அறிவுசார் நக்சல்கள் ஆபத்தானவர்கள்

 

அண்மையில் செங்கோட்டையில் நடைபெற்ற எண்பதாவது சுதந்தர தின நிகழ்ச்சியில் பேசிய பிரதமர் மோடி பல வருடங்களாக நாட்டில் ஆயுதமேந்திச் செயல்பட்டு வந்த நக்சல்களை ஒழித்து விட்டோம்; ஆனால் அறிவுசார் (டிமாகி) நக்சல்கள் இன்னமும் நம்மைச் சுற்றி இருந்து வருகிறார்கள் எனக் குறிப்பிட்டார்.

மேலும் அத்தகு நபர்கள் தமக்குப் பொருத்தமான சூழ்நிலைகளுக்காகக் காத்துக் கொண்டிருக்கிறார்கள் ; சூழ்நிலை உண்டாகும் போது வன்முறை மற்றும் அரசியல் குழப்பத்தை ஏற்படுத்துவார்கள்; எனவே அவர்களை அடையாளம் கண்டு தனிமைப்படுத்த வேண்டும் எனவும் எச்சரித்தார்.  

நக்சலைட் இயக்கம் 1967 ஆம் வருடம் மேற்கு வங்க மாநிலத்திலுள்ள நக்சல்பாரி கிராமத்தில் ஆரம்பமானது. சீன கம்யூனிஸ்ட் தலைவர் மாசேதுங் சித்தாந்தத்தை ஒட்டி தொடர் புரட்சியின் மூலமாக  அரசாங்கத்தைத் தூக்கி எறிய வேண்டும் என்பதே  இயக்கத்தின்  நோக்கமாகும்.

 போக்குவரத்து வசதிகள் அதிகமில்லாத அடர்ந்த காடு மற்றும் மலைப்பகுதிகளில் அவ்வியக்கம் அதிகம் பரவியிருந்தது. அதனால் சட்டிஸ்கர், ஜார்கண்ட், ஒடிசா மற்றும்  பீகார் மாநிலங்கள் அதிகமான பாதிப்புக்கு ஆளாகின. மேலும் மகாராஷ்டிரா, தெலுங்கானா, ஆந்திரா, மத்தியப் பிரதேசம் மற்றும் மேற்கு வங்க மாநிலப் பகுதிகளிலும் அவை செயல்பட்டு வந்தன.

மக்களை அரசுக்கு எதிராகத் தூண்டி விடுவது, வளர்ச்சித் திட்டங்களைத் தடுப்பது, பாதுகாப்புத் துறையினர் மற்றும் பொது மக்களைக் கொல்வது, கொள்ளையடிப்பது, பொதுக் கட்டமைப்புகளைத் தகர்ப்பது, சிறுவர்கள் மற்றும் இளைஞர்களை வன்முறையில் ஈடுபடுத்துவது உள்ளிட்ட  செயல்களில் அந்த இயக்கத்தினர் ஈடுபட்டு வந்தனர். இருபது வருடங்களுக்கு முன்னர் 180 மாவட்டங்களில் அவர்களின் செயல்பாடு இருந்தது. 2004ல் தொடங்கிய பத்தாண்டு கால காங்கிரஸ் கூட்டணி ஆட்சிக் காலத்தில் பொதுமக்கள் மற்றும் பாதுகாப்புப் படையினர் சுமார் ஏழாயிரம் பேர் கொல்லப்பட்டனர்.  

2014 ஆம் ஆண்டு மோடி அரசு வந்த பின்னர் நக்சலிசத்தைக் கட்டுப்படுத்த ஒருங்கிணைந்த கொள்கையை அறிவித்தது. அதன்படி உறுதியான செயல் திட்டம் வகுக்கப்பட்டு, உள்துறை அமைச்சகத்தின் தலைமையில் தீவிரமாக நடைமுறைப் படுத்தப்பட்டது. நக்சல் பாதித்த பகுதிகளில் வளர்ச்சிக்குத் தேவையான  கட்டமைப்பு வசதிகள் மேம்படுத்தப்பட்டன.  நக்சல் தீவிரவாதிகளுடன் பேசி அவர்களுக்குச் சரணடையும் வாய்ப்புகள் கொடுக்கப்பட்டன. சரண் அடைபவர்களுக்கு ஊக்கத் தொகை மற்றும்  திறன் மேம்பாட்டுப் பயிற்சியுடன் உதவித் தொகையும் வழங்கப்பட்டன. எதற்கும் உடன்படாதவர்கள் துப்பாக்கிக் குண்டுகளுக்கு இரையாயினர்.    

கடந்த பன்னிரெண்டு வருடகால  முயற்சிகளால், இடது சாரி தீவிரவாதம் பாதிக்கப்பட்ட மாவட்டங்களின் எண்ணிக்கை 126 என்பதிலிருந்து இரண்டாகக் குறைந்துள்ளது. கடுமையான பாதிப்புகளுக்கு ஆளாகி இருந்த 35 மாவட்டங்கள் இன்று முழுதும் விடுபட்டு விட்டன. எனவே சென்ற மார்ச் மாத இறுதியில் இந்தியா நக்சல்கள் இல்லாத நாடாக மாறி விட்டது என உள்துறை அமைச்சர் அறிவித்தார். ஆகையால் நமது நாட்டுக்கு மிகப்பெரும் உள்நாட்டுப் பாதுகாப்பு சவாலாக விளங்கி வந்த  அறுபதாண்டு கால ஆயுதம் தாங்கிய  இயக்கம் இப்போது  ஒழிக்கப்பட்டு விட்டது மோடி அரசின் மகத்தான சாதனையாகும்.

அதே சமயம் ஆயுதம் ஏந்தாத இடதுசாரி சிந்தனை கொண்ட அறிவு சார் நக்சல்கள் இன்றும் கல்வி, எழுத்து, பத்திரிக்கை, சினிமா, நீதி, பொது வாழ்க்கை, அரசியல் எனப் பல துறைகளிலும் தீவிரமாகச் செயல்பட்டு வருகின்றனர். வன்முறை மற்றும் தீவிரவாதத்தை நியாயப்படுத்துவது, நாட்டின் இறையாண்மைக்கும், ஒற்றுமைக்கும் எதிராகச் செயல்படுவது, நமது வரலாறு, பாரம்பரியம் மற்றும் தன்மைகளை மறுப்பது, வளர்ச்சித் திட்டங்களை எதிர்ப்பது, மக்களிடையே பிரிவினையை விதைப்பது, ஜனநாயகத்துக்கு எதிராகக் குரல் கொடுப்பது உள்ளிட்டவை அவர்களின் செயல்களாக உள்ளன.

அவற்றின் மூலமாக மக்களிடையே குழப்பம் மற்றும் வெறுப்புணர்வை ஏற்படுத்துவது, முன்னேற்றத்தைத் தடுப்பது, கலவர சூழ்நிலையை உருவாக்குவது, அரசியல் அமைப்புகளின் மேல் அவ நம்பிக்கையை உருவாக்குவது உள்ளிட்டன அவர்களின் நோக்கங்களாகும். அதற்காக அவர்கள் தேச விரோத, தீவிரவாத, பிரிவினைவாத  மற்றும் அந்நிய சக்திகளுடன் இணைந்து செயல்படுகின்றனர்.  அதற்கான நிதிகளைத் தவறான வழிகளில் சட்ட விரோதமாகப் பெறுகின்றனர்.

சில உதாரணங்கள் மூலம் அறிவுசார் நக்சல்களின் செயல்களைப் புரிந்து கொள்ளலாம். பிரபல அகழ்வாராய்ச்சி நிபுணர் கே.கே. முகமது அயோத்தி ராம ஜன்ம  பூமி ஆய்வுகளில் ஈடுபட்டவர். அப்போது பூமிக்கடியில் கோவில் இருந்ததற்கான ஆதாரங்கள் இருந்ததை நேரில் பார்த்தவர். ஆனால் பெரிய பல்கலைக் கழகங்களில் பிரபலமாக இருந்த வரலாற்றுப் பேராசிரியர்கள் அதற்கு ஆதாரமே இல்லை என வாதிட்டார்கள். அதன் மூலம் மக்களைத் திசை திருப்பினார்கள். நீதி மன்றம் அவர்களை என்ன ஆதாரத்தை வைத்துச் சொல்கிறீர்கள் எனக் கேட்ட போது, அவர்களிடம் ஆதாரம் எதுவும் இல்லை. கலாசார முக்கியத்துவம் வாய்ந்த விசயத்தில் கூசாமல் பொய் சொன்னவர்கள் தான் அவர்கள்.

பண்டைய காலத்திலிருந்து தொடர்ந்து பல நூறாண்டுகள் உலகின் இரு பெரும் பொருளாதாரங்களில் முதன்மையாக  விளங்கியது இந்தியா என்பது வரலாற்று உண்மை. பின்னர் காலனியாதிக்க காலத்தில் நாடு சுரண்டல்களுக்கு ஆளாகி ஏழையானது. அதனால் சுதந்திரத்துக்குப் பிந்தைய ஆரம்ப காலங்களில் வளர்ச்சி விகிதம் 3.5 விழுக்காடு இருந்தது. அதை இந்து வளர்ச்சி விகிதம் என இடதுசாரிப் பொருளாதார நிபுணர்கள் குறிப்பிட்டனர். சரித்திரப் பூர்வமான காரணங்களால்  உண்டான குறைவான வளர்ச்சிக்கு இந்து மதத்தைக் கொச்சைப்படுத்தினார்கள். 

1990 சமயத்தில் ஜம்மு- காஷ்மீர் மாநிலத்திலிருந்து மத தீவிரவாதிகளால் சுமார் ஆறு லட்சம் இந்துக்கள் துரத்தியடிக்கப்பட்டனர். பல பேர் கொடூரமாக  கொல்லப்பட்டனர். நூற்றுக்கணக்கான பெண்கள் மானத்தை இழந்தனர். அவர்களின் சொத்துக்கள் எல்லாம் மற்றவர் கைகளுக்குச் சென்றன.  சொந்த நாட்டிலேயே அவர்கள் அகதிகளாகத் தள்ளப்பட்டனர். இங்கிருந்து தூரத்திலுள்ள பாலஸ்தீனத்துக்கு ஆர்ப்பாட்டம் நடத்தும் அரசியல்வாதிகள், பத்திரிக்கையாளர்கள், அறிவு ஜீவிகள் எனப் பலரும்  அது பற்றி வாயே  திறக்கவில்லை. மோடி அரசு வந்த பின்னரே அந்த மக்களின் துயரங்கள் வெளியில் வர ஆரம்பித்துள்ளன. 

 இந்தியர்களைப் பிரிப்பதற்காக அந்நிய சக்திகளால் உருவாக்கப்பட்ட ஆரிய திராவிட வாதம் கட்டுக்கதை என்பது ஐரோப்பியர்களாலேயே அறிவியல் பூர்வமாக நிரூபிக்கப்பட்டு விட்டது.   ஆனாலும் தமிழகத்தில் ஒரு  கூட்டம் அதை இன்னமும் முன் வைத்து வருகிறது. அதே போல உலகின் கல்வி மையமாக விளங்கி வந்த நமது நாட்டில்,   மக்களனைவருக்கும் இலவசமாகக்  கிடைத்து வந்த கல்வி முறையை ஆங்கிலேயர்கள் அழித்தார்கள் என்பது அவர்களே ஒத்துக்கொண்ட உண்மை.

அதே சமயம் பத்தொன்பதாம் நூற்றாண்டின் தொடக்கம் வரையிலும் பிரிட்டனில் கல்வி பரவலாக இல்லை என்பதும் அவர்களே சொன்னது. ஆனாலும் ஆங்கிலேயர் இங்கு வந்த பின்னரே நமது நாட்டுக்கு கல்வி வந்தது என்று தொடர்ந்து தமிழக அமைச்சர்கள் உள்ளிட்ட பலரும்  இன்று  வரை பேசி வருகின்றனர்.  இவையெல்லாம் அறிவுசார் நக்சல்களின் தாக்கங்கள்.

தமிழகத்தில் கூடங்குளம் அணுமின் நிலையம் அமைப்பதற்கு எதிராகப் போராட்டங்கள் நடந்த போது அதில் அந்நியத் தலையீடு இருக்கிறது என அப்போதைய பிரதமர் மன்மோகன் சிங் குற்றம் சாட்டினார். பின்னர் ஸ்டெர்லைட் ஆலைக்கு எதிராகவும் போராட்டம் நடைபெற்று அது மூடப்பட்டது.  அதனால் பல தமிழ் குடும்பங்கள் வேலையிழந்தது மட்டுமன்றி நமது பொருளாதாரமும் பெருமளவு பாதிக்கப்பட்டது. 

பாகிஸ்தான், வங்காள தேசம் மற்றும் ஆப்கானிஸ்தான் நாடுகளில் வாழ்ந்து வரும் இந்து, சீக்கிய மற்றும்  கிறிஸ்துவ மதங்களைச் சார்ந்த சிறுபான்மை மக்களுக்குக் குடியுரிமை வழங்க வேண்டுமென்பது காந்திஜி, அம்பேத்கர், நேரு, பட்டேல் உள்ளிட்ட தலைவர்கள்  பலரும் உறுதியளித்த வாழ்வாதாரப் பிரச்னை. ஆனாலும், பாதிக்கப்பட்ட மக்களுக்கு உதவுவதற்காக எழுபது ஆண்டுகளுக்குப் பின்னர் அதைச் சட்டமாக்க அரசு நடவடிக்கை எடுத்த போது அது குறிப்பிட்ட மதத்துக்கு எதிரானதாகச் சித்தரிக்கப்பட்டது. அதனால்  நாட்டின் பல பகுதிகளிலும் ஆர்ப்பாட்டங்கள் நடத்தப்பட்டன. 

கடந்த பல தசாப்தங்களாகத் தொடர்ந்து பல தளங்களிலும் இந்த மாதிரி வேலைகளைச் செய்து வருபவர்கள் அறிவுசார் நக்சல்கள். மோடி அரசு வந்த பின்னர் மத்திய அரசு இறையாண்மை, தேச ஒற்றுமை, கலாசாரப் பாதுகாப்பு, ஒட்டு மொத்த வளர்ச்சி உள்ளிட்ட அடிப்படை விசயங்களில் சமரசமில்லாமல் உறுதியாக இருந்து வழிநடத்தி வருகிறது.   அதனால் கடந்த காலங்களில் பயமில்லாமல் உள்ளடி வேலைகளைச் செய்து வந்த சக்திகள் தற்போது செய்வதறியாமல் தவிக்கின்றன.

நாடு வேகமாக முன்னேறி உலக அளவில் பலம் பொருந்தி வருவது அவர்களுக்குப் பிடிக்கவில்லை. எனவே மோடி அரசின் திட்டங்கள் மற்றும் செயல்பாடுகள் பலவற்றுக்கும் எதிர்ப்புத் தெரிவிப்பதும்,  மக்களிடையே வெறுப்பை விதைப்பதும் அதிகரித்து விட்டது.  அதற்கு அந்நிய சக்திகள் ஆதரவளித்து வருவது அண்மையில் டெல்லியில் நடந்த கரப்பான் பூச்சி இயக்க ஆர்ப்பாட்டங்களில் அம்பலமானது.

எனவே நக்சல் சிந்தனையுடன் அறிவுசார் தளங்களில் செயல்பட்டு வருபவர்கள் மிகவும் ஆபத்தானவர்கள். அவர்களின் செயல்பாடுகள் நமது நாட்டையும், அதன் முன்னேற்றத்தையும் பெருமளவு பாதிக்கக் கூடிவை. ஆகையால் இந்தத் தருணத்தில் அவர்களின் சதி வலைகளில் வீழ்ந்து விடாமல் எச்சரிக்கையோடு இருந்து, அவர்களை ஒதுக்கி வைப்பது நமது முக்கிய கடமையாகும். 

வன்முறையை துாண்டி, நியாயப்படுத்துவதே அறிவுசார் நக்சலிசம்!

( சிந்தனைக் களம், தினமலர், ஆக.30,2026)


 

No comments: