கடினமான சூழலிலும் வேகமாக வளர்ச்சியுறும் பொருளாதாரம்

 

அண்மையில் 2026-27 நிதியாண்டின் முதல் காலாண்டுக்கான  (ஏப்ரல் -ஜூன் ) பொருளாதார முடிவுகள் வெளிவந்துள்ளன. இந்திய ரிசர்வ் வங்கி உள்ளிட்ட பல அமைப்புகளின் கணிப்புகளையெல்லாம் மீறி, 7.8 விழுக்காடு என்ற அளவில் அதிக  வளர்ச்சியை நாடு கண்டு வருவது மகிழ்ச்சியளிக்கும் செய்தியாகும்.  மேலும் சென்ற 2025-26 நிதியாண்டின் முதல் காலாண்டு வளர்ச்சி விகிதமான 6.9 விழுக்காட்டை விடவும் தற்போது அதிகமாக உள்ளது.

கூடவே தற்போதைய முடிவுகள் இந்தியப் பொருளாதாரம் உலக அளவில் வேகமாக வளர்ந்து வருவதை உறுதி செய்கின்றன. சென்ற காலாண்டில் உலகின் பிற  முக்கிய பொருளாதாரங்களான சீனா – 4.3 விழுக்காடு; அமெரிக்கா – 2.1 விழுக்காடு; ஜெர்மனி -1.1 விழுக்காடு ; ஜப்பான் – 0.5 விழுக்காடு என்ற அளவுகளில் மட்டுமே வளர்ச்சியடைந்துள்ளன. அதனால் உலகின் வேகமாக வளரும் பொருளாதாரம் என்னும் சிறப்பையும் இந்தியா தக்க வைத்துக் கொண்டுள்ளது.   

பொருளாதாரத்துக்கு அடிப்படையான துறைகளான விவசாயம், தொழில் மற்றும் சேவை சார்ந்த துறைகள் ஆகிய மூன்றுமே வளர்ச்சிக்கு உதவியுள்ளன. சேவைத் துறையானது பத்து விழுக்காடு வளர்ச்சியுடன், ஒட்டு மொத்த வளர்ச்சிக்கு ஒரு வலிமையான தூணாக இருந்து வருகிறது.  அதில் ரியல் எஸ்டேட், சில்லறை வணிகம், மொத்த விற்பனை , தகவல் தொடர்பு மற்றும் கணினித் துறை சம்பந்தப்பட்ட சேவைகள் நல்ல வளர்ச்சியைக் கண்டு வருகின்றன.

சென்ற நிதியாண்டின் முதல் காலாண்டில் 6.1 விழுக்காடாக இருந்த தொழில் சார்ந்த துறையின் வளர்ச்சி இந்தக் காலாண்டில் 8.6 விழுக்காடாக அதிகரித்து உற்சாகமாக உள்ளது. அதில் உற்பத்தித் துறை 9.2 விழுக்காடு வளர்ந்துள்ளது. மின்சாரம், கட்டுமானம் உள்ளிட்ட துறைகளும்  நல்ல வளர்ச்சியைக் கண்டுள்ளன. விவசாயம் மற்றும் சம்பந்தப்பட்ட துறை 3.6 விழுக்காடு அளவு வளர்ச்சி பெற்றுள்ளது. அதில் விவசாயத் துறையின் வளர்ச்சி  மட்டும் 2.9 விழுக்காடு என்ற அளவில் உள்ளது.

பொருளாதாரம் அதிக வளர்ச்சி பெறுவதற்கு மக்கள்  பொருட்களை வாங்க வேண்டும். அந்த வகையில் பொருட்களுக்கான தேவை நமது நாட்டுக்குள்ளேயே அதிகமாக உள்ளது. சென்ற காலாண்டில் தனி நபர் நுகர்வு என்பது 7.1 விழுக்காடாக அதிகரித்துள்ளது. வீடு வாங்குதல், வாகன விற்பனை, மின்சார பயன்பாடு, டிஜிட்டல் நிதி பரிவர்த்தனை, பெட்ரோல், டீசல் பயன்பாடு உள்ளிட்ட பலவும் அதிகரித்துள்ளன.

பொருளாதார வளர்ச்சியில் மூலதனம் முக்கிய பங்கு வகிக்கிறது.  2025-26 வருட காலாண்டில் 5.8 விழுக்காடு வளர்ச்சியுடன் இருந்த மொத்த முதலீட்டு உருவாக்கம், இந்தக் காலாண்டில் சுமார் இரண்டு மடங்கு அதிகரித்து 11.9 விழுக்காடு என்ற அளவில் உள்ளது. மேலும் வெளிநாட்டு மூலதனம் கடந்த பதினைந்து காலாண்டுகளில் வராத அளவு அதிகரித்து 30.7 பில்லியன் டாலர் என உள்ளது.

முந்தைய வருட காலாண்டில்  6 விழுக்காடாக இருந்த ஏற்றுமதி வளர்ச்சி தற்போது 12 விழுக்காடாக உயர்ந்துள்ளது.  அதில் மின்னணு சாதனங்கள் மற்றும்  பொறியியல் பொருட்கள் ஏற்றுமதி ஆகியன அதிக வளர்ச்சியைக் கண்டு வருகின்றன. அதே சமயம் இறக்குமதி 1.1 விழுக்காடு குறைந்துள்ளது. கடந்த சில வருடங்களாக மோடி அரசு பிற நாடுகளுடன்  உருவாக்கி வரும் தடையில்லா வர்த்தக ஒப்பந்தங்கள் மூலம் நல்ல பலன்கள் கிடைத்து வருவதாகத் தெரிகிறது.

தற்போதைய பொருளாதார வளர்ச்சியின் ஒரு முக்கிய அம்சம் வளர்ச்சி பரவலாக எல்லாத் துறைகளிலும் நிகழ்ந்து வருவதாகும். சரக்கு மற்றும் சேவை வரிகள் மூலம் அரசுக்கான வருமானம் அதிகரித்து வருகிறது. அதே சமயம் விலைவாசி 4.15 விழுக்காடு என்ற அளவில் கட்டுக்குள் உள்ளது. நாட்டின் நிதிப் பற்றாக்குறை அதிகமில்லாமல் நம்பிக்கை அளிக்கும் வகையில் உள்ளது.

மேற்கண்ட அனைத்தும் உலக அளவில் நிகழ்ந்து வரும் பல  முக்கியமான பிரச்னைகளுக்கு இடையிலும் நடந்து வருவது தான் இங்கு கவனிக்கத் தக்கது. ஈரான் நாடு  தீவிர வெளிநாட்டுத் தடைகளையும், போரையும் சந்தித்து வருகிறது. அதனால் மத்திய கிழக்கு நாடுகளில் குழப்பங்கள் நீடித்து வருகின்றன. எனவே எரிபொருள் தடையின்றி கிடைப்பது பற்றி நிச்சயமற்ற சூழ்நிலை நிலவி வருகிறது.

ரஷ்யா- உக்ரைன் போர் நீடித்து வருகிறது. அமெரிக்க அதிபர் டிரம்ப் ஒரு தெளிவுடன் செயல்படாமல் அடிக்கடி முடிவுகளை மாற்றிக் கொள்ளும் நபராக இருந்து வருகிறார்.  சுற்றுச் சூழல் அபாயம் உலகைப் பயம் கொள்ள வைக்கிறது. எனவே பல நாடுகளும் கடும் பொருளாதாரச் சிரமங்களைச் சந்தித்து வருகின்றன. ஆகையால் உலகப் பொருளாதார வளர்ச்சி குறைவாகவும் மந்தமாகவும் உள்ளது.

அதே சமயம் இந்தியப் பொருளாதாரம் அந்தச் சிரமங்களை எல்லாம் மீறி நம்பிக்கையுடன் செயல்பட்டு வருகின்றது. கடந்த பன்னிரெண்டு வருடங்களாக மோடி அரசு கொண்டு வந்த திட்டங்கள் பலவும் நல்ல பலன்களைக் கொடுத்து வருகின்றன.  சென்ற வருடம் பொதுத் துறை வங்கிகள் சுமார் இரண்டு லட்சம் கோடி ரூபாய் அளவு லாபம் ஈட்டியுள்ளன.

இந்தப் பின்னணியில் சென்ற காலாண்டு வளர்ச்சி விகிதச் சாதனையை இமாலயச் செயல்பாடு எனப் பிரதமர் மோடி வர்ணித்துள்ளார். அது 140 கோடி இந்தியர்களின் கடின உழைப்பு மற்றும் அரசின் பொருளாதார சீர்திருத்த நடவடிக்கைகள் ஆகியவற்றின் மூலம் நடந்துள்ளது எனக் குறிப்பிட்டுள்ளார். 

அவற்றுடன் அரசின் திறமையான நிர்வாகம் என்பதையும் நாம் சேர்த்துக் கொள்ள வேண்டும். நாடு வேகமாக  வளர்ந்து உலக அரங்கில் முன்னேறி வரும் இந்தச் சூழலில் தற்போது வந்துள்ள முடிவுகள் ஒரு பெரிய உத்வேகத்தை அளிக்கின்றன. 

( https://spmrf.org/indian-growing-economy )

அறிவுசார் நக்சல்கள் ஆபத்தானவர்கள்

 

அண்மையில் செங்கோட்டையில் நடைபெற்ற எண்பதாவது சுதந்தர தின நிகழ்ச்சியில் பேசிய பிரதமர் மோடி பல வருடங்களாக நாட்டில் ஆயுதமேந்திச் செயல்பட்டு வந்த நக்சல்களை ஒழித்து விட்டோம்; ஆனால் அறிவுசார் (டிமாகி) நக்சல்கள் இன்னமும் நம்மைச் சுற்றி இருந்து வருகிறார்கள் எனக் குறிப்பிட்டார்.

மேலும் அத்தகு நபர்கள் தமக்குப் பொருத்தமான சூழ்நிலைகளுக்காகக் காத்துக் கொண்டிருக்கிறார்கள் ; சூழ்நிலை உண்டாகும் போது வன்முறை மற்றும் அரசியல் குழப்பத்தை ஏற்படுத்துவார்கள்; எனவே அவர்களை அடையாளம் கண்டு தனிமைப்படுத்த வேண்டும் எனவும் எச்சரித்தார்.  

நக்சலைட் இயக்கம் 1967 ஆம் வருடம் மேற்கு வங்க மாநிலத்திலுள்ள நக்சல்பாரி கிராமத்தில் ஆரம்பமானது. சீன கம்யூனிஸ்ட் தலைவர் மாசேதுங் சித்தாந்தத்தை ஒட்டி தொடர் புரட்சியின் மூலமாக  அரசாங்கத்தைத் தூக்கி எறிய வேண்டும் என்பதே  இயக்கத்தின்  நோக்கமாகும்.

 போக்குவரத்து வசதிகள் அதிகமில்லாத அடர்ந்த காடு மற்றும் மலைப்பகுதிகளில் அவ்வியக்கம் அதிகம் பரவியிருந்தது. அதனால் சட்டிஸ்கர், ஜார்கண்ட், ஒடிசா மற்றும்  பீகார் மாநிலங்கள் அதிகமான பாதிப்புக்கு ஆளாகின. மேலும் மகாராஷ்டிரா, தெலுங்கானா, ஆந்திரா, மத்தியப் பிரதேசம் மற்றும் மேற்கு வங்க மாநிலப் பகுதிகளிலும் அவை செயல்பட்டு வந்தன.

மக்களை அரசுக்கு எதிராகத் தூண்டி விடுவது, வளர்ச்சித் திட்டங்களைத் தடுப்பது, பாதுகாப்புத் துறையினர் மற்றும் பொது மக்களைக் கொல்வது, கொள்ளையடிப்பது, பொதுக் கட்டமைப்புகளைத் தகர்ப்பது, சிறுவர்கள் மற்றும் இளைஞர்களை வன்முறையில் ஈடுபடுத்துவது உள்ளிட்ட  செயல்களில் அந்த இயக்கத்தினர் ஈடுபட்டு வந்தனர். இருபது வருடங்களுக்கு முன்னர் 180 மாவட்டங்களில் அவர்களின் செயல்பாடு இருந்தது. 2004ல் தொடங்கிய பத்தாண்டு கால காங்கிரஸ் கூட்டணி ஆட்சிக் காலத்தில் பொதுமக்கள் மற்றும் பாதுகாப்புப் படையினர் சுமார் ஏழாயிரம் பேர் கொல்லப்பட்டனர்.  

2014 ஆம் ஆண்டு மோடி அரசு வந்த பின்னர் நக்சலிசத்தைக் கட்டுப்படுத்த ஒருங்கிணைந்த கொள்கையை அறிவித்தது. அதன்படி உறுதியான செயல் திட்டம் வகுக்கப்பட்டு, உள்துறை அமைச்சகத்தின் தலைமையில் தீவிரமாக நடைமுறைப் படுத்தப்பட்டது. நக்சல் பாதித்த பகுதிகளில் வளர்ச்சிக்குத் தேவையான  கட்டமைப்பு வசதிகள் மேம்படுத்தப்பட்டன.  நக்சல் தீவிரவாதிகளுடன் பேசி அவர்களுக்குச் சரணடையும் வாய்ப்புகள் கொடுக்கப்பட்டன. சரண் அடைபவர்களுக்கு ஊக்கத் தொகை மற்றும்  திறன் மேம்பாட்டுப் பயிற்சியுடன் உதவித் தொகையும் வழங்கப்பட்டன. எதற்கும் உடன்படாதவர்கள் துப்பாக்கிக் குண்டுகளுக்கு இரையாயினர்.    

கடந்த பன்னிரெண்டு வருடகால  முயற்சிகளால், இடது சாரி தீவிரவாதம் பாதிக்கப்பட்ட மாவட்டங்களின் எண்ணிக்கை 126 என்பதிலிருந்து இரண்டாகக் குறைந்துள்ளது. கடுமையான பாதிப்புகளுக்கு ஆளாகி இருந்த 35 மாவட்டங்கள் இன்று முழுதும் விடுபட்டு விட்டன. எனவே சென்ற மார்ச் மாத இறுதியில் இந்தியா நக்சல்கள் இல்லாத நாடாக மாறி விட்டது என உள்துறை அமைச்சர் அறிவித்தார். ஆகையால் நமது நாட்டுக்கு மிகப்பெரும் உள்நாட்டுப் பாதுகாப்பு சவாலாக விளங்கி வந்த  அறுபதாண்டு கால ஆயுதம் தாங்கிய  இயக்கம் இப்போது  ஒழிக்கப்பட்டு விட்டது மோடி அரசின் மகத்தான சாதனையாகும்.

அதே சமயம் ஆயுதம் ஏந்தாத இடதுசாரி சிந்தனை கொண்ட அறிவு சார் நக்சல்கள் இன்றும் கல்வி, எழுத்து, பத்திரிக்கை, சினிமா, நீதி, பொது வாழ்க்கை, அரசியல் எனப் பல துறைகளிலும் தீவிரமாகச் செயல்பட்டு வருகின்றனர். வன்முறை மற்றும் தீவிரவாதத்தை நியாயப்படுத்துவது, நாட்டின் இறையாண்மைக்கும், ஒற்றுமைக்கும் எதிராகச் செயல்படுவது, நமது வரலாறு, பாரம்பரியம் மற்றும் தன்மைகளை மறுப்பது, வளர்ச்சித் திட்டங்களை எதிர்ப்பது, மக்களிடையே பிரிவினையை விதைப்பது, ஜனநாயகத்துக்கு எதிராகக் குரல் கொடுப்பது உள்ளிட்டவை அவர்களின் செயல்களாக உள்ளன.

அவற்றின் மூலமாக மக்களிடையே குழப்பம் மற்றும் வெறுப்புணர்வை ஏற்படுத்துவது, முன்னேற்றத்தைத் தடுப்பது, கலவர சூழ்நிலையை உருவாக்குவது, அரசியல் அமைப்புகளின் மேல் அவ நம்பிக்கையை உருவாக்குவது உள்ளிட்டன அவர்களின் நோக்கங்களாகும். அதற்காக அவர்கள் தேச விரோத, தீவிரவாத, பிரிவினைவாத  மற்றும் அந்நிய சக்திகளுடன் இணைந்து செயல்படுகின்றனர்.  அதற்கான நிதிகளைத் தவறான வழிகளில் சட்ட விரோதமாகப் பெறுகின்றனர்.

சில உதாரணங்கள் மூலம் அறிவுசார் நக்சல்களின் செயல்களைப் புரிந்து கொள்ளலாம். பிரபல அகழ்வாராய்ச்சி நிபுணர் கே.கே. முகமது அயோத்தி ராம ஜன்ம  பூமி ஆய்வுகளில் ஈடுபட்டவர். அப்போது பூமிக்கடியில் கோவில் இருந்ததற்கான ஆதாரங்கள் இருந்ததை நேரில் பார்த்தவர். ஆனால் பெரிய பல்கலைக் கழகங்களில் பிரபலமாக இருந்த வரலாற்றுப் பேராசிரியர்கள் அதற்கு ஆதாரமே இல்லை என வாதிட்டார்கள். அதன் மூலம் மக்களைத் திசை திருப்பினார்கள். நீதி மன்றம் அவர்களை என்ன ஆதாரத்தை வைத்துச் சொல்கிறீர்கள் எனக் கேட்ட போது, அவர்களிடம் ஆதாரம் எதுவும் இல்லை. கலாசார முக்கியத்துவம் வாய்ந்த விசயத்தில் கூசாமல் பொய் சொன்னவர்கள் தான் அவர்கள்.

பண்டைய காலத்திலிருந்து தொடர்ந்து பல நூறாண்டுகள் உலகின் இரு பெரும் பொருளாதாரங்களில் முதன்மையாக  விளங்கியது இந்தியா என்பது வரலாற்று உண்மை. பின்னர் காலனியாதிக்க காலத்தில் நாடு சுரண்டல்களுக்கு ஆளாகி ஏழையானது. அதனால் சுதந்திரத்துக்குப் பிந்தைய ஆரம்ப காலங்களில் வளர்ச்சி விகிதம் 3.5 விழுக்காடு இருந்தது. அதை இந்து வளர்ச்சி விகிதம் என இடதுசாரிப் பொருளாதார நிபுணர்கள் குறிப்பிட்டனர். சரித்திரப் பூர்வமான காரணங்களால்  உண்டான குறைவான வளர்ச்சிக்கு இந்து மதத்தைக் கொச்சைப்படுத்தினார்கள். 

1990 சமயத்தில் ஜம்மு- காஷ்மீர் மாநிலத்திலிருந்து மத தீவிரவாதிகளால் சுமார் ஆறு லட்சம் இந்துக்கள் துரத்தியடிக்கப்பட்டனர். பல பேர் கொடூரமாக  கொல்லப்பட்டனர். நூற்றுக்கணக்கான பெண்கள் மானத்தை இழந்தனர். அவர்களின் சொத்துக்கள் எல்லாம் மற்றவர் கைகளுக்குச் சென்றன.  சொந்த நாட்டிலேயே அவர்கள் அகதிகளாகத் தள்ளப்பட்டனர். இங்கிருந்து தூரத்திலுள்ள பாலஸ்தீனத்துக்கு ஆர்ப்பாட்டம் நடத்தும் அரசியல்வாதிகள், பத்திரிக்கையாளர்கள், அறிவு ஜீவிகள் எனப் பலரும்  அது பற்றி வாயே  திறக்கவில்லை. மோடி அரசு வந்த பின்னரே அந்த மக்களின் துயரங்கள் வெளியில் வர ஆரம்பித்துள்ளன. 

 இந்தியர்களைப் பிரிப்பதற்காக அந்நிய சக்திகளால் உருவாக்கப்பட்ட ஆரிய திராவிட வாதம் கட்டுக்கதை என்பது ஐரோப்பியர்களாலேயே அறிவியல் பூர்வமாக நிரூபிக்கப்பட்டு விட்டது.   ஆனாலும் தமிழகத்தில் ஒரு  கூட்டம் அதை இன்னமும் முன் வைத்து வருகிறது. அதே போல உலகின் கல்வி மையமாக விளங்கி வந்த நமது நாட்டில்,   மக்களனைவருக்கும் இலவசமாகக்  கிடைத்து வந்த கல்வி முறையை ஆங்கிலேயர்கள் அழித்தார்கள் என்பது அவர்களே ஒத்துக்கொண்ட உண்மை.

அதே சமயம் பத்தொன்பதாம் நூற்றாண்டின் தொடக்கம் வரையிலும் பிரிட்டனில் கல்வி பரவலாக இல்லை என்பதும் அவர்களே சொன்னது. ஆனாலும் ஆங்கிலேயர் இங்கு வந்த பின்னரே நமது நாட்டுக்கு கல்வி வந்தது என்று தொடர்ந்து தமிழக அமைச்சர்கள் உள்ளிட்ட பலரும்  இன்று  வரை பேசி வருகின்றனர்.  இவையெல்லாம் அறிவுசார் நக்சல்களின் தாக்கங்கள்.

தமிழகத்தில் கூடங்குளம் அணுமின் நிலையம் அமைப்பதற்கு எதிராகப் போராட்டங்கள் நடந்த போது அதில் அந்நியத் தலையீடு இருக்கிறது என அப்போதைய பிரதமர் மன்மோகன் சிங் குற்றம் சாட்டினார். பின்னர் ஸ்டெர்லைட் ஆலைக்கு எதிராகவும் போராட்டம் நடைபெற்று அது மூடப்பட்டது.  அதனால் பல தமிழ் குடும்பங்கள் வேலையிழந்தது மட்டுமன்றி நமது பொருளாதாரமும் பெருமளவு பாதிக்கப்பட்டது. 

பாகிஸ்தான், வங்காள தேசம் மற்றும் ஆப்கானிஸ்தான் நாடுகளில் வாழ்ந்து வரும் இந்து, சீக்கிய மற்றும்  கிறிஸ்துவ மதங்களைச் சார்ந்த சிறுபான்மை மக்களுக்குக் குடியுரிமை வழங்க வேண்டுமென்பது காந்திஜி, அம்பேத்கர், நேரு, பட்டேல் உள்ளிட்ட தலைவர்கள்  பலரும் உறுதியளித்த வாழ்வாதாரப் பிரச்னை. ஆனாலும், பாதிக்கப்பட்ட மக்களுக்கு உதவுவதற்காக எழுபது ஆண்டுகளுக்குப் பின்னர் அதைச் சட்டமாக்க அரசு நடவடிக்கை எடுத்த போது அது குறிப்பிட்ட மதத்துக்கு எதிரானதாகச் சித்தரிக்கப்பட்டது. அதனால்  நாட்டின் பல பகுதிகளிலும் ஆர்ப்பாட்டங்கள் நடத்தப்பட்டன. 

கடந்த பல தசாப்தங்களாகத் தொடர்ந்து பல தளங்களிலும் இந்த மாதிரி வேலைகளைச் செய்து வருபவர்கள் அறிவுசார் நக்சல்கள். மோடி அரசு வந்த பின்னர் மத்திய அரசு இறையாண்மை, தேச ஒற்றுமை, கலாசாரப் பாதுகாப்பு, ஒட்டு மொத்த வளர்ச்சி உள்ளிட்ட அடிப்படை விசயங்களில் சமரசமில்லாமல் உறுதியாக இருந்து வழிநடத்தி வருகிறது.   அதனால் கடந்த காலங்களில் பயமில்லாமல் உள்ளடி வேலைகளைச் செய்து வந்த சக்திகள் தற்போது செய்வதறியாமல் தவிக்கின்றன.

நாடு வேகமாக முன்னேறி உலக அளவில் பலம் பொருந்தி வருவது அவர்களுக்குப் பிடிக்கவில்லை. எனவே மோடி அரசின் திட்டங்கள் மற்றும் செயல்பாடுகள் பலவற்றுக்கும் எதிர்ப்புத் தெரிவிப்பதும்,  மக்களிடையே வெறுப்பை விதைப்பதும் அதிகரித்து விட்டது.  அதற்கு அந்நிய சக்திகள் ஆதரவளித்து வருவது அண்மையில் டெல்லியில் நடந்த கரப்பான் பூச்சி இயக்க ஆர்ப்பாட்டங்களில் அம்பலமானது.

எனவே நக்சல் சிந்தனையுடன் அறிவுசார் தளங்களில் செயல்பட்டு வருபவர்கள் மிகவும் ஆபத்தானவர்கள். அவர்களின் செயல்பாடுகள் நமது நாட்டையும், அதன் முன்னேற்றத்தையும் பெருமளவு பாதிக்கக் கூடிவை. ஆகையால் இந்தத் தருணத்தில் அவர்களின் சதி வலைகளில் வீழ்ந்து விடாமல் எச்சரிக்கையோடு இருந்து, அவர்களை ஒதுக்கி வைப்பது நமது முக்கிய கடமையாகும். 

வன்முறையை துாண்டி, நியாயப்படுத்துவதே அறிவுசார் நக்சலிசம்!

( சிந்தனைக் களம், தினமலர், ஆக.30,2026)


 

சுய சார்பு பொருளாதாரத்தின் அடிப்படை சுதேசித் தொழில்கள்

 

பாரத நாடு  தொன்மையான பண்பாட்டைக் கொண்டது. நமது பண்பாடு பல ஆயிரம் ஆண்டுகளாக நீடித்து வாழ்ந்து வருகிறது என்றால், அதற்கான பொருளாதாரப் பின்னணி இருந்திருக்க வேண்டும். அந்த வகையில் சுமார் ஐயாயிரம் ஆண்டுகளுக்கு முன்னரே நமக்கெனச் சிறப்பான பொருளாதார மற்றும் வணிக வரலாறு இருப்பதைக் குறிப்புகள் காட்டுகின்றன. பொது யுகம் தொடங்கிய பின்னர் கடந்த இரண்டாயிரம் ஆண்டு காலத்துக்கான  உலக நாடுகளின் பொருளாதார வரலாற்றை அறிஞர் ஆங்கஸ் மாடிசன் தொகுத்துக் கொடுத்துள்ளார்.

அதில் பொது யுக தொடக்க காலத்தில், அதாவது இப்போதிருந்து 2025 ஆண்டுகளுக்கு முன்னர், உலக நாடுகளின் ஒட்டு மொத்த பொருளாதார மதிப்பில் மூன்றில் ஒரு பங்கினை நமது நாடு வைத்துக் கொண்டிருந்தது எனக் குறிப்பிட்டுள்ளார். அப்படியானால் நாம் அப்போதே உலகின் பெரும் பொருளாதார சக்தியாக இருந்திருக்கிறோம். பின்னர் ஆங்கிலேயர்கள் இங்கு வந்து திட்டமிட்டு நமது பொருளாதாரத்தைச் சிதைக்கும் வரை,  பதினெட்டு நூற்றாண்டு காலம் இந்தியாவும் சீனாவும் தான் பொருளாதார பலம் பொருந்திய இரு பெரும் நாடுகளாக விளங்கி வந்துள்ளன.

அதற்குக் காரணம் நமது உள்நாட்டுப் பொருளாதார முறைகளும், உள்ளூர்ப் பகுதிகளிலேயே உருவாக்கப்பட்டுச் செயல்பட்டு வந்த தொழில்களும் தான். பின்னர் வந்த அந்நியர்களின் காலனி ஆட்சிக் காலத்திய பொருளாதாரத் தாக்குதல்கள் பல நூற்றாண்டுகளாக வலிமையாக விளங்கி வந்த நமது பொருளாதாரத்தையும், தொழில்களையும் கடும் பாதிப்புகளுக்கு உள்ளாக்கின. அதனால் தொழில்கள் சீரழிந்து, பொருளாதாரம் பெரும் வீழ்ச்சியடைந்தது.

1750 ஆம் வருட காலத்தில் இந்தியா உலக உற்பத்தியில் கால் பங்கினை அளித்துக் கொண்டிருந்தது. அதுவே 1900 வருட காலத்தில் வெறும் இரண்டு விழுக்காட்டுக்குக் கீழ் சென்றது. ஒரு நூற்றைம்பது வருட காலத்தில் நமது உற்பத்தித் துறை முற்றிலும் சிதைக்கப்பட்டது. குறு, சிறு தொழில்கள் பலவும் நசுக்கப்பட்டன. மேலும் நம் நாட்டு ஏற்றுமதிகள் தடுக்கப்பட்டு, அந்நியப் பொருட்கள் இங்கு தங்கு தடையின்றி அனுமதிக்கப்பட்டன.

எனவே பல நூற்றாண்டுகளாக உலகின் பெரும் ஏற்றுமதி நாடாக விளங்கி வந்த இந்தியா, பத்தொன்பதாம் நூற்றாண்டின் தொடக்கத்திலிருந்து  இறக்குமதி நாடாக மாறிப் போனது. அதனால் சுதந்திரப் போராட்ட காலத்தில் நமது தலைவர்கள் வெளிநாட்டுப் பொருட்கள் புறக்கணிப்பு மற்றும் சுதேசித் தொழில்களுக்கான ஆதரவு ஆகிய இரண்டையும் முக்கியமான பணிகளாக எடுத்து வைத்தனர். இருபதாம் நூற்றாண்டின் ஆரம்ப காலந் தொடங்கி சுதேசிக்கான குரல் நாடு முழுவதும் வலுத்தது. காந்திஜி சுதேசிக்கான அவசியத்தை வலியுறுத்தி மக்களிடத்தில் விழிப்புணர்வை ஏற்படுத்தினார்.

நாடு சுதந்திரம் அடைந்த பின்னர், நேரு சோசலிச கொள்கைகளைக் கடைப்பிடித்தார். அதனால் மக்கள் தொழில்களைத் தொடங்கப் பல சிரமங்கள் ஏற்பட்டன. அதே கொள்கையானது தொடர்ந்து அடுத்த நாற்பது ஆண்டுகளுக்கு மேல் நீடித்தது.  ஆனாலும் அதையெல்லாம் மீறி தொழில் முனைவோர் நாடு முழுவதும் சிறு, குறு, நடுத்தரத் தொழில்களைத் துவக்கி, முன்னேறும் முயற்சிகளில் இயங்கினர். அந்த கால கட்டங்களில் தான் கோவை, திருப்பூர் என நாட்டின் பல பகுதிகளிலும் உள்ளூர் சமூகங்களின் சொந்த முயற்சியால்  சுதேசி தொழில் மையங்களுக்கான  அஸ்திவாரங்கள் போடப்பட்டன.  

அவை பெரும்பாலும் அதிகம் படிக்காத, நிதி வசதி குறைந்த உழைப்பை மட்டுமே நம்பிய சாதாரண மக்களால் முன்னெடுக்கப்பட்ட முயற்சிகளாக இருந்தன. அரசு அமைப்புகள் தேவையான உதவிகளைச் செய்யாமல் இருந்த போதும் தொழில் முனைவோர் நம்பிக்கையுடன் காலடிகளை எடுத்து வைத்தனர். பின்னர் 1990-களில் அந்நியத் தொழில்களுக்கும், முதலீடுகளுக்கும் ஆதரவான கொள்கைகளை அப்போதைய அரசு கொண்டு வந்தது. அதனால் உள்நாட்டுத் தொழில்களுக்குப் பெரும் சிரமங்கள் ஏற்பட்டன.

அந்தச் சமயத்தில் சுதேசிய சிந்தனையாளர் தத்தோபந்த் தெங்கடி அவர்கள் உள்நாட்டுத் தொழில்களைப் பாதுகாக்கவும், ஊக்குவிக்கவும் சுதேசி விழிப்புணர்வு இயக்கத்தை ஆரம்பித்தார். அதன் மூலம் உள்நாட்டுத் தொழில்களின் அவசியம் மற்றும் சிறு, குறு, நடுத்தரத் தொழில்களின் முக்கியத்துவம் ஆகியவை பற்றி மக்களுக்கு எடுத்துச் சொல்லப்பட்டது. மேலும் கட்டுப்பாடு இல்லாமல் அந்நிய நிறுவனங்கள் இங்கு வருவது மற்றும் அந்நிய முதலீடு அதிகரிப்பது ஆகியவற்றின் ஆபத்துகள் குறித்து நாடு முழுவதும் சுதேசி இயக்கம் நிகழ்ச்சிகளையும், போராட்டங்களையும் நடத்தியது.  

எத்தனையோ சிரமங்கள் நிலவிய அந்தக் காலகட்டங்களிலும் கூட, நமது தொழில் முனைவோர்கள் அவற்றையெல்லாம் மீறி புதிய நிறுவனங்களைத் துவக்கியும். தொழில்களை நடத்தியும் வந்தனர். அதனால் தொழில்கள் விரும்பிய அளவு இல்லாவிட்டாலும் கூட, முடிந்த வரை வளர்ந்து கொண்டே சென்றன. அதனால் தொழில் மையங்கள் அதிகரித்து வேலை வாய்ப்புகள் பெருகின. அத்தகு மையங்கள் நன்கு செயல்பட்டு வந்த குஜராத், தமிழ்நாடு, மகாராஷ்டிரா, பஞ்சாப் போன்ற மாநிலங்கள் அதிக பொருளாதார வளர்ச்சியைக் கண்டன. 

2014 ஆம் ஆண்டு மோடி அரசு பொறுப்புக்கு வந்தது முதல், சிறு, குறு மற்றும் நடுத்தரத் தொழில்களை ஊக்குவிக்கவும், புதிய தொழில்களை உருவாக்கவும் தொடர்ந்து பல திட்டங்கள் செயல்படுத்தப்பட்டு வருகின்றன.  ஒவ்வொரு துறையிலும் இறக்குமதிகளைக் குறைத்து, ஏற்றுமதிகளை அதிகரிக்க நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகின்றன. “உள்ளூர் பொருள்களுக்குக் குரல் கொடுப்போம்” என்பதை பிரதமர் தேசிய முழக்கமாக வைத்துள்ளார்.   

சிறு, குறு, நடுத்தரத் தொழில்களை அதிகரிப்பதற்கு அறிவிக்கப்பட்ட முத்ரா திட்டம் மூலம் இதுவரை சுமார் 39 லட்சம் கோடி ரூபாய் அளவு நிதி உதவி 53 கோடி கடன்களுக்கு அளிக்கப்பட்டுள்ளது. அந்தப் பயனாளிகளில் 66 விழுக்காடு பேர் பெண்கள். இவ்வைகத் தொழில்களுக்குத் தொடர்ந்து சலுகைகளும் திட்டங்களும் கொடுக்கப்பட்டு வருகின்றன. பாரம்பரியமாக சமூகங்கள் தேர்ச்சி பெற்ற குறிப்பிட்ட தொழில்களை முன்னேற்ற தனியான திட்டம் செயல்படுத்தப்பட்டு வருகிறது.

மத்திய அரசின் ‘ இந்தியாவில் தயாரிப்போம்‘ திட்டம் மூலம் உள்நாட்டு தயாரிப்பு பெருமளவு ஊக்குவிக்கப்பட்டு வருகிறது. அதனால் முன்னர் அலைபேசிகளை இறக்குமதி செய்து வந்த நமது நாடு, இப்போது 2,60,000 கோடி ரூபாய் அளவு ஏற்றுமதி செய்து உலகின் மூன்றாவது பெரிய ஏற்றுமதியாளராக மாறியுள்ளது. நிபுணத்துவம் தேவைப்படும் பாதுகாப்புத் துறை தயாரிப்புகள் சென்ற வருடம் 1,78,000 கோடி ரூபாய் என அதிகரித்து,  ஏற்றுமதி இதுவரை இல்லாத வகையில் 38,400 கோடி ரூபாயை எட்டியுள்ளது. அதனால் இந்தியா தற்போது எண்பது நாடுகளுக்கு ஏற்றுமதி செய்து வருகிறது.

மேலும் மிகச்சிறு அளவில் கூரை கூட இல்லாமல் தொழில் செய்து வருபவர்களுக்கு நடைமுறை மூலதனம் உள்ளிட்ட உதவிகளை அளிக்கும் வகையில் 2020 ஆம் வருடம் சாலையோர வியாபாரிகளுக்கான நிதி உதவித் திட்டம் அறிவிக்கப்பட்டது. அதன் மூலம் இதுவரை சுமார் 76 லட்சம் பேருக்கு 18000 கோடி ரூபாய் அளவு நிதி உதவி அளிக்கப்பட்டுள்ளது. அதிகார வர்க்கத்தின் தேவையற்றை கட்டுப்பாடுகளிலிருந்து விடுதலை அளிக்க, தொழில்களை எளிமையாகச் செய்யும் திட்டம் நடைமுறைப்படுத்தப்பட்டு வருகிறது.

2047 ஆம் வருடத்தில் நாடு சுய சார்பு நிலையை அடைந்து விட வேண்டும் என்னும் நோக்கில் மோடி அரசு முனைப்பு காட்டி வருகிறது. ஏனெனில் பாரம்பரியம் மிக்க நமது நாட்டுக்கு சுய சார்பு என்பது ரத்தத்துடன் ஒன்றியது. மேலும் உலகின் மிகப்பெரிய மக்கள் தொகையைக் கொண்டுள்ள நாம் பிற நாடுகளைச் சார்ந்து இருப்பது என்பது எதிர்காலத்துக்கு நல்லதல்ல. இறைவன் கொடுத்த இயற்கை வளங்களும், அதிக அளவில் இளைஞர் பட்டாளமும் நம்மிடம் இருக்கும் போது அவற்றைப் பயன்படுத்தி நாட்டை வளப்படுத்துவது நமது கடமை.

காலனி ஆதிக்க காலத்தில் சிதைக்கப்பட்ட நமது பொருளாதாரம், சுதந்திரம் அடைந்த எழுபத்தைந்து வருட காலத்தில் உலகின் நான்காவது பெரிய பொருளாதாரமாக மாறியதே நமது சுதேசித் தன்மைகளால் தான். அதிக அளவில் வெளிநாட்டு மூலதனங்கள் இல்லாமல் வேகமாக வளர்ந்து வரும் பெரிய நாடு இந்தியா. இந்தியக் குடும்ப அமைப்பு முறை, அதிக சேமிப்புகள், அதிகமான சமூக மூலதனம், மக்களின் இயற்கையான தொழில் முனையும் தன்மை ஆகியன நமது கலாசாரம் கொடுத்துள்ள சொத்துக்கள். அவற்றின் மூலமே நாடு இன்று பல சிரமங்களையும் மீறி முன்னேற்றப் பாதையில் சென்று கொண்டுள்ளது.

எனவே பெரிய வரலாறு மட்டுமன்றி, வலுவான அடித்தளங்களும் நம்மிடம் உள்ளன. ஆகையால் மக்களின் வாழ்க்கையை மேம்படுத்தி வளர்ச்சியை அதிகரிக்க நமது அடித்தளங்களை முழுமையாக உபயோகப்படுத்திக் கொள்ள வேண்டும். அது சுதேசித் தொழில்கள் மூலமே சாத்தியமாகும்.

நாட்டின் பல பகுதிகளிலுமுள்ள நமது மக்களை சொந்தத் தொழில்களில் மிகுதியாக ஊக்குவிக்க வேண்டும். அதன் மூலம் நிறைய தொழில் முனைவோர்கள் உருவாக வேண்டும். அந்தந்தப் பகுதிகளிலேயே வேலை வாய்ப்புகள் பெருக வேண்டும். அதற்கு நாம் உள்ளூர் பொருள்களை அதிக அளவில் பயன்படுத்த வேண்டும்.  

சுதேசி விழிப்புணர்வு இயக்கம் கடந்த 2001 ஆம் வருடம் ஆறு நாட்கள் கோவை கொடிசியா வளாகத்தில் ஒரு மாபெரும் சுதேசி தொழில் கண்காட்சியை நடத்தியது. அதனை அப்போதைய பிரதமர் திரு வாஜ்பாய் துவக்கி வைத்தார். ஆறு மத்திய அமைச்சர்கள் கலந்து கொண்டனர். சுமார் இருபது கருத்தரங்குகள் நடைபெற்றன. அதன் மூலம் தமிழகத்தில் ஒரு பெரிய நம்பிக்கை பிறந்தது. இருபத்தைந்து வருடங்கள் கழித்து தற்போது ஆக. 8 ஆம் தேதி தொடங்கி மூன்று நாட்கள் ரத்தினம் கல்லூரி வளாகத்தில் கோவை சுதேசி  கண்காட்சி மற்றும் உணவுத் திருவிழா நடைபெறுகிறது.

அண்மைக் காலமாக மேற்கத்திய பொருளாதாரங்கள் எல்லாம் பெருமளவு தோற்று வருகின்றன. அதே சமயம் நமது தேசம் தொடர்ந்து முன்னேறி வருகிறது. அதற்குக் காரணமாக இருந்து வருவது நமது சுதேசி தொழில் முறைகள் மற்றும் வாழ்வியல் நெறிகளே ஆகும். ஆகையால் நமது தேசம் முன்னேறி சுயசார்பு நிலையை அடைய நாம் சுதேசித் தொழில்களை ஆதரித்து நமது வாழ்வியல் முறைகளையும் கடைப்பிடிக்க வேண்டும்.

( கோவை சுதேசி கண்காட்சியை ஒட்டி எழுதப்பட்ட கட்டுரை, ஆக்.7, 2026)

மாணவர்கள் பெயரில் ஜனநாயக விரோத சக்திகளின் சூழ்ச்சி

 

நீட் தேர்வு வினாத்தாள் கசிவு என்று சொல்லி டெல்லி ஜந்தர் மந்தர் பகுதியில் தொடங்கி, பின்னர் தமிழகம் உள்ளிட்ட மாநிலங்களில் பரவிய போராட்டங்களின்  நோக்கம் மாணவர்களின் நலன்களைப் பற்றியதல்ல. போராட்டங்கள் முழுவதும் மாணவர்களால் நடத்தப்பட்டவையும் அல்ல. அவற்றில் பங்கேற்றவர்களில் முக்கால்வாசி பேருக்கு மேல் மாணவர்கள் அல்ல. அதிலும் நீட் தேர்வு மற்றும் மருத்துவக் கல்வி சம்பந்தப்பட்டவர்கள் இருந்தனரா என்பதே கேள்விக்குறி.    

அண்மையில் கரப்பான் பூச்சி கட்சி என்ற பெயரில் புதிதாக உருவாக்கப்பட்ட ஒரு கட்சியின் பெயரில் போராட்டங்கள் நடந்தன. அந்தக் கட்சியில் முக்கியமாக இருக்கும் மூன்று பேரில் இருவர் முன்பு ஆம் ஆத்மி கட்சியில் பணியாற்றவர்கள். முக்கிய புள்ளியான அப்ஜித் தீப்கே ஜூலை மத்தியில்தான் அமெரிக்காவிலிருந்து வந்து நேராக போராட்டத்தில் கலந்து கொண்டுள்ளார். 

டெல்லிப் போராட்டத்தில் மாணவர்களை ஒருங்கிணைப்பதில் இடதுசாரி, தீவிர இடதுசாரி மற்றும் ஆம் ஆத்மி கட்சிகளின் மாணவர் அமைப்பினர்களைச் சேர்ந்தவர்கள் முக்கிய பங்காற்றியுள்ளனர். அவர்களுடன் காங்கிரஸ் உள்ளிட்ட எதிர்க்கட்சிகளின் மாணவர் அமைப்பினரும் இருந்துள்ளனர்.

அவர்களுடன் இடது சாரி, ஆம் ஆத்மி, காங்கிரஸ், சமஜ்வாதி போன்ற  எதிர்க்கட்சிகள், மதவாத, பிரிவினைவாத அமைப்பினர் மற்றும் வெளி  நாட்டினர் எனப் பலரும் பங்கு பெற்றுள்ளனர். கலந்து கொண்டவர்களில் சுமார் இரண்டாயிரத்து எண்ணூறு பேருக்கு மேல் குற்றப்பின்னணி கொண்டவர்கள் எனச் சொல்லப்படுகிறது. அவர்களில் கொலையாளிகள், கற்பழிப்பு செய்தவர்கள் எனப் பல்வேறு குற்றங்களில் ஈடுபட்டவர்களை டெல்லி காவல்துறை பட்டியலிட்டுள்ளது.  

அந்தப் போராட்டத்தை உண்மையென நம்பி அதில் கலந்து கொள்ளப் பிற மாநிலங்களிலிருந்து டெல்லி சென்ற சிலர் அங்கு நேரில் போய் பார்த்த பின்னர் ஏமாற்றமடைந்து ஊருக்கே திரும்பினர். அதில் ராஜஸ்தான் மாநிலத்தைச் சேர்ந்த ஒருவர் அங்கு நடப்பது மாணவர்களுக்கான போராட்டமல்ல; அரசியல் சூழ்ச்சி;  எனவே மாணவர்கள் அதில் கலந்து கொள்ள வேண்டாம் என்று வேண்டுகோளே விடுத்திருந்தார். 

டெல்லிப் போராட்டம் ஜூன் மாதம் தொடங்கியது. ஆரம்பத்தில் சிலர் மட்டுமே கலந்து கொண்டிருந்த நிலை மாறி, பாராளுமன்றம் தொடங்கிய நாளான ஜூலை 20 முதல் வேகம் பிடித்து, ஒரு வார காலம் ஆயிரக் கணக்கான பேர் அதில் கலந்து கொண்டனர். அவர்களுக்கான உணவு வெளிநாடுகளிலிருந்து கொடுக்கப்பட்ட ஆர்டர்கள் மூலம் கொடுக்கப்பட்டுள்ளது.

போராட்டக்காரர்களின் கோரிக்கைகள் நீட் தேர்வு சம்பந்தப்பட்டவை தானா ? அப்படி அவர்கள் சொல்லியிருந்தாலும், அங்கு கலந்து கொண்ட பெரும்பான்மையினர் போட்ட கோஷங்களும், வைத்த கோரிக்கைகளும், நீட் தேர்வுக்கும், மருத்துவக் கல்விக்கும் எந்த வித சம்பந்தமும் இல்லாதவையாக இருந்தன. அவர்களின் கைகளில் வைத்திருந்த பதாதைகளில் ஜம்மு- காஷ்மீர் சம்பந்தப்பட்ட சட்டப்பிரிவு 370 மீண்டும் கொண்டு வரப்பட வேண்டும்; இந்திய இராணுவம் ஒழிக; இந்துத்துவம் ஒழிக்கப்பட வேண்டும்; வங்காள தேசத்தில் நடந்தது போன்ற மாணவர் புரட்சி மூலம் இங்கும் ஆட்சி மாற்றம் ஏற்பட வேண்டும் என வெவ்வேறு விசயங்கள் இருந்தன.

2020 ஆம் ஆண்டு டெல்லியில் நடைபெற்ற கலவரங்களைத் தூண்டியதற்காகச் சட்ட விரோத நடவடிக்கைகள் தடுப்புச் சட்டத்தில் கைது செய்யப்பட்டுச் சிறையில் இருக்கும் ஷர்ஜில் இமாம் விடுதலை செய்யப்பட வேண்டும் என்ற நோக்கில் அங்கு ஒரு முன்னாள் காங்கிரஸ் தலைவர் பேசினார். பகவான் ராமரை இகழ்ந்தும், பிரதமர் மோடியைக் கொல்ல வேண்டும் எனவும், காலம் சென்ற அவரது தாயைப் பற்றிக் கேவலமாகவும் பேசப்பட்டது. உள்துறை அமைச்சர் பதவி விலக வேண்டும் எனக் கோரப்பட்டது. அநாகரிகமான ஆபாசச் செயல்கள் அனைவரின் கண்முன்னாலும் நடந்தேறின. சிலர் வாள்களை வைத்துக் கொண்டு அதில் கலந்து கொண்டனர்.

ஒரு சமயம் போராட்டத்தில் கலந்து கொண்டவர்கள் அதிக பாதுகாப்பு மிக்க பாராளுமன்ற வளாகத்தின் எல்லைகளை மீறிக் கும்பலாக உள்ளே நுழைய முயற்சித்தனர். அப்போது அவர்களைத் தடுக்க முயன்ற நூற்றுக்கு மேற்பட்ட காவல் துறையினர் தாக்கப்பட்டனர். கர்ப்பமாக இருந்த ஒரு பெண் காவல் அதிகாரியின் வயிற்றில் பலமான தாக்குதல் ஏற்பட்டது.. பெண் பத்திரிக்கையாளர்  அநாகரிகமாக நடத்தப்பட்டார். பொதுச் சொத்துக்கள் சேதப்படுத்தப்பட்டன. தனியார் வாகனங்கள் அடித்து நொறுக்கப்பட்டன.

இவையெல்லாம் நடந்து கொண்டிருக்கும் போது காங்கிரஸ், திமுக, ஆம் ஆத்மி, சமஜ்வாதி உள்ளிட்ட பல எதிர்க்கட்சிகள் போராட்டத்துக்கு ஆதரவளித்தன. பாராளுமன்ற கூட்டத் தொடர்  ஆரம்பித்த நாள் முதல் அவற்றின் உறுப்பினர்கள் அவைக்கு முன்னர் கூடி தொடர்ந்து ஆர்ப்பாட்டம் நடத்தினர். மத்திய அரசு நீட் தேர்வுக் கசிவு குறித்து பாராளுமன்றத்தில் விவாதிக்க அழைத்தும், கூட்டத் தொடரின் முதல் வாரம் முழுவதும் அவைகளை நடத்த எதிர்க்கட்சிகள் அனுமதிக்கவில்லை. காங்கிரஸ் கட்சியினர் போராட்டம் நடந்த ஜந்தர் மந்தர் பகுதிக்குச் செல்லாமல், ராகுல் காந்தி தலைமையில் பிரதமர் வீட்டுக்கு முன்பு ஆர்ப்பாட்டம் நடத்தினர்.

லடாக் பகுதியைச் சேர்ந்த சோனம் வாங்சுக் மாணவர்களின் கோரிக்கைளுக்கு ஆதரவு தெரிவித்து உண்ணாவிரதம் மேற்கொண்டார். பின்னர் 26 நாட்கள் கழித்து மத்திய அமைச்சர்கள் முன்னிலையில் உண்ணாவிரதத்தை முடித்துக் கொண்டார். அப்போது போராட்டத்தில் வன்முறை பரவியது குறித்துக் கவலை தெரிவித்தார். அவரது மனைவி கீதாஞ்சலி ராகுல் காந்தி நேர்மையற்றவராகச் செயல்படுவதாக குற்றம் சாட்டினார். 

2026 ஆம் வருடத்துக்கான நீட் தேர்வு மே மாதம் நடைபெற்று, சில நாட்களிலேயே  வினாத்தாள் கசிந்த விசயம் தெரிய வந்தது. உடனே மத்திய அரசு தலையிட்டு குற்றவாளிகளைக் கைது செய்தது, அதில் சம்பந்தப்பட்ட பதிமூன்று பேர் கைது செய்யப்பட்டு சிறையில் இருந்து வருகின்றனர். அவர்கள் மேலான வழக்கு விசாரணை வேகமாக நடைபெற்று வருகிறது. தொடர்ந்து ஜூன் மாதம் மறு தேர்வு நடத்தப்பட்டு, ஜூலையில் முடிவுகளும் அறிவிக்கப்பட்டு விட்டன. தற்போது மாணவர்கள் படிப்பில் சேர்வதற்குத் தயாராகி வருகின்றனர்.

ஜூலை 27 அன்று போராட்டக்காரர்களின் கோரிக்கையை ஏற்று, சமூக விரோதிகள் போராட்டக் களத்தில் பரவுவதைத் தடுக்க கல்வி அமைச்சர் தர்மேந்திர பிரதான் பதவியை விட்டு விலகினார். தேர்வு முறைகளைகளைச் சீரமைக்க மத்திய அரசு தொழில்நுட்ப நிபுணர் நந்தன் நிலங்கனி தலைமையில் உயர் மட்டக் குழுவை அமைத்துள்ளது. அக்குழு தேர்வுகளின் போது உண்டாகும் கசிவுகளைத் தடுக்கவும், தொழில் நுட்பத்தைப் பயன்படுத்தி தேர்வுகளை நடத்தவும் ஆலோசனைகள் வழங்கும். அதனடிப்படையில் தேவையான மாற்றங்கள் கொண்டு வரப்படும்.

மேலும் மோடி அரசு எதிர்க்கட்சிகளின் பல்வேறு குழப்பங்ளையும் மீறி பொதுத் தேர்வு முறைகேடுகள் தடுப்புச் சட்டத் திருத்த மசோதாவை மக்களவையில் நிறைவேற்றியுள்ளது. அது சட்டமானதும் தவறு செய்பவர்களுக்கு அதிக பட்சமாக பத்து வருட சிறைத் தண்டனையும், பத்து கோடி ரூபாய் வரை அபராதமும் விதிக்கப்படும். மேலும் சிறப்பு விரைவு நீதி மன்றங்கள் மூலம் வேகமாக வழக்குகள் முடிக்கப்படும். அதனால் தவறிழைப்பது தடுக்கப்படும்.

மே மாதம் நடந்த தேர்வில் தவறுகள் கண்டுபிடிக்கப்பட்டு, ஜூன் மாதமே மறு தேர்வும் நடத்தப்பட்ட பின்னர், புதிதாக ஆரம்பிக்கப்பட்ட கரப்பான் பூச்சி கட்சியினர் போராட்டத்தை நடத்தக் காரணம் என்ன? அவர்களுக்கு ஆதரவும், பின்புலமும் யார் என்பதைப் பார்க்கும் போது அதிர்ச்சியளிக்கும் செய்திகள் தெரிய வருகின்றன.

டெல்லியில் ஆரம்பித்த போராட்டத்தைத் தொடர்ந்து வேறு மாநிலங்களிலும் சிறிய அளவில் ஆர்ப்பாட்டங்கள் முன்னெடுக்கப்பட்டன. அங்கெல்லாம் கரப்பான் பூச்சி கட்சி இல்லை. ஆனால் அவற்றை இடதுசாரிகள் உள்ளிட்ட இயக்கங்களைச் சேர்ந்தவர்கள் வழி நடத்தியுள்ளனர். தமிழகத்தில்  சென்னையிலுள்ள இந்திய கம்யூனிஸ்டு கட்சியின் தலைமை அலுவலகத்தில் கரப்பான் பூச்சி கட்சி என்று ஒரு பேனரை மட்டும் தொங்க விட்டு  ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. அதில் எதிர்க்கட்சி பிரதிநிகள் மற்றும் வழக்கமான மோடி எதிர்ப்பு திரைத்துறை செயல்பாட்டாளர்கள் கலந்து கொண்டுள்ளனர்.

எனவே இந்தப் போராட்டத்தின் நோக்கம் தான் என்ன ? இந்தியா பிரதமர் மோடியின் தலைமையில் உலக அளவில் வேகமாக முன்னேறிச் சென்று வருகிறது. வெவ்வேறு துறைகளிலும் புதிய உச்சங்களைத் தொட்டு வேகமாக வளர்ந்து வருகிறது. தீவிரவாத, பிரிவினைவாத, தேச விரோத மற்றும் மதவாத சக்திகளைக் கட்டுப்படுத்தி கடிவாளம் போடும் நடவடிக்கைகள் வேகமாகச் செயல்படுத்தப்பட்டு வெற்றியடைந்து வருகின்றன. ஆகையால் அமெரிக்கா, சீனா, பாகிஸ்தான் உள்ளிட்ட பல நாடுகள் இந்தியாவின் முன்னேற்றத்தை விரும்பவில்லை. 

எனவே அதைச் சீர்குலைக்க வேண்டும். ஆகையால் நியாயமான முறையில் மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட மோடி அரசு செயல்படாமல் தடுக்க வேண்டும். இந்தக் கூட்டத் தொடரில் அரசு கொண்டுவரத் திட்டமிட்டுள்ள மசோதாக்களைச் சட்டமாக்கி விடக் கூடாது. அரசு மீதுள்ள நம்பகத்தன்மையைக் குறைத்து, மக்களின் நம்பிக்கையை இழக்கச் செய்ய வேண்டும் என்பவை தான் போராட்டத்தின் நோக்கம். அதனால் தான் அமெரிக்காவும், அவர்களை எதிர்க்கும் இடதுசாரிகளும் ஒன்று சேர்ந்துள்ளனர்.

அதனால்தான் போராட்டத்தின் பல இடங்களிலும் நீட் எதிர்ப்பை விட மோடி எதிர்ப்பே பிரதானமாக இருந்துள்ளது. இது ஏதோ மோடி என்கின்ற தனி நபர் மேல் இருக்கும் எதிர்ப்பல்ல. நமது தேசத்தின் ஜனநாயகத்தின் மேல் நிலவும் எதிர்ப்பு. அதனால் தான் போராட்டவாதிகளிடம் நெருக்கமாகவுள்ள யோகேந்திர யாதவ் இனிமேல் இந்தியாவின் எதிர்காலம் தெருக்களில் தான் முடிவு செய்யப்படும் எனக் குறிப்பிட்டுள்ளார்.

எனவேதான் பாராளுமன்றத்தின் ஒவ்வொரு கூட்டத் தொடரின் போதும் ஒரு பிரச்னையை எடுத்துப் பெரிதாக்கி பின்னர் தொடரை நடத்த விடாமல் முடக்குவது என்பது நடைபெற்று வருகிறது. இந்த விசயத்தில் காங்கிரஸ், சமஜ்வாதி, திமுக  போன்ற குடும்பக் கட்சிகள், மற்றும் இடதுசாரிகள் ஆகியோர் இணைந்து செயல்படுகின்றனர். அண்மையில் நடந்த சட்டமன்றத் தேர்தல் முடிவுகளுக்குப் பின் அவை ஒருங்கிணைந்து செயல்பட வாய்ப்பில்லை..

எனவே புதியதாகச் சில இளைஞர்கள் உருவாக்கிய அமைப்பே இல்லாத கரப்பான் பூச்சி கட்சியின் பின்னால் தங்களின் குறுகிய காலப் பலன்களுக்காக ஒளிந்து கொண்டு எதிர்ப்பைக் காட்டுகின்றனர். அந்த இளைஞர்களை யார் வேண்டுமானாலும் இயக்க முடியும். அது நாட்டுக்குப் பேராபத்து. பிரச்னைகளைப் பேசச் சட்டமன்றங்களும், பாராளுமன்றமும் உள்ளன. அவற்றின் மூலம் தீர்வு காண்பதே சரியான வழிமுறை.  அப்போதுதான் உலகின் பெரிய ஜனநாயகமாக விளங்கும் நமது நாட்டைக் காப்பாற்ற முடியும்.

 

சியாம பிரசாத் முகர்ஜி என்னும் மகத்தான தேசபக்தர்

 இந்தியா சுதந்திரம் பெற்ற பின்னரும் தொடர்ந்து பல ஆண்டு காலமாக நமது வரலாறும் நிகழ்வுகளும் மேற்கத்திய மற்றும் இடதுசாரி நோக்கிலேயே பதிவு செய்யப்பட்டு வந்துள்ளன. அதனால்   நமது தேசத்தின் அசாத்தியமான ஆளுமைகளும் அவர்களின் பெரும் சாதனைகளும் கூட நம்மிடமிருந்து மறைக்கப்பட்டு வந்துள்ளன. அப்படி மறைக்கப்பட்ட ஒரு மாபெரும் ஆளுமைதான் டாக்டர் சியாம பிரசாத் முகர்ஜி அவர்கள்.

1901 ஆம் வருடம் ஜூன் மாதம் 23 ஆம் தேதி வங்காளப் பகுதியில் பிறந்த அவர், இங்கிலாந்து சென்று சட்டத்துறையில் பட்டம் பெற்றுத் திரும்பி வந்து வழக்கறிஞராகப் பணியைத் தொடங்கினார். தனது இருபத்தெட்டாவது வயதில் கல்கத்தா பட்டதாரிகள் தொகுதியில் சட்ட மேலவை உறுப்பினராகத் தேர்ந்தெடுக்கப்பட்டார். முப்பத்து மூன்றாவது வயதிலேயே கல்கத்தா பல்கலைக்கழகத்தின் துணைவேந்தராகத் தேர்ந்தெடுக்கப்பட்டார்.   

இரண்டு முறை அந்தப் பொறுப்பு வகித்த அவர், உயர் கல்வித் துறையில் ஆங்கிலேயர் ஆட்சிக் காலத்திலேயே முக்கியமான மாற்றங்களைக் கொண்டு வந்தார். நோபல் பரிசு பெற்ற கவிஞர் ரவீந்தரநாத் தாகூரை அழைத்து பல்கலைக்கழகத்தில் முதன் முதலாக தாய்மொழியான வங்க மொழியில் பட்டமளிப்பு விழா உரை நிகழ்த்த வைத்தார். தேசத்தின் பண்டைய வரலாறு, பண்பாடு குறித்த பாடங்களை மாணவர்களுக்கு அறிமுகப்படுத்தினார். உண்மையான வரலாற்றை மாணவர்கள் ஆய்ந்து அறிந்து கொள்ளும் நோக்கில் அகழ்வாராய்ச்சித் துறையைக் கொண்டு வந்தார்.  

1930 களில் ஆங்கிலேய அரசு கொண்டு வந்த சட்டத்தின் விளைவாக வங்காளத்தில் முஸ்லீம் லீக் அரசு பதவிக்கு வந்தது. அப்போது தகுதி வாய்ந்தவர்களாக இருந்தும் அரசுத் துறைகளில் இந்துக்களுக்கு வாய்ப்புக்கள் மறுக்கப்பட்டன. பல  வகைகளிலும் பெரும்பான்மை மக்கள் துன்புறுத்தப்பட்டனர். அப்போது அங்கிருந்த  முக்கியஸ்தர்கள்  டாக்டர் முகர்ஜியை அரசியலுக்கு வருமாறு அழைத்தனர்.

அவர் ஆரம்பத்தில் இந்து மகாசபையில் இணைந்து பணியாற்றினார். அதை காந்திஜி வரவேற்று, மதன்மோகன் மாளவியாவுக்கு அப்புறம் இந்துக்களுக்குத் தலைமை தாங்கி நடத்த முகர்ஜி வந்திருப்பது நல்லது எனக் கூறினார். பின்னர் அவர் அகில இந்திய இந்து மகாசபைத் தலைவராகத் தேர்ந்தெடுக்கப்பட்டு நாடு முழுவதும் பிரயாணம் செய்தார். பின்னர் வங்காளத்தில் கூட்டணி ஆட்சி ஏற்பட்டபோது நிதி அமைச்சராகப் பணியாற்றி சமூக நல்லிணக்கத்துக்கு எடுத்துக்காட்டாக விளங்கினார்.

1940 களில் பல வங்காளப் பகுதிகளில் இந்துக்களுக்கு எதிராக வன்முறைகள் நடந்த போது பிற அரசியல் கட்சித் தலைவர்கள் எல்லாம் அங்கு செல்லத் தயங்கினர். முகர்ஜி அங்கெல்லாம் முதல் ஆளாகச் சென்று உண்மைகளை வெளிக்கொணர்ந்தார். 1946 ஆகஸ்டு மாதம் முஸ்லீம் லீக் கட்சி நேரடி நடவடிக்கை நாள் என அனுசரித்தது. அப்போது  கல்கத்தா பகுதிகளில் இந்துக்கள் குறி வைத்து தாக்கப்பட்டனர். ஆயிரத்துக்கு மேற்பட்டவர்கள்  கொல்லப்பட்டனர். நூற்றுக் கணக்கான குடும்பங்கள் வீடுகளை இழந்தன. பெண்கள் மானபங்கப்படுத்தப்பட்டனர். அங்கு முகர்ஜி பாதிக்கப்பட்ட மக்களுக்காகப் போராடினார்.

பின்னர் 1946ல் இந்திய அரசியல் நிர்ணய சபை உறுப்பினராகத் தேர்ந்தெடுக்கப்பட்டு பணியாற்றினார். 1947ல் சுதந்திரத்துக்குப் பின்னர் அமைந்த மந்திரி சபையில் இந்தியாவின் முதல் தொழில் துறை அமைச்சராகப் பொறுப்பேற்றார். அவர் காலத்தில் தான் 1948 ஆம் ஆண்டு இந்தியாவின் முதல் தொழில் கொள்கை வெளியிடப்பட்டது. சித்தரஞ்சன் தொழிற்சாலை உள்ளிட்ட பல பெரிய திட்டங்கள் கொண்டு வரப்பட்டன. தொழில்களுக்கு நிதி உதவி செய்யும் நோக்கில் இந்திய நிதி அமைப்பு துவங்கப்பட்டது. 

அந்தக் காலகட்டங்களில் பாகிஸ்தானில் இந்துக்களுக்கு இழைக்கப்படும் கொடுமைகளைத் தடுத்து நிறுத்தப் போதிய நடவடிக்கைகளை எடுக்குமாறு பிரதமர் நேருவுக்கு அவர் பலமுறை வேண்டுகோள் விடுத்தார். நேரு பாகிஸ்தான் பிரதமர் லியாகத் அலி கானுடன் ஒரு ஒப்பந்தம் மட்டுமே போட்டார். அது  போதுமானதல்ல என எதிர்ப்புத் தெரிவித்து அமைச்சரவையிலிருந்து பதவி விலகினார்.

காங்கிரஸ் கட்சியால் நாட்டு மக்களின் நலன்களைப் பாதுகாக்க முடியாது என அவர் உறுதியாக நம்பினார். நேருவின் போலி மதச்சார்பின்மை, வெளியுறவுக் கொள்கைகள் மூலம் நாட்டைச் சரியாக வ்ழி நடத்த முடியாது எனக் கருதினார்.  அதனால் காங்கிரஸ் கட்சிக்கு மாற்றாக, நமது நாட்டின் பண்பாட்டு அடிப்படையில் அமைந்த ஒரு தேசிய கட்சி தேவை எனக் கருதி, 1951 ஆம் வருடம் பாரதிய ஜன சங்க கட்சியைத் துவக்கினார்.

சுதந்திரத்துக்குப் பின்னர் 1952 ல் நடைபெற்ற முதல் பொதுத் தேர்தலில் பாரதிய ஜன சங்க கட்சி சார்பில் டாக்டர் முகர்ஜி உள்ளிட்ட மூன்று பேர் வெற்றி பெற்றனர். அப்போது பாராளுமன்றத்தில் பிற சிறிய கட்சிகளைச் சேர்த்துக் கொண்டு நேருவின் தவறான கொள்கைகளைக் கடுமையாக எதிர்த்தார்.  

முன்னதாக பிரதமர் நேரு ஜம்மு – காஷ்மீர் மாநிலத்துக்கு 370 மற்றும் 35 ஏ பிரிவுகள் மூலம் சிறப்பு அங்கீகாரம் கொடுக்க முடிவு செய்த போது டாக்டர் முகர்ஜி மற்றும் டாக்டர் அம்பேத்கர் உள்ளிட்டோர் தீவிரமாஎதிர்ப்பு தெரிவித்தனர். ஆனால் நேரு அவர்களின் கருத்துக்களை எல்லாம் புறந்தள்ளி அவற்றைச் சட்டமாக்கினார். ஒரே நாட்டில் எப்படி இரண்டு கொடிகள், இரண்டு வித சட்டங்கள், இரண்டு பிரதமர்கள் இருக்க முடியும் என முகர்ஜி கேள்வி எழுப்பினார்.

மேலும் அந்த மாநிலத்துக்குள் நுழைவதற்கு மற்ற மாநில மக்கள் அனுமதிச் சீட்டு வாங்க வேண்டும் என நடைமுறை வந்தது. எனவே அவற்றுக்கெல்லாம் எதிர்ப்புத் தெரிவித்து 1953 ஆம் ஆண்டு மே மாதம் அனுமதிச் சீட்டுப் பெறாமல் அவர் ஜம்மு- காஷ்மீர் மாநிலத்துக்குள் சென்றார். அங்கு கைது செய்யப்பட்டு வீட்டுக் காவல் சிறையில் வைக்கப்பட்டார். முறையான சிகிச்சைகளின்றி, சில வாரங்களில் உடல்நிலை மோசமாகி ஜூன் 23 ஆம் தேதி காலமானார்.

முகர்ஜியின் தாயார் உள்ளிட்ட பல முக்கிய தலைவர்கள் அவரது மரணம் குறித்து உரிய விசாரணை செய்ய வேண்டும் எனப் பிரதமருக்கு வேண்டுகோள் விடுத்தனர். ஆனால் நேரு அதற்குச் செவி சாய்க்கவில்லை.

ஐம்பத்து இரண்டு வருடங்கள் கூட நிரம்பும் முன்னரே உயிரிழந்த டாக்டர் முகர்ஜியின் வாழ்க்கை பன்முகச் சாதனைகள் நிறைந்தது. சட்டம், கல்வி, பொது வாழ்க்கை, அரசியல் என வெவ்வேறு துறைகளிலும் அவர் தனது அடையாளங்களைப் பதித்துள்ளார். ஆனால் அவை எல்லாவற்றிலும் ஒரு அளப்பரிய தேசபக்தராக அவர் ஆற்றிய மூன்று முக்கிய பணிகள் என்றும் நிலைத்து நிற்பவை.

முதலாவது ஜம்மு – காஷ்மீர் மாநிலம் நமது தேசத்துடன் முழுமையாக ஒருங்கிணைய அவர் தொடங்கி வைத்த  நடவடிக்கைகள். நேரு அரசு அந்த ஒரு மாநிலத்தை மட்டும் மிக வித்தியாசமானதாகப் பாவித்து அதற்கு சிறப்புச் சலுகைகளை வழங்கியது. அது பிரிவினைக்கு வழி வகுக்கும் என உணர்ந்து  ஆட்சியாளர்களை எதிர்த்து போராட்டத்தில் இறங்கினார்.

அதன் விளைவாக தன்னுடைய உயிரையே காணிக்கையாக்கினார். அப்போது அவர் தொடங்கி வைத்த முயற்சி, 2019 ஆவது வருடம் பிரதமர் மோடி தலைமையிலான மத்திய அரசு சம்பந்தப்பட்ட பிரிவுகளை நீக்கியதன் மூலம் முழுமையடைந்தது. அதன் மூலம் டாக்டர் முகர்ஜி மட்டுமன்றி, சர்தார் பட்டேல், அண்ணல் அம்பேத்கர் உள்ளிட்ட பலரின் கனவுகளும் நனவாகின. இப்போது  ஜம்மு- காஷ்மீரில் தீவிரவாதம் குறைந்து, வளர்ச்சி அதிகரித்து மக்கள் அமைதியாக வாழத் துவங்கி விட்டனர்.

இரண்டாவதாக அவரது முக்கிய பங்களிப்பு இன்றைய மேற்கு வங்க மாநிலம் பற்றியது. 1940 களில் பிரிவினையின் போது, முஸ்லீம் லீக் கட்சி மேற்கு வங்காளப் பகுதியையும் பாகிஸ்தானுடன் ( தற்போதைய வங்காள தேசம்) இணைக்க முயற்சிகளை மேற்கொண்டது. அந்தப் பகுதி இந்தியாவுடன் தான் இருக்க வேண்டும் என்ற கோரிக்கையுடன் முகர்ஜி மக்களைத் திரட்டிப் போராடினார். ஏனெனில் தற்போதைய வங்காள தேச நாடு உள்ளிட்ட அந்தப் பகுதிகளில் ஏற்கெனவே இந்துக்கள் பெரும் துன்பங்களை எதிர்கொண்டு சிரமங்களுடன் வாழ்ந்து வந்தனர். எனவே மேற்கு வங்கப் பகுதியும் இணைக்கப்பட்டால் இந்துக்கள் அங்கு அமைதியாக வாழ முடியாது என்பதை அவர் உணர்ந்திருந்தார்.

அவர் எடுத்த நடவடிக்கைகளால் தான் கல்கத்தா உள்ளிட்ட மேற்கு வங்காளம் இன்று நம்முடன் உள்ளது. இல்லையெனில் பகவான் ராமகிருஷ்ணர், சுவாமி விவேகானந்தர் உள்ளிட்ட பல மாமனிதர்கள் தோன்றி வளர்ந்த அந்தப் பகுதி நம்மை விட்டுப் போயிருக்கும்.

முகர்ஜியின் மூன்றாவது முக்கிய பங்களிப்பு அவர் பாரதிய ஜனசங்கத்தை நிறுவியது. நேருவின் போக்கும் காங்கிரஸ் கட்சியின் அணுகுமுறையும் நாட்டுக்குப் பொருந்தாது என்பதை அப்போதே  உணர்ந்தார். அது நாட்டின் எதிர்காலத்துக்கு நல்லதல்ல எனத் தீர்மானித்தார். எனவே அதற்கு மாற்றாக நமது தேசியக் கூறுகளின் அடிப்படையிலமைந்த கட்சி அவசியம் எனத் தீர்மானித்து  தேசபக்தர்களுடன் ஆலோசித்து பாரதிய ஜன சங்கத்தைத் துவக்கினார்.

1952 ஆம் வருடம் நடந்த முதல் பொதுத் தேர்தலிலேயே பாரதிய ஜனசங்கம் சார்பில் முகர்ஜி உட்பட மூன்று பேர் வெற்றி பெற்று பாராளுமன்றம் சென்றனர். அப்போது முதல் கட்சியின் அகில பாரத பொதுச்செயலாளராக இருந்த தீனதயாள் உபாத்யாய அவர்களின் அமைப்பு பணி மற்றும் திறமை வாய்ந்த பொறுப்பாளர்களின் அர்ப்பணிப்பு ஆகியவற்றால் 1967 ஆம் வருடம் நடந்த சட்டமன்றத் தேர்தலிலேயே மாநிலங்களில் ஜன சங்க கூட்டணி ஆட்சியைப் பிடித்தது. 

இந்திரா காந்தியின் அடக்குமுறைகளை எதிர்த்து உருவாக்கப்பட்ட ஜனதா கட்சியில் ஜனசங்கம் முக்கிய பங்கு வகித்தது. 1977ல் பொதுத் தேர்தலில் ஜனதா கட்சி பாராளுமன்றத் தேர்தலில் வெற்றி பெற்று மத்தியில் சிறப்பாக ஆட்சி நடத்தியது. பின்னர் 1980 ஆம் வருடம் ஜனசங்கம் பாரதிய ஜனதா கட்சியாக மாற்றம் பெற்றது. அதன்பின் கட்சி தொடர்ந்து வளர்ச்சி பெற்று பல மாநிலங்களில் தனியாக ஆட்சியைப் பிடித்தது. 1996 ஆம் வருடம் தொடங்கி 2004 வரை மத்தியில் வாஜ்பாய் அவர்கள் தலைமையில் மூன்று முறை பாஜக கூட்டணி ஆட்சியில் அமர்ந்தது.

2014 ஆம் வருடம் முதன் முதலாக பாஜக தனிப் பெரும்பான்மையுடன் வெற்றி பெற்றது. நரேந்திர மோடி அவர்கள் பிரதமராகத் தேர்ந்தெடுக்கப்பட்டார். தொடர்ந்து மூன்றாவது முறையாகப் பிரதமராகி கடந்த பன்னிரெண்டு வருடங்களுக்கு மேலாக மோடி தலைமையிலான அரசு ஆட்சி செய்து வருகிறது. நாடு பல்வேறு துறைகளிலும் வேகமாக முன்னேறி, உலக அளவில் தனது முத்திரைகளைப் பதித்து வருகிறது.

முகர்ஜி அவர்கள் விரும்பியபடி தேச நலன், கலாசாரம், பாதுகாப்பு, அனைவருக்குமான வளர்ச்சி ஆகிய கொள்கைகளை மையமாகக் கொண்டு வளர்ந்து இன்று உலகின் மிகப்பெரிய ஜனநாயக கட்சியாக பாரதிய ஜனதா உருவெடுத்துள்ளது. நாட்டிலுள்ள இருபத்தி இரண்டு மாநிலங்களில் தனியாகவும், கூட்டணியாகவும் ஆட்சி செய்து வருகின்றது. அதனால் நாடு முழுவதும் கலாசார மறுமலர்ச்சியும், அனைவரின் வாழ்விலும் முன்னேற்றமும், தேச நோக்கும் ஏற்பட்டு வருகின்றன. அதனால் வளர்ச்சியடைந்த பாரதம் என்னும் இலக்கை நோக்கி நாடு சென்று கொண்டுள்ளது.  

அதற்கெல்லாம் டாக்டர் முகர்ஜி போட்ட அடித்தளங்கள்  காரணமாக அமைந்துள்ளன. அவர் தன்னுடைய வாழ்க்கையையே தேசத்துக்காக ஆகுதியாக்கிக் கொண்ட ஒரு மாமனிதர். வரலாற்றில் நிலைத்து நிற்கும் ஒரு மகத்தான தேச பக்தர்.

( தினமலர், ஜூலை 2026 )

சனாதனமே கல்வி கொடுத்து நாட்டை உயர்த்தி வைத்தது

 

சனாதன தர்மம் என்னவென்று சரியாகப் புரிந்து கொள்ளாமலேயே, தங்களின் குறுகிய நோக்கங்களுக்காக அதைத் திரித்துப் பேசுவது என்பது தமிழகத்தில் வாடிக்கையாகி விட்டது. அதிலும் சமுதாயத்தில் நிலவி வரும் பிரச்சினைகள் மற்றும் குறைபாடுகளுக்குக் காரணமே சனாதன தர்மம் அல்லது இந்து மதம் எனச் சொல்வது அதிகரித்து வருகிறது. முன்னர் மாணவர்கள் பங்கு பெற்ற நிகழ்ச்சியில் நடிகரும் பாராளுமன்ற உறுப்பினருமான கமலஹாசன் சனாதனச் சங்கிலிகளை, சர்வாதிகாரச் சங்கிலிகளை நொறுக்கித் தள்ளக்கூடிய ஒரே ஆயுதம் கல்விதான்     எனப் பேசினார்.

இந்தியாவுக்கு கல்வியைக் கொண்டு வந்ததே ஆங்கிலேயர்கள் தான்அதிலும் கிறிஸ்துவர்கள் தான்-  என தமிழக சபாநாயகர் உள்ளிட்டோர் பேசி வருகின்றனர். பல காலமாகவே நமது பண்டைய வாழ்க்கை முறையை இழிவு படுத்தும் நோக்கில் ஆதாரமின்றி பொது வெளியில் பேச்சுக்கள் வெளி வந்து கொண்டுள்ளன. ஆயிரக்கணக்கான ஆண்டுகள் பாரம்பரியம் கொண்ட நமது   பண்பாட்டில் அவ்வப்போது தவறுகள் ஏற்பட்டிருக்கலாம். ஆனால் அவை நமது தர்மத்தால் ஏற்றுக்கொள்ளப்பட்டவையல்ல. மேலும் தவறுகளைச் சரி செய்யும் நடவடிக்கைகளும் உள்ளிருந்தே மேற்கொள்ளப்பட்டு வந்துள்ளன. 

அவர்கள் கூற்றுப்படி ஆங்கிலேயர் இங்கு வரும் வரை நம் நாட்டில் கல்வி என்பது இல்லை. அப்படியே ஏதாவது கொஞ்சம் இருந்திருந்தாலும், அது ஒரு உயர் ஜாதியினருக்கு மட்டுமே உரித்தானதாக இருந்து வந்துள்ளது. அதே சமயம் இங்கிலாந்தில் அப்போதே கல்வி முறை உயர்வாக இருந்து அவர்கள் அறிவியல் உள்ளிட்ட பல துறைகளிலும் சிறந்து விளங்கி வந்தனர் என்பதும் கருத்தாகிறது. எனவே ஆங்கிலேயர்கள் வந்த பின்னரே கல்வி அனைவருக்கும் கிடைத்தது என்பதைத் திராவிடவாதிகள் தொடர்ந்து சொல்லி வருகின்றனர். அதனால் படித்தவர்கள் கூட அதை நம்பி வருகின்றனர்.

ஆனால் உண்மை என்ன? முதலில் பண்டைய காலத்துடன் தொடர்பான முக்கிய  விபரங்களைப் பார்ப்போம். நமது தேசத்தின் தொன்மையான படைப்பாக வேதங்கள் உள்ளன. அவற்றின் தொடக்கம் 3500 வருடங்களுக்கு முந்தையதாக இருக்கும் என கணிக்கப்படுகிறது. தொடர்ந்து வந்த காலங்களில் ராமாயணம், மகாபாரதம் உள்ளிட்ட பல இலக்கியங்கள் இயற்றப்பட்டுள்ளன. அவை இன்று உலகில் மிகவும் மதிக்கத்தக்க படைப்புகளாக அங்கீகரிக்கப்படுகின்றன.

சுமார் 2700 வருடங்களுக்கு முன்னரே இங்கு தட்சசீலாவில் உலகின் முதல் பல்கலைக்கழகம் ஆரம்பிக்கப்பட்டுள்ளது. அதற்கு பல நாடுகளிலிமிருந்து வந்து படித்துச் சென்றுள்ளனர். தொடர்ந்து வந்த நூற்றாண்டுகளில் நாட்டின் பல பகுதிகளிலும் பல்கலைக்கழகங்கள் அமைக்கப்பட்டு செயல்பட்டு வந்துள்ளன. உலகின் முதல் அரசியல் மற்றும் பொருளாதார புத்தகமான அர்த்த சாஸ்திரம் 2300 வருடங்களுக்கு முன்பே எழுதப்பட்டுள்ளது. 2600 வருடங்களுக்கு முன்பே எழுதப்பட்ட சுஸ்சுருத சம்ஹிதம் உலகில் முதல் அறுவை சிகிச்சை புத்தகமாக மதிக்கப்படுகிறது.

தமிழில் திருக்குறள் சுமார் 2100 வருங்களுக்கு முன்னரே இயற்றப்பட்டுள்ளது. சங்க காலத்தில் இங்கிருந்து பல்வேறு உயர்தரமான படைப்புக்கள் வெளி வந்துள்ளன. வேதங்களுக்குப் பல பெண் படைப்பாளிகள் பங்களித்துள்ளனர். சங்க காலத்தில் இருபதுக்கு மேற்பட்ட பெண் புலவர்கள் படைப்புகளை நல்கியுள்ளனர். அவையெல்லாம் தரமான கல்வியும், நிபுணத்துவமும் இல்லாமல் சாத்தியமாகி இருக்குமா?

இனி ஆங்கிலேயர் இங்கு நுழைந்த பின்னர் 1835 ஆம் வருடத்தில் மெக்காலே கல்வி முறையைத் திணிக்கும் முன்பு நமது நாட்டிலும், தமிழ் நிலத்திலும் பாரம்பரியமாக இருந்து வந்த கல்வி முறை பற்றிப் பார்க்கலாம். அது பற்றிய விபரங்கள் ஆங்கிலேய ஆட்சியாளர்களே நாட்டின் பல மாவட்டங்களிலும் அதிகாரப்பூர்வமாக கணக்கெடுப்புகள் நடத்தி சேகரித்தவை. சுதந்திரத்துக்குப் பின்னர் காந்தியவாதியான தரம்பால் இங்கிலாந்து சென்று அவற்றை ஆங்கிலேய ஆவணங்களிலிருந்து எடுத்தார். அவற்றில் சில இங்கும் அரசு ஆவணங்களாக உள்ளன. பின்னர் அவை அழகிய மரம்என்ற பெயரில் புத்தகமாக வெளிவந்தது.    

அதற்குக் காரணம் மகாத்மா காந்தி அவர்கள் 1931ல் லண்டனில் ஒரு நிகழ்ச்சியில் ஆங்கிலேயர்கள் இந்தியா வந்த பின்னர் நமது பாரம்பரியக் கல்வி முறையைப் பற்றித் தெரிந்து கொள்ள மண்ணைத் தோண்டி வேர்களைப் பார்த்ததாகவும், பின்னர் அதை அப்படியே விட்டுவிட்டதாகவும் கூறினார். அதனால் அழகிய மரம் போல இருந்து வந்த பாரம்பரிய இந்தியக் கல்வி முறை அழிந்து விட்டதாகக் குற்றம் சாட்டினார். மேலும் 1930 களுக்கு முந்தைய ஐம்பது வருடங்களுக்கு முன் அப்போது இருந்தை விடக் கல்வி நன்றாக இருந்ததாகக் கூறினார்.  

அப்போது அவரிடத்தில் அதற்கான புள்ளி விபரங்கள் இல்லை. ஆனாலும் அவர் தான் சொன்ன விசயம் குறித்துப் பேசுவதற்குத் தனக்கு எந்தவிதப் பயமுமில்லை எனக் கூறினார்.  உண்மையில் அப்போதே அந்தக் காலத்திய இந்தியக் கல்வி பற்றிய விபரங்கள் ஆங்கிலேயர் ஆவணங்களில் இருந்தன. ஆனால் ஆட்சியாளர்கள் அவற்றை வெளியிடாமல் மறைத்து வைத்திருந்தனர். அவர்களின் போலி வாதங்களையே சுதந்திரம் பெற்று எழுபத்தெட்டு வருடங்களுக்கு மேலாகியும், தமிழக ஆட்சியாளர்கள் மற்றும் சில இயக்கங்களைச் சேர்ந்தவர்கள் பேசி வருவது உண்மைக்குப் புறம்பானது. .  

தற்போதைய தமிழகம் உள்ளிட்ட மெட்ராஸ் பிரசிடெசின்சி பகுதிகளில் அப்போது ஆளுநராக இருந்த தாமஸ் மன்ரோ 1822-25 கால கட்டத்தில்  கணக்கெடுப்புகளை நடத்தினார்.  அதே போல 1820 களில் பாம்பே பிரசிடென்சி பகுதிகளில் அங்கிருந்த ஆட்சியாளர்கள் கணக்கெடுப்புகளை நடத்தினர். ஆட்சியாளர்களின் ஆதரவுடன் வில்லியம் ஆடம்ஸ் என்னும் பாதிரியார் அப்போதைய வங்காள மற்றும் பீகார் பகுதிகளில் 1835-38 கால கட்டத்தில் கணக்கெடுப்பு நடத்தினார். பஞ்சாப் பகுதிகளில் பிரிட்டிஷ் அதிகாரி லெய்ட்னர் தலைமையில் 1850 களில் இருந்த நிலை பற்றிக் கணக்கெடுப்புகள் நடத்தப்பட்டன. 

அந்தக் காலகட்டத்தில் பிரிட்டிஷ் ஆட்சியாளர்களின் மேலாதிக்க நடவடிக்கைகளால் இந்தியா கடுமையான பாதிப்புகளுக்கு ஆளாகி நிலைமை மிக மோசமாகச் சென்று கொண்டிருந்தது. ஆனாலும் நாட்டின் பல பகுதிகளிலும் கல்வி முறை மிகச்சிறப்பாக இருந்து வந்ததை அவர்களின் கணக்கெடுப்புகள் எடுத்துக் காட்டின. மெட்ராஸ் பிரசிடென்சியில் ஒவ்வொரு கிராமத்துக்கும் ஒரு  பள்ளிக்கூடம் இருந்து வந்தது எனத் தாமஸ் மன்ரோ கூறினார். 1830 களில் வங்காள - பீகார் பகுதிகளில் பள்ளிக் கல்வி பாதிப்புகளுக்குள்ளான பின்னரும் ஒரு லட்சம் பள்ளிக்கூடங்கள் இருந்து வந்ததாக ஆடம்ஸ் அறிக்கைகள் கூறின. பாம்பே பிரசிடென்சி பகுதிகளிலும் அதே மாதிரி நிலைமை வெளிப்பட்டது. எனவே ஆங்கிலேயர்களால் நாட்டின் பல பகுதிகளிலும் நடத்தப்பட்ட கணக்கெடுப்புகள் அனைத்துமே இங்கு கல்வி பரவலாக இருந்து வந்ததாகச் சொல்லியுள்ளன.  

அதே சமயம் இங்கிலாந்தில் 1800 வரை கல்வி பரவலாக இல்லை என அவர்களே குறிப்பிட்டுள்ளனர். அங்கு போடப்பட்ட பதினாறாம் நூற்றாண்டுச் சட்டம் வசதி படைத்தவர் மற்றும் உயர் குடியினருக்கு மட்டுமே கல்வி கொடுக்கப்படவேண்டும் எனவும் மற்றவர் குழந்தைகள் அவர்களின் குடும்பத் தொழில்களைச் செய்ய வேண்டுமெனவும் சொல்லியிருந்தது.  பதினெட்டாம் நூற்றாண்டின் இறுதியில் தான் மதக்கல்வி அவசியம் எனக் கருதி ஏழைக்குழந்தைகள் பைபிள் படிக்க ஞாயிற்றுக்கிழமை பள்ளிகள் மூலம் ஏற்பாடு செய்யப்பட்டது. பெரிய பள்ளிகளிலும் கூட பத்தொன்பதாம் நூற்றாண்டின் மையக்காலம் வரை எழுதப் படிக்கத் தவிர மதநூல் போதனை மற்றும் கணக்கு  பாடம் மட்டுமே சொல்லிக் கொடுக்கட்டுள்ளது.

பொதுவாகவே பலரும் இந்தியாவில் கல்வி உயர்சாதிப் பிரிவினருக்கு மட்டுமே கல்வி கிடைத்து வந்துள்ளது என நம்பி வருகிறோம். ஆனால் உண்மையில் கல்வி பரவலாக அனைத்து சாதியினர் மற்றும் மதத்தினருக்கும் கிடைத்து வந்ததாக கணக்கெடுப்புகள் தெரிவிக்கின்றன. மெட்ராஸ் பிரசிடென்சி மாவட்டங்களில்  உயர்சாதிகள்  இல்லாத மற்ற சாதி குடும்பங்களைச் சேர்ந்த மாணவர்கள் எண்பது விழுக்காட்டுக்கு மேல் பள்ளிகளில் படித்து வந்துள்ளனர். தென்னாற்காடு மாவட்ட பள்ளிகளில் உயர்சாதிக் குழந்தைகள் 13 விழுக்காடு மட்டுமே. அதே சமயம் பிற சாதிக் குழந்தைகள் 70 முதல் 84 விழுக்காடு வரை இருந்துள்ளனர். மலபார் பகுதிகளில் உயர்சாதியினர் 20 விழுக்காட்டுக்கு கீழே.  சூத்திரர் உள்ளிட்ட பிற சாதியினர் 54 விழுக்காடு. இஸ்லாமியக் குழந்தைகள் 27 விழுக்காடு. மெட்ராஸ் பகுதியில் இஸ்லாமியர் மூன்று முதல் பத்து விழுக்காடு வரை.

மேலும் தங்களின் வீடுகளிலேயே கல்வி கொடுக்கப்பட்டு வந்த குழந்தைகளின் எண்ணிக்கை பள்ளிகளில் படிப்பவர்களை விடப் பல மடங்கு அதிகமாக இருந்து வந்துள்ளனர். சென்னைப்பகுதியில் வீடுகளில் படித்து வந்தவர்கள் சுமார் ஐந்து மடங்கு அதிகமாக இருந்துள்ளனர். அவர்களில் சூத்திர வகுப்புகளைச் சேர்ந்த குழந்தைகள் 29 விழுக்காடு..

மேலும் பெண்களுக்கும் கல்வி கொடுக்கப்பட்டு வந்துள்ளது. அவர்களில் அதிகம் பேர் வீடுகளில் படித்து வந்தாலும், பள்ளிகளுச் சென்றும் படித்து வந்துள்ளனர். உதாரணமாக விசாகப்பட்டினம் பகுதியில் பள்ளிகளில் படித்துவந்த பெண் குழந்தைகள் 27 விழுக்காடு. மலபார் பகுதி பள்ளிகளில் படித்து வந்த இஸ்லாமிய சமூகப் பெண்கள் 3.5 விழுக்காடு. உயர்சாதியில்லாத பிற சாதிப் பெண்கள் 18 விழுக்காட்டுக்கு மேல்.

பள்ளிக்கல்வி தினமும் அதிகாலை தொடங்கி சுரியன் மறையும் நேரம் வரை சராசரியாக எட்டு வருட காலம் இருந்துள்ளது. பள்ளிகளில் இலக்கணம், இலக்கியம், கணிதம் தவிர சட்டம், மருத்துவம், வானவியல், தர்க்கம் உள்ளிட்ட பாடங்களும் போதிக்கப்பட்டு வந்துள்ளன. அவற்றுடன் தொழில் கல்வியும் கொடுக்கப்பட்டுள்ளது. மெட்ராஸ் பிரசிடென்சி பள்ளிகளில் ஜவுளி சம்பந்தப்பட்ட தொழில்கள், உலோகவியல், கட்டிடம் கட்டுதல், குளங்கள் வெட்டுதல், உப்பு மற்றும் எண்ணை தயாரிப்பு, மீன் பிடிப்பு, தையல், தச்சு உள்ளிட்ட வெவ்வேறு தொழில்களும் கொடுக்கப்பட்டு வந்துள்ளன.

ஆங்கிலேயர் கணக்கெடுப்புகளில் உயர்கல்வி பற்றிய சில விபரங்களும் இடம் பெற்றுள்ளன. அப்போதைய உயர்கல்வி நிறுவனங்களை இப்போதைய கல்லூரிகள் எனக் கருதலாம் என தரம்பால் கூறுகிறார். மெட்ராஸ் பிரசிடென்சிக்குட்பட்ட பகுதிகளில் ராஜமுந்திரி -279; கோவை -173; தஞ்சாவூர் -109; சேலம் -53; செங்கல்பட்டு -51 என மாவட்ட வாரியாக அவை செயல்பட்டு வந்துள்ளன. வங்காளம்-பீகார் பகுதிகளில் சுமார் 1800 நிறுவனங்கள் உயர்கல்வி கொடுத்து வந்ததாக தெரிகிறது.

பண்டைய இந்தியாவிலும், தமிழகத்திலும் செயல்பட்டு வந்த கல்வி நிறுவனங்கள் மற்றும் மாணவர்களின் எண்ணிக்கை, பின்னணி பற்றியெல்லாம் இப்போது நமக்குத் தெரியாது. ஆனால் பதினெட்டாம் நூற்றாண்டில் நிலவிய கல்வி பற்றிய முக்கிய விபரங்களை ஆங்கிலேயர்கள் ஆட்சிக்காலத்தில் நடத்திய கணக்கெடுப்புகளே  சொல்லியுள்ளன. அவற்றின் மூலம் தமிழ் நிலம் உள்ளிட்ட இந்திய தேசத்தில் கல்வி அனைவருக்கும் பரவலாக இருந்து என்பதும் சாதிகள் போன்ற வித்தியாசங்களின்றி அனைவருக்கும் கிடைத்து வந்ததும் தெரிகிறது.

எனவே  ஆங்கிலேயர்தான் இங்கு வந்து கல்வி கொடுத்தனர் என்பது பொய்யாகிறது. மேலும் மெக்காலே கல்வி அறிமுகப்படுத்தப்பட்ட பின்னர், நமது பாரம்பரியக் கல்வி முறை சிதைக்கப்பட்டது. கல்வி கொடுப்பதற்கான நிதி ஆதாரங்கள் தடுக்கப்பட்டு, இலவச கல்வி முறை நிறுத்தப்பட்டது. அதனால் கல்வி நிறுவனங்கள் மற்றும் மாணவர்களின் எண்ணிக்கைகள் வேகமாகக் குறைந்து போயின. 1891 ஆம் வருடம் இந்தியாவில் மாணவர்களின் எண்ணிக்கை ஒன்பது விழுக்காடாக குறைந்து போயிருந்ததாக அமெரிக்க அறிஞர் வில் துரந்த் குறிப்பிடுகிறார்.

ஆகையால் அனைவருக்குமாக இருந்து சிறப்பாக விளங்கி வந்த நமது கல்விமுறை அழிந்து உலகின் கல்வி மையமாகப் பல நூறாண்டுகள் விளங்கி வந்த இந்தியா, தனது பெருமைகளை இழந்தது. பின் வந்த காலங்களில் கல்வி பரவலாகக் கிடைக்க பல அமைப்புகளும், தனியாரும் நடவடிக்கைகளை எடுத்து வந்தன. சுதந்திரத்துக்குப் பின்னர் மத்திய, மாநில அரசுகள் மட்டுமன்றி பிறரும் அனைவருக்கும் கல்வி கிடைக்க உழைத்து வருகின்றனர். அதனால் பெரிய முன்னேற்றம் ஏற்பட்டு வருகிறது.