முன்னேற்றப் பாதையில் இந்தியப் பொருளாதாரம்



இந்தியப் பொருளாதாரம் தனித்தன்மைகளைக் கொண்டது. அதன் வேர்கள் பாரம்பரிய மிக்க நமது மண்ணில் ஆழமாக வேறூன்றிக் கிடக்கின்றன. நமது பொருளாதாரச் சிந்தனைகள் மேற்கத்திய முதலாளித்துவ மற்றும் கம்யூனிச சித்தாந்தங்களுக்கு வெகு காலத்துக்கு  முற்பட்டவை. அவை நமது மக்களின் நம்பிக்கைகள், வாழ்க்கை முறை மற்றும் கருத்தோட்டம் ஆகியவற்றை அடிப்படையாகக் கொண்டவை.
இந்தியா சுதந்திரம் பெற்ற பின், நேரு தலைமையிலான காங்கிரஸ் அரசு சோசலிச சித்தாந்தத்தை மையமாக வைத்து நாட்டுக்குப் பொருத்தமில்லாத கொள்கைகளை வகுத்தது. அதனால் முப்பது ஆண்டுகளுக்குப் பின்னரும் அவர்களால் நாட்டின் அடிப்படைப் பிரச்சனைகளைக் கூடத் தீர்க்க முடியவில்லை. 1980 களின் இறுதியில் சோவியத் ருஷ்யா பத்துக்கும் மேற்பட்ட நாடுகளாகச் சிதறுண்டு போன போது, உலக முழுவதும் கம்யூனிசம் தோற்றுப் போனதாக ஒப்புக் கொள்ளப்பட்டது.
அந்தச் சமயத்தில் நமது நாட்டுக்குப் பொருத்தமான சரியான பொருளாதாரக் கொள்கைகளை வகுத்துக் கொள்ள மீண்டுமொரு வாய்ப்புக் கிடைத்தது. ஆனால் அப்போது காங்கிரஸ் அரசு உலக மயமாக்கல் கொள்கைகளை நடைமுறைப்படுத்தியது. அதன் மூலம் மீண்டுமொரு மேற்கத்திய சித்தாந்தத்தை நடைமுறைத் திட்டமாக அரசு அங்கீகரித்தது.
அதனால் இந்தியப் பொருளாதாரத்தில் சில கடுமையான விளைவுகள் ஏற்பட்டன. நமது நாட்டுக்கு அடிப்படையான விவசாயம் மற்றும் சிறு தொழில்கள் பெரும் பாதிப்புகளுக்கு உள்ளாயின. வேலை வாய்ப்பு உருவாக்கம் குறைந்து, அந்நிய நிறுவனங்களின் தாக்கங்கள் அதிகரித்தன. எனவே 1990 களின் பிற்பகுதியில் பொருளாதாரம் மிக மோசமான நிலைக்குச் சென்றது.
அந்த சமயத்தில் ஆட்சிக்கு வந்த வாஜ்பாய் அரசு பொருளாதாரத்தை மேம்படுத்த முக்கியமான முடிவுகளை எடுத்தது. அதன் விளைவாகக் கட்டமைப்பு வசதிகள் உருவாக்கம் மற்றும் இந்தியத் தொழில்களில் வளர்ச்சி ஆகியன ஏற்பட்டன. முந்தைய ஆண்டுகளில் இல்லாத வகையில், வேலை வாய்ப்பு உருவாக்கம் பெருமளவு அதிகரித்தது. சுதந்திரம் பெற்ற பின், ஜனசங்கம் அங்கம் வகித்த ஜனதா கட்சி ஆட்சிக்குப் பின் இரண்டாவது முறையாக, வாஜ்பாய் ஆட்சி மத்திய அரசின் நிதி நிலைமையை பற்றாக்குறையிலிருந்து உபரியாக மாற்றிக் காட்டியது.
அதன் மூலம் இந்திய பொருளாதாரத்தின் மதிப்பு உலக அளவில் உயர ஆரம்பித்தது. சுதந்திரத்துக்குப் பின்னர் முதல் முறையாக உலக நாடுகள் இந்தியப் பொருளாதாரத்தை அங்கீகரிக்கத் தொடங்கின. இந்திய நாடு எதிர்காலத்தில் பெரிய பொருளாதாரமாக உருவாகும் தன்மையைக் கொண்டது என மேற்கத்திய நாடுகளும், பன்னாட்டு அமைப்புகளும் ஒப்புக் கொள்ளத் துவங்கின.
அப்போது காங்கிரஸ் தலைமையிலான கூட்டனி 2004 வது வருடம் ஆட்சியைப் பிடித்தது. தொடர்ந்து வந்த பத்து ஆண்டுகளில் இந்தியப் பொருளாதாரம் பெரும் வீழ்ச்சியைக் கண்டது. எல்லாத் துறைகளிலும் ஊழல்கள் பெருகி, சர்வதேச அளவில் நமது நாடு ஊழல் மிகுந்த தேசம் என்னும் அவப் பெயரைப் பெற்றது.
அடிப்படையான தொழில்களின் வளர்ச்சி பின்னடைவைக் கண்டது. கடைசி ஐந்து வருடங்களில் வேலை வாய்ப்பு உருவாக்கம் மிகவும் மோசமாக இருந்தது. நாட்டின் பொதுச் சொத்துகளைக் கூட்டணிகளுடன் சேர்ந்து காங்கிரஸ் கூறு போட்டுக் கொண்டது. விலைவாசி அதிகரித்து மக்கள் வாழ்க்கை நடத்தவே பெரும் சிரமப்பட்டனர். பத்து வருடங்களுக்கு முன்னர் பெரும் நம்பிக்கையுடன் விளங்கிய இந்தியப் பொருளாதாரம், காங்கிரஸ் ஆட்சியில் பெரும் சீரழிவைச் சந்தித்தது.
2014 ஆம் வருடம் நடந்த தேர்தலில் திரு. நரேந்திர மோடி அவர்கள் முந்தைய முப்பது வருடங்களில் இல்லாத அளவு பெரும்பான்மை இடங்களைப் பெற்று பாரதீய ஜனதா கட்சித் தலைமையில் தேசிய ஜனநாயகக் கூட்டணியின் ஆட்சியை அமைத்தார். அந்த வருடம் சுதந்திர இந்தியாவுக்கு மட்டுமன்றி, இந்தியப் பொருளாதாரத்துக்கும் ஒரு திருப்பு முனையா அமைந்துள்ளதை கடந்த இருபத்தி மூன்று மாத கால மோடியின் ஆட்சி வெளிப்படுத்துகின்றது.
மத்திய திட்டக்குழு என்பது 1950 களில் நேரு பிரதமராக இருந்த போது அப்போதைய சோவியத் நாட்டின் தலைவர் ஸ்டாலினின் அணுகுமுறைகளை ஒட்டி இங்கு ஏற்படுத்தப்பட்ட அமைப்பு. அது டெல்லியிலிருந்து கீழாக அதிகார வர்க்கத்தின் மூலம் திட்டமிடலை மையமாகக் கொண்டது. காலப் போக்கில் உலக வங்கி, சர்வதேச நிதியம் உள்ளிட்ட பன்னாட்டு அமைப்புகளில் பணி புரிந்து சந்தைப் பொருளாதார ஆதரவு நிலைப்பாடு கொண்ட நிபுணர்கள் வழி நடத்தும் அமைப்பாக மாறி விட்டிருந்தது.
பிரதமரான பின் தனது முதல் சுதந்திர தின உரையில் திட்டக்குழு மாற்றியமைக்கப்படும் என மோடி அறிவித்தார். அதன் படிநிதி ஆயோக்அமைப்பு ஏற்படுத்தப்பட்டது. அதன் முக்கிய நோக்கமே மேல் நாட்டு பொருளாதாரச் சிந்தனைகளை அப்படியே கடைப்பிடிக்காமல், பாரதீய சிந்தனைகளின் அடிப்படையில் தேசத்தை மையமாக வைத்துக் கொள்கைகளை வகுப்பதுதான். அந்த முறையில் நமது தேசத்தின் சூழ்நிலை மற்றும் அடித்தனங்கள் ஆகியவற்றை மையப்படுத்தி கொள்கைகள் வகுக்கப்படும் எனப் பிரதமர்  அறிவித்தார்.
நிதி ஆயோக் குழுவில் அனைத்து மாநில முதலமைச்சர்களுக்கும் முக்கியமான  இடம் கொடுக்கப்பட்டுள்ளது. அதனால் கூட்டுறவு முறையில் மாநிலங்கள் ஒன்றாக இணைந்து தேசத்தின் வளர்ச்சிக்காகத் திட்டமிடும் சூழல் உருவாகி உள்ளது. எனவே கீழிலிருந்து மேலாகச் செல்லும் திட்டமிடும் முறை உருவாகி உள்ளது. அதன் மூலம் சுதந்திரம் பெற்று முதன் முறையாக அறுபத்தைந்து ஆண்டுகளுக்குப்பின்னர், நமது தேசத்தை மையமாக வைத்துக் கொள்கைகளை வகுக்கும் சூழ்நிலை ஏற்பட்டுள்ளது.
நமது தேசத்தின் பொருளாதாரத்துக்கான ஆதாரமே விவசாயம் மற்றும் குறு, சிறு, நடுத்தரத் தொழில்கள் ஆகும். அவை தான் பெரும்பான்மை மக்களுக்கு வேலை வாய்ப்பையும் வாழ்வாதாரத்தையும் அளித்து வருகின்றன. எனவே அவற்றின் வளர்ச்சியை அதிகரிக்க பல புதிய திட்டங்கள் துவங்கப்பட்டுள்ளன.
புதிதாக அறிவிக்கப்பட்டிருக்கும் பயிர் காப்பீடு திட்டம் விவசாயிகளுக்கு ஒரு பெரிய வரப்பிரசாதமாக அமையும். ஏனெனில் விவசாயிகள் இயற்கைச் சீற்றங்கள் மற்றும் சூழ்நிலைகளால் நிறைய சமயங்களில் அதிக இழப்புகளை சந்திக்கின்றனர். இந்த வருடம் ஏப்ரல் 14 அன்று அறிவிக்கப்பட்டுள்ள சந்தைகளை இணைக்கும் திட்டத்தின் மூலம், எதிர்காலத்தில் நாடு முழுவதும் ஒரே சந்தை உருவாகி, விவசாயிகள் தங்களின் விளைபொருட்களை எங்கு வேண்டுமானாலும் இலாபகரமாக விற்கக் கூடிய சூழ்நிலை உருவாகி உள்ளது. யூரியா உற்பத்தி அதிகரிப்பு, எத்தனாலுக்கான அறிவிப்பு, விவசாயிகளின் கணக்கில் நேரடியாக அரசு பணம் செலுத்தும் முறை ஆகியன விவசாயிகளின் பிரச்னைகளைக் களைய அரசு எடுத்து வரும் முயற்சிகளைக் காட்டுகின்றன.
நமது நாட்டில் உள்ள குறு, சிறு தொழில்கள் 12 கோடி பேருக்கு வேலை வாய்ப்பினை அளித்து வருகின்றன. ஆனால் அவற்றுக்குக் கிடைக்கும் வங்கி உதவி வெறும் நான்கு விழுக்காடு மட்டுமே. அவை பெரும்பாலும் பிற்படுத்தப்பட்ட மற்றும் பட்டியலினங்களைச் சேர்ந்த சாதாரண மக்களால் நடத்தப்பட்டு வருகின்றன. எனவே அவை போதிய நிதியுதவி இல்லாமல் பெரிதும் சிரமப்பட்டுக் கொண்டுள்ளன.
அவற்றுக்கு நிதியுதவி கொடுத்து சாதாரண மக்களை வெற்றிகரமான தொழிலதிபர்களாக உருவாக்கவும், வேலை வாய்ப்புகளை வேகமாகப் பெருக்கவும் முத்ரா வங்கி என்னும் புதிய நிறுவனம் தொடங்கப்பட்டுள்ளது. அதன் மூலம் கடந்த ஒரு வருடத்திலேயே இதுவரை பல்லாயிரக்கணக்கான பேர் உதவி பெற்றுள்ளனர். முத்ரா வங்கி இந்தியத் தொழில் துறை வரலாற்றில் ஒரு பெரிய தாக்கத்தை ஏற்படுத்தும்  என எதிர்பார்க்கப்படுகிறது.
நாடு வளர்ச்சியடைய வேண்டுமானால் கட்டமைப்புகள் தரமாக இருக்க வேண்டும். அதன் மூலமே தொழில்கள் பெருகி வேலை வாய்ப்புகள் அதிரிக்கும். எனவே அதற்காக கட்டமைப்புத் துறைகளில் அதிக கவனம் கொடுக்கப்படுகிறது. சுதந்திரத்துக்குப் பின்னர் இதுவரை மின்சாரத்தையே பார்த்திராத கிராமங்களே சுமார் பதினேழாயிரத்துக்கு மேல் உள்ளன. அவையெல்லாம் கண்டறியப்பட்டு, மார்ச் 2018 க்குள் அத்தனை கிராமங்களுக்கும் மின்சார இணைப்பு கொடுக்கும் நடவடிக்கை வெகு வேகமாக நடந்து வருகிறது. திட்டமிட்டதற்கு முன்பாகவே இதுவரை மூன்றில் ஒரு பங்கு கிராமங்களுக்கு இணைப்புகள் கொடுக்கப்பட்டு விட்டன.
சென்ற காங்கிரஸ் ஆட்சியில் ஒரு நாளைக்கு சராசரியாக தினமும் இரண்டு கிலோ மீட்டர் அளவு தான் சாலைகள் போடப்பட்டன. ஆனால் மோடி அரசில் அது பத்து மடங்கு அதிகரித்து, இப்போது தினமும் இருபது கிலோ மீட்டர் அளவு சாலைகள் போடப்பட்டு வருகின்றன. அதை முப்பது கிலோ மீட்டராக உயர்த்த அரசு செயல் பட்டு வருகிறது.
ஜனசங்கத்தின் சித்தாந்தை உருவாக்கிய சிந்தனையாளர் மரியாதைக்குரிய தீன தயாள் உபாத்யாய ஏழை மக்களின் வாழ்க்கையை மேம்படுத்துவதே கட்சியின் தாரக மந்திரமாக இருக்க வேண்டும் என எடுத்துரைத்தார்.  அதன் அட்டிப்படையில் சாமானிய மக்களின் வாழ்வை மேம்படுத்த பல்வேறு திட்டங்கள் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளன.
வங்கியில் பணமில்லாமல் கணக்கு துவங்கும் ‘ஜன் தன் யோஜனா’ திட்டத்தில் இதுவரை இருபது கோடிக்கும் மேற்பட்ட ஏழை மக்கள் கணக்கு துவங்கியுள்ளனர். அதன் மூலம் அவர்கள் வைப்பு நிதியாக வங்கிகளில் முப்பதாயிரம் கோடிக்கு மேல் செலுத்தியுள்ளனர்.  சாதாரண மக்களெல்லாம் கணக்குத் துவங்கியதால், இப்போது அவர்களுக்கு அரசு கொடுக்கும் உதவித் தொகைகள், மானியம் போன்றவையெல்லாம் நேரடியாக அவர்களின் வங்கிக் கணக்குகளில் சேர்ந்து விடுகின்றன. அதனால் அவர்களுக்குச் சேர வேண்டிய முழுமையான தொகை போய்ச் சேர்கிறது; மேலும் ஊழல் தடுக்கப்பட்டுள்ளது.
அரசு நிர்வாகத்தில் நேர்மை, வெளிப்படைத் தன்மை மற்றும் வேகம் ஆகியவை நடைமுறைப் படுத்தப்பட்டுள்ளன. பிரதமர் தொடங்கி அமைச்சர்கள் அனைவரும் சேவகர்களாகச் செயல்படுகின்றனர். எந்த வித ஊழலுக்கும் இடம் கொடுக்காத நல்லாட்சி நடை பெற்று வருகிறது.
கடந்த வருடமே சீனாவைப் பின்னுக்குத் தள்ளி உலகப் பொருளாதாரத்தில் வேகமாக வளரக் கூடிய நாடாக இந்தியா உருவாகி விட்டது.  பிரதமரின் திட்டங்கள் அனைத்தும் கால வரையறைக்குள் இலக்கினை அடையும் நோக்கில் செயல்படுத்துப்பட்டு வருகின்றன. எனவே இந்திய தேசம் ஒரு நிரந்தரமான வளர்ச்சியை நோக்கிய பயணத்தை வெற்றி கரமாகத் துவக்கிச் சென்று கொண்டுள்ளது. அதன் மூலம் நமது பொருளாதாரம் உலக அளவில் ஒரு சிறப்பான நிலையினைக் கூடிய விரைவிலேயே அடையும். 

( ஒரே நாடு - சிறப்பிதழ், சென்னை, மே 2016)

No comments: