து வரும் பெரிய
நாடு இந்தியா. இந்தியக் குடும்ப அமைப்பு முறை, அதிக சேமிப்புகள், அதிகமான சமூக
மூலதனம், மக்களின் இயற்கையான தொழில் முனையும் தன்மை ஆகியன நமது கலாசாரம்
கொடுத்துள்ள சொத்துக்கள். அவற்றின் மூலமே நாடு இன்று பல சிரமங்களையும் மீறி
முன்னேற்றப் பாதையில் சென்று கொண்டுள்ளது.
எனவே பெரிய வரலாறு
மட்டுமன்றி, வலுவான அடித்தளங்களும் நம்மிடம் உள்ளன. ஆகையால் மக்களின் வாழ்க்கையை
மேம்படுத்தி வளர்ச்சியை அதிகரிக்க நமது அடித்தளங்களை முழுமையாக உபயோகப்படுத்திக்
கொள்ள வேண்டும். அது சுதேசித் தொழில்கள் மூலமே சாத்தியமாகும்.
நாட்டின் பல
பகுதிகளிலுமுள்ள நமது மக்களை சொந்தத் தொழில்களில் மிகுதியாக ஊக்குவிக்க வேண்டும்.
அதன் மூலம் நிறைய தொழில் முனைவோர்கள் உருவாக வேண்டும். அந்தந்தப் பகுதிகளிலேயே
வேலை வாய்ப்புகள் பெருக வேண்டும். அதற்கு நாம் உள்ளூர் பொருள்களை அதிக அளவில்
பயன்படுத்த வேண்டும்.
சுதேசி
விழிப்புணர்வு இயக்கம் கடந்த 2001 ஆம் வருடம் ஆறு நாட்கள் கோவை கொடிசியா
வளாகத்தில் ஒரு மாபெரும் சுதேசி தொழில் கண்காட்சியை நடத்தியது. அதனை அப்போதைய
பிரதமர் திரு வாஜ்பாய் துவக்கி வைத்தார். ஆறு மத்திய அமைச்சர்கள் கலந்து கொண்டனர்.
சுமார் இருபது கருத்தரங்குகள் நடைபெற்றன. அதன் மூலம் தமிழகத்தில் ஒரு பெரிய
நம்பிக்கை பிறந்தது. இருபத்தைந்து வருடங்கள் கழித்து தற்போது ஆக. 8 ஆம் தேதி
தொடங்கி மூன்று நாட்கள் ரத்தினம் கல்லூரி வளாகத்தில் கோவை சுதேசி கண்காட்சி மற்றும் உணவுத் திருவிழா நடைபெறுகிறது.
அண்மைக் காலமாக
மேற்கத்திய பொருளாதாரங்கள் எல்லாம் பெருமளவு தோற்று வருகின்றன. அதே சமயம் நமது
தேசம் தொடர்ந்து முன்னேறி வருகிறது. அதற்குக் காரணமாக இருந்து வருவது நமது சுதேசி தொழில்
முறைகள் மற்றும் வாழ்வியல் நெறிகளே ஆகும். ஆகையால் நமது தேசம் முன்னேறி சுயசார்பு
நிலையை அடைய நாம் சுதேசித் தொழில்களை ஆதரித்து நமது வாழ்வியல் முறைகளையும்
கடைப்பிடிக்க வேண்டும்.
( கோவை சுதேசி கண்காட்சியை ஒட்டி எழுதப்பட்ட கட்டுரை, ஆக்.7, 2026)