பிரச்சன மற்றும் மாண்டூக்ய உபநிடதங்கள் – தமிழாக்கம்


வாழ்த்துரை

பேரா..கனகசபாபதி

உறுப்பினர், இந்திய சமூக அறிவியல் மற்றும் ஆராய்ச்சி நிறுவனம், புது டெல்லி

உறுப்பினர், ஆட்சி மன்றக் குழு, பாரதியார் பல்கலைக் கழகம், கோவை



உபநிடதங்களை  ’உலகத்தின் மிகவும் ஆச்சரியப்பட வைக்கும் பாடல்கள்’ என சுவாமி விவேகானந்தர் வர்ணிப்பார். அவை தொன்மையான நமது கலாசார வரலாற்றுக்கு   ஆதாரமான இலக்கியங்கள். பண்டைய காலந்தொட்டு இந்து சமயத்தின் மையக் கருத்துக்களையும் எண்ணங்களையும் தாங்கி நிற்பவை. மேலும் பன்னெடுங்காலமாக நமது  தேசத்தின்  ஆன்மிக எண்ணங்களின் வளர்ச்சிக்கு முக்கிய பங்காற்றி வருபவை.

பாரத நாடு உலகின் மிக உயர்ந்த பண்பாடு; பல்லாயிரம் ஆண்டுகளாக வாழையடி வாழையெனத் தொடர்ந்து நடை போட்டு வரும் பெருமைக்குரியது. பொருளாதாரம், அறிவியல், வாழ்க்கை முறை எனப் பலவற்றிலும் உயர்ந்து நின்று தனித்தன்மை வாய்ந்த சிறப்பான முறைகளை அமைத்துக் கொண்டது. மனித வாழ்வின் இறுதி நோக்கம் எதுவாக இருக்க முடியும் என்று தீர்க்கமாகக் கண்டறிந்தது.  அதன் வெளிப்பாடுகள் தான் வேதங்கள் மற்றும் உபநிடதங்கள். உபநிடதங்களைப் பொருத்த வரையில் பிரம்மா மற்றும் ஆத்மா ஆகிய இரண்டும் தான் கருப்பொருட்கள். ’உனது ஆன்மாவை அறிந்து கொள்’ என்பது அவற்றின் மையக் கருத்து.

வாழ்க்கையின் நோக்கத்தை அறிந்து கொள்ளும் போதுதான் ஒவ்வொருவரின் வாழ்வும்  அர்த்தமுள்ளதாகிறது. அந்த வகையில் வேதங்களும் உபநிடதங்களும்  வாழ்வின் அடிப்படை உண்மைகளை மனித இனத்துக்குப் போதிக்கின்றன. அந்த உண்மைகள் பாரதப் பாரம்பரியம் உலகுக்கு அளித்த வரப்பிரசாதங்கள்.  அவற்றின் சிறப்புகளை அறிந்த வெளி நாட்டு அறிஞர்கள், பதினாறாம் நூற்றாண்டு முதலே அவற்றை மொழி பெயர்க்கத் தொடங்கினர். அதனால் உபநிடதங்கள்  பெர்சியன், ஆங்கிலம், பிரெஞ்சு, ஸ்பானிஷ், உருது மற்றும் ஜப்பானிய மொழி உள்ளிட்ட வெவ்வேறு மொழிகளிலும்  தொடர்ந்து மொழியாக்கம் செய்யப்பட்டு வந்துள்ளன.

அவற்றைப்  படித்த உலகின் முக்கியமான சிந்தனையாளர்கள்  மற்றும் தத்துவ ஞானிகள் பலரும் அவற்றால் பெரிதும் ஈர்க்கப்பட்டனர்.  ஆங்கிலக் கவிஞர் மில்டன், ரஷ்ய எழுத்தாளர் டால்ஸ்டாய்,  அமெரிக்க சிந்தனையாளர்கள் எமர்சன் மற்றும் ஹென்றி டேவிட் தோரோ,  கவிஞர்  வால்ட் விட்மன் மற்றும் ஆங்கிலேய மொழியியல் ஆய்வாளர்  வில்லியம் ஜோன்ஸ் மற்றும்  மேக்ஸ் முல்லர் உள்ளிட்டவர்கள் அவர்களில் குறிப்பிடத்தக்க சிலர்.  அதனால் அவர்கள் வேத உபநிடதங்களை வெகுவாகப் பாராட்டினர்.

பத்தொன்பதாம் நூற்றாண்டைச் சேர்ந்த ஜெர்மானிய தத்துவ அறிஞர் ஆர்தர் ஸ்கோபென்ஹௌர் உபநிடதங்களை மனித இனத்தின் மிக உயர்ந்த வெளிப்பாடு’ எனப் புகழ்ந்து கூறினார்.  அவை அசாத்தியமான  திறமை கொண்டவர்களால் படைக்கப்பட்ட  உச்சபட்சமான முயற்சி எனத் தான் கருதுவதாகவும் குறிப்பிட்டார்.  உபநிடதங்களின்  தாக்கத்தை அவர்களின் சிந்தனைகளும்  எழுத்துக்களும்  மேற்கத்திய நாடுகளில் பிரதிபலித்தன. அதனால் அங்கு சிந்தனை மாற்றங்கள் ஏற்படத் தொடங்கின.

சுவாமி விவேகானந்தர் 1893 ஆம் வருடத்தில் அமெரிக்கா சென்ற போது,  அங்கு  உபநிடதங்கள் பற்றி மக்களிடையே பேசினார். அப்போதே அவர்களுக்கு உபநிடதங்கள் குறித்துக் கேட்பதற்கான ஒரு அடித்தளம் போடபட்டிருந்தது. அதற்குக் காரணம் எமர்சன், தோரோ மற்றும்  விட்மன் போன்ற  அமெரிக்க சிந்தனையாளர்கள் உபநிடதக்  கருத்துக்களையொட்டிய சிந்தனைகளை அதற்கு முன்னரே மக்களிடையே விதைத்திருந்தனர்.  

நமது நாட்டில் ஆங்கிலேயர்களின் ஆட்சிக் காலத்தில் ஏற்பட்ட சீரழிவுகள் நமது பாரம்பரியக் கல்வி முறையை வெகுவாகப் பாதித்தன. பின்னர் சுதந்திரம்   பெற்ற பின்னரும் போதுமான அளவு தேசிய நோக்கில் மாற்றங்கள் நிகழவில்லை. அதனால் நமது பெரும் பொக்கிஷங்களான உபநிடதங்கள் குறித்துப் பாடத்திட்டத்தில் போதிக்கப்படுவதில்லை. எனவே அந்த ஞானச் செல்வங்களின் பலன்  கிடைக்காமல் நாம் இருந்து வருகிறோம்.

அந்த வகையில் பேரா.செ.ஞானபூபதி ஐயா அவர்கள் தொடர்ந்து எடுத்து வரும் முயற்சிகள் மிகவும் போற்றுதலுக்குரியவை. முக்கியமான தேர்ந்தெடுத்த உபநிடதங்களை அழகிய முறையில் தமிழாக்கம் செய்து நமக்கு அளித்து வருகிறார். இந்தப் புத்தகத்தில் பிரச்ன மற்றும் மாண்டூக்ய உபநிடதங்களை நமக்கு அளித்துள்ளார். 

உபநிடதங்களை எடுத்துச் சொல்ல அவர் கையாண்டு வரும் விதம் அற்புதமாக உள்ளது. முதலில் சமஸ்கிதத்தில் உள்ளவாறு பாடல்கள் கொடுக்கப்பட்டுள்ளன. பின்னர் அவற்றை அப்படியே தமிழ் உச்சரிப்புடன் கொடுத்துள்ளார். தொடர்ந்து தமிழில் மொழி பெயர்த்துப் பாடல்கள் கொடுக்கப்பட்டுள்ளன. அதன் பின்னர் எளிமையான தமிழில் அனைவரும் புரிந்து கொள்ளும் வண்ணம் உரைநடையில்  விளக்கம் கொடுக்கப்பட்டுள்ளது.

தொடர்ந்து பாடல்களில் உள்ள விசயங்களுக்குத் தேவைப்படும் விளக்கங்கள் வருகின்றன. மேலும்   தேவைப்படும் இடங்களில் சுவாமி  ஆசுதோஷானந்தர் அவர்களின் மொழி பெயர்ப்புகள், தமிழ் இலக்கியங்களிலிருந்து மிகப் பொருத்தமான வரிகள், , பகவத் கீதை, பிற உபநிடதங்கள் மற்றும் சுவாமி விவேகானந்தரின் மேற்கோள்கள் எனக் கொடுக்கப்பட்டு ஒரு முழுமையான முறையில் நூல் எழுதப்பட்டுள்ளது.

உபநிடதங்களின் மொழி பெயர்ப்பாகத் தமிழில் கொடுத்துள்ள பாடல்கள் மிகவும் கவித்தன்மை உடையதாகவும் அதே சமயம் எளிமையாகவும் அமைந்துள்ளன. அதனால் அந்த மொழிபெயர்ப்புகள்,  புத்தகத்தை மேலும்  படிக்கத் தூண்டும் வகையில் அமைந்துள்ளன.  உதாரணமாக மழையாகப் பிராணன் பொழிந்து,  அதனால் உணவு வகைகள் அனைவருக்கும் கிடைத்து உயிரனங்கள் மகிழ்ச்சியுடன் வாழும் என உபநிடத வரிகள் வருகின்றன. அதற்கான மொழி பெயர்ப்பு இப்படி வருகிறது.

மழையாகப் பிராணன் நீ பொழியும் போது

மகிழ்வுடனே உயிரினங்கள் நிலைத்திருக்கும்

பிழையாமல் உணவு வகை அனைவருக்கும்

பெருமளவில் மனமாரக் கிடைக்கும் அன்றே!

மிகவும் அருமை. எவ்வளவு எளிமையான தமிழில்  உபநிடதங்கள்!

இந்தப் புத்தகத்தின் மூலம் ஐயா அவர்கள் தமிழ் கூறும் நல்லுலகத்துக்குப் இரண்டு முக்கிய வகைகளில் பங்களித்துள்ளார்கள்.  முதலாவதாக உலகின் மிக உயர்ந்த உபநிடதக் கருத்துகளை தமிழ் மக்களிடையே கொண்டும் செல்லும் அரிய பணி. இது மகத்தானது; மிகவும் அவசியமானது. இதை விவரிக்க வார்த்தைகளே இல்லை. ஐயாவின் இந்தப் பணி தொடர வேண்டும். அதன் மூலம் அதிகம் புலமையில்லாத மக்களுக்கும் உபநிடதக் கருத்துக்கள் சென்றடைய வேண்டும்.

இரண்டாவதாக தமது புத்தகங்கள் மூலம் மொழி பெயர்ப்புத் துறையில் ஒரு தனிப் பாதையை ஐயா உருவாக்கி வருகிறார்கள். பிற மொழியில் உள்ள விசயங்களை  புத்தகம்  படிப்பவர்களுக்கு எந்த வித சிரமமும், சந்தேகமும் இல்லாமல் எளிய முறையில் தெளிவாகப் படைக்க முடியும் என்பதை   எடுத்துக் காட்டி வருகிறார்கள்.

ஐயாவின் ஆழ்ந்த புலமையும்,  தெளிந்த அறிவும், உயர்ந்த நோக்கும்,  அர்ப்பணிப்பு மனப்பான்மையும் புத்தகம் படிக்கும் போது தெரிய வருகிறது.  எல்லாம் வல்ல முருகப் பெருமான் அவருக்கு நீண்ட ஆயுளையும், வேண்டிய அனைத்து செல்வங்களையும் அளிக்க வேண்டும்.  உபநிடதம் குறித்த புத்தகங்கள் வெளி வருவதற்கு பக்தர் பேரவையின் மாநிலச் செயலாளர் எக்ஸ்லான் திரு. கே.இராமசாமி அண்ணா அவர்கள் பெரும்பங்காற்றி வருகிறார்கள். அவர்களின் சமுதாய மற்றும் கல்விப்பணிகள்  மென்மேலும் சிறப்பாக அமைய வேண்டும்.

இந்த சமயத்தில் சுவாமி விவேகானந்தர் உபநிடதங்களின் முக்கியத்துவம் குறித்துச் சொன்ன கருத்துக்கள் ஞாபகத்துக்கு வருகின்றன.  உபநிடதங்கள் வலிமையளிக்கும்  மிகப் பெரிய ஊற்று. மொத்த உலகத்துக்கும் புத்துயிர் அளிக்கக் கூடிய வலிமை அவற்றில் உள்ளது; அவற்றின் மூலம் உலக முழுவதையும் வலிமையாக்க முடியும்.  நலிவடைந்த நிலையிலும், கீழான நிலையிலும் இருக்கக் கூடிய எல்லா வித மக்களும் அவற்றின் வார்த்தைகளால் சொந்தக் கால்களில் நின்று சுதந்திரமாக உலவ முடியும். உடல், மனம் மற்றும் ஆன்மிக விடுதலைதான் உபநிடதங்களின் நோக்கம்.

இந்தப் புத்தகம் இரண்டு உபநிடதங்களில் கூறப்பட்டுள்ள நுட்பமான விசயங்களைத் தெளிவாக விளக்குகிறது. இதை அனைவரும் வாங்கிப் படித்துப் பயன் பெற வேண்டும் என உங்களைக் கேட்டுக் கொள்கிறேன்.

உபநிடதங்களைத் தமிழர்களுக்குக் கொண்டு செல்லும் புனிதமான பணியில் ஈடுபட்டுள்ள அனைவருக்கும் எனது சிரம் தாழ்ந்த வணக்கங்கள்.

( புத்தக வெளியீடு -  திருக்கோவில் பக்தர் பேரவை, திருப்பூர், விளம்பி வருடம், சித்திரை 1, 2018)


இந்தியப் பொருளாதாரத்தில் பெண்களின் பங்கு


இந்திய தேசம் நீண்ட நெடிய பாரம்பரியமுள்ள தொன்மையான பண்பாடு.  இன்றைக்கும் வாழ்ந்து வரும் பெருமையுடையது. பொருளாதாரப் பின்னணி இல்லாமல் எந்த ஒரு நாடோ அல்லது பண்பாடோ நீடித்து இருக்க முடியாது. அந்த வகையில் நம்முடைய பண்பாடு பல்லாயிரம் ஆண்டு காலமாகத் தொடர்ந்து வாழ்ந்து வருகின்றதென்றால், அதற்கெனத் தனித்துவம் வாய்ந்த பொருளாதார வரலாறு  அடிப்படையாக உள்ளது என்பதை நாம் புரிந்து கொள்ள வேண்டும்.

கடந்த இரண்டாயிர வருடத்துக்கான உலக நாடுகளின் பொருளாதார வரலாற்றை நவீன அளவு கோல்களின் அடிப்படையில் பொருளாதார வரலாற்றாசிரியர் ஆங்கஸ் மாடிசன் வெளியிட்டுள்ளார். அதன்படி பொது யுகம் தொடக்க காலத்தில், அதாவது இன்றைக்கு 2018 வருடங்களுக்கு முன்பே, இந்தியப் பொருளாதாரம் உலகின் முதல் நிலையில் இருந்து உலகப்  பொருளாதரத்துக்கு  முப்பத்து மூன்று விழுக்காடு பங்களித்துக் கொண்டிருந்தது.  மேலும் கடந்த இரண்டாயிர வருட காலத்தில் பெரும்பான்மையான காலம் நமது தேசம் தான் உலகின் பெரிய செல்வந்த நாடாக விளங்கி வந்தது.  ஆங்கிலேயர்களின் சுயநலமும் சூழ்ச்சிகளுமே நமது பொருளாதாரத்தின் வீழ்ச்சிக்குக் காரணமாகியது.

அதனால் இருபதாம் நூற்றாண்டின் தொடக்கத்தில் நாம் ஒரு ஏழை நாடாக, வளர்ச்சி இல்லாத நாடாக ஆக்கப்பட்டோம்.  எனவே சுதந்திரம் வாங்கிய போது சுமார் 45 விழுக்காடு பேர் வறுமைக்கோட்டுக்குக் கீழே வாழ்ந்து வந்தனர். பாரம்பரியமான தொழில்கள் எல்லாம் நசுக்கப்பட்டு,  80 விழுக்காட்டுக்கு மேற்பட்ட மக்கள் விவசாயம் மற்றும் அது சார்ந்த தொழில்களை  நம்பி மட்டுமே உயிர் வாழும் நிலைக்குத் தள்ளப்பட்டிருந்தனர். அதனால் நமது நாட்டுக்கு உலக அரங்கில் ஒரு மரியாதை இல்லாத சூழ்நிலை நிலவி வந்தது.

ஆனால் இப்போது எழுபது வருடம் கழித்து, நமது நாடுதான் உலக அளவில் முதல் நிலையில் வருவதற்கு அதிக வாய்ப்புகளைக் கொண்டதாக இருக்கிறதெனப் பன்னாட்டு அமைப்புகள் மற்றும் சர்வதேச ஆய்வு நிறுவனங்கள் உள்ளிட்ட அனைத்துமே ஒரு மனதாகக் கணிக்கின்றன.  மேலும் கடந்த சில வருடங்களாக உலகின் வேகமாக வளரக் கூடிய நாடாக இந்தியா உருவெடுத்துள்ளது. இன்றைக்கு உலகின் பல பகுதிகளிலும் நமது தொழில்களும், வியாபாரங்களும் பரவியுள்ளன. மேலும் சர்வதேச அளவில்  வெவ்வேறு துறைகளிலும் இந்தியர்கள் மிக முக்கிய நிலையில் இருந்து வருகின்றனர்.

அதனால் நமது நாட்டுக்கான செல்வாக்கு இப்போது நாளுக்கு நாள் அதிகரித்து வருகின்றது. 1947 ல் இந்தியா ஒரு வறுமையான, வளர்ச்சி குறைந்த, பின் தங்கிய நாடு. ஆனால் இன்று உலகமே அதிக நம்பிக்கையுடன் எதிர்பார்க்கும் ஒரு பெரிய சக்தி. உலக வரலாற்றை எடுத்துப் பார்த்தால்  எந்த ஒரு நாடும் ஒரு எழுபது வருட காலத்தில் தனது நிலைமையை இவ்வளவு தலைகீழாக மாற்றியதாக சரித்திரம் இல்லை. இத்தனைக்கும் சுதந்திரத்துக்குப் பின்னர் நம்மை ஆட்சி செய்தவர்கள் நமக்குப் பொருத்தமில்லாத மேற்கத்திய சித்தாந்தகளை ஒட்டியே பெரும்பான்மையான காலம் கொள்கைகளை வகுத்து வந்துள்ளனர். அப்படி இருந்தும் நமது நாடு சீக்கிரமாக மேலெழுந்து வர என்ன காரணம்?

நாட்டின் பல பகுதிகளிலும் கடந்த இருபது வருடங்களுக்கு மேலாக நடத்தப்பட்டு வரும் கள ஆய்வுகள் நமது வளர்ச்சிக்கு அடிப்படையே தொன்மையான நமது கலாசாரமும்  பாரம்பரிய விழுமியங்களும் தான் என அறுதியிட்டுக் கூறுகின்றன.   அண்மைக் காலமாக மேற்கத்திய நிபுணர்கள் கூட கலாசாரம் பொருளாதாரத்தில் முக்கிய பங்கு வகிக்கிறது என ஒத்துக் கொள்கின்றனர். இந்திய வாழ்க்கை முறையே கலாசாரத்தை மையமாகக் கொண்டது எனவும், வாழ்க்கையின் வெவ்வேறு அம்சங்களும் ஒன்றுக்கொன்று பின்னிப் பிணைந்தவை எனவும்  ‘ ஒருங்கிணைந்த மனித நேயம்’ தத்துவத்தை முன் வைத்த சிந்தனையாளர் தீனதயாள் உபாத்யாயா அவர்கள் ஐம்பது வருடங்களுக்கு முன்னரே எடுத்துச் சொன்னார்.

நமது கலாசாரத்தையும் பாரம்பரியத்தையும் கட்டிக் காத்து வருவது குடும்பங்களும் அவற்றை ஒட்டிய  சமூகங்களும் ஆகும்.  அதனால் தான்  நமது நாட்டில் அதிகப்படியான  சேமிப்புகள், தொழில் முனையும் தன்மை, அதிக அளவில் குறு/ சிறு மற்றும் நடுத்தரத் தொழில்கள், சமூக மூலதனம், சமூகங்களால் உந்தப்படும் வளர்ச்சி ஆகியன இருந்து வருகின்றன.  நமது பொருளாதாரத்தின் சிறப்பே அதன்  குடும்பம் சார்ந்த தன்மையாகும்.  அதுதான் நமக்கு முக்கியமான வலுவாகும். அதன் மூலம் பொருளாதாரம் பெருமளவு சுயசார்பு பெற்றதாகவும், அரசாங்கங்களைச் சார்ந்து நிற்காமலும் இருந்து வருகிறது.

நமது பொருளாதாரத்தில் தொடர்ந்து மூன்றில் ஒரு பங்கு அளவு அல்லது அதற்கு மேலாக சேமிப்புகளைக் கொடுத்துக் கொண்டு  வருவது குடும்பங்களும் அவை சார்ந்த அமைப்புகளும் தான். குடும்பம் சார்ந்த குறு, சிறு மற்றும் நடுத்தரத் தொழில்கள் தான்  நாட்டின் வருமானத்துக்கு அறுபது விழுக்காட்டுக்கு மேல் பங்களித்து வருகின்றன. மேலும் நமது தேசத்தில் அதிகப் படியான பேருக்கு வேலை வாய்ப்புகளைக் கொடுத்ஹ்டு வருவதும்  குடும்பம் சார்ந்த தொழில்கள் தான்.  

குடும்பங்கள் நிலைத்திருப்பதால் தான் நமது பொருளாதாரமும் நிலைத்த தன்மையைக் கொண்டிருக்கிறது. அதனால் நாட்டுக்குப் பொருளாதார சிரமங்கள் வரும்போது  குடும்பங்கள் அதைப் போக்க உதவி வருகின்றன. மக்களின் சேமிப்புகள் அதிகமாக இருப்பதால் தான் நாட்டின் பொருளாதார வளர்ச்சிக்குத் தேவையான மூலதனம் வெளியார் உதவி அதிகமின்றி  நம்மாலேயே மிகப் பெருமளவு திரட்டப்படுகிறது. அதனால் வெளி நாட்டு மூலதனத்தை நம்பி வாழாத நாடாக நாம் இருந்து வருகிறோம்.

வெளிநாடுகளில் வாழ்ந்து வரும் இந்தியர்கள் கூட தங்கள் குடும்பங்கள் மூலம் நாட்டுக்கு  முக்கியமான அந்நியச் செலவாணியைப் பிரச்னையைத் தீர்க்க பல சமயங்களில் உதவியுள்ளனர் என ஆய்வுகள் தெரிவிக்கின்றன. உலக அளவில் வெவ்வேறு  நாடுகளைச் சேர்ந்தவர்களும் தங்களின் நாடுகளில் இருந்து பிற நாடுகளுக்குச் சென்று வருமானம் ஈட்டி வருகின்றனர். அவ்வாறு வருமானம் ஈட்டுபவர்கள் தாய் நாடுகளில் உள்ள தங்களின் குடும்பங்களுக்குப் பணம் அனுப்புவார்கள். அவ்வாறு அனுப்புவதில் கடந்த பல வருடங்களாகவே உலகிலேயே அதிகமான அளவு தொகையைத் தாய் நாட்டுக்கு  அனுப்புவர்கள் நமது இந்தியர்கள் தான்.  அப்படி அவர்கள் தங்களின் குடும்பங்களுக்கு அனுப்பிய வெளி நாட்டுத் தொகைகள் தான் நமது பொருளாதார பிரச்னையைத் தீர்க்க உதவியுள்ளது.

ஒவ்வொரு குடும்பத்துக்கும் ஆதாரமாக விளங்குவது பெண்கள் தான். பாரதக் கலாசாரத்தில் பெண்மை என்றாலே தாய்மை;  தாய்மை என்றாலே தெய்வீகம். பெண்மை என்பது அன்பு, பாசம், அரவணைப்பு, தியாகம் ஆகிய நற்பண்புகள் அனைத்துக்கும் அடையாளமாக விளங்கி வருகிறது.  அந்த வகையில் பெண்கள் தமது குணங்கள் மற்றும் செயல்பாடுகள் மூலம் இந்தியப் பொருளாதாரத்தில் மிக முக்கியமான பங்கினை வகித்து வருகின்றனர்.

உதாரணமாக நமது சேமிப்புகளில் பெண்களின் தாக்கம் முக்கியத்துவம் வாய்ந்தது.  அதிலும் சேமித்த பணத்தைத் தங்கத்தில் முதலீடு செய்வது என்பதில் அவர்களின் பங்கு மிகவும் அதிகம். கடந்த இரண்டு மூன்றாண்டுகளுக்கு முன்னர் வரை உலகத்தின் தங்க உற்பத்தியில் சுமார் இருபது விழுக்காடு அல்லது அதற்கு மேல் நமது நாட்டினரால் தான் வாங்கப்பட்டது. அவை மிகப் பெரும்பாலும் வெளிநாடுகளில் இருந்து இறக்குமதி செய்யப்படுகின்றன. சராசரியாக வருடம் சுமார் ஆயிரம் டன்கள் அல்லது மேலும் கூட வாங்கப்பட்டு வந்தன. அதனால் நமது நாட்டில் தங்க இருப்பு அதிகமாக உள்ளது. 

சில வருடங்களுக்கு முன்னால் நாட்டில் சுமார் 25000 டன் அளவு தங்கம் இருக்கலாம் எனத் தோரயமாக ஒரு மதிப்புப் போடப்பட்டது. உலக அளவில் மக்கள் அதிக அளவில் தங்கம் வைத்திருப்பது நமது நாட்டில் தான். அதற்குக் காரணம் பெண்கள். தங்கத்தை அவர்கள் வெறும் முதலீடாக மட்டும் பார்க்காமல், ஒரு எதிர்காலத்துக்கான காப்பீடாகவும், பாதுகாப்பாகவும் பார்க்கிறார்கள். அதனால் தங்களின் தங்கக் கையிருப்புகளை அடுத்த தலைமுறைகளுக்கு அப்படியே கொடுத்து விட்டுச் செல்கின்றனர்.

சுதந்திரத்துக்குப் பிந்தைய நமது பொருளாதர வளர்ச்ச்சிக்கு இன்னொரு முக்கிய காரணம் கடந்த எழுபது வருடங்களாக ஏற்படுத்தப்பட்டு வரும் குறு, சிறு மற்றும் நடுத்தரத் தொழில்கள். அவையே பின்னர் பெரு நிறுவனங்களாக மாறுகின்றன. நமது நாட்டில் சுமார் எட்டரைக் கோடி பேர் ஏதாவது ஒரு தொழிலை ஆரம்பித்து நடத்தி வருவதாகச் சில வருடங்களுக்கு முன்னால் லண்டன் மேலாண்மை நிறுவன ஆய்வு தெரிவித்தது.  அநேகமாக உலகிலேயே அதிகமான பேர் தொழில் முனைவோராக இருப்பது நமது நாட்டில் தானாக இருக்கும். சிறு தொழில்களில் மட்டும் ஆறு கோடி பேருக்கு மேற்பட்டவர்கள் ஈடுபட்டிருப்பதாக அரசு விபரங்கள் தெரிவிக்கின்றன.

இவ்வாறு தொழில் முனைவோர்களுக்குப் பெரும் ஊக்க சக்தியாக பெண்கள் இருந்து வருகின்றனர். அவர்களின் அன்பு, பாசம், அரவணைப்பு, தியாகம் ஆகிய குணங்கள் குடும்ப உறுப்பினர்களைத் தொழிலில் ஈடுபடுத்த பெரிதும் உதவி புரிந்து வருகின்றன.  அந்த உதவி பெரும்பாலான  சமயங்களில் பெண்களுக்கே உரிய நற்குணங்கள் மூலமாக ஊக்கம், ஆதரவு என்கின்ற வகைகளிலும், சில சமயங்களில் நிதி உதவியாகவும் அமைகின்றன. அதனால் குழந்தைகளும், கணவன்மார்களும், சகோதரர்களும், பேரன்மார்களும்  தொழில் செய்ய உந்தப்படுகிறார்கள்.

நாட்டின் பல பகுதிகளிலும் தொழில் முனைவோர்களைப் பேட்டி கண்டபோது அவர்களின் வெற்றிக்கான முக்கிய காரணங்கள் என்னவென்று கேட்டோம்.  அப்போது அவர்களின் பதில்களில் அடிப்படையாகத் தெரிந்தது  குடும்பம் மற்றும்  பெண்கள் தான். பெண்கள் தாயாக மற்றும்  மனைவியாக என வெவ்வேறு நிலைகளிலும் குடும்ப  உறுப்பினர்களின் தொழில்களுக்கு அச்சாரமாக இருந்து  பொருளாதார முன்னேற்றத்துக்கு உதவி வருகின்றனர்.  பாட்டிகளும், திருமணமான சகோதரிகளும் கூட தொழில் முனைவோர்களுக்குப் பெரிய அளவில் ஊக்கமாக இருந்ததை எங்களின் ஆய்வுகளின் போது நேரில் பார்த்தோம்.

தமிழகத்தில் அதிக அளவில் உணவு விடுதிகள் வைத்திருக்கும் தொழில் முனைவோர்களைச் சந்தித்து ஆய்வு செய்த போது, அவர்களில் 25 விழுக்காடு பேருக்கு தங்களின் சகோதரிகள் அவர்களின் திருமணத்துக்குப் பின்னால் கணவன்மார்களின் மூலம் சகோதரர்களின் ஆரம்ப கால முதலீட்டுக்கு நிதி உதவி அளித்தது தெரிய வந்தது. திருப்பூரில் இன்று ஒரு பெரிய தொழிலதிபர், ஆரம்ப காலங்களில் பல முறை தோல்விகளை மட்டுமே சந்தித்து,  அவரது பாட்டியின் அன்பாலும், பாசத்தாலுமே வாழ்க்கையில் உச்சத்தைத் தொட்டதாகக் கண்ணீர் மல்கக் கூறினார்.

அண்மைக் காலம் வரை பெரும்பாலும் பெண்கள் விவசாயம் மற்றும் அது சார்ந்த தொழில்கள் எனக் குறிப்பிட்ட சிலவற்றில் மட்டுமே நேரடியாக ஈடுபட்டு வந்தனர்.  ஆனால் கடந்த சில ஆண்டுகளாக வெவ்வேறு தொழில்களில் நேரடியாகவும் ஈடுபட்டு வருகின்றனர். மத்திய அரசின் புள்ளி விபரப்படி மொத்த சிறு மற்றும் நடுத்தரத் தொழில்களில் பத்து விழுக்காட்டுக்கு மேல் அவர்களே நடத்தி வருகிறார்கள்.  கடந்த 2015 ஆம் பிரதமர் மோடி அவர்களால் அறிவிக்கப்பட்ட முத்ரா கடன் திட்டத்தின் கீழ் இதுவரை பத்து கோடி பேருக்கு மேல் பலன் பெற்றுள்ளனர். அதில் நான்கில் மூன்று பங்கு பேர் பெண்களாக உள்ளனர்.

 மேற்கத்திய பொருளாதாரங்களுடன் ஒப்பிடும் போது, நமது பொருளாதாரம் மிகுந்த  கவனம் கொண்டதாகவும், சேமிப்பு சார்ந்ததாகவும், ஒருவித  மென்மையானதாகவும் கூட இருப்பதாக அறிஞர்கள் கூறுகின்றனர்.  அவை பெரும்பாலும் பெண்மைக்கான குணங்கள். அதனால் இந்தியப் பொருளாதாரம் என்பதே பெண்மை சார்ந்தது எனச்  சிந்தனையாளர் குருமூர்த்தி  குறிப்பிடுகின்றார். இந்தியப் பொருளாதாரத்தைப் பொருத்த வரையில்  பெண்கள் ஒரு முக்கியமான  பங்கினை வகித்து, அதன் முன்னேற்றத்துக்கு அடிப்படையாக இருந்து  வருகின்றனர்.

( ஒரே நாடு புத்தாண்டு சிறப்பு மலர், சென்னை, ஏப். 2018)




Jati, Kinship and Entrepreneurial Development in Tamil Nadu - You tube

Prof.P.Kanagasabapathi's plenary talk on " Jati, Kinship and Entrepreneurial Development in Tamil Nadu" at the Swadeshi Indology Conference, IIT, Chennai, Dec. 2017.

Prof P.Kanagasabapathi's plenary talk on Jati, Kinship and Entrepreneurial development in TN