l வெளிநாட்டுக் கல்வி நிறுவனங்கள் (அனுமதி மற்றும் நடைமுறை ஒழுங்குபடுத்தும்) சட்ட வரைவை லோக்சபாவில் அறிமுகப்படுத்துவதற்கு, மத்திய அமைச்சரவை அனுமதி அளித்துள்ளது. இதன் மூலம் இந்த வரைவு அனேகமாக இந்த ஆண்டிலேயே, சட்டமாக இயற்றப்பட வாய்ப்புகள் உள்ளதாக தெரிகிறது.
வெளிநாடுகளைச் சேர்ந்த பல்கலைக் கழகங்களுக்கு, இந்தியாவில் நிறுவனங்களை அமைக்கவும், பட்டங்களை அளிக்கவும் இந்த வரைவு அனுமதிக்கிறது. கடந்த நான்கு வருடங்களாகவே, பல முனைகளிலிருந்து வந்த எதிர்ப்புகளால், இது கிடப்பில் போடப்பட்டிருந்தது.பின், அரசு செயலர்கள் குழுவுக்கு பரிந்துரைக்கப்பட்டு, சில பிரிவுகளில் மாற்றங்கள் மேற்கொள்ளப்பட்ட பின், தற்போது அறிமுகப்படுத்தப் பட்டுள்ளது. இப்போது கூட, முக்கிய எதிர்கட்சிகள், கல்வியாளர்கள், மாணவர்கள் அமைப்புகள் உள்ளிட்ட பல தரப்பிலிருந்தும், இந்த வரைவை சட்டமாக்கக் கூடாது என, எதிர்ப்புகள் வந்து கொண்டுள்ளன. ஆளுங்கட்சியிலேயே கூட, இது குறித்து ஒருமித்த கருத்து இல்லை.வெளிநாட்டுப் பல்கலைக்கழகங்கள் அனுமதிக்கப்பட்டால், நமது மாணவர்களுக்கு தேர்ந்தெடுக்கப் படுவதற்கென நிறைய பல்கலைக்கழகங்கள் இருக்கும் எனவும், அதனால் இங்குள்ள கல்வி நிறுவனங்களுக்கு, போட்டி அதிகரிக்கும் எனவும், அதன் மூலம் கல்வியின் தரம் உயரும் எனவும், கல்வி அமைச்சகம் சார்பில் கூறப்பட்டுள்ளது. உயர் கல்வி பெறுவோரின் எண்ணிக்கையை அதிகரிக்க மேலும் பல்கலைக்கழகங்களை அதிகரிக்க வேண்டும். அப்போது தான் வளர்ந்த நாடுகளைப் போல, நம் நாட்டிலும் அதிகம் பேர் படிக்க முடியும் என சொல்லப்பட்டுள்ளது.
கல்வித்துறை என்பது, நாட்டிலுள்ள மற்ற பல துறைகளைப் போன்றதல்ல. அது ஒவ்வொரு குடிமகனின் வாழ்க்கையையும் நிர்ணயித்து, நாட்டின் முன்னேற்றத்தில் முதன்மையான பங்கு வகிக்கும் அடிப்படையான துறை. ஒவ்வொரு பெற்றோரின் கனவும், தங்களது குழந்தைகள் நல்லவர்களாகவும், வல்லவர்களாகவும் ஆக்க, துணைபுரியும் கல்வியை கொடுத்து அவர்களின் வாழ்வையும், வளத்தையும் மேம்படுத்த வேண்டும் என்பதுதான். எனவே, அரசும், அதைச்சார்ந்த சமூகமும், கல்வி குறித்த கொள்கைகளில் மிகுந்த கவனம் எடுத்துக் கொள்ள வேண்டும்.
வெளிநாட்டுப் பல்கலைக்கழகங்கள் என்றவுடனே, நமது மனதில் தோன்றும் முக்கியமான நாடுகள், அமெரிக்கா, கனடா, ஆஸ்திரேலியா, ஐரோப்பா நாடுகள் உள்ளிட்டவைதான். அந்த நாடுகளில் மக்களின் வாழ்க்கை முறை, சமூக மற்றும் பொருளாதாரங்களின் தன்மை, அங்குள்ள கல்வி நிறுவனங்களின் செயல்பாடுகள் ஆகியவற்றை பற்றி பார்த்தாலே, அவர்களின் உயர்கல்வி பற்றிய நிலைமையை நம்மால் அறிய முடியும்.அமெரிக்கா, இங்கிலாந்து, ஆஸ்திரேலியா போன்ற உயர்கல்விக்கு பிரபலமான நாடுகளில், தனிநபர் சுதந்திரம் மேலோங்கி குடும்பங்களும், சமூகங்களும் வெகுவாக சிதைந்துவருகின்றன. அமெரிக்கா, ஆஸ்திரேலியா போன்ற நாடுகளில் நாற்பது சதவீதம் குழந்தைகள், திருமணமாகாத உறவுகளின் மூலம் பிறந்துள்ளன.
உலகின் பல பெரிய தொழில் நிறுவனங்களைக் கொண்டுள்ள அந்த நாடுகளில், அதிக கல்வி கற்றவர்கள் உயர் பொறுப்பில் உள்ளனர். அவர்கள் தவறான வழிமுறைகள் மூலம் தங்களது சுயலாபத்துக்காக அரசையும், மக்களையும் ஏமாற்றுவது அதிகரித்து வருகிறது. அதனால், புகழ்பெற்ற பல்கலைக்கழகங்கள் கொடுக்கும் கல்வி மற்றும் போதனை முறைகள் கூட முழுமையானதாக இல்லையென, அவர்களே ஒத்துக் கொள்கின்றனர். 'அண்மைக்காலமாக உலகில் ஏற்பட்டுள்ள பொருளாதார நெருக்கடிக்கு, கடந்த நாற்பது வருடங்களாகத் தாங்கள் போதித்து வந்த தவறான கோட்பாடுகளே காரணம்' என, அமெரிக்கா நாட்டைச் சேர்ந்த, நோபல் பரிசு பெற்ற, நிபுணர்கள் தற் போது வெளிப்படையாக ஒத்துக் கொள்கின்றனர்.மேற்கு நாடுகளின் வரலாற்றை பார்த்தோமானால், அவர் களது சமூக மற்றும் பொரு ளாதாரம் குறித்த பல கோட்பாடுகளும், அவர்களது நாடுகளிலேயே தொடர்ந்து தோற்றுப்போய் வருவது தெரியவரும்.
தற்போதைய நெருக்கடியால், அவர்களுக்கு ஏற்பட்டுள்ள பாதிப்பின் மூலம், அவர்கள் இப்போது வழி தெரியாமல் திகைத்துக் கொண்டுள்ளனர்.அதே சமயம் இந்தியா, பலவிதமான சிரமங்கள் மற்றும் பிரச்னைகளுக்கு இடையிலும் தொடர்ந்து முன்னேறி வருகிறது. அதனால், உலகிலேயே அதிகமான வேகத்துடன் வளரக்கூடிய இரண்டாவது நாடாக உருவாகியுள்ளது. பலவிதமான குறைபாடுகள் இருந்தபோதும், இந்தியாவின் பொருளாதார, குடும்பம் மற்றும் சமூக முறைகளை உலகின் பிற நாடுகள் முன்மாதிரியாக பார்க்கின்றன.அரசாங்கத்தால் ஆரம்பிக்கப்பட்ட இந்திய தொழில்நுட்ப நிறுவனங்கள், இந்திய மேலாண்மை நிறுவனங்கள், இந்திய அறிவியல் நிறுவனம் உள்ளிட்ட பல உயர் கல்வி நிறுவனங்கள், உலகின் எந்த நாட்டோடும் போட்டிபோட்டு வெற்றி பெருமளவு திறமையுள்ளவர்களை உருவாக்கி வருகின்றன.
தேவையான வசதிகளை அரசால் ஏற்படுத்திக் கொள்ள இயலாதெனில், அதை நம் நாட்டிலுள்ள தனியார் துறையிடமே கொடுத்து அவற்றை சரியான முறையில் கண்காணிப்பதுதான் பொருத்தமானதாக இருக்கும்.வெளிநாட்டுப் பல்கலைக்கழகங்களை பொருத்தவரையில், அவர்கள் இங்கு லாப நோக்கோடுதான் வருவர். அண்மையில் ஏற்பட்ட பொருளாதார நெருக்கடிக்குப் பின், அமெரிக்காவில் உள்ள அரசு நிதிஉதவி பெறும் கல்லூரிகள் மற்றும் பல்கலைக் கழகங்களுக்கான நிதி உதவிகளை பல மாநிலங்கள் வெகுவாகக் குறைத்து வருகின்றன.சம்பளம் கொடுக்க இயலாத நிலை ஏற்பட்டுள்ளதால், ஆசிரியர்கள் மற்றும் ஊழியர்களைக் குறைக்க நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.
இந்தப் பின்னணியில் அவர்களது சில கல்வி நிறுவனங்கள் தங்களைத் தொழிலில் தக்கவைத்துக் கொள்ள, வேறு நாடுகளை நோக்க ஆரம்பித்துள்ளன.அதிலும் இந்தியா போன்ற அதிக மக்கள் தொகை கொண்ட, வேகமாக வளரும் நாட்டில் வாய்ப்புகள் அதிகம். எனவே, இந்த சமயத்தில் அவர்கள் இங்கு வர முயற்சிப்பது அவர்களைக் காப்பாற்றிக் கொள்ளும் பொருட்டே .கல்வித் துறையில் நமது நாடு ஆரம்ப காலத்தொட்டு உயர்ந்த நிலையில் இருந்து வருகிறது. பத்தொன்பதாம் நூற்றாண்டின் தொடக்கத்தில் ஆங்கிலேயர்கள் இங்கு நடத்திய கணக்கெடுப்புகள் உலகிலேயே அதிக அளவு கல்வியறிவு பெற்ற மக்களைக் கொண்ட நாடாக இந்தியா இருந்தது எனத் தெரிவிக்கிறது. அதற்குப் பின்னர்தான் கல்வித்துறையின் பெருமளவு வீழ்ச்சி ஏற்பட்டுள்ளது.கல்வியானது கற்கும் ஒவ்வொருவரின் வாழ்வையும், நாட்டின் வளத்தையும் மேம்படுத்துவதாக அமைய வேண்டும்.
தற்போதைய பாடத்திட்டங்களை பெரும்பாலும், மேல்நாட்டு வாழ்க்கை முறை மற்றும் கோட்பாடுகளை சார்ந்தவையாகவே உள்ளன. இதைக் களைய பாடத் திட்டங்களிலும், செயல்பாடு முறைகளிலும், உரிய மாற்றங்களை அறிமுகப்படுத்த வேண்டும். தேவையான முதலீடுகளை செய்வதற்கு நம் நாட்டில் தனியார் துறை தயாராக உள்ளது. எனவே, அதை சரியான முறையில் பயன்படுத்திக் கொள்ள உரிய கொள்கை முடிவுகளை எடுக்க வேண்டும். தனிமனித வாழ்க்கையிலும், ஒட்டுமொத்த சமூக பொருளாதார நிலைகளிலும் பெருமளவு தோல்வியை தழுவி வரும் மேல் நாட்டினரிடமிருந்து எந்த விதமான உயர்கல்வியை நாம் எதிர்பார்க்க முடியும்? மற்ற பிற நாடுகளை விடவும் வலுவான ஆதாரங்களைப் பெற்றுள்ள நம்மால் ஏன் தேவையான மாற்றங்களை செய்ய முடியாது?
- பேராசிரியர் ப.கனகசபாபதி - இயக்குனர், தமிழ்நாடு நகரியல் பயிற்சி நிறுவனம்
| வாசகர் கருத்து |
by S Dhasarathan,chennai,India 26-04-2010 20:32:16 IST |
by va.me salahdeen,dubai,UnitedArabEmirates 25-04-2010 23:32:06 IST |
by S.R. SEKHAR,coimbatore,India 25-04-2010 19:12:44 IST |
by M Siva,KUWAIT,India 25-04-2010 17:07:38 IST |
by கணேஷ் ,Maldives,Maldives 25-04-2010 16:30:05 IST |
by R செந்தில்குமார்,zurich,Switzerland 25-04-2010 15:23:11 IST |
by Dr swami D. Francis,Libya,India 25-04-2010 14:13:42 IST |
by N R,Sana'a,Yemen 25-04-2010 13:25:30 IST |
by n வெங்கட்குமார்,trichy,India 25-04-2010 12:13:38 IST |
by p சேதுராமன் நன்னிலம் ,Dubai,UnitedArabEmirates 25-04-2010 11:29:49 IST |
by சாமிமுத்து சிவகுமார் ,singaporeanthivayal,India 25-04-2010 10:55:48 IST |
by g அழகுநம்பி,qatar,India 25-04-2010 08:44:11 IST |
by Paris EJILAN,-,France 25-04-2010 04:30:30 IST |
by k சுப்புராஜ்,Sharjah,India 25-04-2010 01:19:08 IST |

