உலக வர்த்தக அமைப்பும் உறுதி மிக்க இந்தியாவும்



உலக வர்த்தக அமைப்பு தொடங்கப்பட்டது முதற்கொண்டு அதில் பொருளாதாரத்தில் வளர்ச்சியடைந்த நாடுகளின் தாக்கமே அதிகமாக இருந்து வருகிறது. அதிலும் அமெரிக்கா போன்ற நாடுகள் பல சமயங்களிலும் மேலாதிக்க மனப்பான்மையுடன்  செயல்பட்டு வருவதாகக்  குற்றச்சாட்டுகள் உள்ளன. 

2001 ஆம் வருடம் அரேபிய நாடான கட்டாரிலுள்ள தோஹாவில் நான்காவது அமைச்சர்கள் மட்டத்திலான மாநாடு நடைபெற்றது. அப்போது  உலக வர்த்தகத்தை அதிகரிக்கும் நோக்கில் தோஹா சுற்றுப் பேச்சு வார்த்தை என்னும் முக்கிய முயற்சி தொடங்கப்பட்டது.

ஆனால் மிகுந்த எதிர்பார்ப்புகளை உருவாக்கிய   அந்தப் பேச்சு வார்த்தை மூலம் உறுப்பு நாடுகளுக்குள் ஒருமித்த கருத்தை உருவாக்க  முடியவில்லை. அதனால் 2003 மற்றும் 2008 ஆவது வருடங்களில் அந்தப் பேச்சுகள்  பெரும் தோல்வியில் முடிந்து உலக வர்த்தக அமைப்பையே கேள்விக் குறியாக்கின.

அதன் பின்னர் உலக வர்த்தக அமைப்பு தோல்வியில் முடிந்து விடக்கூடாதென்ற எண்ணத்தில் எப்படியாவது பேச்சு வார்த்தைகளைத் துவக்கி விட வேண்டும் என முடிவு செய்யப்பட்டது.  அதற்காக எல்லாப் பிரச்னைகளையும் ஒரு சேர எடுத்துக் கொள்ளாமல், குறிப்பிட்ட சில விசயங்களில் இருந்து மட்டும் ஆரம்பிப்பது என்று தீர்மானிக்கப்பட்டது.

தொடர்ந்து 2013 ஆம் வருடம் இந்தோனேசிய நாட்டிலுள்ள  பாலித் தீவில்  ஒன்பதாவது அமைச்சர்கள் மட்ட மாநாடு நடைபெற்றது. அதில் சர்வதேச வர்த்தகத்தை அதிகரிக்க உறுப்பு நாடுகளில் சுங்க   நடைமுறைகளை எளிமைப்படுத்துவது மற்றும் தேவையான     கட்டமைப்பு  வசதிகளை மேம்படுத்துவது பற்றிய விசயம் எடுத்துக் கொள்ளப்பட்டது.  

சர்வதேச வர்த்தகத்தைச் சுலபமாக்குவதற்கு உறுப்பு நாடுகளின்  சுங்க விதிமுறைகள் முறைப்படுத்தப் பட வேண்டும் என்பதும் அதற்கான நடைமுறைகள் எளிமைப்படுத்த வேண்டும் என்பதும் வளர்ச்சியடைந்த நாடுகளின் ஒரு முக்கிய  கோரிக்கையாகும். ஏனெனில் சுங்க நடைமுறைகள் சிரமமானதாகவும், வர்த்தகத்துக்குத் தேவையான கட்டமைப்பு வசதிகள் குறைந்தும்,  துறைமுகங்கள் நவீன மயமாக்கப்படாமலும் பல வளரும் மற்றும் ஏழை நாடுகளில் உள்ளது.  

எனவே வளரும் நாடுகள்  வர்த்தகத்தைச் சுலபமாக்கும் நடவடிக்கைகளை மேற்கொண்டால், உலக வர்த்தகம் ஒரு டிரில்லியன் டாலர்கள் ( ஏறத்தாழ அறுபது இலட்சம் கோடி ரூபாய்) அளவு அதிகரிக்கும் என்கின்ற கணக்கை மேற்குலக  நாடுகள்  முன் வைக்கின்றன. மேலும் பல இலட்சக்கணக்கான வேலை வாய்ப்புகளும்  அதிகரிக்கும் எனவும் கூறுகின்றன.  

சர்வதேச வர்த்தகத்தை  அதிகரிக்கும் வகையில் வளரும் நாடுகள் தேவையான நடவடிக்கைகளைத் தங்கள் நாடுகளில் எடுத்த பின்னர், அதனால் உண்டாகும் வாய்ப்புகளைப் பயன்படுத்தி வியாபாரத்தைப் பெருக்கிக் கொள்ளலாம் என்பது பணக்கார நாடுகளின் எண்ணமாக  உள்ளது.  அதே சமயம் வளரும் மற்றும் ஏழை நாடுகளைப் பொறுத்த வரையில் கட்டமைப்புகளை ஏற்படுத்துதல்  மற்றும் நவீன மயமாக்கல் ஆகியவற்றுக்கு  முதலீடுகள் போட நிதி வசதி தேவைப்படுகிறது. அதிலும்  ஏழை நாடுகளுக்குத் தமது மக்களின்   அடிப்படைத் தேவைகளைக்  பூர்த்தி செய்வது தான்  மிகவும்  முக்கியமானதாக உள்ளது.

பாலி மாநாட்டில் பேச்சுகளுக்கு எடுத்துக் கொள்ளப்பட்ட  இன்னொரு முக்கிய விசயம் அரசுகள் தம்மிடம் வைத்துக் கொள்ளும் உணவுக் கையிருப்பு, விவசாய உற்பத்திகளுக்கு நிர்ணயிக்கப்படும்     விலை,  விவசாயிகளுக்குக் கொடுக்கப்படும் சலுகைகள்  மற்றும் பொது விநியோகத் திட்டம்  சம்பந்தமானது. அதன்படி அரசாங்கங்களின் உணவுப் பொருட்கள் கையிருப்பு மற்றும் விவசாயத்துக்கான  சலுகைகள்  சம்பந்தப்பட்ட நாடுகளின் மொத்த விவசாய உற்பத்தியில் பத்து விழுக்காட்டுக்கு மேல் இருக்கக் கூடாது என்று சொல்லப்பட்டது. 

அதுவும் கூட 1986-88 இல் நிலவிய   விலை நிலவரப்படியே  எடுத்துக் கொள்ளப்படும் என்று தெரிவிக்கப்பட்டது. அதற்கு இந்தியா அப்போதே எதிர்ப்பு தெரிவித்தது. ஏனெனில் இந்தியா பெரும்பான்மை மக்கள் விவசாயத்தை சார்ந்து வாழும் நாடு. அதில் பெரும்பாலானவர்கள் சிறிய விவசாயிகள். அவர்கள் பலரும் மிகவும் சிரமப்பட்டு வேறு வழியில்லாமல் விவசாயம் செய்து வருபவர்கள். அவர்களின் விளை பொருள்களுக்குக் கொடுக்க வேண்டிய விலை மற்றும் சலுகைகளில் கைவைப்பது அவர்களின் வாழ்வாதாரத்தை மட்டுமன்றி, நாட்டின் உணவுப் பாதுகாப்பையும் கேள்விக் குறியாக்கி விடும்.

மேலும் பொது விநியோகத் திட்டத்தின் மூலம் நாடு முழுவதும் ஏழ்மை நிலையிலுள்ள பல கோடி மக்களுக்கு அத்தியாவசிய உணவுப் பொருட்கள் வழங்கப்படுகின்றன. அதைக் கொடுக்க வேண்டியது ஒரு அரசின் அடிப்படைக் கடமை. உலக வர்த்தக ஒப்பந்தம் என்ற பெயரில்  பணக்கார நாடுகள் அந்த விசயத்தில் தலையிடுவதை ஏற்க  முடியாது.

எனவே அது   குறித்து இந்தியா எதிர்ப்புத் தெரிவித்ததும், 2017 ஆம் ஆண்டு வரை மேலும் ஒரு நான்கு வருட காலத்துக்கு நடைமுறையில் உள்ள நிலை குறித்துக் கேள்விகள் எதுவும் எழுப்பப்பட மாட்டாது என்று சொல்லப்பட்டது. மேலும்  வர்த்தகத்தை எளிமைப் படுத்துதல் மற்றும் விவசாயம், பொது விநியோகம் சம்பந்தப்பட்ட  இரண்டு விசயங்களையும் தனித்தனியாகப் பார்க்க வேண்டும் என்று  வளர்ந்த நாடுகள் கேட்டுக் கொண்டன.  அதற்கு இந்தியா ஒப்புக் கொண்டது.

மேற்கண்ட விசயங்கள் குறித்து முடிவுகளை உறுதி செய்து அறிவிக்க உலக வர்த்தக அமைப்பு சென்ற ஜூலை மாதக் கடைசியில்  ஜெனிவாவில் பொதுக் குழுக் கூட்டத்தை ஏற்பாடு செய்திருந்தது. உறுப்பு நாடுகள் தங்களின் இறுதியான நிலைப்பாடுகளைத்  தெரிவிக்க ஜூலை 31 கடைசி  நாளாக அறிவிக்கப்பட்டிருந்தது.

இதற்கிடையில் இந்தியாவில் ஆட்சி மாற்றம் நடைபெற்றது.2014 மே மாதத்தில் பெரும்பான்மை பலத்துடன் வெற்றி பெற்று நரேந்திர மோடி தலைமையிலான அரசு பதவியேற்றது. புதிய அரசு வந்ததுமே பாலி மாநாடு சம்பந்தப்பட்ட விசயங்களில் அணுகுமுறை எப்படி இருக்குமென ஊகங்கள் எழுந்தன. உலக வர்த்தகத்தை அதிகரிக்க வேண்டும் என்கின்ற கருத்தை மையமாக வைத்து  எப்படியும் இந்தியாவை சம்மதிக்க வைத்து விட வேண்டுமென அமெரிக்கா போன்ற  நாடுகள்  விரும்பின.

ஆனால் முடிவு வேறு விதமாக அமைந்தது. உணவுப் பொருள் கையிருப்பு மற்றும் பொதுவிநியோகம் சம்பந்தமான விசயங்களில் வளர்ந்த  நாடுகளின் நிலைப்பாட்டை ஏற்க முடியாது என  இந்திய அரசு அறிவித்தது. அதே சமயம் சர்வதேச வணிகம் பெருக வேண்டுமென்பதில் மாற்றுக் கருத்து இல்லை எனவும் தெளிவு படுத்தியது.  

மேலும் மேற்கண்ட இரண்டு விசயங்கள் குறித்தும்  உலக வர்த்தக அமைப்பில் ஒன்றாகவே முடிவு செய்ய வேண்டுமென இந்தியா கூறியது. ஏனெனில் வர்த்தகம் சம்பந்தமான விசயம் முடிவுக்கு வந்து விட்டால்,  விவசாயம் சம்பந்தமான பிரச்னையை முடிக்க  மேற்கத்திய நாடுகள் ஆர்வம் காட்டுமா  என்பது சந்தேகமே.

எனவே மத்திய அரசின் மேற்கண்ட முடிவின் மூலம் நமது  சாமானிய மக்களின் நலன்கள் பாதுகாக்கப்பட்டுள்ளன. உணவுப் பொருட்களின் கையிருப்பு மற்றும் பொது விநியோகம் ஆகியவை  பற்றி நாம்தான் முடிவு செய்ய வேண்டும். ஏனெனில் இங்கு சாதாரண நிலையிலும் வறுமைக் கோட்டுக்குக் கீழேயும்  அதிக எண்ணிக்கையில் மக்கள்  வாழ்ந்து கொண்டுள்ளனர். அப்படியிருக்கும் போது அவற்றுக்கான வரையறை மற்றும் செலவுகளைப் பிற  நாடுகள் குறைக்கச் சொல்லிக் கேட்பதை நாம் ஏற்க முடியாது.

அதே போல விவசாயம் சம்பந்தமான சலுகைகளைப் பற்றியும்  நாம் தான் முடிவெடுக்க வேண்டும்.  அமெரிக்க ஐரோப்பிய  நாடுகள் அவர்களின் விவசாயத்தைத் தக்க வைத்துக் கொள்ளப் பெருமளவு மானியங்களை அளித்து வருகின்றன. இத்தனைக்கும் அங்கு விவசாயத்தைச் சார்ந்து வாழுபவர்கள்  மிகவும் குறைவு. அமெரிக்காவிலுள்ள  விவசாயிகளின்  எண்ணிக்கை  ஏறத்தாழ இருபது இலட்சம் பேர்கள் மட்டுமே. ஆனால் அவர்களுக்கு சலுகைகளாக 120 பில்லியன் டாலர்களை ( ஏழு இலட்சத்து இருபதாயிரம் கோடி ரூபாய்கள்) அமெரிக்க அரசு வழங்குகிறது.

அதே சமயம் நமது நாட்டு மக்கள் தொகையில் சுமார் ஐம்பது விழுக்காடு பேர் விவசாயத்தை நம்பி வாழ்ந்து வருகின்றனர். ஆனால் அவர்களுக்கு நமது அரசு கொடுக்கும் சலுகைகள், அமெரிக்க அரசு கொடுப்பதில் பத்தில் ஒரு பாகம் மட்டுமே. அந்த நாடுகள் தங்களின் விவசாயத்தைக் காப்பாற்றப் பலவிதமான உதவிகளையும் செய்கின்றன.  அதே சமயம் இந்தியாவில்  பெரும்பாலான மக்கள் நம்பி வாழக்கூடிய அந்தத் தொழிலுக்குக் கொடுக்கப்பட்டு வரும்    குறைந்த அளவு சலுகைகளைக் கூடக் கட்டுப்படுத்த வேண்டுமென அந்த நாடுகள்  கோருகின்றன. 

மேலும் பாலி மாநாட்டில் நாட்டின் மொத்த விவசாய உற்பத்தி சம்பந்தமான மதிப்பை சுமார் இருபது வருடத்துக்கு முந்தைய நிலவரப்படி எடுத்துக் கொள்ள வேண்டுமெனத் தெரிவிக்கப்பட்டது. ஆனால் 1980 களிலிருந்து 2014 வரை விலைவாசி வெகுவாக அதிகரித்துள்ளது. எனவே பழைய மதிப்புகளின் அடிப்படையில் உணவுக் கையிருப்புகள், பொது விநியோகம் மற்றும் சலுகைகளைக் கட்டுப்படுத்த வேண்டுமென்று சொல்வது மக்களின் வாழ்வாதாரங்களைப் பாதிப்பதாகும்.  

பாலி மாநாட்டில் முந்தைய அரசு போதுமான முனைப்பினைக் காட்டவில்லை. எனவே இந்திய அரசின் தற்போதைய  நிலைப்பாடு அனைவராலும் வரவேற்கப்பட வேண்டியது. மேற்கத்திய நாடுகளின் வற்புறுத்தல்களுக்குச் சற்றும் வளைந்து கொடுக்காமல், உலக அரங்கில் தேசத்தின் நலனை மட்டுமே முதன்மையாக வைத்து உறுதியாகச் செயல்பட்டுள்ள மத்திய அரசின் நடவடிக்கைகள்   மிகவும் பாராட்டுதலுக்குரியவை.  

( தினமணி, ஆக.19,2014)

No comments: