பொருளாதாரத்தின் மையம் நமது குடும்பங்கள்




பொருளாதாரம் என்றாலே இரண்டே வகையான சித்தாந்தங்கள் தான்; ஒன்று முதலாளித்துவம், இன்னொன்று கம்யூனிசம் என்கின்ற கருத்து   மேற்கத்திய நாடுகளால் முன்வைக்கப்பட்டு இருபதாம் நூற்றாண்டு முழுவதுவமே உலக முழுமையும் அதிகமான கேள்விகளின்றி பரவிக் கிடந்தது.  அவற்றுக்கு எதிரான சில கருத்துக்கள் சிந்தனையாளர்கள் சிலரால்  எடுத்து வைக்கப்பட்டாலும்  அவை  முழுமையானதாக அமையவில்லை.

 நமது நாடு  சுதந்திரம் பெறுவதற்கு முன்னரே, சுதந்திரத்துக்குப் பின்னர் அரசு கடைப்பிடிக்க வேண்டிய பொருளாதார அணுகு முறைகள் குறித்து பரவலாகக் கலந்து ஆலோசிக்க வேண்டுமென மகாத்மா காந்தி கூறினார். ஆனால் நேரு அதை ஏற்றுக் கொள்ளவில்லை.  எனவே  சுதந்திரம் பெற்ற பின்னர், நேருவின் காங்கிரஸ் அரசு பொருளாதார அணுகுமுறைகள் குறித்து எந்த விதமான பெரிய விவாதங்களுமின்றி மேற்கத்திய சோசலிச சித்தாந்தத்தை மையமாக வைத்தது. அதன் அடிப்படையில் கொள்கைகள் வகுக்கப்பட்டன.

மேற்கத்திய சித்தாந்தங்கள் இரண்டுமே ஐரோப்பியாவில் தோன்றியவை. ஐரோப்பாவுக்கெனப் பெரிய வரலாறோ, அனுபவமோ கிடையாது.  பதினெட்டு மற்றும் பத்தொன்பதாவது நூற்றாண்டுகளில் அங்கு நிலவிய குறுகிய அனுபவங்களை வைத்து அவர்களின் கண்ணோட்டத்தில்   அந்தச் சித்தாந்தங்கள் எழுதப்பட்டன.  அவை உலக முழுமையையும் கருத்தில் கொண்டு எழுதப்பட்டவை அல்ல.

 நீண்ட நெடிய வரலாற்றையும், பல்வேறு வகையான சிறப்புகளையும் பெற்றது நமது நாடு. உயர்ந்த சிந்தனைகளை அடிப்படையாக வைத்து தனித் தன்மை வாய்ந்த வாழ்க்கை முறைகளை அமைத்துக் கொண்ட தேசம் நம்முடையது.  பல நூற்றாண்டுகளாக உலகின் எந்த நாட்டையும் விட பொருளாதாரச் செழிப்பும் வரலாறும் இங்கு நிலவி வந்ததைக் கடந்த முப்பது வருடங்களுக்கு மேலாக உலக அளவில் நடந்து வரும் ஆய்வுகள் தெளிவாக்குகின்றன.

மேற்கத்திய சிந்தனைகளே உலக முழுவதும் மட்டுமன்றி, நமது நாட்டிலும் கோலோச்சி வந்த சமயத்தில், நமது பண்பாடு மற்றும் உயர் சிந்தனைகளின் அடிப்படையில் நாட்டுக்குப் பொருத்தமான ஒரு தத்துவத்தை முன் வைத்தவர் பண்டித தீன தயாள் உபாத்யாயா அவர்கள். 1965 ஆம் வருடம் முதலாளித்துவமும் கம்யூனிசமும் மிக முக்கியமான இரு பெரும் சித்தாந்தங்களாக நடைமுறைப் பட்டு வந்த காலத்தில்,  அவற்றுக்கு மாற்றாக நமது நாட்டின் மண் வாசனை சார்ந்த சிந்தனைகளை அவர் எடுத்து வைத்தார்.

மேற்கத்திய கோட்பாடுகளில் பொருள் சார்ந்த வாழ்க்கை முறைகளே மையமாக உள்ளன. அவை இரண்டுமே ஒரு நாணயத்தின் இரண்டு பக்கங்கள் தான். அவை மனிதனின் முழுமைத் தன்மையைக் கணக்கில் எடுத்துக் கொள்வதில்லை.  எனவே ஒட்டு மொத்த மனிதனை மையமாக வைத்த சிந்தனா முறையை நாம் உருவாக்கிக் கடைப்பிடிக்க வேண்டுமென அவர் விரும்பினார்.

அதற்காகத் தான் தனது சிந்தனைகளை ‘ஒருங்கிணைந்த மனித நேயம்’ என்கின்ற அடிப்படையில் அவர் முன் வைத்தார். அவை மிகவும் ஆழமானவை. தொன்மையான நமது தேசத்தின் உயர் சிந்தனைகளையும், பண்பாட்டையும், வாழ்க்கை முறையினையும் அடிப்படையாகக் கொண்டவை. மனிதன் என்பவன் உடல் மட்டுமல்ல; மனம், ஆன்மா, புத்தி ஆகிய அனைத்தையும் ஒரு சேரக் கொண்டவன் என்கின்ற அடிப்படையில் அவர் தமது கருத்துக்களை எடுத்து வைத்தார்.

மேற்கத்திய பொருளாதாரச் சித்தாந்தங்கள் குவியல் தன்மையை ஆதராமாகக் கொண்டவை.  அதனால் மனித இனம் தனது நல்ல  குணங்களை இழந்ந்துள்ளது. எனவே மனிதனை உயர்ந்த நிலைக்குக் கொண்டு வரப் பரவலான பொருளாதார முறை வேண்டும் என அவர் கூறினார். ’ கடவுளின் உயர்ந்த படைப்பான மனிதன் தன்னுடைய அடையாளத்தை இழந்து கொண்டுள்ளான். அவனைச் சரியான இடத்தில் வைக்க வேண்டும். அவனுடைய பெருமையை உணர வைத்து, அவனுடைய திறமைகளை விழித்தெழுமாறு செய்து, அவனது தெய்வீக உயரங்களை அடைய முயற்சிக்குமாறு ஊக்குவிக்க வேண்டும். அது பரவலான பொருளாதாரம் மூலமே முடியும்.’

அவரது கருத்துக்கள் எவ்வளவு உண்மை என்பதை மேற்கத்திய சித்தாந்தங்கள் இரண்டும் தோற்றுப் போய் விட்ட இந்தக் காலத்தில் நம்மால் முழுமையாகப் புரிந்து கொள்ள முடியும். மேலும் அவர் எவ்வாறு காலத்தை மீறிய ஒரு தத்துவ ஞானியாக விளங்கியிருக்கிறார் என்பதுவும் தெரிய வருகிறது.  மனித இனத்துக்கு விரோதமான சித்தாந்தமான கம்யூனிசம் முழுதும் தோற்றுப் போய் விட்டது.  மக்களின் ஒட்டு மொத்த  வளர்ச்சிக்குப் பொருத்தம் இல்லாததாக மேற்கத்திய முதலாளித்துவம் உணரப்பட்டு விட்டது. 

நமது நாட்டில் சுதந்திரம் பெற்ற பின்னர் மிகப் பெரும்பான்மையான காலம் அதிகார வர்க்கம் மேற்கத்திய சித்தாந்தங்களை ஒட்டிய அணுகு முறைகள் மற்றும் திட்டங்களையே நடைமுறைப்படுத்த  முயற்சித்து வந்தது.  அவற்றின் பொருத்தமற்ற தன்மைகளை அது உணரவில்லை. அதனால் நாட்டின் ஒட்டு மொத்த முன்னேற்றம் பெரும் பாதிப்புக்குள்ளானது.

ஆனால் நடைமுறையில் இன்று வரை நமது பாரம்பரியம் சார்ந்த குடும்ப அமைப்பு முறையே சமூக, கலாசார, பொருளாதார விசயங்களில் முக்கிய பங்கு வகித்து வருகிறது. அதனால் தான் நமது பொருளாதாரம் இன்றைக்கும் பெருமளவு வலுவாக இருந்து வருகிறது. அதனால் நமது தேசத்தில் ‘ ஏட்டுச் சித்தாந்தங்களை மீறிய முன்னேற்றம்’ தொடர்ந்து இருந்து கொண்டு வருகிறது.

பாரம்பரியம் மிக்க நமது குடும்ப அமைப்பு முறை இந்தியப் பொருளாதாரத்துக்கு எவ்வாறு அடிப்படையாக இருந்து வருகிறது என்பது குறித்து அறிவு ஜீவிகளோ, பல்கலைக் கழகங்களோ எடுத்துச் சொல்வதில்லை என்பது நமது பெரிய குறைபாடு. ஆனால் அது தான் நிதர்சனமான உண்மை என்பதை நமது கள ஆய்வுகளும் இந்தியப் பொருளாதாரத்தின் போக்கும் உணர்த்தி வருகின்றன.

ஒரு நாட்டின் பொருளாதார முன்னேற்றத்துக்கு அத்தியாவசியமாக இருக்க வேண்டியவை  அதிகமான சேமிப்பு, அதிக மூலதனம், கடின உழைப்பு, தொழில் முனையும் தன்மை உள்ளிட்ட காரணிகள் தான். இவை அனைத்தும் குடும்பங்களின் மூலமாக நமது நாட்டில் இயற்கையாகவே கிடைக்கின்றன.

சேமிப்பது என்பது நமது மக்களின் வாழ்க்கை முறை. அது  சமுதாயத்தின் எல்லா மட்டத்திலும் பரவிக் கிடக்கின்றது. அதனால் இன்று நமது நாடு உலக அளவில் அதிகமான சேமிப்புகளைக் கொண்ட சில நாடுகளில் ஒன்றாக உள்ளது.  சுதந்திரம் வாங்கிய போது நமது நாட்டில் ஏறத்தாழ பாதிக் குடும்பங்கள் வறுமைக் கோட்டுக்குக் கீழே வசித்து வந்தனர். ஆனால் அப்போது கூட சேமிப்பு ஒன்பது விழுக்காடு இருந்தது. இன்றைக்கு  பணக்கார நாடுகள் பலவற்றில்  ஒன்பது விழுக்காடு சேமிப்பு என்பது இயலாத காரியம்.

பின்னர் தொடர்ந்து சேமிப்புகள் அதிகரித்து வந்து கடந்த பல வருடங்களாகவே முப்பது விழுக்காட்டுக்கு மேற்பட்ட அளவில் சேமிப்புகள் நிகழ்ந்து வருகின்றன.  அதனால் முதலீடுகளுக்கான தொகை உள் நாட்டிலேயே அதிக அளவில் கிடைக்கின்றது. எனவே வெளி நாடுகளை அதிகமாக நம்பக் கூடிய பொருளாதாரமாக நமது நாடு இருக்கவில்லை. அதிகமான சேமிப்புகளுக்கும், முதலீடுகளுக்கும் காரணம் தங்களை  விடத் தமது குழந்தைகளின் எதிர்காலம் நன்றாக இருக்க வேண்டுமென எண்ணும் பெற்றோர்களைக் கொண்ட குடும்ப அமைப்பு முறைதான்.

குடும்பத்தின் நலனுக்காகக் கடினமாக உழைக்க வேண்டும் என்பது நமது கலாசாரம் சொல்லும் தர்மம். அதற்காகத் தாய்மார்களும், தந்தையர்களும், மூத்தவர்களும் அதிக அளவில் உழைப்பை மேற்கொள்கின்றனர். தங்களின் சொந்த விருப்பங்களைத் துறந்து குடும்ப நலனையே முக்கியமாக எடுத்துக் கொள்கின்றனர்.  அதற்காகப் புதிய தொழில்களில் நுழைகின்றனர். பல விதமான சிரமங்களையும் துணிச்சலாக மேற்கொள்கின்றனர்.  அதன் மூலம் குடும்பத்தை முன்னேற்றுகின்றனர். அதனால் நாடும் வளர்கின்றது.

சுதந்திரம் பெறுகின்ற போது நமது நாட்டின் விவசாயம், தொழில்,வியாபாரம் உள்ளிட்ட பல துறைகளும் ஐரோப்பியர்களால் அழிக்கப்பட்டிருந்தன. தொன்று தொட்டு உலகின் செழிப்பான தேசமாக விளங்கி வந்த இந்தியா அந்நியர்களால் பெருமளவு சிதைக்கப் பட்டிருந்தது.  ஆனால் சுதந்திரத்துக்கு அப்புறம்  உலகின் முக்கியமான பொருளாதார சக்தியாக உருவாகி வந்து கொண்டுள்ளது. அதற்குக் காரணம் குடும்பம் சார்ந்த நமது பல்துறை வளர்ச்சியாகும்.

கடந்த எழுபது வருடங்களில் தொழில், வணிகத்துறைகள் பெரிய  வளர்ச்சியை நோக்கிச் சென்று கொண்டுள்ளன.  இந்தியப் பொருட்கள் இன்று உலகின்பல பகுதிகளிலும் விற்பனையாகி வருகின்றன. நமது தொழில் மையங்களான சூரத், லூதியானா, திருப்பூர், கரூர், ஆக்ரா உள்ளிட்டவை உலக முழுவதும் பிரபலமான பெயர்களாக உள்ளன. அதற்குக் காரணம் நமது மக்களின் தொழில் முனையும் தன்மை.

பல வருடங்களுக்கு முன்னால் சாதாரணமாக இருந்து வந்த இடங்கள் இன்று நாட்டுப் பொருளாதாரத்துக்குப் பெரும் பங்காற்றி வருகின்றன. சிவகாசி, நாமக்கல், திருச்செங்கோடு, விருதுநகர் உள்ளிட்ட தமிழகத்தின்  பகுதிகள்  அனைத்தும் நமது சாதாரண மக்களின் கடும் உழைப்பால் நமது நாட்டின் முன்னேற்றத்தில் முக்கிய பங்கினை ஆற்றிக் கொண்டிருக்கின்றன. நமது குடும்பங்கள் மற்றும்  சமூகங்களின் குணங்களே அதற்கு அடிப்படையாகும்.

சீரழிக்கப்பட்டு மிகவும் மோசமான நிலையில் இருந்த ஒரு பொருளாதாரம், உலகமே எதிர்பார்க்கும் பெரிய பொருளாதார சக்தியாக ஓரு எழுபது வருடத்துக்குள் மாறியிருக்கின்ற அதிசயம் உலகப் பொருளாதார வரலாற்றில் வேறெங்கும் நிகழ்ந்ததில்லை. அது நமது நாட்டில் நடந்து வருகின்றதென்றால் அதற்குக் காரணம் தொன்மை வாய்ந்த நமது கலாசாரமும், குடும்ப மற்றும் சமூக நெறி முறைகளும் தான். எனவே நமது பொருளாதார அணுகுமுறை என்பது மேற்கத்திய சித்தாந்தங்களுக்கு மாற்றானது. அதைத் தான் தீனதயாள் உபாத்யாயா அவர்கள் எடுத்து வைத்தார்கள். அதனை அங்கீகரித்து முழுவதும் நடைமுறைப் படுத்துவது நமது கடமை.

( ஒரே நாடு – பண்டிட் தீனதயாள் உபாத்யாய நூற்றாண்டு விழா சிறப்பிதழ், சென்னை, ஏப்ரல் 2017)

ஐதரேய, கேன உபநிடதங்கள் புத்தகம் - வாழ்த்துரை


ஆசிரியர்: பேரா.ஜெ. ஞானபூபதி, வெளியீடு: திருக்கோவில் பக்தர் பேரவை, திருப்பூர்

வாழ்த்துரை

வேதங்களும் உபநிடதங்களும் தொன்மை வாய்ந்த இந்தியப் பண்பாட்டின் பெரும் பொக்கிஷங்கள்.   தவ வலிமை மிக்க ஞானிகளும், ரிஷிகளும் தங்களுடைய அயராத தேடுதல்களால் பல்லாண்டு கால முயற்சிகள் மூலமாக உருவாக்கிய சிந்தனைக் களஞ்சியங்கள். நமது தேசத்தின் உயர்ந்த தத்துவப் பாரம்பரியத்தை  இன்றளவும் உலகுக்குப் பறை சாற்றிக் கொண்டிருக்கும் கலாசார அடையாளங்கள்.  

உலக நாடுகள் பலவற்றுக்கும் தனித் தன்மை என ஒன்று உண்டு. நமது நாட்டைப் பொருத்த வரையில் தனித்தன்மை என்பது ஆன்மிகமே ஆகும்.  அதனால் தான் இன்று வரைக்கும் எல்லாவற்றிலும் நாம் இறைவனைப் பார்க்கிறோம்; எல்லாவற்றையும் இறை வடிவாகக் காண்கிறோம். ‘ காக்கை , குருவி எங்கள் ஜாதி,  நீள் கடலும் மலையும்   எங்கள் கூட்டம்,  நோக்க நோக்கக் களியாட்டம்’ என்று பாரதி சொல்வது அந்த நோக்கின் அடிப்படையில் தான்.

மேற்கத்திய சிந்தாந்தங்கள் குறுகிய நோக்குடையவை; ஒட்டு மொத்த வாழ்க்கையையும் முழுமையாக நோக்கும்  சிந்தனை அவற்றில் இல்லை. தனி மனிதத் தேவைகள் மற்றும் பொருளை மட்டுமே மையமாகக் கொண்ட பார்வை ஆகியவையே  அவற்றில் அடிப்படையாக உள்ளன. எனவே அந்த சித்தாந்தங்களை ஒட்டி அமைந்த வாழ்க்கை முறைகள்  தோல்வியடைந்து வருகின்றன.

பிரபஞ்சம், கடவுள், மனிதன், குடும்பம், ஆன்மிகம், பொருளாதாரம் என எல்லாவற்றையும் இணத்து ஒரு சேரப் பார்க்கின்ற தன்மை நமது கலாசாரத்துக்கே உரிய சிறப்பாகும்.  மேலும், உடல், ஆன்மா மற்றும்  வாழ்க்கையின் நோக்கம் உள்ளிட்ட நுட்பமான விசயங்களைப் பற்றி எல்லாம் ஆழமாக ஆராய்ந்து எடுத்துச் சொன்னவர்கள் நமது முன்னோர்கள்.

 அந்த வகையில் தான் வேதங்கள், உபநிடதங்கள் உள்ளிட்ட உயர் நூல்கள் நமது தேசத்தில் தோன்றி வந்துள்ளன. அவற்றின் முக்கிய அம்சமே  வாழ்வின் நிலையான உண்மைகளை எடுத்துச் சொல்லுவதுதான்.  அதனால் தான் உலகின் பல பகுதிகளிலும்  எவ்வளவோ மாற்றங்கள் நிகழ்ந்து வந்துள்ள போதும், கடந்த இரண்டாயிரம் ஆண்டுகளுக்கு மேலாக என்றைக்கும் மாறாத விசயங்களைச் சொல்லுபவையாக அவை நிலைத்து நின்று வருகின்றன. 

பழமைமையான நமது இந்து ஞானப் பாரம்பரியத்தில் உபநிடதங்கள் முக்கியத்துவம் வாய்ந்தவை. மகரிஷி அரவிந்தர் அவர்கள் உபநிடதங்களைப் பற்றிக் குறிப்பிடும் போது தேர்ந்தெடுத்த   வார்த்தைகளை உபயோகப்படுத்தி அவை ’இந்திய அறிவின் உயர்ந்த பங்களிப்பு’ எனச் சொல்லுவார்.   ஜெர்மானிய அறிஞர் மேக்ஸ் முல்லர் ‘ உபநிடதங்களை விட உணர்ச்சியும், எழுச்சியும், ஊக்கமும் ஊட்டக் கூடிய நூல் உலகில் வேறெதுவுமில்லை’ எனக் குறிப்பிடுகிறார்.

துரதிர்ஷ்டவசமாக நிலவி வரும் நமது இந்தியக் கல்வி முறையின் குறைபாடுகளால், வேதங்கள், உபநிடதங்கள் மற்றும் தமிழுக்குப் பெருமை சேர்க்கும் ஆன்மிக நூல்கள் பாடத்திட்டங்களில் இல்லை. அதனால் தொடர்ந்து பல தலைமுறைகளாக  அவை மக்களுக்குத் தெரியமாலேயே உள்ளன.

அதுவும் வேதங்களும், உபநிடதங்களும் சமஸ்கிருத மொழியில் எழுதப்பட்டுள்ளதன் காரணமாகவே அவற்றை ஏற்றுக் கொள்ளாத ஒரு வித்தியாசமான அரசியல் சூழ்நிலையை நாம் தமிழகத்தில் கடந்த ஐம்பது ஆண்டுகளாகப் பார்த்து வருகிறோம். அதனால் நாம் நமது  சந்ததிகளுக்கு எவ்வளவு பெரிய தவறு செய்து வருகிறோம் என்பதைப் புரிந்து கொள்ள வேண்டும்.

அந்த வகையில் பேராசிரியர் ஜெ.ஞானபூபதி ஐயா அவர்கள் செய்துள்ள இந்த முயற்சி மிகவும் போற்றுதலுக்குரியதாகும். ஐயா அவர்கள் ஆன்மிகத்தில் மிகுந்த அனுபவம் பெற்றவர். தமிழ் மற்றும் பிற மொழி ஆன்மிக இலக்கிய நூல்களைப் பெரிதும் கற்றறிந்தவர். முன்னமே கடோபநிடதம் குறித்து மிகச் சிறப்பாக எழுதியுள்ளவர்.

உபநிடதங்கள் இந்து மதத்தின் மையத் தத்துவக் கோட்பாடுகளைச் சொல்லுபவை. அவை பிரம்மனின் உண்மைத் தன்மையை எடுத்து வைத்து, மனித மோட்சத்துக்கான வழி மற்றும் குணங்களை விளக்குகின்றன. இந்திய மதங்கள் மற்றும் கலாசாரத்தில் அவை மிக முக்கியமான இலக்கியங்களாக உள்ளன. மேலும் பண்டைய காலந் தொட்டு இந்தியாவின் ஆன்மிகச் சிந்தனைகளின் வளர்ச்சிக்கு முக்கிய பங்காற்றி வந்துள்ளன.

பேராசிரியர் ஐயா அவர்கள் இந்த நூலுக்கு ஐதரேய மற்றும் கேன உபநிடதங்களை எடுத்துள்ளார். 108 உபநிடதங்களில் அவை இரண்டுமே முக்கிய உபநிடதங்களாகக்கருதப்படும்  பதின்மூன்றில் வருபவை. பகவான் ஆதி சங்கரரால் விளக்கம் எழுதப்பட்ட பெருமைக்குரியவை.

தொன்மையான ஐதரேயா உபநிடதம் மூன்று முக்கிய தத்துவக் கருத்துகளை முன் வைக்கிறது. கேன உபநிடதம் பிரம்மனை விவரிக்கிறது.  இது இந்து மதத்தின் வேதாந்த சிந்தனை வழிமுறைக்கு அடிப்படை நூலாகக் கருதப்படுகிறது.

இந்த நூலின் மிகச் சிறப்பான அம்சம் ஆசிரியர் உபநிடதங்களை விளக்கிச் சொல்லும் முறையாகும். உபநிடத வாக்கியங்கள் முதலில் சமஸ்கிருதத்தில் அப்படியே கொடுக்கப்பட்டுள்ளன. பிறகு அவற்றின்  தமிழ் உச்சரிப்புகள் கொடுக்கப்பட்டுள்ளன. அதன் மூலம் சமஸ்கிருதம் தெரியாதவர்கள் தமிழில் படித்து அதனைத் தெரிந்து கொள்ள முடியும்.

 பின்னர் அவற்றுக்கான விளக்கம் அழகிய தமிழில் கவிதையாக வடிக்கப்பட்டுள்ளது.  அதற்கடுத்து சுலபமாகப் புரிந்து கொள்ளும் வண்ணம் எளிமையான விளக்கம் கொடுக்கப்பட்டுள்ளது. அதனால் எல்லோரும் சிரமம் இல்லாமல் புரிந்து கொள்ள முடியும். தேவைப்படும் இடங்களில் சொல்லியுள்ள விசயங்களுக்கான அர்த்தங்கள்   விளக்கப்பட்டுள்ளன.

மேலும் உபநிடதங்களை முழுமையாகப் புரிந்து கொள்ளும் வகையில் தேவையான இடங்களில் பகவான் சங்கரரின் விளக்கம், திருமந்திரம், திருவாசகம் போன்ற உயர்ந்த ஆன்மிகத் தமிழ் இலக்கியங்கள், பாரதியார் கவிதை, ஆங்கில மொழி பெயர்ப்புகள், அண்மைக் காலங்களில் செய்தியாக வந்த பொருத்தமான கருத்துக்கள் ஆகியவற்றை நூலாசிரியர் எடுத்துத் தந்துள்ளார்கள்.  உபநிடதங்களை எளிமையாகவும், அதே சமயத்தில் முழுமையாகவும் எடுத்துச் சொல்லப் பேராசிரியர் எடுத்திருக்கும் முயற்சிகள் மிகவும் பாராட்டுதலுக்குரியவை.

சுவாமி விவேகானந்தர் அவர்கள் ‘ உபநிடதங்கள் வலிமை அளிக்கக் கூடிய பெரும் சுரங்கம். அங்கு மொத்த உலகையே தட்டி எழுப்பக் கூடிய போதுமான வலிமை உள்ளது’ என எடுத்துக் கூறினார்.   அதனால் ‘ ஒளிரக் கூடியதும் ,வலிமை தரக் கூடியதும், பிரகாசமான தத்துவமான துமான உபநிடதங்களுக்குச் செல்லுங்கள்’ என்கின்ற அறைகூவலை விடுத்தார்.

தமிழ் கூறும் நல்லுலகுக்கு அந்தப் பணியைச் செவ்வனே செய்யும் முயற்சியைப் பேராசிரியர் ஞான பூபதி தொடர்ந்து மேற்கொண்டு வருகிறார்கள். அளப்பரிய மதிப்பு மிக்க உபநிடதங்கள் தற்காலத்துக்கும் பொருத்தமானவை.  கேன உபநிடதம் அன்றே            ’அறிவும் ஆன்மாவும் அடைய வேண்டிய இலக்குகள்; எல்லா உயிரனங்களும் அவற்றை அடைய ஏங்குகின்றன’ எனச் சொல்லி  ’ஆன்மிக மனிதன்’ பற்றிப் பேசியது. அதையே இன்று நவீன மேலாண்மை நிபுணர்கள் மனிதனின்  ‘ ஆன்மிகத் தன்மை’  மூலமே வளர்ச்சி சாத்தியமாகும் எனக் கோட்பாடுகளை உருவாக்கி வருகின்றனர்.

பேராசிரியர் ஐயா அவர்களின் இந்த முயற்சி தமிழ் நாட்டுக்கு மிகவும் அவசியமானது. இதன் மூலம் உபநிடதங்கள் மக்களைச் சென்றடைய வேண்டும். இந்து ஞான மரபின் சிந்தனைகள் தமிழகம் முழுவதும் பரவ வேண்டும். அதன் மூலம் தமிழ் மக்கள் ஆன்மிக வெளிச்சம் பெற வேண்டும்.

இந்நூல் உருவாகக் காரணமாக இருந்து ஊக்கமளித்த மதிப்புக்குரிய திரு. எக்ஸ்லான் கே. இராமசாமி அவர்களுக்கும், திருக்கோவில் பக்தர் பேரவை பொறுப்பாளர்களுக்கும் எனது மனமார்ந்த பாராட்டுக்கள்.

ஒட்டு மொத்த வளர்ச்சிக்கான நிதி நிலை அறிக்கை


2017 ஆம் ஆண்டுக்கான நிதி நிலை அறிக்கை பல வகைககளில் வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்ததாக அமைந்துள்ளது. வழக்கமாக பிப்ரவரி 28 ஆம் தேதி தான் நிதி நிலை அறிக்கை சமர்ப்பிக்கப்படும். அவ்வாறு சமர்ப்பிக்கப்பட்டு அது ஏப்ரல் ஒன்றாம் தேதி முதல் நடை முறைக்கு வரும் போது போதிய கால அவகாசம் கிடைப்பதில்லை. அதனால் திட்டப்பணிகளைச் செயல்படுத்துவதில் அரசுக்குப் பல சிரமங்கள் ஏற்படுகின்றன. எனவே இந்த வருடம் முதல் நிதி நிலை அறிக்கை சமர்ப்பித்தல் பிப்ரவரி முதல் தேதிக்கு மாற்றப்பட்டுள்ளது. மேலும் ஆங்கிலேயர் காலந் தொடங்கி இது வரை இரயில்வேத் துறைக்கெனத் தனியான நிதிநிலை அறிக்கை சமர்ப்பிக்கப்பட்டு வந்தது. இந்த வருடம் முதல் அது பொது நிதி நிலை அறிக்கையுடன் இணைக்கப்பட்டுள்ளது. எனவே இனி மேல் இரயில்வேத் துறைக்கெனத் தனியான நிதி நிலை அறிக்கை இல்லை.

2017-18 நிதி நிலை அறிக்கையானது  ஏழைகள்  மற்றும் சாதாரண மக்கள், விவசாயம், கிராமப் பொருளாதாரம், குறு, சிறு தொழில்கள் மற்றும் அடிப்படைக் கட்டமைப்பு வசதிகளை மையப்படுத்தி அமைந்துள்ளது. நமது நாட்டுக்கு அடிப்படையாக விளங்கி வருவது விவசாயத் துறை. கடந்த பல வருடங்களாகவே விவசாயத் துறை பல்வேறு சிரமங்களைச் சந்தித்து வருகிறது. எனவே விவசாயம் மற்றும் கிராமங்களின் முன்னேற்றத்துக்கு அதிக முக்கியத்துவம் கொடுக்கப்பட்டுள்ளது.  விவசாயிகளுக்கான கடன் தொகை முன்னெப்போதும் இல்லாத வகையில்  பத்து இலட்சம் கோடி ரூபாய்க்கு உயர்த்தப்பட்டுள்ளது. விவசாயத்துக்குள்ள முக்கிய பிரச்னை நீர் மேலாண்மை இல்லாத தன்மை. எனவே அதிக அளவில் தடுப்பணைகள் கட்டுவதற்கான திட்டம் வெளியிடப்பட்டுள்ளது.

நமது பொருளாதாரத்துக்கு அதிக அளவில் பங்களிப்பது சிறு, குறு மற்றும் நடுத்தரத் தொழில்கள் ஆகும்.  அவை சாதாரண மக்களால் ஆரம்பிக்கப்பட்டு, அவர்களின் உழைப்பு மற்றும் அர்ப்பணிப்பின் மூலம் நாட்டின் தொழில் வளர்ச்சியில் பெரும் பங்காற்றி வருகின்றன. மேலும் நமது தேசத்திலுள்ள மொத்த வேலை வாய்ப்பில் அவை தான் 92 விழுக்காட்டுக்கு மேல் கொடுக்கின்றன. ஆனால் அவற்றின் வளர்ச்சிக்கு வெவ்வேறு வகையான சிரமங்கள் இருந்து வருகின்றன.  போதிய நிதி வசதிகள் இல்லை. அதற்காகத் தான் மத்திய அரசு 2015 ஆம் வருடம் முத்ரா வங்கியை அறிமுகப்படுத்தியது.  இந்த நிதி நிலை அறிக்கை ரூபாய் ஐம்பது கோடி வரை வருமானம் உள்ள நிறுவனங்கள்  செலுத்த வேண்டிய வரி விகிதம் 30 விழுக்காட்டிலிருந்து, 25 விழுக்காடாகக் குறைக்கப்பட்டிருக்கிறது. அதன் மூலம் அவற்றின் வளர்ச்சி அதிகரித்து வேலை வாய்ப்புகள் பெருகும் என எதிர்பார்க்கப்படுகிறது.

தனி நபர் வரி விகிதத்தைப் பொறுத்த வரையில் ரூபாய் 2,50,000 முதல் ரூபாய் 5,00, 000 வரை வருமானம் பெருபவர்கள் இது வரை பத்து விழுக்காடு வரி செலுத்தி வந்தனர். இப்போது அவர்களுக்கான வரி ஐந்து விழுக்காடாகக் குறைக்கப்பட்டுள்ளது.  இதன் மூலம் சாதாரண மக்களுக்கான வரிச் செலவு குறைக்கப்பட்டுள்ளது. மேலும் ரூபாய் ஐம்பது இலட்சம் வரை வருமானம் ஈட்டுபவர்களுக்கு சுமார் 12,5000 ரூபாய் அளவு பலன் கொடுக்கப்பட்டுள்ளது.
அதே சமயம் ரூபாய் ஐம்பது இலட்சம் முதல் ஒரு கோடி ரூபாய் வரை வருமானம் ஈட்டுபவர்களுக்கு பத்து விழுக்காடு சர்சார்ஜ் வரி போடப்பட்டுள்ளது. ரூபாய் ஒரு கோடிக்கு மேல் வருமானம் பெறுபவர்களுக்கு பதினைந்து விழுக்காடு சர்சார்ஜ் விதிக்கப்பட்டுள்ளது. இதன் மூலம் வருமானம் குறைவாக உள்ளவர்களுக்குச் சலுகைகள் அளிக்கப்பட்டும், அதிகமாக உள்ளவர்களுக்கு  அதிக வரி போடப்பட்டும் உள்ளது.  

கட்டமைப்பு வசதிகளைப் பொருத்த வரையில் சிறப்புக் கவனம் கொடுக்கப்பட்டுள்ளது.  2018 மே மாதத்துக்குள் நாட்டில் உள்ள அனைத்துக் கிராமங்களுக்கும் மின்சார இணைப்புகள் கொடுக்கப்படும் என உத்திரவாதம் கொடுக்கப்பட்டுள்ளது. அதே போல் வறுமைக் கோட்டுக்குக் கீழ் வாழ்ந்து வரும் ஏழைப் பெண்களுக்கு இலவச எரிவாயு இணைப்புக் கொடுக்கும் திட்டம் தொடர்ந்து சிறப்பாகச் செயல்படுத்தப்பட உள்ளது.  
ஏழை மற்றும் சாதாரண மக்களுக்காக வீடு கட்டும் திட்டம் முனைப்புடன் செயல்படுத்தப்பட உள்ளது. அடுத்த ஒரு வருடத்தில் ஏழைகளுக்கு ஒரு கோடி வீடுகள் கட்டப்படும் எனச் சொல்லப்பட்டுள்ளது. மேலும் சாதாரண மக்கள் வீடு கட்ட வாங்கும் கடனுக்கான வட்டிகளுக்குச் சலுகைகள் அளிக்கப்பட்டுள்ளது. சிறிய அளவிலான வீடுகள் கட்டுவதற்குக் கட்டுமான நிறுவனங்களுக்கு ஊக்குவிப்புகள் அளிக்கப்பட்டுள்ளன.

கல்வித்துறையில் மேற்படிப்புகளுக்கான தேர்ச்சிகளை மேற்கொள்ள தேசிய அளவில் ஒரு அமைப்பு ஏற்படுத்தப்பட உள்ளது. அதன் மூலம் வெவ்வேறு அமைப்புகள் தேர்வு நடத்துவது தவிர்க்கப்பட்டு, சீரான முறை உண்டாகும். உயர் கல்வித் துறையில் பல்கலைக் கழக மானியக் குழு சீரமைக்கப்பட்டு, திறமையாக இயங்கும் உயர்கல்வி நிறுவனங்களுக்குத் தன்னாட்சி அதிகாரம் கொடுக்கப்படும்.

அரசியல் முறையில் இருக்கும் முக்கியமான பிரச்னை கட்சிகள் பிறரிடமிருந்து நன்கொடை பெறும் முறை. அதில் நேர்மையும் நம்பகத் தன்மையும் இல்லை. இனி மேல் இரண்டாயிரம் ரூபாய்க்கு மேல் யாரும் கணக்கில்லாமல் கட்சிகளுக்கு நன்கொடை கொடுக்க முடியாது என அறிவிக்கப்பட்டுள்ளது. இது இந்திய அரசியல் வரலாற்றில் ஒரு முக்கியமான முடிவு. இதன் மூலம்  தூய்மையான அரசியலுக்கு ஒரு தொடக்கம் ஏற்பட்டுள்ளது என நம்பலாம்.

எனவே இந்த நிதிநிலை அறிக்கையானது நாட்டின் ஒட்டு மொத்த நலனைக் கருத்தில் கொண்டு, சாதாரண மக்களின் வாழ்க்கைத் தரத்தை உயர்த்தவும், கிராமப் பொருளாதாரத்தை மேம்படுத்தவும், அடிப்படைக் கட்டமைப்பு வசதிகளைப் பெருக்கவும் உருவாக்கப்பட்டுள்ள ஒன்றாக உள்ளது. இதன் மூலம் நமது தேசம் சரியான வளர்ச்சிப் பாதையில் முன்னேறி, உலக அரங்கில் சீக்கிரமே முதல் நிலைக்குச்  செல்லும் நிலைமை வர  வேண்டும்.   

( விஜய பாரதம், சென்னை, பிப்.2017)


புதிய கல்விக் கொள்கையின் அவசியம்


மத்திய அரசு தேசிய அளவிலான புதிய கல்விக் கொள்கையை அமைக்கும் முயற்சியில் ஈடுபட்டுள்ளது. அதற்காக ”வரைவு தேசியக் கொள்கை 2016- சில உள்ளீடுகள்” என்ற தலைப்பில் முக்கிய விபரங்களை மக்கள் மன்றத்தின் முன் வைத்துள்ளது. அவை குறித்து மக்கள் தங்களின் கருத்துக்களைத் தெரிவிக்குமாறு கேட்டுக் கொண்டுள்ளது.

எனவே கடந்த சில மாதங்களாக புதிய கல்விக் கொள்கை குறித்து  நாட்டின் பல பகுதிகளிலும் கல்வியாளர்கள், அரசியல் தலைவர்கள், பொது நல ஈடுபாட்டாளர்கள் உள்ளிட்ட பல தரப்பினரும்  தங்களது கருத்துக்களைத் தெரிவித்து வருகின்றனர். குறிப்பாகத் தமிழகத்தில் அரசியல் மற்றும் பொது வெளியில் சூடான விவாதங்கள் நடந்தேறியுள்ளன.  

ஆனால் அவை பெரும்பாலும்  அரசியல் சார்பினை மையப்படுத்தியே அமைந்துள்ளன. மாணவர்களின் நலன்களை  முன் வைப்பதாக இல்லை.  கல்வி என்பது எதிர்கால சந்ததியினரின் வாழ்க்கையை நிர்ணயிக்கும் அடிப்படையான விசயமாகும். கல்விக் கொள்கையை சொந்த  லாபங்களுக்காக அரசியலாக்குவது என்பது  நமது மாநிலத்தின் துரதிர்ஷ்டமான சூழ்நிலையாக உள்ளது.  

இதற்கு முந்தைய தேசிய கல்விக் கொள்கையானது 1986 ஆம் ஆண்டில் உருவாக்கப்பட்டது. பின்னர் அது 1992 ஆம் வருடம் திருத்தியமைக்கப்பட்டது. இடைப்பட்ட கால் நூற்றாண்டு காலத்தில் உலக அளவில் பெரிய மாறுதல்கள் நடந்துள்ளன. உதாரணமாக தகவல் தொழில் நுட்ப வளர்ச்சி பல வகைகளில் நமது வாழ்க்கை முறையையே புரட்டிப் போட்டுள்ளது. இப்போது அது கல்வித் துறையில் பெரிய தாக்கத்தை ஏற்படுத்தி வருகிறது.

இந்தியா இன்று உலக அளவில் ஒரு பெரிய சக்தியாக உருவாகி வருகிறது. வெவ்வேறு விதமான சவால்கள் இருந்த போதும் இந்தியப் பொருளாதாரம் குறிப்பிடத்தக்க வளர்ச்சியைக் கண்டு வருகிறது. அதனால் முந்தைய தலைமுறையினரை விட  இன்றைய இளைஞர்களுக்கு வாய்ப்புகள் அதிகமாக உள்ளன. மேலும் ஒரு சுதந்திர நாடாக எழுபது ஆண்டுகளையும்,   தேசிய கல்விக் கொள்கைகளை நடைமுறைப் படுத்தத்   தொடங்கி சுமார் ஐம்பது ஆண்டுகளையும் கடந்து வந்துள்ளதால் நிறைய அனுவங்கள் நமக்குக் கிடைத்துள்ளன.

கல்வி என்பது காலத்துக்கேற்ப மாற்றங்களையும் புதிய சிந்தனைகளையும்  உள்ளடக்கியதாக இருக்க வேண்டும். உலக நிகழ்வுகளின் பிரதிபலிப்புகள் அதில் இடம் பெற வேண்டும். அந்த வகையில் தற்போதைய கல்விக் கொள்கையே கூட சில ஆண்டுகளுக்கு முன்னரே வந்திருக்க வேண்டும்.

தேசிய கல்விக் கொள்கை என்பது நாடு முழுவதிலுமுள்ள   மாணவர்களின் அறிவு, ஆளுமை, திறன்கள் மற்றும் வாய்ப்புகளைப் பெருக்குவதற்கு வழி வகுப்பதாக அமைய வேண்டும். அதன் மூலம் ஒவ்வொருவரும் முழுமையான மனிதராக உருவாகி,  அதனால் அவர்கள் தனிப்பட்ட முறையில் பலன் பெற்று, அதன் மூலம்   நாடும்   முன்னேற்றம் அடைய வேண்டும்.

கடந்த காலங்களில் நமது கல்வித் துறையில் குறிப்பிடத்தக்க மாற்றங்கள் ஏற்பட்டிருந்தாலும், நாம் இன்னமும் போக வேண்டிய தூரம் நிறைய உள்ளது. உதாரணமாக அனைவருக்கும் கல்வி என்பது என்பது இன்னமும் அடைய முடியாத இலக்காகவே உள்ளன.

மேலும் கல்வி முறைகளில் பல விதமான அடிப்படைக் குறைபாடுகள் நிலவுகின்றன. உதாரணமாக, பொறியியல் பட்டதாரிகளில் பெரும்பாலானவர்களுக்கு வேலை செய்வதற்குப் போதுமான  திறமைகள் இல்லை என்பது பல ஆய்வுகள் வெளிப்படுத்தும்  முடிவாகும்.

எனவே புதிய கல்விக் கொள்கை மேற்குறிப்பிட்ட வகையில் உள்ள குறைபாடுகள் பலவற்றையும் களைந்து, அனைவருக்கும் தரமான கல்வியைக் கொடுப்பதாக அமைய வேண்டும். அந்த வகையில் மனித வள மேம்பாட்டுத் துறையால் வெளியிடப்பட்டுள்ள புதிய கல்விக் கொள்கையின் வரைவு, முதன் முறையாகப் பல விசயங்களை உள்ளடக்கியதாக உள்ளது.

புதிய கல்விக் கொள்கையின் நோக்கங்களாக மூன்று விசயங்கள் குறிப்பிடப்பட்டுள்ளன. அதில் முதலாவது கல்வி முறையில் நம்பகத்தன்மையை ஏற்படுத்துவது;  இரண்டாவது மாணவர்களின் வேலை வாய்ப்புத் தன்மையை அதிகரிப்பது; மூன்றாவது அனைவருக்கும் கல்வி கிடைப்பதற்குச் சம வாய்ப்பினை அளிப்பது. இவை மூன்றும் நாட்டின் கல்வி முறைக்கு அடிப்படை என்பதில் எந்த வித  சந்தேகமும் இருக்க முடியாது. 

நமது கல்வித் துறை பல வகைகளில் நம்பிக்கையற்ற தன்மையைக் கொண்டதாக உள்ளது.  தற்போதைய கல்வி முழுமையானதாக இல்லை. ஒரு மாணவனை எல்லா வகைகளிலும் மேம்படுத்தக் கூடிய அம்சங்கள் அதில் இல்லை. கல்வித் துறை நிர்வாகம் பல இடங்களில் சீரழிந்து கிடக்கிறது.

உதாரணமாக தமிழகத்தில் துணை வேந்தர் நியமனம் திறமையின் அடிப்படையில் இல்லாமல் முற்றிலும் வேறு விதமான காரணிகளால் அமைந்துள்ளது நமக்கு அனைவருக்கும் தெரியும். பின்னர் அப்படிப்பட்டவர்கள் நியமனம் செய்யும் பேராசிரியர் உள்ளிட்ட அனைத்து பணி நியமனங்களும் நியாயமானதாக இருப்பதில்லை.  எனவே ஆரம்பக் கல்வி தொடங்கி உயர் கல்வி வரைக்கும் தேசம் பல பிரச்னைகளைச் சந்தித்து வருகிறது.

நாடு சுதந்திரம் அடைந்து சுமார் எழுபது ஆண்டுகள் கழித்து இன்னமும் கல்வி அனைத்து பிரிவினருக்கும் கிடைப்பதில்லை.  பள்ளியில் சேர்பவர்கள் அனைவரும் இறுதி வகுப்பு வரை முழுமையாகப் படிக்க முடிவதில்லை. பள்ளிக் கல்வி முடித்தவர்கள்  அனைவருக்கும் கல்லூரிகளில் சேர்வதற்கு வாய்ப்புக் கிடைப்பதில்லை. எனவே அனைவருக்கும் கல்வி என்பதை புதிய கல்விக் கொள்கை முக்கிய குறிக்கோளாக முன் வைக்கிறது.

கல்வி என்பது தேவைகளின் அடிப்படையில் அமைய வேண்டும். அப்போது தான் அது இளைஞர்களின் வாழ்க்கைக்கு உதவுவதாக அமையும். தற்போதைய கல்வி முறையில் உள்ள ஒரு முக்கியக் குறைபாடு, அது வாழ்க்கைக்குத் தேவையான திறன்களைப் போதிப்பதில்லை என்பதாகும்.

இன்று நமது நாட்டில் பல துறைகளுக்குத் திறன் வாய்ந்த தேர்ச்சி பெற்ற இளைஞர்கள் தேவைப்படுகிறார்கள். ஆனால் துரதிர்ஷ்டவசமாகக் கல்வி திறன்களைச் சொல்லிக் கொடுக்காமல் வெறும் ஏடுகளைச் சார்ந்தே உள்ளது. எனவே திறன்களை ஊக்குவிக்கின்ற முறையை இந்தக் கல்விக் கொள்கை மையப்படுத்துகிறது.

மேலும் பாடத்திட்டம் நடை முறை நிலவரங்களைப் பிரதிபலிப்பதாக இல்லை.  தொழில், வியாபாரம் மற்றும் பொருளாதாரம் சார்ந்த படிப்புகளில் கூட நாட்டில் நிலவும் நடைமுறைகள் சொல்லிக் கொடுக்கப்படுவதில்லை. அனைத்துப் பாடங்களும் நமது நாட்டுக்குச் சம்பந்தமில்லாத ஐரோப்பிய மற்றும் அமெரிக்கக் கோட்பாடுகளை ஒட்டியே அமைந்துள்ளன. அவை பெரும்பாலும் அவர்களின் நாடுகளிலேயே தோல்வி அடைந்து விட்டன; எனவே நமது நாட்டுக்குப் பொருந்துவதாக இல்லை.

இந்தியா உலக அளவில் இரண்டாவது அதிகமான மக்களைக் கொண்ட நாடு. இங்கு புதிய தொழில்களுக்கு வாய்ப்புக்கள் அதிகமாக உள்ளன. எனவே தொழில் முனைவோர்கள் அதிக அளவில் ஊக்குவிக்கப்பட வேண்டும். அந்த அடிப்படையில் தொழில் முனையும் தன்மையை ஊக்குவிக்கும் வகையில் கல்வி கொடுக்கப்படும் எனப் புதிய கல்விக் கொள்கை கூறுவது வரவேற்கத்தக்கது.

முறையான கல்வித் திட்டத்துக்குள் வர வாய்ப்பில்லாத பல கோடிப் பேர் இன்னமும் நமது நாட்டில் உள்ளனர். அவர்களும் கல்வி பெறும் வகையில் புதிய கல்விக் கொள்கை திட்டங்களை வகுக்க இருப்பது மிகவும் ஆறுதலான விசயமாகும்.

மேலும் நமது நாட்டின் உண்மையான வரலாறு, பாரம்பரியம், கலாசாரம் ஆகியவை இன்னமும் முறையாகப் போதிக்கப்படுவதில்லை. அதனால் சரியான நாட்டுப் பற்றில்லாத இளைஞர்களை நமது கல்வி நிறுவனங்கள் உருவாக்கி வருகின்றன. மேலும் நீதி போதனை, நற் பண்புகள், இலக்கிய மரபுகள்  ஆகியன போதுமான அளவு பாடத்திட்டங்களில் இல்லை; அதனால் அவை பற்றிய சிந்தனை இல்லாதவர்களையே நாம் தயாரித்து வருகிறோம்.

இன்று உலக முழுவதும் தொழில் நுட்பம் எல்லாத் துறைகளிலும் பரவியுள்ளது. அதன் தாக்கம் கல்வித் துறையில் மிக அதிகமாகவே உள்ளது. உதாரணமாக ஒரு பள்ளி மாணவன் வகுப்பறையில் உட்கார்ந்து கொண்டே உலக நடப்புகளைச்  சில நிமிடங்களில் சேகரிக்க முடியும். எனவே தொழில் நுட்பத்தை முழுமையாகப் பயன்படுத்தும் போது நாம் பல வழிகளில் பலன் பெற முடியும். அந்த வகையில் தொழில் நுட்ப வளர்ச்சியை  கல்வித் துறை அதிக அளவில் உபயோகப்படுத்தும் எனக் குறிப்பிடப்பட்டுள்ளது.

கல்வி வளர்ச்சிக்குத் தேவையான ஆசிரியர் பயிற்சி, தலைமைப் பொறுப்புகளுக்குத் தயார் செய்யும் முறைகள், கல்வி நிர்வாகம்,  திட்டமிடல் மற்றும் நிதி திரட்டுதல்  உள்ளிட்ட பலவும் கல்விக் கொள்கையில் சுட்டிக் காட்டப்பட்டுள்ளன. மேலும் குழந்தைகள் மற்றும் மாணவர்களின் உரிமைகள் பாதுகாக்கப்படும் வகையில் கல்விக் கொள்கை அமையும் எனச் சொல்லப்பட்டுள்ளது ஒரு குறிப்பிடத்தக்க அம்சமாகும்.

புதிய கல்விக் கொள்கையானது பல வகைகளில் முந்தைய கொள்கைகளை விட வித்தியாசமாக உள்ளது மிகவும் வரவேற்கத்தக்கதாகும். முதலாவதாக  இதுவரை எல்லா விதமான அம்சங்களையும் உள்ளடக்கிய வகையில் கல்விக் கொள்கை என்பது உருவாக்கப்படவில்லை.

இரண்டாவதாக தற்போதைய அளவுக்கு இதுவரை எந்தக் கல்விக் கொள்கையை வகுக்கும் போதும் ஆலோசனைகளும், கருத்துப் பரிமாற்றங்களும் பரவலாக நடை பெற்றதில்லை. இப்போது முதன் முறையாக வரைவுக் கொள்கை மக்கள் மன்றத்தில் தமிழ் உள்ளிட்ட இந்திய மொழிகள் பலவற்றில் வெளியிடப்பட்டுள்ளது. அதற்கு முன்னதாகவே  நாட்டின் பல பகுதிகளில் மனித வளத் துறை வல்லுநர்களிடம் கலந்துரையாடல்களை நடத்திக் கருத்துக்களைக் கேட்டுள்ளது. தொடர்ந்து மக்களின் கருத்துக்களைப் பெறுவதற்கு வசதிகளை ஏற்படுத்தி, அதன் மூலம் இலட்சக் கணக்கான கருத்துக்கள் பெறப்பட்டுள்ளன.

மூன்றாவதாக புதிய கல்விக் கொள்கையை வகுப்பதில் மாநில அரசுகளுக்கு உரிய பங்கு அளிக்கப்பட்டுள்ளது.  கல்வித் துறையின் செயல்பாட்டுக்கான ஒரு திட்டம் ஒன்று வகுக்கப்பட உள்ளது. அதற்காக மாநில அரசுகளும், உள்ளாட்சி அமைப்புகளும் தங்களின் உத்திகளையும், செயல் திட்டங்களையும் வகுத்துக் கொள்வதை புதிய கொள்கை ஊக்குவிக்கிறது.

தமிழகத்தில் பொது வெளியில் பரவலாகச் சொல்லப் படும் முக்கிய குற்றச்சாட்டுகளில் உண்மையில்லை என்பது வரைவு கல்விக் கொள்கையை முழுமையாகப் படித்தவர்களுக்குத் தெரியும். உதாரணமாக பிற்படுத்தப்பட்ட வகுப்புகளைச் சேர்ந்தவர்களுக்கு வாய்ப்புகள் மறுக்கப்படும் எனச் சொல்லப் படுவது மிகவும் அபத்தமானதாகும். வரைவுக் கொள்கையின் ஒரு முக்கிய நோக்கமே பிற்படுத்தப்பட்ட,   பட்டியலின மக்கள் மற்றும் மலை வாழ் மக்கள் ஆகியோரின் குழந்தைகளுக்குக் கல்வியை அவசியமாகக்  கொடுப்பதாகும்.

அதே போல சமஸ்கிருதத் திணிப்பு என்பது புதிய கல்விக் கொள்கையில் உள்ளது என்பது நகைப்புக்குரிய விசயமாகும். இப்படிச் சொல்லியே ஐம்பது ஆண்டு காலமாக தமிழைப் புறந்தள்ளி ஆங்கிலத்தை அரியணை ஏறச் செய்து விட்ட பெருமைக்குரியவர்கள் நமது போராளிகள். சமஸ்கிருதம் நமது நாட்டின் தொன்மையான மொழி. முந்தைய கல்விக் கொள்கைகளில் அதற்குக் கொடுக்கப்பட்டிருந்த அதே  இடம் தான் தற்போதும் கொடுக்கப்பட்டுள்ளது.

எனவே புதிய கல்விக் கொள்கையின் விளைவாகத்  தமிழ் நாட்டுக்குப் பலன்கள் இல்லை; சாதாரண மக்கள் பாதிக்கப்படுவார்கள்;  சமஸ்கிருதத் திணிப்பு ஏற்பட்டுத் தமிழ் அழிந்து போகும் என்பதெல்லாம் குறுகிய அரசியல் தன்மை மட்டுமே கொண்ட பேச்சுக்கள்.

நூற்று முப்பது கோடி மக்களைப் பெற்ற பன்முகத் தன்மை கொண்ட நமது தேசத்தில் அனைவருக்கும் ஏற்ற வகையில் கல்விக் கொள்கையை வகுப்பது என்பது இயலாத காரியம். நாடு சுதந்திரம் பெற்ற பின் முதன் முறையாக, அதிக அளவில் கலந்து ஆலோசிக்கப்பட்டு ஒரு வரைவுக் கொள்கை தயாரிக்கப்பட்டு அதுவும் பரவலான விவாதத்துக்குப் பல மாத காலமாக ஆட்படுத்தப்பட்டுள்ளது.

இதில் பல சிறப்பான அம்சங்கள் இடம் பெற்றுள்ளன. அனைத்து தரப்பினருக்கும், தரமான மற்றும் முழுமையான கல்வி என்பது  மையக் கருவாக அமைந்துள்ளது.  வேலை வாய்ப்புகளுக்குத் தயார் செய்யும் வகையிலும், தொழில்களை ஊக்குவிக்கும் வகையிலுமான கல்வி என்கின்ற முறையில்  திட்டமிடப்பட்டுள்ளது.

இதன் மூலம் மக்கள் தங்களின் தனி மனித வாழ்க்கையில் முன்னேற வாய்ப்புக்கள் அதிகரித்து, அதனால் ஒட்டு மொத்த தேசமும்  வளர்ச்சிப் பாதையில் செல்ல வாய்ப்புக்கள் அதிகமாக உள்ளதாகவே தெரிகிறது. எனவே இந்த புதிய கல்விக் கொள்கையானது அவசியமான ஒன்றாக உள்ளது.

( ஓம் சக்தி, பிப்.2017)

Rebuilding India 19


Demonetisation is a major step to build a new economy 


Black money remains a serious impediment to the development of the Indian economy. Nehruvian socialism, crony capitalism and unchecked corruption are among the major factors that have facilitated the growth of black economy over the years. As a result, few   small but influential groups are reaping enormous benefits at the cost of the common people and the country. 

Though the issue of tackling the menace of black money used to be discussed occasionally over the years, no serious attempt has been taken by the Government so far with full conviction. Besides, the size of the money have grown manifold during the recent periods. Apart from black money, there are fake currency notes in circulation feeding the terrorist, Naxal and other anti-national activities who are bent upon destroying the country.

There are varying estimates of black money by different agencies. A recent report by the Ambit Capital Research mentions that the size of the black economy for calendar year 2016 could be over Rs.30 lakh crores, accounting for 20 per cent of India’s GDP. An earlier report in 2013 by the National Institute of Public Finance and Policy appointed by the Government to estimate the black money in India and held overseas noted presented an alarming picture.

It noted that the black economy could be nearly three quarters of the size of India’s reported GDP. As for the black money in circulation is concerned, estimates based on different sources indicate that the cash in black could be as much as Rs.6.5 lakh crore, accounting for 38 per cent of the share of currency in circulation.

The reports of the Reserve Bank of India indicate that the circulation of Fake Indian Currency Notes (FICN) has been on the rise posing a grave threat to the security of our nation. The reports show that nearly six lakh notes were detected during 2014-15, from around 4.90 lakh notes during the previous year. The Financial Action Task Force report of 2013 noted that the Indian rupee was the ninth most counterfeit currency in terms of its value in the world, most of it printed in Pakistan.  

The impact of black money and fake currency notes have far reaching influence on our nation than we imagine. Most of the population, who are honest in their dealings and especially those from the ordinary segments, suffer a lot in their day to day lives. The sufferings take place in diverse forms such as higher land prices, inflation, high interest rates, corruption, increasing capitation fee in educational institutions and terror attacks. All these factors seriously affect the lives of our people, who despite their best efforts are forced to face many difficulties.

It is in this connection that the announcement of our Hon’ble Prime Minister on Nov.8, 2016 making the high denomination notes lose their legal tender status assumes importance. It is estimated that there are around sixteen lakh crore worth of money in circulation in the country. Of this, Rs.500 and Rs.1000 notes are estimated to be around 86 per cent. The remaining money in circulation is in smaller denominations.

By withdrawing the higher denomination notes and allowing the exchange and deposit of genuine old currencies at one stroke, the Government has taken a major step to tackle the issue of black money and fake currency notes. This is by far the boldest step by any Government in Independent India.

The initial reports indicate that substantial sums of funds are reaching the banking channels on a daily basis at a faster rate, though the Government have given fifty days of time to the people to clean up their accounts. It is significant to note here that in the true Indian spirit our people have willing taken up on their shoulders few    difficulties that they have to face during the transition period.

The results of demonetisation are being felt even at this initial stage, though there is a lot time to see the full impact. Those who have amassed huge cash through wrong means are all on the wrong foot. They might have to lose much of their loot, as they cannot prove their sources. This would act as a damper in future to the all those who want to engage in corrupt practices.  

With the accumulation of funds in the banking system, it   is expected that lending rates will decline in future. This would increase the economic activities, enabling the industrial and business community to get funds at lower rates. They have been continuously voicing their opinion for lower rates to compete at the international level.

This would particularly help the entrepreneurial community belonging to the MSME segments to borrow funds at lower rates. At present the major difficulty for the non-corporate sector is the lack of access to the low cost funds, which cripples their functioning. Hence this would be big boost for them. 

It is an open secret that huge amounts of black money is diverted into certain sectors such as real estate. As a result the land prices have become very costly during the recent years. Hence the majority of the population cannot even imagine buying a piece of land to construct a house, especially in big cities. Experts note that henceforth there would be reduction in the prices of land.

Opportunities for keeping black money encourages corruption. As a result we are witnessing the huge levels of corruption prevailing across the country. Even the critical sectors that are expected to provide basic services to people such as education, health and infrastructure have become the major centres of corruption, leaving the majority sections at the mercy of God. Ordinary people are not in a position to enjoy the fruits of freedom, as there is corruption at different levels. The present step is expected to curtail corruption to a large extent.

Terrorist activities have already come down in the last few days. Normalcy is returning to Jammu & Kashmir after nearly four months of disturbances, including stone pelting. Reports say that Naxals seem to have suffered heavily as their stocks of money has lost their value.

Besides, the latest development has created an opportunity to the ordinary people and the informal sector to operate through the banking system. The operations of the Government through the banks have stopped corruption in their dealings with the public. Initiatives such as payment of wages under the rural employment scheme,   provision of gas subsidies and payment of scholarships to students being directly transferred to the bank accounts of the beneficiaries have resulted in full payments without any leakage.

The present Government under the leadership of the Prime Minister has been taking series of steps from the beginning to unearth black money and curtail corruption. Beginning with the setting up of Special Investigation Team to get hold of black money immediately after the assumption of office and the opening of Jan Dhan accounts scheme for people without bank accounts to the latest agreement with the Swiss Government to share the details of black money holders in their banks, the Prime Minister has been taking continuous steps on these issues.

India is fast emerging as a powerful nation at the international level. One of the critical factors that hinder our development journey is the black money. It has to be severely dealt with if India is to progress for the development of all the sections of population. Against this background, the Prime Minister has taken a very significant step to curtail black money and we all have stand as one with him at this critical juncture. 

தீன தயாள் என்னும் தீர்க்கதரிசி

உலக வரலாற்றில் காலனி ஆதிக்கமும் அதையொட்டிய ஐரோப்பியர்களின்  முன்னேற்றமும் ஒட்டு மொத்த மனித குலத்தின்  சிந்தனா முறைகளில் ஒரு மிகப் பெரிய தாக்கத்தை ஏற்படுத்தியது. அதன் விளைவாக உலகளாவிய சிந்தனை முறைகள் எல்லாம் புறந்தள்ளப்பட்டு, ஐரோப்பிய முறைகள் மட்டுமே முதன்மைப் படுத்தப்பட்டன. பெரும்பாலான நாடுகளில் ஆட்சி அதிகாரம் அவர்களின் கைகளில் இருந்ததால், அது எளிதாகிப் போனது.

நீண்ட நெடிய பாரம்பரியமுள்ள இந்தியா போன்ற ஒரு நாட்டிலும் அது நடந்தேறியது. தொடர்ந்து வந்த காலங்களில் கல்வித் துறை அரசின் கட்டுப்பாட்டில் இருந்ததால், அவர்களின் சித்தாந்தங்களை பாடத் திட்டங்களில்  புகுத்தினார்கள். எனவே தொடர்ந்து வந்த தலைமுறைகளுக்கு மேற்கத்திய சித்தாந்தங்கள் மட்டுமே தெரிய வந்தன.

மனித வாழ்க்கைக்கு ஆதரமானது பொருளாதாரம். எனவே அதிலும் பதினெட்டு மற்றும் பத்தொன்பதாவது நூற்றாண்டுகளில் ஐரோப்பிய அனுபவங்களை வைத்து அங்கு எழுதப்பட்ட  முதலாளித்துவ மற்றும் கம்யூனிச சித்தாந்தங்களை மட்டுமே இரு பெரும் அடிப்படைப் பொருளாதார சிந்தனைக் கருத்துக்களாக முன் வைத்தனர்.

ஆகையால் கடந்த சுமார் இரு நூறு ஆண்டுகளாகவே பொருளாதாரம் என்று வரும் போது அது மேற்கத்திய நாடுகளை ஒட்டியதாகவே இருந்து வருகிறது. அதனால் பிற நாடுகளுக்கு எனச் சுயமான பொருளாதாரச் சிந்தனை ஒன்று இருக்க முடியும்  என்பதைக் கூட மேற்கத்திய நிபுணர்கள் அண்மைக் காலம் வரை ஒத்துக் கொள்ளவில்லை. எனவே பொருளாதாரக் கொள்கைகளை வகுக்கும் போது அவர்களின் கோட்பாடுகளையும், வழி முறைகளையும் முன் மாதிரியாக வைத்தே முடிவெடுக்கும் சூழ்நிலை உலக அளவில் நிலவி வந்தது.

அது போலவே மக்களுக்குப் பொருத்தமான அரசியல் அமைப்பு ஒரு நாட்டுக்கு அத்தியாவசியமானது. இந்திய நாடு மன்னராட்சியிலும் கூட உயர்ந்த ஜனநாயக நெறி முறைகளைக் கடைப்பிடித்து வந்துள்ளதை வரலாறு எடுத்துக் கூறுகின்றது. ஆனால் நம் முன் வைக்கப்படுவது மேற்கத்திய அரசியல் சித்தாந்தங்கள் மட்டுமே.   உத்திரமேரூர் கல்வெட்டு கூறும் நடை முறைகள் எங்காவது வழி காட்டு முறைகளாக உள்ளனவா?

இந்திய நாடு மிகவும் தொன்மையானது. நமக்கென்று ஒரு மிகப் பெரிய பொருளாதார பாரம்பரியம் உள்ளது. இரண்டாயிரம் ஆண்டுகளுக்கு முன்னரே உலகப் பொருளாதார உற்பத்தியில் மூன்றில் ஒரு பங்கினைக் கைவசம் வைத்து, ஒரு வல்லரசாக இந்தியா இருந்து வந்துள்ளதை அண்மைக் கால ஆய்வுகள் வெளிப்படுத்துகின்றன.

அது மட்டுமன்றி கடந்த இரண்டாயிரம் ஆண்டுக் காலத்தில் மட்டும் மிகப் பெரும்பாலான காலம் உலகின் அதிக செல்வந்த நாடாக விளங்கி நாம் வந்துள்ளோம். ஆங்கிலேயர் ஆட்சியின் சுய நலக் கொள்கைகளால் நமது பொருளாதாரம் சுரண்டப்பட்டு, இந்தியா ஏழை நாடாகிப் போனது.

எனவே மிகச் சிறப்பான பொருளாதாரப் பின்னணியைக்  கொண்டிருந்த நமது நாட்டுக்கெனத் தனிப்பட்ட சிந்தனைகள் மற்றும் அணுகு முறைகள்  இருந்திருக்க வேண்டும். ஆனால் அவற்றையெல்லாம் கவனத்தில் எடுத்துக் கொள்ளச் சுதந்திர இந்தியா தவறி விட்டது. அதன் விளைவுகளைத் தான் இப்போது நாம் அனுபவித்துக் கொண்டிருக்கிறோம்.

 ஒவ்வொரு நாட்டுக்கும் எனத் தனித்தன்மை  ஒன்று உண்டு. அந்த நாட்டுக்குத் தகுந்த கொள்கைகள் மூலமே முழுமையான பலன்களைப் பெற முடியும். அந்த வகையில் நமது தேசத்தின் அரசியல் அமைப்பு மற்றும் பொருளாதாரக் கொள்கைகள் நமது மண் வாசனையை ஒட்டியே அமைய வேண்டும் என ஐம்பது வருடங்களுக்கு முன்னரே உரக்கச் சொன்னவர் பண்டிட் தீனதயாள் உபாத்யாயா அவர்கள்.

பன்முகத் திறமைகள் கொண்ட அவர் தமது வாழ்க்கை முழுவதையும் திருமணம் கூடச் செய்து கொள்ளாமல் தேசத்துக்கே அர்ப்பணித்துக் கொண்ட மகான். ஒரு தத்துவ ஞானி, சமூகவியலாளர், சிந்தனாவாதி, எழுத்தாளர், அரசியல் தலைவர் மற்றும்  பத்திரிக்கையாளர் உள்ளிட்ட பல பரிமாணங்களில் ஜொலித்தவர் அவர். ஆனால் உலகில் பிரபலமாக நிலவி வந்த மேற்கத்திய சித்தாந்தங்களுக்கு மாற்றாக இந்திய வாழ்க்கை முறை சார்ந்த கோட்பாட்டை அவர் முன் வைத்ததால், இதுவரை அவர் பரவலாக அறியப் படாதவராகவே இருந்து வருகிறார்.

இந்திய வரலாற்றில் தற்போதைய காலம் மிகவும்  முக்கியமானது. ஏனெனில் அண்மைக் காலங்களில் மேற்கத்திய சித்தாந்தங்களின் தோல்வி உலக அளவில் உணரப்பட்டு வருகிறது. அவர்களின் நாடுகளிலேயே அவர்களது கருத்துக்கள் பலன்களைத் தரவில்லை; மாறாகச் சிரமங்களை அதிகமாக உண்டாக்கி வருகின்றன.

எனவே நாம் நமக்குப் பொருத்தமான கொள்கைகளைப் பற்றிச் சிந்திக்க இது சரியான தருணமாக உள்ளது. அந்த வகையில் தீனதயாள் உபாத்யாயா அவர்களின் சிந்தனைகள் நமக்குச் சரியான வழிகாட்டியாக அமைய முடியும்.

அவரது அரசியல் பொருளாதார தத்துவத்தை அவர்  ”ஒருங்கிணைந்த மனித நேயம்” எனக் குறிப்பிட்டார். அதில் மனிதனின் உடல், அறிவு மற்றும் ஆன்மா ஆகிய அனைத்தையும் ஒன்றாக இணைத்தார். அதன் மூலம் பொருள் சார்ந்த புற வாழ்க்கை மற்றும் ஆன்மிகம் சார்ந்த அக வாழ்க்கை ஆகிய இரண்டையும்  ஒன்று சேர்த்தார்.  

அதிகாரப் பரவலற்ற அரசியல் அமைப்பு மற்றும் கிராமத்தை மையமாகக் கொண்ட சுய சார்புத் தன்மை உள்ள பொருளாதாரம் என்பதாக அவரது தத்துவம் அமைந்துள்ளது.   அதை இந்திய நாட்டின் கலாசாரம்,  வாழ்க்கை முறை, உயர்ந்த நெறிகள் ஆகியவற்றை ஒட்டி அவர் அமைத்துள்ளார்.

தற்போது நடைமுறையில் உள்ள அணுகு முறைகளால் முழுமையான பலன்கள் நமக்குக் கிடைப்பதில்லை. அதற்குக் காரணம் அவை நமக்குப் பொருத்தமில்லாமல் இருப்பதுதான். அதை நாம் இப்போது தான் உணர்கிறோம். ஆனால் தீனதயாள் அவர்கள் இது குறித்துப் பல காலம் முன்னரே உணர்ந்து, அவற்றுக்கு மாற்றாக 1965 ஆம் வருடத்திலேயே தமது கருத்துக்களை  வெளியிட்டார்.

எனவே அவர் ஒரு தீர்க்க தரிசி. மேற்கத்திய சித்தாந்தங்களுக்கு மாற்றாக நமது தேசத்தின்  சிந்தனைகளை ஒட்டிய தத்துவத்தை முன் வைத்தவர்.  அதில் மக்களின் ஒட்டு மொத்தமான முன்னேற்றத்துக்கான அணுகு முறைகள் குறித்த கருத்துக்கள் மையமாக உள்ளன.  இந்த சமயத்தில் மேற்கத்திய சித்தாந்தங்கள் பொருளை மட்டுமே மையமாக வைத்து தோற்றுப் போய் வருவதை நாம் உணர வேண்டும்.

தீனதயாள் உபாத்யாய அவர்கள் பிறந்து இந்த வருடம் நூறாண்டுகள் நிறைவு பெறுகிறது. எனவே இப்போதாவது நாம் அவரது சிந்தனைகளைப் படித்து, நமது நாட்டுக்கான அணுகுமுறைகள் குறித்த ஒரு தெளிவான எண்ணத்தைப் பெறுவது அவசியமாகிறது.

( காண்டீபம், திருப்பூர், அக்.2016)
 




ஜன தன திட்டம் – சுதந்திர இந்தியாவின் சாமானிய மக்களுக்கான வரலாற்றுச் சாதனை


நமது தேசத்தின் மிகப் பெரிய பொருளாதார பலமே மக்களின் சேமிக்கும் குணம் தான்.  சேமிப்பு என்பது நமது மக்களின் வாழ்வில் ஊறிப் போன ஒரு பழக்கம்; வாழ்க்கை முறை. இது தொன்று தொட்டு பாரம்பரியமாகவே இங்கு இருந்து வந்திருக்கின்றது.

அந்நியர்களின் ஆட்சிக் காலத்தில் நமது பொருளாதாரம் மிகப் பெரிய சரிவைச் சந்தித்தது. அதனால் பல நூற்றாண்டுகளாக உலகின் பொருளாதார சக்தியாக  விளங்கி வந்த நமது தேசம், ஒரு ஏழை நாடாக மாறிப் போனது. விவசாயம், உற்பத்தி மற்றும் சேவைத் தொழில்கள் எனப் பலவும் நசிந்து போயின.  

அந்தச் சமயத்தில் பெரும்பான்மை மக்களுக்கு வாழவே வழியில்லை. எனவே சேமிப்பு என்பதை அவர்களால் நினைத்துப் பார்க்க இயலாத நிலைக்கு அவர்கள் தள்ளப்பட்டனர்.  மேலும் முந்தைய காலங்களில் இருந்து வந்த பாரம்பரிய நிதி சார்ந்த அமைப்பு முறைகள் எல்லாம் அப்படியே மழுங்கிப் போயின.

எனவே சுதந்திரம் பெற்ற சமயத்தில், மிகப் பெரும்பான்மையான மக்களுக்கு நிதி அமைப்புகளின் தொடர்பு எதுவும் இருக்கவில்லை. அந்தக் கால கட்டத்தில்  பொருளாதாரத்துக்கு அடிப்படை ஆதாரமாக விளங்கி, எண்பது விழுக்காட்டுக்கு மேற்பட்ட மக்கள் சார்ந்திருந்த துறையாக விவசாயம் இருந்து வந்தது. ஆனால் தொண்ணூறு விழுக்காட்டுக்கு மேற்பட்ட விவசாயிகளுக்கு அடிப்படை வங்கி உதவிகள் கூட எதுவும் கிடைக்கவில்லை; மாறாக அவர்கள் தங்களின் தேவைகளுக்கு மிக அதிக வட்டிக்குக் கடன் கொடுக்கும் தனியார்களையே நம்பி இருந்தனர். 

தொடர்ந்து வந்த காலங்களில் நிதி மற்றும் வங்கித் துறைகள் வளர்ச்சி பெற்ற போதும், பெரும்பான்மை மக்களுக்கு வங்கிக் கணக்கு தொடங்குவது என்பது எட்டாக் கனியாகவே இருந்து வந்தது. கடந்த கால் நூற்றாண்டு காலத்தில் வங்கிகளின் எண்ணிக்கை அதிகரித்து, சேவைகள் விரிவடைந்த போதும், அவை பெரும்பாலும்  பணக்காரர்களையும்,  படித்தவர்களையும்  மையப்படுத்தியே அமைந்திருந்தன. 

எனவே நிதித் துறையும், வங்கிகளும் பெரும்பான்மை சாமானிய மக்களை ஒதுக்கியே வைத்திருந்தன; அவர்களை உள்ளடக்கியதாக இல்லை. அதனால் மக்களின் சேமிப்புகள் அதிகரித்த போதும், சாமானிய மக்கள் தங்களின் சேமிப்புகளை வங்கி மற்றும் அமைப்பு சாராத வழிகளிலேயே அதிகமாக  மேற்கொண்டனர்.

நமது பொருளாதாரமே சிறு மற்றும் குறு தொழில்களை அடிப்படையாகக் கொண்டது. அவற்றையெல்லாம் நடத்துபவர்கள்  சாதாரண குடும்பங்களைச் சேர்ந்தவர்கள்.  நாட்டின் பொருளாதாரத்தில் குடும்பங்கள் நடத்தும் அமைப்பு சாராத் தொழில்கள் தான் பெரும் பங்கினை வகித்து  வருகின்றன.  

இந்தியாவில் சிறிய தொழில்கள் மட்டுமே சுமார் ஆறு கோடி அளவு இருப்பதாக மத்திய அரசின் புள்ளி விபரம் தெரிவிக்கிறது. அவை தான் நாட்டிலேயே அதிகமாக பன்னிரண்டு கோடி பேருக்கு மேல் வேலை வாய்ப்பினை வழங்குகின்றன. ஆனால் அவற்றை நடத்துபவர்களில் பெரும்பான்மையோருக்கு வங்கி வசதிகள் எதுவும் கிடைப்பதில்லை.
உலக வங்கியின் ஒரு கணக்கெடுப்பு 2013 ஆம் ஆண்டில் இந்திய மக்களில் பாதிப்பேருக்கு கீழே தான் வங்கிகளில் கணக்கு வைத்திருப்பவர்கள் எனத் தெரிவிக்கிறது. அதனுடைய இன்னொரு புள்ளி விபரப்படி 2014 ஆம் ஆண்டில் உலக அளவில் வங்கிக் கணக்கில்லாத இளைஞர்களில் அதிகம் பேர், அதாவது 21 விழுக்காடு, நமது நாட்டில் தான் உள்ளதாகச் சொல்லியுள்ளது.

சாதாரண மக்கள் தான் அதிகம் உழைப்பவர்கள்; அவர்களுக்கு நிதி உதவிகள் அவசியம்; அவர்கள் நடத்தும் தொழில்கள்   நிதி அவசியமாகத் தேவைப்படுபவை. அவர்கள் நாட்டின் நிதி அமைப்புடன் இணையும் போது, தேவைப்படும் உதவிகளை அவர் தம் தொழில்களுக்குப் பெற்றுக் கொள்ள முடியும். மேலும் அவர்களின் சேமிப்புகளையும் ஒருமுகமாக வங்கிகளை நோக்கி வர வைக்க முடியும். அவற்றின் மூலம் சாமானிய மக்களின் வாழ்க்கைத் தரத்தை உயர்த்தி, நமது பொருளாதாரத்தை மேம்படுத்த முடியும்.

ஆனால் இது குறித்து முந்தைய கால கட்டங்களில் அவ்வப்போது சில முயற்சிகள் மேற்கொள்ளப்பட்ட போதும், அவை முழுமையானதாக இல்லை; மேலும் அவற்றில் போதிய தீவிரம் காட்டப்படவில்லை. ஆனால் மோடி அரசு பதவியேற்ற பின்னர், முதன் முறையாக சாமானிய மக்களை நாட்டின் நிதி அமைப்பில் அங்கமாக இணைக்கும் வண்ணம், ஒரு ஒருங்கிணைந்த திட்டம் நடை முறைப்படுத்தப் பட்டுள்ளது.

அது தான் ஜன தன திட்டம் என்பதாகும். அதில் குறைந்த பட்ச இருப்புத் தொகை என எதுவும் இல்லாமலேயே வங்கிக் கணக்கினைத் தொடங்கலாம். அதற்கு டெபிட் கார்டு  கொடுக்கப்படும். குறைந்த பட்சத் தொகை இருக்க வேண்டும் என்பதே சாமானிய மக்களை கணக்குத் தொடங்க பயப்பட வைத்தது. அதை நீக்கியதன் மூலம் மக்களுக்கு இருந்த பயம் மறைந்து போனது. மேலும் டெபிட் கார்டு என்பது சாமானிய மனிதனுக்கும் கிடைக்கும் என்கின்ற முறையும் நடை முறையானது.

கணக்கினை முறையாக பராமரிக்கும் போது  அதற்கு ஓவர்டிராப்ட் வசதி கொடுக்கப்படுகிறது. அதன் மூலம் தேவைகளுக்கு மக்கள் பணத்தை எடுத்துக் கொள்ளலாம். திட்டத்தின் இன்னொரு அம்சமாக கூடவே வங்கி கணக்கு தொடங்குபவர்களுக்கு ஒரு இலட்சம் ரூபாய்க்கான காப்பீடும் செய்யப்படுகிறது.  

ஆகவே முதன் முறையாக புதிய நோக்கில் சாமானிய மக்களையும் சக்தி வாய்ந்தவர்களாக்கும் வகையில் இத் திட்டம் அமைக்கப்பட்டுள்ளது. இதன் நோக்கமே சேமிப்புக் கணக்கு, தேவைக்கேற்றவாறு கடன் உதவிகள், இது வரை ஒதுக்கி வைக்கப்பட்டிருந்தவர்களுக்கு காப்பீடு மற்றும் பென்சன் போன்ற நிதி உதவிகள் கிடைக்கச் செய்வது ஆகியனவாகும்.

இதன் மூலம் நாட்டிலுள்ள ஒவ்வொரு வீட்டிலும் குறைந்த பட்சம் ஒருவருக்காகவாவது வங்கி வசதிகளை ஏற்படுத்தித் தருவது தேசிய நோக்கமாக எடுத்துக் கொள்ளப்பட்டுள்ளது.  மேலும்  மத்திய, மாநில  அரசுகள் மற்றும் உள்ளாட்சி அமைப்புகளின் எல்லா பரிவர்த்தனைகளும் மக்களின் வங்கிக் கணக்குகளுக்கு நேரடியாகச் செல்ல ஏற்பாடு செய்வது இதன் இன்னொரு முக்கிய அம்சமாகும். அதன் மூலம் ஊழல் ஒழிக்கப்பட்டு, மக்களுக்கான பயன்கள் முழுவதும் அவர்களுக்கு அப்படியே கிடைக்கும்.  

இதை ஒட்டியே சிறிய தொழில்களுக்குக் கடனளிக்கும் முத்ரா திட்டம், மாதம் ஒரு ரூபாய் பிரீமியத்துக்கு விபத்துக் காப்பீடு, வருடம் 330 ரூபாய் பிரீமியத்துக்கு ஆயுள் காப்பீடு மற்றும் அடல் பென்சன் ஆகிய திட்டங்கள் நடைமுறைப் படுத்தப்பட்டு வருகின்றன.

ஜன தன திட்டம் இது வரை அத்தனை இலக்குகளையும் முறியடித்து ஒரு பெரும் சாதனை படைத்துள்ளது. சென்ற ஆகஸ்ட் மாதம் வரை 24.10 கோடி கணக்குகள் துவக்கப்பட்டுள்ளன. ஒரே வாரத்தில் சுமார் 1.8 கோடி கணக்குகள் துவங்கியதற்காக மத்திய நிதித் துறைக்கு கின்னஸ் சாதனைச் சான்றிதழ் கொடுக்கப்பட்டுள்ளது. 

இத் திட்டத்தின் மூலம் வைப்புத் தொகையாக ரூபாய் 42,094 கோடி சேர்ந்துள்ளது. மேலும் இதில் சேர்ந்தவர்களில் அறுபது விழுக்காடு பேர் கிராமப் பகுதிகளைச் சேர்ந்தவர்கள்.


எனவே சுதந்திர இந்தியாவில் செயல்படுத்தப்பட்டு வரும் மிகப் பெரிய நிதித் துறைத் திட்டம் ஜன தன திட்டமாகும். இதன் மூலம் சாமானிய மக்கள் முதல் முறையாக நிதி அமைப்பில் இணைக்கப் பட்டுள்ளனர். இதன் பலன்கள் இப்போதே தெரிய ஆரம்பித்து விட்டன. எதிர்கால இந்தியாவின் வளர்ச்சியில் இத்திட்டம் ஒரு மிக முக்கியமான பங்கினை வகிக்கும். அதற்காக மோடி அரசுக்கு நமது பாராட்டுக்கள்.