தவறான சிந்தனைகளை மாற்றிய தரம்பால்

 

இந்திய நாடு தொன்மையானது. நீண்ட நெடிய பண்பாட்டைக் கொண்டது. பல நூறாண்டுகளாக கல்வி, தொழில், விவசாயம், மருத்துவம், தொழில் நுட்பம் என வெவ்வேறு துறைகளிலும் முன்னோடியாகவும் உலகின் பொருளாதார சக்தியாகவும் விளங்கி வந்தது. ஆனால் அந்த  உண்மைகள் எல்லாம் தொடர்ந்து மறைக்கப்பட்டு வந்திருக்கின்றன.

2001 ஆம் வருடம் பாரீஸ் நகரில் அமைந்துள்ள பணக்கார நாடுகளுக்கான பொருளாதாரக் கூட்டுறவு மற்றும் முன்னேற்றத்துக்கான அமைப்பு ஒரு   ஆய்வறிக்கையை வெளியிட்டது. அது பொது யுக தொடக்க காலத்தில் உலகப் பொருளாதாரத்தில் முதல் இடத்தில் இந்தியா இருந்து வந்ததையும்,  தொடர்ந்து பதினெட்டாம் நூற்றாண்டு வரை ஒரு பெரும் சக்தியாக விளங்கி வந்ததையும் எடுத்துக் கூறியது. அவ்வறிக்கை வெளி வரும் வரை இந்தியா, ஏழை நாடாகவும், மேற்கத்திய நாடுகள் செழிப்புடன் இருந்து வந்தன எனவுமே சித்தரிக்கப்பட்டு வந்தன.

அந்த வகையில் நமது தேசம் பற்றிய மறைக்கப்பட்ட அடிப்படையான பல உண்மைகளை வெளிக் கொணர்ந்தவர் காந்தியவாதி திரு. தரம்பால் அவர்கள். சிறந்த வரலாற்றாசிரியர் மற்றும் தேசிய சிந்தனையாளர். அவர் நூறாண்டுகளுக்கு முன்னால் 1922 ஆம் வருடம் இன்றைய உத்தரபிரதேச மாநிலத்தில் பிறந்தார். காந்திஜியின் வெள்ளையனே வெளியேறு  அறைகூவலை ஏற்று   கல்லூரிப் படிப்பைப் பாதியில் துறந்து சுதந்திரப் போராட்டத்தில் குதித்தார்.

அவரது ஆரம்ப கால செயல்பாடுகள் கிராம முன்னேற்றம் மற்றும் பஞ்சாயத்துக்கள் பற்றியதாக இருந்தன. அந்த நோக்கில் காந்திஜியின் சீடரான மீராபென் அம்மையாருடன் இணைந்து பணியாற்றினார். பின்னர் ஜெயபிரகாஷ் நாராயணன் அவர்களுடன் நெருக்கமாக இருந்து செயல்பட்டார். அதன் பின் அகில இந்திய பஞ்சாயத்து அமைப்பின் கல்வி மற்றும் ஆராய்ச்சி இயக்குநராகச் செயல்பட்டு வந்தார்.

பின்னர் அவர் செய்த பணிதான் நமது தேசம்  பற்றிய காலனி ஆதிக்க காலப் பொய்கள் பலவற்றைத் தகர்த்தெறிந்தது.  1966 முதல் சுமார் இருபது ஆண்டுகள் ஆங்கிலேயர்கள் பிரிட்டனில் எடுத்து வைத்திருந்த இந்தியா  பற்றிய  ஆவணங்களைக் கண்டறிந்து ஆய்வுகளை மேற்கொண்டார். அவை ஆங்கிலேயர்கள் இந்தியா வந்த பின்னர் இங்கு நிலவி வந்த பாரம்பரிய கல்வி முறை, கலாசாரம், சமூகங்கள், அறிவியல், மருத்துவம், தொழில் நுட்பம், பஞ்சாயத்து அமைப்புகள், வாழ்க்கை முறைகள் உள்ளிட்ட விசயங்களைப் பற்றியது.

தொடர்ந்து அந்தக் குறிப்புகளை வைத்துப் பல புத்தகங்கள் மற்றும் கட்டுரைகளை எழுதினார். சொற்பொழிவுகளை மேற்கொண்டார். அவரது புத்தகங்களில் பதினெட்டாம் நூற்றாண்டில் இந்திய அறிவியல் மற்றும் தொழில் நுட்பம்சமகால ஐரோப்பியர்களின் சில குறிப்புகள்” (1971), ”ஒத்துழையாமை இயக்கமும் இந்திய பாரம்பரியமும் - பத்தொன்பதாவது நூற்றாண்டின் ஆரம்ப காலத்திய சில  ஆவணங்களுடன்” (1971) மற்றும் அழகிய மரம்பதினெட்டாம் நூற்றாண்டில் இந்திய பாரம்பரியக் கல்வி” (1983)   உள்ளிட்ட பலவும் மிக முக்கியத்துவம் வாய்ந்தவை.

ஆங்கிலேயர் இங்கு வருவதற்கு முன்பு தொட்டு இருந்து வந்த அரசியல், நிர்வாக அமைப்புகள், சமூகங்களின் சிந்தனா முறைகள் மற்றும் போக்குகள் எனப் பல விசயங்கள் குறித்தும் எழுதியுள்ளார். அவர் ஆய்வுகளில் தமிழ்நாடு தொடர்பான விசயங்கள் நிறைய உள்ளன. முந்தைய மெட்ராஸ் பகுதியின் பஞ்சாயத்து முறை குறித்து தனியாக புத்தகம் எழுதியுள்ளார். 2015 ஆம் வருடம் மத்திய அரசின் வெளியீட்டுத் துறை அவரது எழுத்துக்களைத் தொகுத்து புத்தகம் வெளியிட்டது.

அவரது எழுத்துக்கள் கல்வி, அறிவியல், தொழில் நுட்பம், மருத்துவம் உள்ளிட்ட பல துறைகளில் இந்தியா பாரம்பரியமாகச் சிறந்து விளங்கி வந்ததை எடுத்துச் சொல்கின்றன. மேலும் இந்திய சமூகங்கள் உயிர் துடிப்போடு இருந்து வந்தது எனவும், அவை நமது மக்களின் வாழ்க்கை முறையை ஒட்டி சமூக, அரசியல் மற்றும் நிர்வாக முறைகளை அமைத்துக் கொண்டு செயல்பட்டு வந்தன எனவும் எடுத்து வைக்கின்றன.    அவற்றுக்கெல்லாம் ஆதாரமாக நமது பண்பாடு  விளங்கி வந்தது  என்னும்  உண்மையையும் வெளிக் கொணர்கின்றன.   

உதாரணமாக அழகிய மரம் என்னும் புத்தகம் நமது நாட்டில் நிலவி வந்த கல்வி பற்றி தெளிவாக எடுத்துச் சொல்கிறது. ஆங்கிலேயர்கள் இங்கு வந்த பின்னர் 1820-30 கால கட்டங்களில் நமது நாட்டில் இருந்து வந்த கல்வி பற்றிய விபரங்களைக் கணக்கெடுத்தனர். அப்போது மெட்ராஸ் பிரசிடென்சியின் ஆளுநராக இருந்த தாமஸ் முன்ரோ, அவரது பகுதியில் ஒவ்வொரு கிராமத்துக்கும் ஒரு பள்ளிக்கூடம் செயல்பட்டு வந்ததாக குறிப்பிட்டுள்ளார்.. அப்போதைய வங்காளம் மற்றும் பீகார் பகுதிகளில் ஒவ்வொரு கிராமத்துக்கும் குறைந்தது ஒரு பள்ளி இருந்து வந்துள்ளது. 

அந்த சமயத்தில் நமது நாடு ஆங்கிலேயர்களின் கடும் பாதிப்புகளுக்கு  உள்ளாகி இருந்தது. அதனால் பல சிதைவுகள் ஏற்பட்டிருந்தன. ஆங்கிலேயர் வருவதற்கு முன்னரே தொடர்ந்து பல நூற்றாண்டுகளாக நாட்டின் பல பகுதிகளில் படையெடுப்புகள், கொள்ளை அடிப்புகள் மற்றும் சமூக மாற்றங்கள் எனப் பாதிப்புகள் ஏற்பட்டு வந்துள்ளன. ஆயினும் பதினெட்டாம் நூற்றாண்டின் தொடக்கத்தில் உலகின் மற்ற எந்த நாட்டையும் விட இந்தியாவில் மிக அதிகமாக எழுபத்தைந்து விழுக்காடு மக்கள் கல்வி அறிவு பெற்றிருந்தனர்.

வங்காளப் பகுதியில் மாவட்டத்துக்கு சராசரியாக நூறு என்னும் அளவில் மொத்தமாக 1800 உயர் கல்வி நிறுவனங்களானகல்லூரிகள்இருந்து வந்ததாக ஆங்கிலேய நிர்வாகம் தெரிவித்துள்ளது. மெட்ராஸ் பிரசிடென்சி பகுதியில் மாவட்ட வாரியாக அப்போது இருந்து வந்த கல்லூரிகளின் எண்ணிக்கை கொடுக்கப்பட்டுள்ளது. ராஜமுந்திரி-  279, கோயம்புத்தூர்- 173, குண்டூர் -171, தஞ்சாவூர் -109, நெல்லூர் -107, வட ஆற்காடு – 69, சேலம் -53, செங்கல்பட்டு – 51 என அந்தப் பட்டியல் தொடர்கிறது.

எனவே பள்ளிக் கல்வி மற்றும் உயர்கல்வி தமிழகம் உள்ளிட்ட நாட்டின் பல பகுதிகளிலும் பரவலாக இருந்து வந்துள்ளது  தெரிய வருகிறது. மேலும் கல்வி நிறுவனங்களில் படித்து வந்த மாணவர்கள் மற்றும் ஆசிரியர்கள் பல சமூகங்களையும் சேர்ந்தவர்களாக இருந்துள்ளனர்; அவர்களில் பிற்படுத்தப்பட்ட வகுப்பினர் அதிகமாக இருந்துள்ளனர். எனவே கல்வியில் குறிப்பிட்ட சமூகத்தினர் மட்டுமே சுதந்திரத்துக்கு முன்னர் இருந்து வந்தனர் என்னும் கருத்தும் பொய்யாகிறது.

அதே சமயம் பிரிட்டனில் பத்தொன்பதாம் நூற்றாண்டின் தொடக்கம் வரை பள்ளிக் கல்வி குழந்தைகளுக்கு எட்டாக் கனியாகவே இருந்து வந்துள்ளது. ஆங்கிலேயர்கள் இங்கு வந்து நமது கல்வி முறையைத் தெரிந்து கொண்ட பின்னரே அங்கு பரவலான கல்வி முறை அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. எனவே ஆங்கிலேயர்கள் தான் நமக்குக் கல்வியைக் கொடுத்தனர் என்பது முழுவதும் தவறு.

ஆனால் பல நூற்றாண்டுகளாக இங்கு வெற்றிகரமாக நிலவி வந்த கல்வி முறையை அழித்து 1835 ல் மெக்காலே கல்வி முறை திணிக்கப்பட்டது. அதனால் 1891 ஆம் வருடத்தில்  படித்தவர்கள் எண்ணிக்கை வெறும் ஆறு விழுக்காடாக குறைந்து போனது. அதனால் தான் 1931 ஆம் ஆண்டு வட்ட மேஜை மாநாட்டுக்கு காந்திஜி லண்டன் சென்ற போது அவர்களிடத்தில் அழகிய மரம் போல இருந்த எங்களின் இந்தியக் முறையை நீங்கள் அழித்து விட்டீர்கள் எனக் கூறினார்.

அதே போல பதினெட்டாம் நூற்றாண்டில் இந்திய அறிவியல் தொழில் நுட்பம் என்னும் அவரது புத்தகம் ஆங்கிலேயர்கள் இங்கு கண்ட அறிவியல், மருத்துவம் மற்றும் தொழில் நுட்ப விசயங்களை எடுத்துக் கூறுகிறது. நிலத்தை உழுவதற்கு நமது நாட்டு விவசாயிகள் பயன்படுத்தும் கலப்பையை அவர்கள் முதன் முதலாக நமது நாட்டில் தான் காண்கின்றனர். அது விவசாயத் துறையின் மிக முக்கியமான கண்டுபிடிப்பெனவும், இங்கு பழங்காலந் தொட்டு இருந்து வருவதாகவும் கண்டறிகின்றனர்.

ஆனால் அது இங்கிலாந்தில் முதல் முறையாக பதினெட்டாம் நூற்றாண்டில் தான் அறிமுகப்படுத்தப்பட்டு, பின்னர் பல ஆண்டுகள் கழித்து உபயோகத்துக்கு வருகிறது. அம்மை நோய்க்குத் தடுப்பூசி போடும் முறை இந்தியக் கிராமங்களில் குடும்ப பெண்மணிகள் அளவில் பரவலாக நிலவி வருவது அவர்களுக்கு இங்குதான் தெரிய வருகிறது.  அதுவே பின்னர் அவர்களின் கண்டுபிடிப்பாக மாறுகிறது.  

அதே போல நமது நாட்டில் சமூக அளவில் நிர்வாக முறைகள்  இயற்கையாக அமைந்து, மக்களுக்கிடையே வரும் பிரச்னைகள்  சுமுகமான முறையில் சரி செய்து கொள்ளும் வழி முறைகள் இருந்தது பற்றி எழுதியுள்ளார். மேலும் ஆட்சியாளர்கள் பொருந்தாத விசயத்தை செயல்முறைப் படுத்தும் போது அமைதியான முறையில் தங்களின்  எதிர்ப்பைத் தெரிவிக்க ஒத்துழையாமை என்னும் முறை நமது தேசத்தில் உருவாக்கப்பட்டு  கடைப்பிடிக்கப்பட்டு வந்தது உள்ளிட்ட பல விசயங்களை எடுத்துச் சொல்லியுள்ளார்.

இந்தியா கல்வி அறிவில்லாத, அறிவியல், தொழில் நுட்பம் தெரியாத ஏழை நாடு. இந்தியர்கள் கலாசாரம், பண்பாடு தெரியாதவர்கள். அவர்களுக்கு நிர்வாகம் செய்யத் தெரியாது எனப் பல பொய்களை காலனி ஆதிக்க சக்திகள் அப்போதிருந்து பரப்பி வந்தனர். சுதந்திரத்துக்குப் பின்னரும் அந்தக் கருத்துக்கள் இங்குள்ள பலரால் தொடர்ந்து சொல்லப்பட்டு வந்தது. அவற்றையெல்லாம் ஆங்கிலேயே ஆவணங்களை மையமாக வைத்தே தகர்த்தெரிந்தவர் தரம்பால்.

அவற்றின் மூலம் நமது தேசம் கல்வியில் உலக அளவில் உயர்ந்து விளங்கியது மட்டுமின்றி, அறிவியல், மருத்துவம், தொழில் நுட்பம் போன்ற துறைகளிலும் சிறந்து இருந்து வந்துள்ளது பற்றிய உண்மைகள் வெளிக் கொணரப்பட்டுள்ளன.  மேலும் நமது சமூகங்கள் தமக்குப் பொருத்தமான நிர்வாக முறைகளை அமைத்துக் கொண்டு நன்கு வாழ்ந்து வந்துள்ள விதம் மற்றும் உலக அளவில் இல்லாத பல சிறப்பான முறைகள் எல்லாம் இங்கு உருவாக்கப்பட்டு நடைமுறையில் இருந்துள்ள தன்மை ஆகியவையும் தெரிய வருகின்றன.

நமது தேசம் இயற்கையாகவே துடிப்பு மிக்கது. இந்தியச் சிந்தனை மற்றும் செயல்பாட்டு முறைகள் பலவும் தனித் தன்மை வாய்ந்தவை. அவை  நாம் அடிமைப்பட்டுக் கிடந்த காலத்தில், குறிப்பாக காலனி ஆட்சிக் காலத்தில், மழுங்கடிக்கப்பட்டன. சுதந்திரத்துக்குப் பின்னரும், நாம் சுய உணர்வுகளைப் பெருக்கி, தேசிய நோக்கில் சிந்தித்து செயல்படத் தவறி வருகிறோம். அந்தக் குறைகளை நாம் சரி செய்து கொண்டால், நமது தேசம் தனது இயற்கைத் தன்மையைப் பெற்று உயர் நிலையை அடைந்து விடும் என்பதுதான்   அவரது சிந்தனைகளின் மையக் கருத்தாக இருந்தது.

அதற்காகவே 2006 ஆம் வருடம் காலமாகும் வரை அவர் செயல்பட்டு வந்தார். 1980 களில் உள்ளூர் சார்ந்து சிந்திக்க கூடிய அறிவியல் நிபுணர்கள் ஒன்றிணைந்து சென்னையைத்  தலைமையிடமாக கொண்டு தேசப்பற்றுள்ள அறிவியல் தொழில் நுட்ப அமைப்பை நிறுவி செயல்பட்டு வந்தனர். அதற்கு அவர் வழிகாட்டியாக இருந்து வந்தார். பின்னர் இடதுசாரிகள் மட்டுமே அதிகம் இடம் பெற்று வந்த இந்திய வரலாற்று ஆராய்ச்சி நிறுவனத்தில் உறுப்பினராக இருந்து செயல்பட்டார். 2001 ஆம் வருடம் மத்திய அரசு அவரைத் தேசிய கால்நடை குழுத் தலைவராக நியமனம் செய்தது.

சுதந்திர இந்தியாவில் இருந்து வந்த நம்மை அடிமைப்படுத்தும் பல தவறான  சிந்தனைகளை மாற்றியதில் திரு தரம்பால் அவர்களின் பணி மகத்தானது. அவரது கருத்துக்கச்ள் அதிக அளவில் சிந்தனையாளர்கள் மற்றும் இளைஞர்களிடத்தில் சென்று சேர வேண்டும். அதன் மூலம் பாரம்பரிய மிக்க இந்த மண் சார்ந்த வகையில் சிந்தனைகளும் செயல்பாடுகளும் அமைய வேண்டும். அதனால் சுய தன்மை பெற்ற பெரும் சக்தியாக நமது தேசம் மீண்டும் உருவாக வேண்டும்.  அது மட்டுமே நாம் அந்த மகத்தான சிந்தனையாளருக்குச் செய்யும் காணிக்கையாக இருக்கும்.

( தினமணி, பிப்.19, 2022. பிப்ரவரி 19 திரு தரம்பால் அவர்களின் 101 ஆவது பிறந்த நாள் )

நீட் தேர்வு அவசியம்; சமூக நீதியைக் கொடுக்கிறது

 

2021 மே மாதம் திமுக அரசு ஆட்சிப் பொறுப்பேற்ற பின்னர்   செப்டம்பர் மாதம் நீட் தேர்விலிருந்து மாநிலத்துக்கு விலக்கு கோரி சட்டமன்றத்தில் மசோதா நிறைவேற்றப்பட்டு, தமிழக ஆளுநருக்கு சமர்ப்பிக்கப்பட்டது. அந்த மசோதாவை 2022 பிப்ரவரி 1 ஆம் தேதி ஆளுநர்  தமிழக அரசுக்குத் திருப்பி அனுப்பினார்.

அப்போது மசோதாவுக்குக் காரணமான நீதிபதி ராஜன் குழுவின் அறிக்கை அடிப்படையில்லாத யூகங்களையும், ஒரு தலைப்பட்சமான கருத்தினையும் கொண்டுள்ளதாக ஆளுநர் குறிப்பிட்டுள்ளார். மேலும் 2020 ஆம் வருடத்திய வேலூர் கிறித்துவ மருத்துவக் கல்லூரி வழக்கில் உச்சநீதி மன்றம் வழங்கியுள்ள தீர்ப்பை மேற்கோள் காட்டியுள்ளார். அதில் நீட் தேர்வு மருத்துவக் கல்வியை மேம்படுத்தவே பரிந்துரைக்கப்பட்டதெனவும், மருத்துவ இடங்கள் விற்பனை செய்யப்படுவதைத் தடுத்து,  அனைத்து பிரிவினருக்கும் சமமான வாய்ப்பினைக் கொடுப்பதாகவும் குறிப்பிட்டுள்ள பகுதியைச் சுட்டிக் காட்டியுள்ளார். எனவே கிராமப்புற மற்றும் பொருளாதாரத்தில் மிகவும் பின் தங்கிய மாணவர்களின் நலன்களுக்கு எதிராக நீட் விலக்கு மசோதா இருப்பதால், அதை சட்டப்பேரவை மறு ஆய்வு செய்திடும் வகையில் திருப்பி அனுப்புவதாக கூறியுள்ளார்.   

பின்னர் நான்கு நாட்கள் கழித்து பிப்ரவரி ஐந்தாம் தேதி தமிழக அரசு சட்டமன்றத்தில் இடம் பெற்றுள்ள அனைத்துக் கட்சிப் பிரதிநிதிகள் கூட்டத்தைக் கூட்டியது. பாரதிய ஜனதா மற்றும் அதிமுக அந்தக் கூட்டத்தில் கலந்து கொள்ளவில்லை. தொடர்ந்து பிப்ரவரி  எட்டாம் தேதி சிறப்பு சட்டமன்றம் கூட்டப்பட்டு மீண்டும் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. அப்போது பாஜக மட்டும் வெளிநடப்பு செய்தது..

சட்டமன்றக் கூட்டத்தில் ஆளும் கூட்டணி சார்பில் ஆளுநர் அரசியல் சட்ட முறைகளுக்கு முரணாக நடந்து கொள்கிறார் என்றும்  மசோதாவை முன்னரே குடியரசுத் தலைவருக்கு அனுப்பியிருக்க வேண்டும் என்றும் கூறப்பட்டது. மேலும் ராஜன் குழு அறிக்கை புள்ளி விபரங்களின் அடிப்படையில் அமைந்துள்ளது; ஆளுநரின் மதீப்பீடு தவறு என்றும் சொல்லப்பட்டது. மாநில முதல்வர் சட்டப்பேரவையின் இறையாண்மை கேள்விக்குறியாகி உள்ளது; மாநில சுயாட்சி மீது தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது மற்றும் கூட்டாட்சித் தத்துவம் தலை குனிந்து நிற்கிறது எனவும்  கருத்து தெரிவித்துள்ளார்.

அரசியலமைப்புச் சட்டப்படி மசோதா சட்டமாக ஆளுநரின் அனுமதியுடன் அவரால் குடியரசுத் தலைவருக்கு அனுப்பப்பட்டு ஒப்புதல் பெறப்பட வேண்டும். ஆளுநர் திருப்தி அடையவில்லை எனில் மசோதாவைத் திருப்பி அனுப்பும் உரிமை அவருக்கு உள்ளது. அதன்படி அவர் செய்துள்ளார்.

நீதிபதி ராஜன் குழு அதிக அளவு மாநில அரசின் அதிகாரிகளையும்,  நீட் தேர்வை தீவிரமாக எதிர்ப்பவர்களையுமே  உறுப்பினர்களாக கொண்டு அமைக்கப்பட்டுள்ளது. அந்தக் குழுவின் அறிக்கை பல இடங்களில் ஆதாரமில்லாத கருத்துக்களைச் சொல்லியுள்ளது. நீட் தேர்வு அரசியலமைப்புச் சட்டத்துக்கும் நாட்டு மக்களுக்கும் எதிரானது; தன்னிச்சையாக அரசியல் நோக்கத்துக்காக கொண்டு வரப்பட்டது; அது தொடர்ந்தால் மருத்துவர்கள் பற்றாக்குறை ஏற்பட்டு தமிழகம் சுதந்திரத்துக்கு முந்தைய காலகட்டத்துக்குப் போய்விடும் என்றெல்லாம் கருத்துக்களைக் கூறியுள்ளது.

அந்த அறிக்கையின் முக்கியமான ஒரு வாதம் நீட் தேர்வு வருவதற்கு முன்னால் அரசுப் பள்ளி மாணவர்களுக்குக் கிடைத்து வந்த வாய்ப்புகள், அதற்குப் பின்னர் பறி போய் விட்டன என்பதாகும். ஆனால் அதற்கான புள்ளி விபரங்கள் கொடுக்கப்படவில்லை. 2010-11 முதல் 2013-14 வரை அரசு மற்றும் தனியார் பள்ளிகளில் படித்து மருத்துவப் படிப்பில் சேர்ந்த மாணவர்கள் பற்றிய விபரங்கள் அதில் சொல்லாமல் விடப்பட்டுள்ளது. மேலும் 99 விழுக்காடு மருத்துவப் படிப்பு சேரும் மாணவர்கள் தனியாரிடம் பயிற்சி பெற்ற பின்னரே தேர்ச்சி அடைகின்றனர் என்று அறிக்கை கூறுகிறது. ஆனால் அது குறித்த விபரம் எதுவும் தம்மிடம் இல்லை என அரசே ஒத்துக் கொண்டுள்ளது.  

நீட் தேர்வு வருவதற்கு முன்னர் பன்னிரெண்டாம் வகுப்பு மதிப்பெண்கள் அடிப்படையில் மருத்துவப் படிப்புகளுக்கு மாணவர்கள் சேர்க்கை நடைபெற்றது. அப்போது 2006 முதல் 2016 வருடம் வரை  மாநில முழுவதும் மருத்துவப் படிப்பில் சேர்ந்த அரசுப் பள்ளி மாணவர்களின் எண்ணிக்கை சொற்பமாகவே இருந்துள்ளது.  உதாரணமாக 2011 முதல் 2014 வரை பதினெட்டு முதல் இருபத்தி மூன்று என்னும் எண்ணிக்கையில் மட்டுமே எம்பிபிஎஸ் படிப்பில் சேர்ந்துள்ளனர் என தகவல் உரிமைச் சட்ட விபரம் தெரிவிக்கிறது.

நீட் தேர்வை அறிமுகப்படுத்திய போது நமது மாநில மாணவர்களின் தேர்ச்சி அளவு குறைவாக இருந்தது. அதற்குக் காரணம் தமிழகத்தில் நீட் தேர்வு வராது என்று மாணவர்களிடத்தில் அரசியல் கட்சிகள் உருவாக்கிய தவறான கருத்து மற்றும் பள்ளிக் கல்வித் துறையின்  குறைபாடுகள் ஆகியன. சுமார் பன்னிரெண்டு வருடங்களாக பாடத்திட்டங்கள் மாற்றி அமைக்கப்படாமல் இருந்தன. அதனால் பிற மாநிலங்களுடன்  நமது மாணவர்களால் போட்டியிட முடியவில்லை.

2018 ஆம் வருடம் பாடத்திட்டம் திருத்தி அமைக்கப்பட்டு, பள்ளிகளில் நீட் தேர்வுக்கான பயிற்சிகளை அரசு கொடுக்கத் துவங்கிய பின்னர்  மாற்றம் ஏற்பட்டது. தொடர்ந்து அரசு பள்ளி மாணவர்களுக்கு 7.5 விழுக்காடு ஒதுக்கீடு என வந்ததும் ஏழை மாணவர்கள் அதிக அளவுகளில் தேர்வாகி வருகின்றனர்.

நீட் தேர்வு வந்த பின்னர் தமிழக மாணவர்கள் வருடா வருடம் அதிக எண்ணிக்கையில் அந்த தேர்வில் பங்கு பெறுவதும், தேர்ச்சி பெறுவதும் அதிகரித்து வருகிறது. 2019 ஆம் வருடத்துடன் ஒப்பிடும் போது 2020 ஆம் வருடம் நடந்த தேர்வில் போது ஒரே வருடத்தில் தமிழக மாணவர்களின் தேர்ச்சி விகிதம் சுமார் 9 விழுக்காடு அதிகரித்து தேசிய அளவில் வேகமாக உயர்ந்தது.

மேலும் நீட் தேர்வுக்குப் பின்னர் அகில இந்திய ஒதுக்கீட்டின் கீழ் தமிழக மாணவர்களுக்கு வெளி மாநிலங்களில் உள்ள நல்ல மருத்துவக் கல்லூரிகளுக்கும், தேசிய அளவிலான கல்வி நிறுவனங்களுக்கும் செல்லும் வாய்ப்புகள் அதிகரித்துள்ளன. சென்ற வருடம் முதன் முறையாக சுமார் முப்பது மாணவர்கள் எய்ம்ஸ், ஜிப்மெர் உள்ளிட்ட தேசிய நிறுவனங்களில் சேர்ந்துள்ளதாகத் தெரிகிறது.

2021 ஆம் வருடம் நடைபெற்ற தேர்வில் தமிழகத்திலிருந்து சுமார் ஒரு லட்சத்துக்கு எட்டாயிரம் பேர் நீட் தேர்வினை எழுதியுள்ளனர். தமிழ் மொழி வழியாகத் தேர்வு எழுதும் மாணவர்களின் எண்ணிக்கையும் அதிகரித்து வருகின்றது. அதனால் இந்த முறை பதினேழாயிரம் பேருக்கு மேல் தமிழில் எழுதியுள்ளனர்.

2020 ஆம் ஆண்டுக்கான அரசு மருத்துவக் கல்லூரிகளின் எம்பிபிஎஸ்  பற்றிய சேர்க்கைகள் குறித்துக்   கிடைத்த விபரங்கள் உண்மைகளை வெளிப்படுத்துகின்றன.  தமிழகத்தில்  அரசு மருத்துவக் கல்லூரிகளில் இருந்த இடங்களில் அரசு பள்ளி மாணவர்களுக்கான ஒதுக்கீட்டின் கீழ் பிற்படுத்தப்பட்ட, மிகவும் பிற்படுத்தப்பட்ட மற்றும் பட்டியலின பிரிவு  குடும்பங்களைச் சேர்ந்த மாணவர்களே அனைத்து இடங்களையும் பெற்றுள்ளனர். பொதுப் பிரிவின் கீழ் மாணவர்கள் யாரும் இடம் பெறவில்லை.

அரசு பள்ளி மாணவர்களுக்கான ஒதுக்கீடு போக மீதி இடங்களில் மிகப் பெரும்பாலான எம்பிபிஎஸ் இடங்கள் மேற்கண்ட பிரிவுகளைச் சேர்ந்த மாணவர்களுக்கே கிடைத்துள்ளது. மாநில அரசு நடைமுறைப்படுத்தி வரும் விகிதங்களை விட அதிகமான இடங்களை அவர்கள் பெற்றுள்ளனர். பிற்படுத்தப்பட்ட பிரிவினர்  ஐம்பது விழுக்காடு, மிகவும் பிற்படுத்தப்பட்ட பிரிவினர் சுமார் 25   விழுக்காடு, பட்டியலின பிரிவினர் 18.4 விழுக்காடு, மலைவாழ் பிரிவு மாணவர்கள் ஒரு விழுக்காடு என இடங்கள் கிடைத்துள்ளன. சுமார் நான்கு விழுக்காடு இடங்கள் மட்டுமே பொதுப்பிரிவின் மூலம் மாணவர்களுக்கு கிடைத்துள்ளது.  

மேற்குறிப்பிட்ட சமூகப் பிரிவுகளைச் சேர்ந்த மக்களுக்கு அதிக பலன் கிடைக்க வேண்டும் என்பதே சமூக நீதியின் அடிப்படை. எனவே நீட் அறிமுகப்படுத்தப்பட்ட பின்னர் சமூக நீதி பாதிக்கப்பட்டுள்ளது என்கிற வாதம் சரியல்ல. உண்மையில் மேற்கண்ட பிரிவுகளைச் சேர்ந்த மாணவர்கள் ஒதுக்கீட்டு அளவில் உள்ளதை விட பல மடங்கு அதிக அளவில்  மருத்துவக் கல்லூரிகளில் சேர்ந்துள்ளனர்.

2021 ஆம் வருடம் நடத்தப்பட்ட தேர்வின் அடிப்படையில் தற்போது மருத்துவக் கல்லூரி ஒதுக்கீடுகள் நடைபெற்று வருகின்றன. அரசுப்பள்ளி மாணவர்களுக்கான ஒதுக்கீடுகள் முடிந்து விட்டன. மருத்துவக் கல்லூரிகளில் 435 இடங்கள், பல் மருத்துவக் கல்லூரிகளில் 100 இடங்கள் என மொத்தம் 535 இடங்களுக்கு ஒதுக்கீடுகள் நடைபெற்று விட்டதாகத் தெரிகிறது.

இந்த வருடமும் பிற்படுத்தப்பட்ட, மிகவும் பிற்படுத்தப்பட்ட மற்றும் பட்டியலின குடும்பங்களைச் சேர்ந்த மாணவர்கள் அரசு நிர்ணயித்த ஒதுக்கீட்டு இடங்களை விட அதிக இடங்களைப் பெற்றுள்ளனர்.  மொத்த இடங்களில் பிற்படுத்தப்பட்ட பிரிவு மாணவர்கள் 43 விழுக்காடு, மிகவும் பிற்படுத்தப்பட்ட பிரிவு 31 விழுக்காடு, பட்டியலினப் பிரிவு  19 விழுக்காடு எனப்  பெற்றுள்ளனர். எனவே சென்ற வருடத்தை விடவும் இந்த வருடத்தில் அதிகமான இடங்கள் கிடைத்துள்ளன. 

அதனால் மிகவும் ஏழைக் குடும்பங்களைச் சேர்ந்த, கிராமப்புற மற்றும் வசதி குறைவான மலைப் பகுதிகளில் வாழ்ந்து கொண்டிருக்கும் குடும்பங்களின் தமிழ் வழியில் படித்த குழந்தைகள் சென்னை உள்ளிட்ட முக்கிய நகரங்களின் மருத்துவக் கல்லூரிகளில் இடம் பெற்றுள்ளனர்.

திருவள்ளூர் மாவட்டம் பொன்னேரியை அடுத்த பெரும்பேடு குப்பம் கிராமத்தைச் சேர்ந்த மாணவி அனுஷா. பெற்றோர் இருவரும் கூலி வேலை செய்பவர்கள். உள்ளூர் அரசு பள்ளியில் படித்தார். பயிற்சி மையம் எங்கும் செல்லாமல், வீட்டிலிருந்து தேர்வுக்குத் தயார் செய்தார். விழுப்புரம் அரசு மருத்துவக் கல்லூரியில் இடம் பெற்றுள்ளார்.

சேலம் மாவட்டம் சூரப்பள்ளி சின்னனூர் கிராமத்தைச் சேர்ந்த மாணவர் கலையரசன். பெற்றோர்கள் தறித் தொழில் செய்பவர்கள். ஆலமத்தூர் அரசு பள்ளியில் படித்து சென்னை அரசு மருத்துவக் கல்லூரியில் இடத்தைப் பெற்றுள்ளார்.

 வேலூர் மாவட்டம் பென்னாத்தூர் அருகில் உள்ள கணேசபுரத்தைச் சேர்ந்தவர் மாணவி சத்யா. மாற்றுத் திறனாளி. பெற்றோர் இருவரும் குவாரியில் கல் உடைக்கும் வேலை செய்பவர்கள். உள்ளூர் அரசு பள்ளியில் படித்து வேலூர் அடுக்கம்பாறை அரசு மருத்துவக் கல்லூரியில் இடம் பெற்றுள்ளார்.

திருவள்ளூர் மாவட்டம் மலைவாழ் மக்கள் பிரிவு குடும்பத்தைச் சேர்ந்த மாணவி சினேகா. தந்தை சாலை ஓரத்தில் கரும்புச் சாறு விற்கும் கடை வைத்து குடும்பத்தை நடத்தி வருகிறார். மழைக் காலங்களில் பாத்திர வியாபாரம் செய்வார். அவருக்கு ஐந்து பெண் குழந்தைகள். சினேகா மலைவாழ் மக்கள் பிரிவு மாணவர்களில் மாநில அளவில் முதலிடம் பெற்று, சென்னை ஸ்டேன்லி மருத்துவக் கல்லூரியில் இடம் பெற்றுள்ளார்.

இவையெல்லாம் உதாரணங்கள் மட்டுமே. எனவே வசதி வாய்ப்புகள் இல்லாத சாதாரண குடும்பங்களைச் சேர்ந்த  பலரும் நீட் தேர்வு மூலம் பலன் பெற்று வருகின்றனர்.  மேலும் இந்த வருடம் பொருளாதார வளர்ச்சி குறைந்த மாவட்டங்களில் இருந்து அதிக எண்ணிக்கையிலான  மாணவர்கள் மருத்துவக் கல்லூரிகளில் சேர்கின்றனர்.

தருமபுரி, புதுக்கோட்டை, திருவள்ளூர் மற்றும் திருவண்ணாமலை  மாவட்டங்களிலிருந்து முறையே 33, 31, 26, 24 மாணவர்கள் மருத்துவப்படிப்புகளில் சேர்ந்துள்ளனர். காஞ்சிபுரம், விழுப்புரம், தென்காசி ஆகிய மாவட்டங்களிலிருந்தும் கணிசமான  எண்ணிக்கையில் சேர்ந்துள்ளனர். பொருளாதார வளர்ச்சி பெற்ற பல  மாவட்டங்களை விட  மேற்காணும் எண்ணிக்கைகள் அதிகம்.

தற்போது தேர்ச்சி பெற்றுள்ள மாணவர்கள் பொருளாதார பின்னணி இல்லாதவர்கள். அவர்தம் குடும்பங்களில் பள்ளிப் படிப்பு கூட முடிக்காதவர்களே அதிகம்  இருக்கும்.  அவர்களில் பலர் முதல் முறையாக நீட் தேர்வு எழுதியவர்கள். பலர் பயிற்சி வகுப்புகளுக்குப் போகாமல் வீட்டிலேயே இருந்து படித்தவர்கள். முழுக்க தமிழ் வழியிலேயே கல்வி கற்றவர்களும் உள்ளனர்.

அவர்கள் எல்லாம் சென்னை உள்ளிட்ட பெரு நகரங்களில் பெரிய மருத்துவக் கல்லூரிகளில் படித்து முதல் தலைமுறை பட்டதாரி ஆகப் போகிறார்கள். இது தற்போதைய நீட் தேர்வு முறையால் மட்டுமே சாத்தியமாகி உள்ளது. இதற்கு முந்தைய காலங்களில் இவையெல்லாம் கற்பனை கூட செய்து பார்க்க முடியாத விசயமாக இருந்தது.

இந்த வருடம் அகில இந்திய அளவில் இதர பிற்படுத்தப்பட்ட மாணவர்கள் பிரிவில் முதல் பத்து இடங்களில் இரண்டு தமிழக மாணவர்கள் இடம் பிடித்துள்ளனர். மேலும் பாண்டிச்சேரியிலுள்ள ஜிப்மெர் நிறுவனத்தில் இந்த வருடம் பொதுப் போட்டியில் உள்ள 121 இடங்களில்  32 இடங்களைத் தமிழக  மாணவர்கள் பெற்றுள்ளனர். இது மொத்த இடங்களில் 26.4 விழுக்காடாகும்.

எனவே சென்ற வருடத்துக்கான  மொத்த சேர்க்கை விபரங்கள், தற்போது அரசு பள்ளி மாணவர்கள் ஒதுக்கீட்டு விபரங்கள் மற்றும் அகில இந்திய ஒதுக்கீடு என அனைத்தையும் பார்க்கும் போது. பொருளாதாரத்தில் பின் தங்கிய மற்றும் கிராமப்புற மாணவர்கள் பெருமளவில் மருத்துவப் படிப்புகளில் சேர்ந்து வருவது உறுதியாகிறது.  

சுதந்திரம் பெற்று எழுபது ஆண்டுகளுக்கு அப்புறம் நீட் தேர்வு முறை வசதி வாய்ப்புகள் இல்லாத குடும்பங்களைச் சேர்ந்த மாணவர்கள் மருத்துவக் கல்வி பயிலும் அரிய வாய்ப்பினை ஏற்படுத்திக் கொடுத்துள்ளது. மக்களாட்சியின் நோக்கமே ஏழை மக்களை முன்னேற்றுவது தான். அந்தப் பணியை தற்போது நீட் தேர்வு முறை செய்து வருகிறது.

முந்தைய முறையில் பள்ளிகளில் பதினொன்றாம் வகுப்பு பாடங்கள் போதிக்கப்படவில்லை. ஆனால் அதைப் படிக்காமல், பன்னிரெண்டாம் வகுப்புகளைப் புரிந்து கொள்வது மாணவர்களுக்குக் கடினம். மேலும்  ப்ளூ பிரிண்ட்என்னும் முறை மூலம் குறிப்பிட்ட பகுதிகளை மட்டுமே மனப்பாடம் செய்து, அதிக மதிப்பெண்களைப் பெற வேண்டிய கட்டாயம் இருந்தது.  அதனால் பள்ளி இறுதிக் கல்வி வணிக மயமாகி, குறிப்பிட்ட பள்ளிகள் அதிக கட்டணத்தை வசூலித்துக் கொண்டு சேர்க்கைகளை நடத்தி வந்தனர்.

மாநில பள்ளிக் கல்வித்துறைக்கான நிதி ஒதுக்கீடு  தற்போது 34,000 கோடி ரூபாயாக உள்ளது. இவ்வளவு தொகை ஒதுக்கீடு செய்தும் நம்மால் ஏன் அதிக அளவில் மருத்துவப் படிப்புக்கு மாணவர்களைத் தயார் செய்ய முடியவில்லை என்பது பற்றி யோசிக்க வேண்டும். தேவையான பயிற்சிகளை ஆசிரியர்களுக்குக் கொடுத்து, கட்டமைப்புகளை வலுப்படுத்தும் போது நமது மாணவர்களைப் போட்டித் தேர்வுகளுக்கு சுலபமாகத் தயார் செய்ய முடியும். அதன் மூலம் தேசிய அளவில் மட்டுமன்றி, சர்வதேச அளவிலும் அவர்களால் போட்டியிட முடியும். ஏனெனில் உலகின் பல பகுதிகளிலும் உயர் படிப்புகளுக்குப் போட்டித் தேர்வுகள் உள்ளன.

தமிழக மாணவர்கள் மிகத் திறமை வாய்ந்தவர்கள். முறையான வாய்ப்புகளை ஏற்படுத்தி தரும் போது, அவர்கள் நன்கு வெற்றி பெறுவார்கள். அதைத் தான்  இப்போது அவர்கள் சாதித்துக் காட்டி வருகிறார்கள்.

மோடி அரசு கடந்த இரண்டு வருட காலத்தில் தமிழகத்துக்கு மட்டும் பதினோரு அரசு மருத்துவக் கல்லூரிகளையும், ஒரு எய்ம்ஸ் மருத்துவக் கல்லூரியையும் கொடுத்துள்ளது. இது நாட்டின் மற்ற எந்தவொரு  மாநிலத்துக்கும் கிடக்காத பேருதவி. அதன் மூலம் இந்த வருடம் முதல் சுமார் 1500 மருத்துவ இடங்கள் நமக்குக் கிடைக்க உள்ளன. அவை தொடர்ந்து நான்கு ஆண்டுகளில் மேலும் உயரும்.  

நீட் தேர்வு தற்போது நாடு முழுவதும் நடைமுறையில் உள்ளது. நாட்டின்  மாநிலங்கள் பலவற்றிலும் வெவ்வேறு கட்சிகள் ஆட்சியில் உள்ளன. ஆனால் அவை எல்லாம் நீட் தேர்வை ஏற்றுக் கொண்டு தமது மாநிலங்களில் நடைமுறைப் படுத்தி வருகின்றன.  அப்படி இருக்கும் போது பிற மாநிலங்களை விட வலுவான அடித்தளத்தைக் கொண்டுள்ள நமது மாநிலம் ஏன் நீட் தேர்வைத் தவிர்க்க வேண்டும்?. மாநிலத்தில் ஆளும் கூட்டணியில் உள்ள காங்கிரஸ் மற்றும் கம்யூனிஸ்ட் கட்சிகள் அவை ஆளும் மாநிலங்களில் நீட் தேர்வை நடைமுறைப்படுத்தி வருகின்றன.

கல்வித் துறையில் முன்னேறிய தமிழகத்தில் இது வரை ஏழை மாணவர்களுக்குப் போதிய அளவு மருத்துவக் கல்வி வாய்ப்பு கிடைக்கவில்லை என்பது உண்மை. அந்த நிலை தற்போது மாறி வருகிறது. எனவே தமிழகத்தில் நீட் தேர்வு தொடர வேண்டும். அதன் மூலமே உண்மையான சமூக நீதி கிடைக்கும்.

அதே சமயம் தற்போதைய ஒதுக்கீட்டு முறையின் மூலம் முற்பட்ட வகுப்பு பிரிவு மாணவர்களுக்கு மருத்துவக் கல்லூரிகளில் மிகவும் குறைவான இடங்களே கிடைத்து வருகின்றன. அதற்காக 2019 ஆம் வருடம் மத்திய அரசு அறிவித்த பொருளாதாரத்தில் பின் தங்கிய பிரிவினருக்கான பத்து விழுக்காடு உடனே தமிழகத்திலும் நடைமுறைப் படுத்தப்பட வேண்டும்.

 ( தமிழ் ஹிந்து.காம். பிப். 15, 2022 )