சுய சார்பு பொருளாதாரத்தின் அடிப்படை சுதேசித் தொழில்கள்

 

பாரத நாடு  தொன்மையான பண்பாட்டைக் கொண்டது. நமது பண்பாடு பல ஆயிரம் ஆண்டுகளாக நீடித்து வாழ்ந்து வருகிறது என்றால், அதற்கான பொருளாதாரப் பின்னணி இருந்திருக்க வேண்டும். அந்த வகையில் சுமார் ஐயாயிரம் ஆண்டுகளுக்கு முன்னரே நமக்கெனச் சிறப்பான பொருளாதார மற்றும் வணிக வரலாறு இருப்பதைக் குறிப்புகள் காட்டுகின்றன. பொது யுகம் தொடங்கிய பின்னர் கடந்த இரண்டாயிரம் ஆண்டு காலத்துக்கான  உலக நாடுகளின் பொருளாதார வரலாற்றை அறிஞர் ஆங்கஸ் மாடிசன் தொகுத்துக் கொடுத்துள்ளார்.

அதில் பொது யுக தொடக்க காலத்தில், அதாவது இப்போதிருந்து 2025 ஆண்டுகளுக்கு முன்னர், உலக நாடுகளின் ஒட்டு மொத்த பொருளாதார மதிப்பில் மூன்றில் ஒரு பங்கினை நமது நாடு வைத்துக் கொண்டிருந்தது எனக் குறிப்பிட்டுள்ளார். அப்படியானால் நாம் அப்போதே உலகின் பெரும் பொருளாதார சக்தியாக இருந்திருக்கிறோம். பின்னர் ஆங்கிலேயர்கள் இங்கு வந்து திட்டமிட்டு நமது பொருளாதாரத்தைச் சிதைக்கும் வரை,  பதினெட்டு நூற்றாண்டு காலம் இந்தியாவும் சீனாவும் தான் பொருளாதார பலம் பொருந்திய இரு பெரும் நாடுகளாக விளங்கி வந்துள்ளன.

அதற்குக் காரணம் நமது உள்நாட்டுப் பொருளாதார முறைகளும், உள்ளூர்ப் பகுதிகளிலேயே உருவாக்கப்பட்டுச் செயல்பட்டு வந்த தொழில்களும் தான். பின்னர் வந்த அந்நியர்களின் காலனி ஆட்சிக் காலத்திய பொருளாதாரத் தாக்குதல்கள் பல நூற்றாண்டுகளாக வலிமையாக விளங்கி வந்த நமது பொருளாதாரத்தையும், தொழில்களையும் கடும் பாதிப்புகளுக்கு உள்ளாக்கின. அதனால் தொழில்கள் சீரழிந்து, பொருளாதாரம் பெரும் வீழ்ச்சியடைந்தது.

1750 ஆம் வருட காலத்தில் இந்தியா உலக உற்பத்தியில் கால் பங்கினை அளித்துக் கொண்டிருந்தது. அதுவே 1900 வருட காலத்தில் வெறும் இரண்டு விழுக்காட்டுக்குக் கீழ் சென்றது. ஒரு நூற்றைம்பது வருட காலத்தில் நமது உற்பத்தித் துறை முற்றிலும் சிதைக்கப்பட்டது. குறு, சிறு தொழில்கள் பலவும் நசுக்கப்பட்டன. மேலும் நம் நாட்டு ஏற்றுமதிகள் தடுக்கப்பட்டு, அந்நியப் பொருட்கள் இங்கு தங்கு தடையின்றி அனுமதிக்கப்பட்டன.

எனவே பல நூற்றாண்டுகளாக உலகின் பெரும் ஏற்றுமதி நாடாக விளங்கி வந்த இந்தியா, பத்தொன்பதாம் நூற்றாண்டின் தொடக்கத்திலிருந்து  இறக்குமதி நாடாக மாறிப் போனது. அதனால் சுதந்திரப் போராட்ட காலத்தில் நமது தலைவர்கள் வெளிநாட்டுப் பொருட்கள் புறக்கணிப்பு மற்றும் சுதேசித் தொழில்களுக்கான ஆதரவு ஆகிய இரண்டையும் முக்கியமான பணிகளாக எடுத்து வைத்தனர். இருபதாம் நூற்றாண்டின் ஆரம்ப காலந் தொடங்கி சுதேசிக்கான குரல் நாடு முழுவதும் வலுத்தது. காந்திஜி சுதேசிக்கான அவசியத்தை வலியுறுத்தி மக்களிடத்தில் விழிப்புணர்வை ஏற்படுத்தினார்.

நாடு சுதந்திரம் அடைந்த பின்னர், நேரு சோசலிச கொள்கைகளைக் கடைப்பிடித்தார். அதனால் மக்கள் தொழில்களைத் தொடங்கப் பல சிரமங்கள் ஏற்பட்டன. அதே கொள்கையானது தொடர்ந்து அடுத்த நாற்பது ஆண்டுகளுக்கு மேல் நீடித்தது.  ஆனாலும் அதையெல்லாம் மீறி தொழில் முனைவோர் நாடு முழுவதும் சிறு, குறு, நடுத்தரத் தொழில்களைத் துவக்கி, முன்னேறும் முயற்சிகளில் இயங்கினர். அந்த கால கட்டங்களில் தான் கோவை, திருப்பூர் என நாட்டின் பல பகுதிகளிலும் உள்ளூர் சமூகங்களின் சொந்த முயற்சியால்  சுதேசி தொழில் மையங்களுக்கான  அஸ்திவாரங்கள் போடப்பட்டன.  

அவை பெரும்பாலும் அதிகம் படிக்காத, நிதி வசதி குறைந்த உழைப்பை மட்டுமே நம்பிய சாதாரண மக்களால் முன்னெடுக்கப்பட்ட முயற்சிகளாக இருந்தன. அரசு அமைப்புகள் தேவையான உதவிகளைச் செய்யாமல் இருந்த போதும் தொழில் முனைவோர் நம்பிக்கையுடன் காலடிகளை எடுத்து வைத்தனர். பின்னர் 1990-களில் அந்நியத் தொழில்களுக்கும், முதலீடுகளுக்கும் ஆதரவான கொள்கைகளை அப்போதைய அரசு கொண்டு வந்தது. அதனால் உள்நாட்டுத் தொழில்களுக்குப் பெரும் சிரமங்கள் ஏற்பட்டன.

அந்தச் சமயத்தில் சுதேசிய சிந்தனையாளர் தத்தோபந்த் தெங்கடி அவர்கள் உள்நாட்டுத் தொழில்களைப் பாதுகாக்கவும், ஊக்குவிக்கவும் சுதேசி விழிப்புணர்வு இயக்கத்தை ஆரம்பித்தார். அதன் மூலம் உள்நாட்டுத் தொழில்களின் அவசியம் மற்றும் சிறு, குறு, நடுத்தரத் தொழில்களின் முக்கியத்துவம் ஆகியவை பற்றி மக்களுக்கு எடுத்துச் சொல்லப்பட்டது. மேலும் கட்டுப்பாடு இல்லாமல் அந்நிய நிறுவனங்கள் இங்கு வருவது மற்றும் அந்நிய முதலீடு அதிகரிப்பது ஆகியவற்றின் ஆபத்துகள் குறித்து நாடு முழுவதும் சுதேசி இயக்கம் நிகழ்ச்சிகளையும், போராட்டங்களையும் நடத்தியது.  

எத்தனையோ சிரமங்கள் நிலவிய அந்தக் காலகட்டங்களிலும் கூட, நமது தொழில் முனைவோர்கள் அவற்றையெல்லாம் மீறி புதிய நிறுவனங்களைத் துவக்கியும். தொழில்களை நடத்தியும் வந்தனர். அதனால் தொழில்கள் விரும்பிய அளவு இல்லாவிட்டாலும் கூட, முடிந்த வரை வளர்ந்து கொண்டே சென்றன. அதனால் தொழில் மையங்கள் அதிகரித்து வேலை வாய்ப்புகள் பெருகின. அத்தகு மையங்கள் நன்கு செயல்பட்டு வந்த குஜராத், தமிழ்நாடு, மகாராஷ்டிரா, பஞ்சாப் போன்ற மாநிலங்கள் அதிக பொருளாதார வளர்ச்சியைக் கண்டன. 

2014 ஆம் ஆண்டு மோடி அரசு பொறுப்புக்கு வந்தது முதல், சிறு, குறு மற்றும் நடுத்தரத் தொழில்களை ஊக்குவிக்கவும், புதிய தொழில்களை உருவாக்கவும் தொடர்ந்து பல திட்டங்கள் செயல்படுத்தப்பட்டு வருகின்றன.  ஒவ்வொரு துறையிலும் இறக்குமதிகளைக் குறைத்து, ஏற்றுமதிகளை அதிகரிக்க நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகின்றன. “உள்ளூர் பொருள்களுக்குக் குரல் கொடுப்போம்” என்பதை பிரதமர் தேசிய முழக்கமாக வைத்துள்ளார்.   

சிறு, குறு, நடுத்தரத் தொழில்களை அதிகரிப்பதற்கு அறிவிக்கப்பட்ட முத்ரா திட்டம் மூலம் இதுவரை சுமார் 39 லட்சம் கோடி ரூபாய் அளவு நிதி உதவி 53 கோடி கடன்களுக்கு அளிக்கப்பட்டுள்ளது. அந்தப் பயனாளிகளில் 66 விழுக்காடு பேர் பெண்கள். இவ்வைகத் தொழில்களுக்குத் தொடர்ந்து சலுகைகளும் திட்டங்களும் கொடுக்கப்பட்டு வருகின்றன. பாரம்பரியமாக சமூகங்கள் தேர்ச்சி பெற்ற குறிப்பிட்ட தொழில்களை முன்னேற்ற தனியான திட்டம் செயல்படுத்தப்பட்டு வருகிறது.

மத்திய அரசின் ‘ இந்தியாவில் தயாரிப்போம்‘ திட்டம் மூலம் உள்நாட்டு தயாரிப்பு பெருமளவு ஊக்குவிக்கப்பட்டு வருகிறது. அதனால் முன்னர் அலைபேசிகளை இறக்குமதி செய்து வந்த நமது நாடு, இப்போது 2,60,000 கோடி ரூபாய் அளவு ஏற்றுமதி செய்து உலகின் மூன்றாவது பெரிய ஏற்றுமதியாளராக மாறியுள்ளது. நிபுணத்துவம் தேவைப்படும் பாதுகாப்புத் துறை தயாரிப்புகள் சென்ற வருடம் 1,78,000 கோடி ரூபாய் என அதிகரித்து,  ஏற்றுமதி இதுவரை இல்லாத வகையில் 38,400 கோடி ரூபாயை எட்டியுள்ளது. அதனால் இந்தியா தற்போது எண்பது நாடுகளுக்கு ஏற்றுமதி செய்து வருகிறது.

மேலும் மிகச்சிறு அளவில் கூரை கூட இல்லாமல் தொழில் செய்து வருபவர்களுக்கு நடைமுறை மூலதனம் உள்ளிட்ட உதவிகளை அளிக்கும் வகையில் 2020 ஆம் வருடம் சாலையோர வியாபாரிகளுக்கான நிதி உதவித் திட்டம் அறிவிக்கப்பட்டது. அதன் மூலம் இதுவரை சுமார் 76 லட்சம் பேருக்கு 18000 கோடி ரூபாய் அளவு நிதி உதவி அளிக்கப்பட்டுள்ளது. அதிகார வர்க்கத்தின் தேவையற்றை கட்டுப்பாடுகளிலிருந்து விடுதலை அளிக்க, தொழில்களை எளிமையாகச் செய்யும் திட்டம் நடைமுறைப்படுத்தப்பட்டு வருகிறது.

2047 ஆம் வருடத்தில் நாடு சுய சார்பு நிலையை அடைந்து விட வேண்டும் என்னும் நோக்கில் மோடி அரசு முனைப்பு காட்டி வருகிறது. ஏனெனில் பாரம்பரியம் மிக்க நமது நாட்டுக்கு சுய சார்பு என்பது ரத்தத்துடன் ஒன்றியது. மேலும் உலகின் மிகப்பெரிய மக்கள் தொகையைக் கொண்டுள்ள நாம் பிற நாடுகளைச் சார்ந்து இருப்பது என்பது எதிர்காலத்துக்கு நல்லதல்ல. இறைவன் கொடுத்த இயற்கை வளங்களும், அதிக அளவில் இளைஞர் பட்டாளமும் நம்மிடம் இருக்கும் போது அவற்றைப் பயன்படுத்தி நாட்டை வளப்படுத்துவது நமது கடமை.

காலனி ஆதிக்க காலத்தில் சிதைக்கப்பட்ட நமது பொருளாதாரம், சுதந்திரம் அடைந்த எழுபத்தைந்து வருட காலத்தில் உலகின் நான்காவது பெரிய பொருளாதாரமாக மாறியதே நமது சுதேசித் தன்மைகளால் தான். அதிக அளவில் வெளிநாட்டு மூலதனங்கள் இல்லாமல் வேகமாக வளர்ந்து வரும் பெரிய நாடு இந்தியா. இந்தியக் குடும்ப அமைப்பு முறை, அதிக சேமிப்புகள், அதிகமான சமூக மூலதனம், மக்களின் இயற்கையான தொழில் முனையும் தன்மை ஆகியன நமது கலாசாரம் கொடுத்துள்ள சொத்துக்கள். அவற்றின் மூலமே நாடு இன்று பல சிரமங்களையும் மீறி முன்னேற்றப் பாதையில் சென்று கொண்டுள்ளது.

எனவே பெரிய வரலாறு மட்டுமன்றி, வலுவான அடித்தளங்களும் நம்மிடம் உள்ளன. ஆகையால் மக்களின் வாழ்க்கையை மேம்படுத்தி வளர்ச்சியை அதிகரிக்க நமது அடித்தளங்களை முழுமையாக உபயோகப்படுத்திக் கொள்ள வேண்டும். அது சுதேசித் தொழில்கள் மூலமே சாத்தியமாகும்.

நாட்டின் பல பகுதிகளிலுமுள்ள நமது மக்களை சொந்தத் தொழில்களில் மிகுதியாக ஊக்குவிக்க வேண்டும். அதன் மூலம் நிறைய தொழில் முனைவோர்கள் உருவாக வேண்டும். அந்தந்தப் பகுதிகளிலேயே வேலை வாய்ப்புகள் பெருக வேண்டும். அதற்கு நாம் உள்ளூர் பொருள்களை அதிக அளவில் பயன்படுத்த வேண்டும்.  

சுதேசி விழிப்புணர்வு இயக்கம் கடந்த 2001 ஆம் வருடம் ஆறு நாட்கள் கோவை கொடிசியா வளாகத்தில் ஒரு மாபெரும் சுதேசி தொழில் கண்காட்சியை நடத்தியது. அதனை அப்போதைய பிரதமர் திரு வாஜ்பாய் துவக்கி வைத்தார். ஆறு மத்திய அமைச்சர்கள் கலந்து கொண்டனர். சுமார் இருபது கருத்தரங்குகள் நடைபெற்றன. அதன் மூலம் தமிழகத்தில் ஒரு பெரிய நம்பிக்கை பிறந்தது. இருபத்தைந்து வருடங்கள் கழித்து தற்போது ஆக. 8 ஆம் தேதி தொடங்கி மூன்று நாட்கள் ரத்தினம் கல்லூரி வளாகத்தில் கோவை சுதேசி  கண்காட்சி மற்றும் உணவுத் திருவிழா நடைபெறுகிறது.

அண்மைக் காலமாக மேற்கத்திய பொருளாதாரங்கள் எல்லாம் பெருமளவு தோற்று வருகின்றன. அதே சமயம் நமது தேசம் தொடர்ந்து முன்னேறி வருகிறது. அதற்குக் காரணமாக இருந்து வருவது நமது சுதேசி தொழில் முறைகள் மற்றும் வாழ்வியல் நெறிகளே ஆகும். ஆகையால் நமது தேசம் முன்னேறி சுயசார்பு நிலையை அடைய நாம் சுதேசித் தொழில்களை ஆதரித்து நமது வாழ்வியல் முறைகளையும் கடைப்பிடிக்க வேண்டும்.

( கோவை சுதேசி கண்காட்சியை ஒட்டி எழுதப்பட்ட கட்டுரை, ஆக்.7, 2026)

மாணவர்கள் பெயரில் ஜனநாயக விரோத சக்திகளின் சூழ்ச்சி

 

நீட் தேர்வு வினாத்தாள் கசிவு என்று சொல்லி டெல்லி ஜந்தர் மந்தர் பகுதியில் தொடங்கி, பின்னர் தமிழகம் உள்ளிட்ட மாநிலங்களில் பரவிய போராட்டங்களின்  நோக்கம் மாணவர்களின் நலன்களைப் பற்றியதல்ல. போராட்டங்கள் முழுவதும் மாணவர்களால் நடத்தப்பட்டவையும் அல்ல. அவற்றில் பங்கேற்றவர்களில் முக்கால்வாசி பேருக்கு மேல் மாணவர்கள் அல்ல. அதிலும் நீட் தேர்வு மற்றும் மருத்துவக் கல்வி சம்பந்தப்பட்டவர்கள் இருந்தனரா என்பதே கேள்விக்குறி.    

அண்மையில் கரப்பான் பூச்சி கட்சி என்ற பெயரில் புதிதாக உருவாக்கப்பட்ட ஒரு கட்சியின் பெயரில் போராட்டங்கள் நடந்தன. அந்தக் கட்சியில் முக்கியமாக இருக்கும் மூன்று பேரில் இருவர் முன்பு ஆம் ஆத்மி கட்சியில் பணியாற்றவர்கள். முக்கிய புள்ளியான அப்ஜித் தீப்கே ஜூலை மத்தியில்தான் அமெரிக்காவிலிருந்து வந்து நேராக போராட்டத்தில் கலந்து கொண்டுள்ளார். 

டெல்லிப் போராட்டத்தில் மாணவர்களை ஒருங்கிணைப்பதில் இடதுசாரி, தீவிர இடதுசாரி மற்றும் ஆம் ஆத்மி கட்சிகளின் மாணவர் அமைப்பினர்களைச் சேர்ந்தவர்கள் முக்கிய பங்காற்றியுள்ளனர். அவர்களுடன் காங்கிரஸ் உள்ளிட்ட எதிர்க்கட்சிகளின் மாணவர் அமைப்பினரும் இருந்துள்ளனர்.

அவர்களுடன் இடது சாரி, ஆம் ஆத்மி, காங்கிரஸ், சமஜ்வாதி போன்ற  எதிர்க்கட்சிகள், மதவாத, பிரிவினைவாத அமைப்பினர் மற்றும் வெளி  நாட்டினர் எனப் பலரும் பங்கு பெற்றுள்ளனர். கலந்து கொண்டவர்களில் சுமார் இரண்டாயிரத்து எண்ணூறு பேருக்கு மேல் குற்றப்பின்னணி கொண்டவர்கள் எனச் சொல்லப்படுகிறது. அவர்களில் கொலையாளிகள், கற்பழிப்பு செய்தவர்கள் எனப் பல்வேறு குற்றங்களில் ஈடுபட்டவர்களை டெல்லி காவல்துறை பட்டியலிட்டுள்ளது.  

அந்தப் போராட்டத்தை உண்மையென நம்பி அதில் கலந்து கொள்ளப் பிற மாநிலங்களிலிருந்து டெல்லி சென்ற சிலர் அங்கு நேரில் போய் பார்த்த பின்னர் ஏமாற்றமடைந்து ஊருக்கே திரும்பினர். அதில் ராஜஸ்தான் மாநிலத்தைச் சேர்ந்த ஒருவர் அங்கு நடப்பது மாணவர்களுக்கான போராட்டமல்ல; அரசியல் சூழ்ச்சி;  எனவே மாணவர்கள் அதில் கலந்து கொள்ள வேண்டாம் என்று வேண்டுகோளே விடுத்திருந்தார். 

டெல்லிப் போராட்டம் ஜூன் மாதம் தொடங்கியது. ஆரம்பத்தில் சிலர் மட்டுமே கலந்து கொண்டிருந்த நிலை மாறி, பாராளுமன்றம் தொடங்கிய நாளான ஜூலை 20 முதல் வேகம் பிடித்து, ஒரு வார காலம் ஆயிரக் கணக்கான பேர் அதில் கலந்து கொண்டனர். அவர்களுக்கான உணவு வெளிநாடுகளிலிருந்து கொடுக்கப்பட்ட ஆர்டர்கள் மூலம் கொடுக்கப்பட்டுள்ளது.

போராட்டக்காரர்களின் கோரிக்கைகள் நீட் தேர்வு சம்பந்தப்பட்டவை தானா ? அப்படி அவர்கள் சொல்லியிருந்தாலும், அங்கு கலந்து கொண்ட பெரும்பான்மையினர் போட்ட கோஷங்களும், வைத்த கோரிக்கைகளும், நீட் தேர்வுக்கும், மருத்துவக் கல்விக்கும் எந்த வித சம்பந்தமும் இல்லாதவையாக இருந்தன. அவர்களின் கைகளில் வைத்திருந்த பதாதைகளில் ஜம்மு- காஷ்மீர் சம்பந்தப்பட்ட சட்டப்பிரிவு 370 மீண்டும் கொண்டு வரப்பட வேண்டும்; இந்திய இராணுவம் ஒழிக; இந்துத்துவம் ஒழிக்கப்பட வேண்டும்; வங்காள தேசத்தில் நடந்தது போன்ற மாணவர் புரட்சி மூலம் இங்கும் ஆட்சி மாற்றம் ஏற்பட வேண்டும் என வெவ்வேறு விசயங்கள் இருந்தன.

2020 ஆம் ஆண்டு டெல்லியில் நடைபெற்ற கலவரங்களைத் தூண்டியதற்காகச் சட்ட விரோத நடவடிக்கைகள் தடுப்புச் சட்டத்தில் கைது செய்யப்பட்டுச் சிறையில் இருக்கும் ஷர்ஜில் இமாம் விடுதலை செய்யப்பட வேண்டும் என்ற நோக்கில் அங்கு ஒரு முன்னாள் காங்கிரஸ் தலைவர் பேசினார். பகவான் ராமரை இகழ்ந்தும், பிரதமர் மோடியைக் கொல்ல வேண்டும் எனவும், காலம் சென்ற அவரது தாயைப் பற்றிக் கேவலமாகவும் பேசப்பட்டது. உள்துறை அமைச்சர் பதவி விலக வேண்டும் எனக் கோரப்பட்டது. அநாகரிகமான ஆபாசச் செயல்கள் அனைவரின் கண்முன்னாலும் நடந்தேறின. சிலர் வாள்களை வைத்துக் கொண்டு அதில் கலந்து கொண்டனர்.

ஒரு சமயம் போராட்டத்தில் கலந்து கொண்டவர்கள் அதிக பாதுகாப்பு மிக்க பாராளுமன்ற வளாகத்தின் எல்லைகளை மீறிக் கும்பலாக உள்ளே நுழைய முயற்சித்தனர். அப்போது அவர்களைத் தடுக்க முயன்ற நூற்றுக்கு மேற்பட்ட காவல் துறையினர் தாக்கப்பட்டனர். கர்ப்பமாக இருந்த ஒரு பெண் காவல் அதிகாரியின் வயிற்றில் பலமான தாக்குதல் ஏற்பட்டது.. பெண் பத்திரிக்கையாளர்  அநாகரிகமாக நடத்தப்பட்டார். பொதுச் சொத்துக்கள் சேதப்படுத்தப்பட்டன. தனியார் வாகனங்கள் அடித்து நொறுக்கப்பட்டன.

இவையெல்லாம் நடந்து கொண்டிருக்கும் போது காங்கிரஸ், திமுக, ஆம் ஆத்மி, சமஜ்வாதி உள்ளிட்ட பல எதிர்க்கட்சிகள் போராட்டத்துக்கு ஆதரவளித்தன. பாராளுமன்ற கூட்டத் தொடர்  ஆரம்பித்த நாள் முதல் அவற்றின் உறுப்பினர்கள் அவைக்கு முன்னர் கூடி தொடர்ந்து ஆர்ப்பாட்டம் நடத்தினர். மத்திய அரசு நீட் தேர்வுக் கசிவு குறித்து பாராளுமன்றத்தில் விவாதிக்க அழைத்தும், கூட்டத் தொடரின் முதல் வாரம் முழுவதும் அவைகளை நடத்த எதிர்க்கட்சிகள் அனுமதிக்கவில்லை. காங்கிரஸ் கட்சியினர் போராட்டம் நடந்த ஜந்தர் மந்தர் பகுதிக்குச் செல்லாமல், ராகுல் காந்தி தலைமையில் பிரதமர் வீட்டுக்கு முன்பு ஆர்ப்பாட்டம் நடத்தினர்.

லடாக் பகுதியைச் சேர்ந்த சோனம் வாங்சுக் மாணவர்களின் கோரிக்கைளுக்கு ஆதரவு தெரிவித்து உண்ணாவிரதம் மேற்கொண்டார். பின்னர் 26 நாட்கள் கழித்து மத்திய அமைச்சர்கள் முன்னிலையில் உண்ணாவிரதத்தை முடித்துக் கொண்டார். அப்போது போராட்டத்தில் வன்முறை பரவியது குறித்துக் கவலை தெரிவித்தார். அவரது மனைவி கீதாஞ்சலி ராகுல் காந்தி நேர்மையற்றவராகச் செயல்படுவதாக குற்றம் சாட்டினார். 

2026 ஆம் வருடத்துக்கான நீட் தேர்வு மே மாதம் நடைபெற்று, சில நாட்களிலேயே  வினாத்தாள் கசிந்த விசயம் தெரிய வந்தது. உடனே மத்திய அரசு தலையிட்டு குற்றவாளிகளைக் கைது செய்தது, அதில் சம்பந்தப்பட்ட பதிமூன்று பேர் கைது செய்யப்பட்டு சிறையில் இருந்து வருகின்றனர். அவர்கள் மேலான வழக்கு விசாரணை வேகமாக நடைபெற்று வருகிறது. தொடர்ந்து ஜூன் மாதம் மறு தேர்வு நடத்தப்பட்டு, ஜூலையில் முடிவுகளும் அறிவிக்கப்பட்டு விட்டன. தற்போது மாணவர்கள் படிப்பில் சேர்வதற்குத் தயாராகி வருகின்றனர்.

ஜூலை 27 அன்று போராட்டக்காரர்களின் கோரிக்கையை ஏற்று, சமூக விரோதிகள் போராட்டக் களத்தில் பரவுவதைத் தடுக்க கல்வி அமைச்சர் தர்மேந்திர பிரதான் பதவியை விட்டு விலகினார். தேர்வு முறைகளைகளைச் சீரமைக்க மத்திய அரசு தொழில்நுட்ப நிபுணர் நந்தன் நிலங்கனி தலைமையில் உயர் மட்டக் குழுவை அமைத்துள்ளது. அக்குழு தேர்வுகளின் போது உண்டாகும் கசிவுகளைத் தடுக்கவும், தொழில் நுட்பத்தைப் பயன்படுத்தி தேர்வுகளை நடத்தவும் ஆலோசனைகள் வழங்கும். அதனடிப்படையில் தேவையான மாற்றங்கள் கொண்டு வரப்படும்.

மேலும் மோடி அரசு எதிர்க்கட்சிகளின் பல்வேறு குழப்பங்ளையும் மீறி பொதுத் தேர்வு முறைகேடுகள் தடுப்புச் சட்டத் திருத்த மசோதாவை மக்களவையில் நிறைவேற்றியுள்ளது. அது சட்டமானதும் தவறு செய்பவர்களுக்கு அதிக பட்சமாக பத்து வருட சிறைத் தண்டனையும், பத்து கோடி ரூபாய் வரை அபராதமும் விதிக்கப்படும். மேலும் சிறப்பு விரைவு நீதி மன்றங்கள் மூலம் வேகமாக வழக்குகள் முடிக்கப்படும். அதனால் தவறிழைப்பது தடுக்கப்படும்.

மே மாதம் நடந்த தேர்வில் தவறுகள் கண்டுபிடிக்கப்பட்டு, ஜூன் மாதமே மறு தேர்வும் நடத்தப்பட்ட பின்னர், புதிதாக ஆரம்பிக்கப்பட்ட கரப்பான் பூச்சி கட்சியினர் போராட்டத்தை நடத்தக் காரணம் என்ன? அவர்களுக்கு ஆதரவும், பின்புலமும் யார் என்பதைப் பார்க்கும் போது அதிர்ச்சியளிக்கும் செய்திகள் தெரிய வருகின்றன.

டெல்லியில் ஆரம்பித்த போராட்டத்தைத் தொடர்ந்து வேறு மாநிலங்களிலும் சிறிய அளவில் ஆர்ப்பாட்டங்கள் முன்னெடுக்கப்பட்டன. அங்கெல்லாம் கரப்பான் பூச்சி கட்சி இல்லை. ஆனால் அவற்றை இடதுசாரிகள் உள்ளிட்ட இயக்கங்களைச் சேர்ந்தவர்கள் வழி நடத்தியுள்ளனர். தமிழகத்தில்  சென்னையிலுள்ள இந்திய கம்யூனிஸ்டு கட்சியின் தலைமை அலுவலகத்தில் கரப்பான் பூச்சி கட்சி என்று ஒரு பேனரை மட்டும் தொங்க விட்டு  ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. அதில் எதிர்க்கட்சி பிரதிநிகள் மற்றும் வழக்கமான மோடி எதிர்ப்பு திரைத்துறை செயல்பாட்டாளர்கள் கலந்து கொண்டுள்ளனர்.

எனவே இந்தப் போராட்டத்தின் நோக்கம் தான் என்ன ? இந்தியா பிரதமர் மோடியின் தலைமையில் உலக அளவில் வேகமாக முன்னேறிச் சென்று வருகிறது. வெவ்வேறு துறைகளிலும் புதிய உச்சங்களைத் தொட்டு வேகமாக வளர்ந்து வருகிறது. தீவிரவாத, பிரிவினைவாத, தேச விரோத மற்றும் மதவாத சக்திகளைக் கட்டுப்படுத்தி கடிவாளம் போடும் நடவடிக்கைகள் வேகமாகச் செயல்படுத்தப்பட்டு வெற்றியடைந்து வருகின்றன. ஆகையால் அமெரிக்கா, சீனா, பாகிஸ்தான் உள்ளிட்ட பல நாடுகள் இந்தியாவின் முன்னேற்றத்தை விரும்பவில்லை. 

எனவே அதைச் சீர்குலைக்க வேண்டும். ஆகையால் நியாயமான முறையில் மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட மோடி அரசு செயல்படாமல் தடுக்க வேண்டும். இந்தக் கூட்டத் தொடரில் அரசு கொண்டுவரத் திட்டமிட்டுள்ள மசோதாக்களைச் சட்டமாக்கி விடக் கூடாது. அரசு மீதுள்ள நம்பகத்தன்மையைக் குறைத்து, மக்களின் நம்பிக்கையை இழக்கச் செய்ய வேண்டும் என்பவை தான் போராட்டத்தின் நோக்கம். அதனால் தான் அமெரிக்காவும், அவர்களை எதிர்க்கும் இடதுசாரிகளும் ஒன்று சேர்ந்துள்ளனர்.

அதனால்தான் போராட்டத்தின் பல இடங்களிலும் நீட் எதிர்ப்பை விட மோடி எதிர்ப்பே பிரதானமாக இருந்துள்ளது. இது ஏதோ மோடி என்கின்ற தனி நபர் மேல் இருக்கும் எதிர்ப்பல்ல. நமது தேசத்தின் ஜனநாயகத்தின் மேல் நிலவும் எதிர்ப்பு. அதனால் தான் போராட்டவாதிகளிடம் நெருக்கமாகவுள்ள யோகேந்திர யாதவ் இனிமேல் இந்தியாவின் எதிர்காலம் தெருக்களில் தான் முடிவு செய்யப்படும் எனக் குறிப்பிட்டுள்ளார்.

எனவேதான் பாராளுமன்றத்தின் ஒவ்வொரு கூட்டத் தொடரின் போதும் ஒரு பிரச்னையை எடுத்துப் பெரிதாக்கி பின்னர் தொடரை நடத்த விடாமல் முடக்குவது என்பது நடைபெற்று வருகிறது. இந்த விசயத்தில் காங்கிரஸ், சமஜ்வாதி, திமுக  போன்ற குடும்பக் கட்சிகள், மற்றும் இடதுசாரிகள் ஆகியோர் இணைந்து செயல்படுகின்றனர். அண்மையில் நடந்த சட்டமன்றத் தேர்தல் முடிவுகளுக்குப் பின் அவை ஒருங்கிணைந்து செயல்பட வாய்ப்பில்லை..

எனவே புதியதாகச் சில இளைஞர்கள் உருவாக்கிய அமைப்பே இல்லாத கரப்பான் பூச்சி கட்சியின் பின்னால் தங்களின் குறுகிய காலப் பலன்களுக்காக ஒளிந்து கொண்டு எதிர்ப்பைக் காட்டுகின்றனர். அந்த இளைஞர்களை யார் வேண்டுமானாலும் இயக்க முடியும். அது நாட்டுக்குப் பேராபத்து. பிரச்னைகளைப் பேசச் சட்டமன்றங்களும், பாராளுமன்றமும் உள்ளன. அவற்றின் மூலம் தீர்வு காண்பதே சரியான வழிமுறை.  அப்போதுதான் உலகின் பெரிய ஜனநாயகமாக விளங்கும் நமது நாட்டைக் காப்பாற்ற முடியும்.